நாடகக் கலை: ஆய்வுகளும் அடிப்படை நூல்களும்
நவீன அரங்கியலின் பயணங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது தமிழில் நாடகக் கலையைக் கற்பிப்பதற்கான அடிப்படையான நூல்கள் இல்லை என்ற உண்மையும் வந்துபோனது. தமிழை இயல், இசை, நாடகம் எனப் பிரித்துப் பேசும் நாம் அவற்றை முறையாக க்கற்றுக்கொள்ளத் தேவையான அடிப்படை நூல்களை உருவாக்கியிருக்கிறோமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. தொல்காப்பியம் போன்றதொரு இயல் தமிழ் வரைவிலக்கண நூலை அதன் அர்த்தத் தளங்களில் கற்பிக்காமல் கைவிட்ட பெருமையுடையது தமிழ்க் கல்வியுலகம். இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் அப்படியான நூல்கள் தேவை என்பதைக் கூட உணர்த்தமுடியவில்லை.
நாடகப்பிரதிகளைப் பகுப்பாய்வு செய்து கற்பிப்பதற்கும் கற்பதற்கும் விரிவான அடித்தளங்களைப் போட்டுத்தரும் போலந்து நாட்டு நாடகப் பேராசிரியர் லாஜோஸ் எக்ரியின் நாடகப்பனுவலை உருவாக்கும் கலை (The Art of Dramatic Writing -Logos Egri) போன்றதொரு நூலைத் தமிழில் எழுதவேண்டும் என்ற ஆசை தோன்றித்தோன்றி மறைந்தது கொண்டே இருக்கிறது. பேரா. சே.ராமானுஜனின் மேடைத்தள அனுபவங்கள், அரங்கியலின் அனைத்துக் கூறுகளையும் பேசினாலும் ஆங்கிலத்தில் இருக்கும் நவீன நாடகச் செயல்பாடுகள் (Modern theatre Practice: Theory and Practicals )என்ற நூல் தரும் விவரங்களையும் புரிதல்களையும் தராமல் போவது ஏன் என்ற கேள்விகளும் எழுகின்றன.
இந்த நிலையில் என் கைக்குவந்த இலங்கையைச் சேர்ந்த பல்கலை வித்தகர் விபுலானந்த அடிகளின் மதங்க சூளாமணியின் புதிய பதிப்பு ஒரு சிந்தனையைத் தோற்றுவித்தது. ஐரோப்பிய நாடக க்கலையையும் பரதரின் நாட்யசாஸ்திரத்தையும் முறையாகவும் ஆழமாகவும் கற்ற பரிதிமால் கலைஞர், விபுலானந்தர் போன்றோரின் நாடகவியலையும், மதங்க சூளாமணியையும் அப்படியே பதிப்பதோடு இன்றைய மாணாக்கர்கள் வாசிப்பதற்கேற்ப புதிய உரைநடையில் மாற்றி எழுதிப் பதிப்பிப்பதும்கூடத் தேவை என்று தோன்றியது. பயன்பாட்டு நோக்கில் அப்படியான நூல்கள் அவசியம்.
விபுலானந்தரின் மதங்க சூளாமணி லாஜோஸ் எக்ரியின் நூலைப் போல உலக நாடகங்கள் பலவற்றையும் பகுப்பாய்வுக்குரியதாகக் கொள்ளவில்லை என்றாலும் சேக்ஸ்பியரின் முக்கியமான நாடகங்களைப் பகுப்பாய்வு செய்து நாடகப்பிரதியாக்க முறைமையைக் கற்றுத்தருகிறது. இதனோடு சேர்ந்து பண்டிதமணி மு.கதிரேசனாரின் மண்ணியல் சிறுதேர் நூலுக்கு எழுதிய முன்னுரையையும் மாற்றித்தரவேண்டும். அதேபோல பரிதிமால் கலைஞரின் நாடகவியலையும் மாற்றி எழுதவேண்டும். இந்த எண்ண ஓட்ட த்தின்போது கவி தமிழச்சியின் அரங்கியல் பங்களிப்பு குறித்தும் நினைவுகள் தோன்றின.
