நேரடியாகப் பேச நினைக்கும் பெண்குரல்
கவிதையின் மொழிதல் ஒருவழிப்பாதையாக இருக்கும்போது உணர்ச்சி வெளிப்பாடாக மாறி விடும். கவிதைக்குள் உருவாக்கப்படும் சொல்லி ( Narrator) தன்னை - தனது தன்னிலையை- உருவாக்குவதற்காகக் குறைவான சொற்களைப் பயன்படுத்திவிட்டுக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களை (Receivers) -முறையீட்டைக் கவனிக்கவேண்டியவர்களைக் குறித்துப் பலவிதமான சொற்களை உண்டாக்குவது வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். உண்டாக்கப்பட்ட சொற்களின் வழியாக அவர்களுக்கும் சொல்லிக்குமிடையே இருக்கும் உறவுநிலைகளை - உடன்பாட்டு நிலையாகவும் எதிர்மறை நிலையாகவும் பேசுவதின் வழியாகக் கவிதையின் இயக்கத்தை அல்லது செயல்பாட்டை உருவாக்குவது என்பது கவிதையியலின் தொடக்கநிலைக் கூறு.