காப்பான்: வணிக சினிமாவின் இயங்குமுறைகள்
கள்ளன் பெருசா? காப்பான் பெருசா? ஒரு சினிமாவை எடுப்பதற்குப் போடப்படும் முதலீட்டின் மீது லாபம் வேண்டும் என்பதை நியாயமற்றது எனச் சொல்லமுடியாது. போடப்படும் முதலீட்டின்மீது பன்மடங்கு லாபத்தை அடைவதைக் கூட வணிகத்தின் விதிகளைக் கொண்டு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் பன்மடங்கு லாபத்திற்காகப் பார்வையாளர்களின் சிந்தனையையும் எண்ணங்களையும் சிதறடிக்கும் நோக்கத்தைக் கொண்ட சினிமாக்களை, எந்தவித விமரிசனங்களும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அத்தகைய ஏற்றுக்கொள்ளல்கள் சினிமாவைக் குறித்த எதிர்வினையின்மை என்பதாக கருதக்கூடியன அல்ல. நமது காலகட்டத்தைக் குறித்த அக்கறையின்மையின் வெளிப்பாடு அது. தனது வயலைத் தாக்கி அழிக்கும் புழுக்களையும் பூச்சிகளையும் தடுக்கும் வகையறியா விவசாயிகளைப்போலவே, நம் காலத்துச் சமூகப் போக்கைத் தாக்கிவரும் கருத்தியல்களின் ஆபத்துகளைக் குறித்து முணுமுணுக்காமல் இருக்கும் செயல் அது. திரள்மக்களின் கோபதாபங்களைத் திசைதிருப்பும் நோக்கங்கள் கொண்ட பண்டமாக திரைப்படங்களைக் கருதுபவர்களைக் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டியது காலத்தில் செய்யவேண்டிய கடமை.