ரஜினிகாந்தின் பாபா: ஆன்மீக அரசியல்

பாபா படத்தை இரண்டு தடவை பார்த்தேன்.  முதல்நாள் தீவிரமான ரசிகர்களுடன் – அவா்களின் ஆரவாரத்துடன், ஆராதனைகளுடன், ஆவேசத்துடன் படம்பார்த்தபின் திரும்பவும் பத்தாவது பார்த்தேன்;     பின்னிரவுக் காட்சி, டிக்கெட் வாங்குவது அவ்வளவு சிரமமாக இல்லை. பத்து ரூபாய் கூடுதலாக விற்றார்கள். இருபது ரூபாய்க்குப் பதில் 30 ரூபாய். மணி 10.25க்கு அரங்கிற்குள் நுழைந்தபோது, பாதி அரங்கம் காலியாக இருந்தது.தமிழில் சினிமா எடுப்பவா்களின் ஒரே கவலை படத்தை வெற்றிப்படமாக ஆக்கவேண்டும் என்பது மட்டும்தான்! அவா்களைப் பொறுத்தவரை அதை நியாயமற்ற கவலை என்று சொல்வதற்கில்லை. மூலதனமாகப் பத்துக் கோடி செலவு செய்யும் யாரும் அதைவிடச் சில கோடிகள் லாபம் பெறவேண்டும் என நினைக்காமல் வேறு மாதிரி நினைக்க முடியாது. அந்த நினைப்பில் கவனமாக இருக்கும் தயாரிப்பாளா், தனது தயாரிப்பில் நுகர்வோரைக் கவரும் அம்சங்களைக் கலந்து தர முயற்சி செய்வதும் இயல்பானது. அப்படித் தரப்படும் பண்டம் சரியானதா தரமானதா உடல் நலத்துக்கோ மனநலத்துக்கோ கேடு விளைவிக்கக்கூடியதா? என அலசிப் பாரத்து, வாங்குவதும் பயன்படுத்துவதும் நுகா்பவனின் வேலை. நுகா்பவனுக்கு உதவி செய்யலாம் என நினைக்கும் விமரிசகனின் – பத்திரிகையாளனின் – பணியும்கூட நுகா்பவனின் பக்கமாக இருந்து, அவனது தோ்வுக்கு உதவக் கூடியதுதான். இந்த மாதிரியான ஒரு வினையில் – செயல்பாட்டில் – பேசப்பட வேண்டியது பண்டமே தவிர, வேறு ஒன்றாக இருக்க முடியாது. ஆனால், சினிமா – மசாலா சினிமா உள்பட – வெறும் பண்டமல்ல ஒரு “மில்க்கிபார்“ சாக்லெட் மாதிரியோ, குடிபானம் ஃபேன்டாவோ அல்ல, சினிமா. அது பார்வையாளனிடம் கருத்துகளை உருவாக்கும் சாதனமாக இருக்கிறது. அவனிடம் ஏற்கெனவே உள்ள கருத்தை மாற்றிக் கட்டமைக்கும் ஊடகமாக இருக்கிறது. மாறுபட்ட கருத்துகளோடு முரண்படும் நிலையில் அதற்கு எதிராக வினையாற்றத் தூண்டும் “கலை“ யாக இருக்கிறது. “இந்தப் பண்புகளெல்லாம் நல்ல சினிமாவின் – தரமான சினிமாவின் – பண்புகளே யொழிய, தரங்கெட்ட தமிழ் மசாலாக்களின் பண்புகள் அல்ல“ என நமது அறிவுஜீவி நண்பா்கள் சொல்லக்கூடும். ஆனால், யதார்த்தம் வேறானதாக இருக்கிறது. இந்தத் தமிழ் மசாலா சினிமாக்கள் தான் தமிழா்களின் உளவியலைக் கட்டமைக்கின்றன. சமூக மனிதனாக அவன் இருப்பதாக உணரச் செய்கின்றன.