கவி.தமிழச்சி தங்கபாண்டியனின் முதன்மையான விருப்பங்களும் அடையாளங்களும் ஒன்றுக்கு மேற்பட்டவை. ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாக உரையாற்றும் பேச்சாளர், நடனக்காரி, நாடக நடிகை என்ற என்பதாக அறியப்பெற்ற அவர் நாடகக் கலையைப் பற்றிய தீவிர ஆய்வையும் செய்தவர். ஆங்கிலத்துறையில் ஆசிரியராக இருந்த சுமதி என்ற தமிழச்சி தனது ஆய்வுக்கான பொருண்மையாக எடுத்துக்கொண்டது பின்-காலனிய ஆங்கில இலக்கியம். எர்னெஸ்ட் தளையசிங்கம் மக்கென்ராயர் என்ற ஆஸ்திரேலிய நாடக ஆசிரியரை. அவரை ஆஸ்திரேலிய நாடகாசிரியர் என்பதைவிடப் பின் காலனிய ஆங்கில இலக்கிய ஆசிரியர் என்பதே பொருந்தும். அவரது வெளிப்பாட்டு மொழியாக ஆங்கில மொழியைக் கொண்டிருந்தாலும் எழுதப்படும் வெளியாகக் காலனியாக்கப்பட்ட நாடுகளின் நகரங்களும் கிராமங்களுமாகவே இருக்கின்றன. இலங்கையின் கொழும்பு நகரமும் யாழ்ப்பாணத்துக் கிராமப் பகுதியையும் எழுதும் அவர், ஆங்கிலத்தின் வழியாகக் காலனியாதிக்கத்தில் கீழ் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கலை – தன்னிலையை வெளிப்படுத்தியுள்ளார். தனிமனிதத் தன்னிலையை எழுதத் தொடங்கி அவர்களைத் தேசிய அடையாளம், தேசியஇன அடையாளம், உலகத்தின் நிகழ்காலப் போக்கிற்குள் – நவீனத்துவ நெருக்கடிக்குள் உழல்பவர்களாக எழுதிக்காட்டியுள்ளார். அவரைக் குறித்த ஆய்வு நாடகவியல் கல்விக்கு ஒரு மாதிரி ஆய்வாக அமையத்தக்கது.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்த – புலம் பெயர்ந்தவர் அல்ல; குடிபெயர்ந்த ஏனெஸ்ட் தளையசிங்கம் மெக்கன்ராயரின் நாடகங்களை ஆய்வுசெய்து ஆங்கிலத்தில் பட்டம் பெற்றுள்ளார். அந்தப் பட்டத்திற்கான ஆய்வேட்டைத் தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் இருள்வெளி என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அதையும் திரும்பவும் எளிய நடையில் எழுதித் தருவதின் மூலம் நாடகக் கல்விக்கான அடிப்படை நூல்கள் சிலவற்றைத் தந்த திருப்தியைப் பெறமுடியும் என்று தோன்றியது.
=============================================== அம்ருதா, ஜூலை,18
நாடகவியலுக்கு இரண்டு புதிய வரவுகள்
1 ] வெறும் புனைவு என்பதற்காக அல்லாமல் அறிவுத்தளத்திலும் சிந்தனை வெளியிலும் தாக்கம் செய்யும் செய்யும் நூல்களைத் தேடித்தேடி மொழி பெயர்ப்புசெய்பவர் ராமானுஜம். மண்டோவைத் தமிழுக்கு விரிவாக அறிமுகம் செய்த அவர் மூன்று நாடக மொழிபெயர்ப்புகள் அடங்கிய தொகுப்பொன்றைக் கொண்டுவந்துள்ளார். கர்நாடாகாவில் இயங்கும் நீநாசம் நாடகக் குழுவோடு நெருங்கிய தொடர்புகள் கொண்டிருக்கும் தத்துவத்துறையைச் சேர்ந்த சுந்தர் சருக்கையின் “ இரண்டு தந்தையர்” என்ற நாடக நூலில் இதே தலைப்பில் உள்ள நாடகத்தோடு ‘சாதாரண மனிதன் அல்ல, ஹார்டியின் நியாயப்பாடு’ என்ற தலைப்புகளிலான இரண்டு நாடகங்களும் உள்ளன. எழுதப்பெற்ற நாடகப்பிரதிகளை மேடையேற்றிப் பார்க்கும் நாடக க்குழுக்கள் இவற்றைத் தமிழ் அரங்கின் பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தலாம்.
2 ] முடிவில்லா உரையாடல் - என்ற தலைப்பில் அம்பை எழுதிய நாடகம் ஒன்றுள்ளது. அதனை உள்ளடக்கிப் பன்னிரண்டு (12) குறுநாடகங்கள் அடங்கிய தொகுப்பைத் தந்துள்ளார். இ.நந்தமிழ் நங்கை. ஸ்ரீமதி பாகீரதி அம்மாள், புதுவை ஆர்.எஸ். ராஜலக்ஷ்மி, வை.மு.கோதைநாயகி அம்மாள், கு.ப.சேது அம்மாள், அநுத்தமா, கிருத்திகா, குமுதினி என முந்தைய தலைமுறைப் பெண் எழுத்தாளர்கள் ஏழுபேர்களின் குறுநாடகங்களோடு ஆர். சூடாமணி, அம்பை, காந்திமேரி, மு.ஜீவா, அ.மங்கை ஆகிய ஐந்து பேர்களின் குறுநாடகங்களும் இத்தொகுப்பில் உள்ளன. நடிப்புப் பயிற்சிகள் வழங்கும் அமைப்புகள் பல தோன்றிச் செயல்படும் இப்போதைய சூழலில் இவை போன்ற தொகுப்புகளின் வருகை முக்கியத்துவம் பெறுகின்றன. பயிற்சிக்காகக் கூட இந்தப் பிரதிகளை மேடையேற்றிப் பார்க்கலாம். அரங்கியலில் செயல்படும் நண்பர்களுக்கு இதனைப் பரிந்துரை செய்கிறேன். மற்றவர்கள் நாடகப்பிரதியின் கட்டமைப்பு, விவாத ஒழுங்கு, பாத்திர உருவாக்கம் சார்ந்து இவற்றை வாசிக்கலாம். தொடர்ந்து நீங்களும் நாடக எழுத்தாளர்களாக மாறலாம்.
இரண்டு நூல்களையும் மாற்று வெளியீட்டகம் கொண்டுவந்துள்ளது.
கருத்துகள்