உமாமகேஸ்வரியின் சிறுகதைக்கலை
உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம் நீண்ட காலமாகப் புனைகதைப் பரப்பில் இயங்கிவரும் உமாமகேஸ்வரியின் தொடக்கநிலைப் பொது அடையாளமாக வெளிப்பட்டது குடும்பவெளி. நகர வாழ்க்கையில் இருக்கும் நடுத்தரவர்க்கக் குடும்பங்களை எழுதுபவர் என்றோ, கிராமப்புறங்களில் இயங்கும் கூட்டுக்குடும்பத்தை எழுதுபவர் என்றோ பொத்தாம் பொதுவாக அடையாளப்படுத்த முடியாத வகையில் அவரால் முன்வைக்கப்பட்ட குடும்பவெளிகள் இருந்தன. தொடர்ந்து வாசிக்கும்போது அவரால் முன்வைக்கப்படும் பெண்கள், தமிழ்க் குடும்பவெளிக்குள் வித்தியாசமான விருப்பங்களோடும், மனவியல் ஓட்டங்களோடும் நெரிபடும் பெண்களாக இருப்பதை அடையாளப்படுத்த முடிந்தது. அந்த வேறுபட்ட தெரிவுகளுக்காகவும், தெரிவுசெய்த பெண்களின் மனவோட்டங்களையும் சின்னச் சின்னச் செயல்பாடுகளையும் விவரிக்கும் மொழிக்காகவும் அவரது கதைகளைத் தொடர்ந்து ஒருவரால் வாசிக்க முடியும்.