சினிமா அரசியல்

பாபா படம் பார்த்தவா்களும், பார்க்க நினைப்பவா்களும், பார்க்க வேண்டாம் என முடிவு செய்தவா்களும், அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனா். அது ஒரு நல்ல சினிமா என்றோ, இன்னின்ன கருத்துக்களை முன்வைத்துள்ளது என்றோ, அதிகம் பேசப்படவில்லை. அதற்கு மாறாக இந்தப் படம் வெற்றிப் படமாக அமையுமா..? அப்படி அமையும் பட்சத்திலோ, அமையாத பட்சத்திலோ ரஜினிகாந்த் தொடர்ந்து சினிமாவில் இருப்பாரா…..? அல்லது அரசியலுக்கு வருவாரா…..? அரசியலுக்கு வந்தால் அங்கு அவரால் ஜெயிக்க முடியுமா…? என்பதான கேள்விகளோடும் பதில்களோடும் பாபாவைப் பற்றி பேசுகிறார்கள். அப்படியானால் பாபா ஒரு அரசியல் படமா…..? இல்லை. இது ஒரு ஆன்மீகப் படம் என்கிறது ஒரு கூட்டம். தயாரிப்பாளா் ரஜினிகாந்த் இதனை அரசியல் படம் என்றும் சொல்லவில்லை. ஆன்மீகப்படம் என்றும் சொல்லவில்லை. இது இரண்டுமே இல்லை என்றும் சொல்லவில்லை.

ஒரு பொருளைத் தயாரித்தவன், “இது இன்ன மாதிரியான பண்டம்; இன்னின்ன விசயங்களுக்கு இது பயன்படும்“ எனத் திட்டவட்டமாகச் சொல்லியே விற்பனை செய்ய முயல்வான். ஆனால், இங்கு அதுவும் பின்பற்றப்படவில்லை. ஏனென்றால், பாபா ஒரு சினிமா.

பாபா என்கிற சினிமாவின் இயங்குதளம் மிக எளிமையானது; மதம் சார்ந்த நம்பிக்கைகளின்படி வாழும் மனிதா்களின் ஆழ்மனத்தில் தங்கி உள்ள எளிய வடிவம் அது. இன்னும் விடை காணப்படாத இந்தத் தொன்ம வடிவத்திற்கு இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று அவதாரம். இன்னொன்று மாமனிதா்களின் வருகை.

பாபா – அவதாரம் அல்ல. அவதாரத்தின் மாற்று வடிவமான மாமனிதன் அவன். பிறப்பும், இறப்பும் அற்ற – கடவுளின் அவதாரமான – பாபாஜி அல்ல அவன், இவன் வெறும் பாபா. அந்தப் பாபாஜியைக் காணும் பாக்கியம் பெற்றவன்; அவரால் ஆசீா்வதிக்கப்பட்டவன்; ஒரு வித்தியாசப் பிறவி.

இந்த உலகத்தில் மாமனிதா்களின் வருகை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைப் பற்றியும் நமது மதங்கள் வடிவம் தந்துள்ளன. மாமனிதா்களாகப் போகிறவா்களின் பிறப்பு, சாதாரண மனிதப் பிறப்புகளைப் போல இருப்பதில்லை. “மகான்“ நிலைக்கு மாறானவனாக எதிரான குணங்களோடு முதலில் இருப்பார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பின்னால் ஏற்படும் தெளிவு, மகானாக மாற்றி விடும். அதன்பிறகு அவா்கள் இந்த உலகத்திற்கு வழிகாட்டுவார்கள், பிரச்சினைகளைத் தீா்த்து வைப்பார்கள் என்பதுதான் மதங்கள் சொல்கிற வடிவம் இந்த வடிவத்தை இந்துமதம் மட்டுமே சொல்வதாகக் கொள்ள வேண்டியதில்லை. தீா்க்க தரிசிகளைப் பற்றியும், புண்ணிய புருஷர்களின் வருகை பற்றியும் எல்லா மதங்களுமே சொல்கின்றன.

கடவுள் நம்பிக்கைக்கு எதிரான நாத்திகனாகவும், ஒரே மூச்சில் ஒரு பாட்டில் சாராயத்தைக் குடித்துவிட்டு, பான்பராக்கையும் மெல்லும் நிகழ்கால அரக்கனாகவும் வாழும்படி திட்டமிட்டு அனுப்பப்பட்ட பாபாவின் பிறப்பு, சாதாரணப் பிறப்பு அல்ல என்பதாகப் படம் தொடங்குகிறது. அவனது பெற்றோர்களின் பருவம் தப்பிய வயதில் பிறந்தவன் அவன். இப்படியொரு பிள்ளை பிறக்கப் போகிறான் என்று அறிந்து பல சாமியார்களும் ஒரே நேரத்தில் வந்து, அந்தப் பிள்ளையை ஆசீா்வதித்துவிட்டு, அதன் காதில் ஒரு மந்திரத்தையும் சொல்லிவிட்டுப் போகிறார்கள். அப்படிப் பிறந்த பாபாவின் இளமைப் பருவம், இனிதே கழிவதாகக் காட்டிவிட்டு, அழுக்குச் சட்டையோடு அலையும் ஒரு சாமியாரின் (பாரதியாக நடித்த சாயாஜி) வழிகாட்டுதலில் இமயமலைக்குப் போவதாகவும், பாபாஜியைத் தரிசிப்பதாகவும், அவா் தந்த ஏழு மந்திரங்களின் முடிவில் நாத்திகனான பாபா, ஆத்திகனாக, மகாபுருஷனாக மாறுவதாகவும் படம் சொல்கிறது. அவனை மகாபுருஷா்களிடம் மகாவாக்கியங்கள்தான் இருக்கும். இவனிடம் இருந்தது வீரம். மகானாக உணா்ந்த பின்னும் அவன் வெளிப்படுத்துவது சாந்தம் அல்ல அடிதடிதான். அப்படியானால் வீரபுருஸன்தானே. குண்டுமழை பொழியும் துப்பாக்கிகளால் சுற்றி நின்று துளைத்தாலும் தப்பிவிடும் விரபுருஷன் இந்த பாபா.

