அரங்கியல் பேராசிரியர்கள் இருவர்:நாடகக் கல்வி: கிழக்கும் மேற்கும்
இன்று, நாடகக் கலை ஒரு கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம்,இசை, ஓவியம்,சிற்பம்,திரைப்படம் எனக் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் நிகழ்த்துக்கலைகளும், நுண்கலை களும், நிலைக் கலைகளும் கூடக் கல்வித்துறைசார் படிப்புகளாகி இருக்கின்றன. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பட்டப்படிப்பாகவும் பட்டமேற்படிப்பு களாகவும் இவை யெல்லாம் கற்றுத் தரப்பட்டு பட்டங்கள் தரப்படுகின்றன. இப்படிச் சொல்லுவதால் இவையெல்லாம் இப்பொழுதுதான் கற்றுத் தரப்படுகின்றன என்றோ, அதற்கு முன்பு அத்தகைய கல்வி இல்லை என்றோ அர்த்தமில்லை. சுதந்திரத்திற்கு முன்னும்கூட இக்கலைகளைக் கற்றுத்தருபவர்களும் கற்றுக் கொள்பவர்களும் இருந்தார்கள். கல்வி நிறுவனங்களும் இருந்தன ; ஆனால் வேறுவிதமாக இருந்தன. குரு-சிஷ்யப்பாரம்பரியத்தில் ஒருசில குழுக்களுக் குள்ளேயே / சாதிகளுக்குள்ளேயே கற்றுக் கொள்ளப்பட்டன.