வேற்றுமைகள் -வேறுபாடுகள்: உணர்தலும் அறிதலும்
இலக்கியம் என்றால் இலக்கியம் தான். அதில் ஆண் இலக்கியம்; பெண் இலக்கியம் என்று வகைப்பாடு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லும் பெண்களின் குரல்களைக் கேட்டிருக்கக் கூடும். இப்படிப் பேசும் ஆண்களையும் பார்த்திருக்கக் கூடும். விருதுபெற்ற இந்தக் கதைகள் போன்ற கதைகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆண்கள் எழுதிவிட்டார்கள். அவர் பெண் என்பதால் இந்த விருதைப் பெற்றிருக்கிறார். பொதுவாகவே பெண்கள் தாங்கள் எழுதும் எழுத்துக்களால் மட்டுமே கவனிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையல்ல. பெண்கள் என்பதால் தான் வாய்ப்புகளை அடைகிறார்கள். விருதுகளைப் பெறுகிறார்கள். வெளிநாடுகளுக்குப் போய் வருகிறார்கள் என்பன போன்ற குரல்களைக் குற்றச்சாட்டுகளாகவே ஆண்களில் சிலர் முன்வைக்கிறார்கள்.