ஒரு மரணத்தின் நினைவுகள்
நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்ல வில்லை. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கான பகுதியில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்று தான் சொல்லியது. ஆனால் நான் என்னவோ அதனை மரண அறிவிப்பாகவே எடுத்துக் கொண்டு உரையாடல்களைத் தொடங்கி யிருந்தேன்.எனது குடும்ப உறுப்பினர்களில் மகள் சினேக லதாவுக்கு மட்டும் அவரது இலக்கிய ஆளுமையின் சில அடுக்குகள் தெரியும்.மற்றவர்களுக்கு அந்தப் பகுதிகள் தெரியாது. என்றாலும் அவரது வீட்டிற்கு ஒரு முறை போயிருக்கிறோம். அனைவருக்கும் அந்த வீடு அறிமுகம். அந்த வீட்டைப் பற்றிய நினைவுகளும் உண்டு. அத்துடன் என்னுடைய பெயரும் அவருடைய பெயரும் ஒன்றாக இருப்பது நினைவில் நிற்கக் கூடுதல் காரணம். அந்தத் தகவல் வந்த அன்று எங்கள் வீட்டு காலைச் சாப்பாட்டு நேரத்தில் நிலவிய சோகத்திற்கு வேறு காரணம் எதுவும் இல்லை.