தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்
தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் பேரா. தி.சு. நடராசனின் எழுத்துகளின் மீது ஒட்டுமொத்தப் பார்வையைக் கவனப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்ட இக்கருத்தரங்கில் அவரது தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் என்ற நூலின் நோக்கத்தையும் அந்நோக்கத்தை வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பின்பற்றியுள்ள எழுத்து முறைமையையும் தமிழ்ச் சிந்தனை மற்றும் ஆய்வுப்பரப்பில் இந்நூலின் இடம் எத்தகையது என்பதையும் முன்வைக்கிறது இந்தக் கட்டுரை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்றொரு சொற்றொடர் நீண்ட காலம் பயன்பாட்டில் இருக்கிறது. இலக்கணம் என்ற சொல்லோடு அழகியல், கலையியல், இலக்கியவியல் போன்ற கலைச்சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம். நீண்ட இலக்கியமரபு கொண்ட தமிழ் மொழிக்கு அதன் தொடக்க நிலையிலேயே எழுதப் பெற்ற இலக்கணம் – தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் வெற்று இலக்கண நூல் அல்ல; அது ஒரு இலக்கியவியல் கோட்பாட்டை – நவீனத்திறனாய்வு சொல்லாடல்களாகப் பயன்படுத்தும் அழகியல் கோட்பாட்டைப் போன்றது என்பதை விவரிக்கிறது இந்த நூல்.