குறியீட்டுத் தன்மை கொண்டதாக நவீன நாடகப் பிரதி ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த பின், தேர்வு செய்த கதை பல்லக்குத்தூக்கிகள். தமிழில் நவீன நாடகத்தைப் பிரதி வடிவில் ஆரம்பித்து வைத்தவர் ந.முத்துசாமி. அவரது தொடக்க நாடகங்களான நாற்காலிக்காரர், காலம் காலமாக,அப்பாவும் பிள்ளையும் ஆகிய மூன்று நாடகங்களும் அடங்கிய நாற்காலிக்காரர் தொகுப்பை வாசிக்கும் ஒருவர் நவீன நாடகம் என்பது கதைத் தன்மையைக் கைவிட்ட - குறியீட்டுத் தன்மை கொண்டதே நவீன நாடகம் என்று புரிந்து கொள்வார். பல்லக்குத்தூக்கிகள் சிறுகதையை நாடகமாக ஆக்கியதற்கு முன்பு ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகத்தைப் பயிற்சியாகவும், இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களைப் பாடமாகவும் படித்திருந்தேன். ந.முத்துசாமியின் பாணியிலிருந்து மாறுபட்டது இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள். அவரது தொடக்ககால நாடகங்களான பசி, மழை, போர்வை போர்த்திய உடல்கள் போன்றவற்றில் ஒருவித கதைத் தன்மை உண்டு.