காண்டாமிருகமென்னும் அபத்த நாடக நிகழ்வெளி
சில பனுவல்கள் வாசிக்கும் போது புரியாமல் போய்விடும். ஆனால் அதன் அர்த்தம் விளங்கும்படியான நிகழ்வொன்றை நாம் சந்தித்து விட்டால் அந்தப் படைப்பு புரியத்தொடங்கி விடும். அரசியல் அதிகாரம் குறித்த விமரிசனத்திற்கு அபத்த நாடக வகையைத் திறமையாகப் பயன்படுத்திய அயனெஸ்கோவின் காண்டாமிருகம் (RHINOCEROS) அப்படிப் பட்ட நாடகம் என்பது எனது சொந்த அனுபவம். முதல் வாசிப்பில் கடைசி வரை காண்டாமிருகம் வரவே இல்லையே எனக் கேட்டுப் பதில் தெரியாமல் மூடி வைத்து விட்டு மறந்திருந்தேன். ஆனால் அந்தப் பிரதி வெவ்வேறு நிகழ்வுகள் நடக்கும் போது ஒவ்வொரு விதமாக அர்த்தம் தரும் பிரதியாக இருந்திருக்கிறது. ஒரு நிகழ்வு நடந்த போது கிடைத்த அர்த்தத்தைச் சொல்வதற்கு முன்னால், முதல் தடவை அதன் அர்த்தத்தைப் புரிய வைத்த நிகழ்வைப் பார்க்கலாம். அப்போது நான் பாண்டிச்சேரியில் நாடகப்பள்ளியில் பணியாற்றினேன். முக்கியமான நாடகப் பிரதிகளைப் படிப்பதைக் கடமையாகவும் விருப்பமாகவும் செய்து கொண்டிருந்த நேரம். அயனெஸ்கோவின் காண்டாமிருகம் நாடகத்தை வாசித்து ஒரு வாரம் இருக்கும். நாங்கள் வசித்த புறநகரின் நலச்சங்கம் ஏற்பாடு செய்த ஒருநாள் சுற்றுலாவில் நானும் எனது க