சிநேகா- லட்சியவாதத்தின் குறியீடு
சிநேகாவின் பெயருக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு ஒரு காலகட்டத்து லட்சியவாத அடையாளத்தின் வரலாறு. அடக்குமுறையை எதிர்த்த ஒரு பெண்ணின் வரலாறு. அவசர நிலையை இந்திராகாந்தி அறிமுகம் செய்தபோது பதின்ம வயதுகளைக் கடந்து இருபதுகளில் நுழையக் காத்திருந்தவர்களின் லட்சியக் கனவின் ஒரு தெறிப்பு அந்தப் பெயர்.எனது 17 வயதில் அந்தப் பெயர் எனக்கு அறிமுகம். இந்திராவின் அவசரநிலைக் கால அறிவிப்புக் (1975, ஜூன் 25 -1977மார்ச்,21) கெதிராகக் கவிதையெழுதி வாசிக்கத் திட்டமிட்டவர்கள் என்னைப் போன்ற பதின்ம வயதுக்காரர்கள். அதே நேரம் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டவர்களில் ஒருத்தி எனக் கைதாகிச் சிறைக்குப் போன பெண்ணின் பெயராக சிநேகலதா ரெட்டி என்ற பெயர் அறிமுகமானது.