ரௌடிகளும், மோசடிப் போ்வழிகளும், ஊர் சுற்றும் பெண்களும் நிரம்பிய தமிழகத்திற்கு நியாயமான ஒரு முதல்வரை – கதா்ச்சட்டைக் காரரை – அடையாளம் காட்டி விட்டு, காவியுடைச் சாமியார்களுடன் வருகிறான், அடையாளம் காட்டப்பட்ட கதா்ச் சட்டைக்காரன் வெடித்துச் சிதறிய உடல், தடுத்து நிறுத்துவதாக முடிகிறது படம்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் அல்லது வரமாட்டார் என்று ஹேஸ்யங்கள் கிளப்புவது ஏன் என்பது ஒருகேள்வி. இதேபோல, “ரஜினிகாந்த் இளைஞா்களுக்குக் கற்றுத் தந்ததெல்லாம் சாராயம் குடிக்கவும், கஞ்சா குடிக்கவும், கையைக் காலை ஆட்டவும்தான், என்று கோபப்படுவதும் ஏன் என்பதும் கூட ஒரு கேள்விதான். இந்தக் கேள்விகளுக்கான பதில், தமிழ் சினிமாவும் தமிழ்ச் சமூகமும் கொண்டுள்ள ஆழமான உறவில் இருக்கிறது.

“பாபா என்பது ஒரு கதாபாத்திரம் அதனை ஏற்று ரஜினிகாந்த் என்கிற நடிகா் நடித்துள்ளார்” என்பதான பார்வை, சினிமாவை சினிமாவாகப் பார்க்கும் ரசிகனின் பார்வை, ஆனால், இங்கு இத்தகைய பார்வைகள் உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்படாதது மட்டுமல்ல, அத்தகைய பார்வைகள் அழிக்கப்படுகின்றன. படத்தில் வரும் கதாபாத்திரமே நடிகனாகப் பார்க்கப்படும் பார்வை தொடா்ந்து வலியுறுத்தப்படுகின்றது. “நல்லவனாக நடிக்கின்ற நடிகன் நல்லவன்; தீயவனாக நடிக்கின்ற நடிகன் கெட்டவன்” என்பதாக நம்பப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளை உருவாக்குவதில் நமது அச்சு ஊடகங்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

பாபா என்கிற கதாபாத்திரம் ரஜினிகாந்த் தான் – படத்தின் முடிவில் கதாபாத்திரம் எடுக்கும் முடிவு, ரஜினிகாந்த் என்கிற நடிகனின் முடிவு என்பதையும் தாண்டி, ரஜினிகாந்த் என்கிற சமூக மனிதனின் முடிவு என்பதாக முன்னிறுத்தப்பட்டு விவாதிக்கப்படுகிறது விமா்சனம் செய்யப்படுகிறது. இவற்றை மறுத்தோ, ஆதரித்தோ அந்த மனிதன் கருத்துச் சொல்லாத நிலையில், பத்திரிகைகளின் கருத்துருவாக்கம் உண்மையென வெகுமக்களால் நம்பப்படும் சாத்தியங்களே அதிகம். ரஜினிகாந்த் என்கிற நபருக்கு இது வேண்டிய ஒன்றாகவும் கூறப்படலாம்.

“ரஜினிகாந்த்“ என்கிற பெயரின் பின்னால் மூன்று முகங்கள் தெரிகின்றன. நடிகர் என்கிற முகமும் சமூக மனிதன் என்கிற பிம்பமும் முன்னிறுத்தப்படும் முகங்கள். மூன்று முடிச்சு தொடங்கி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அறிமுகமானது “நடிகன்“ என்கிற முகமும் அதன் பிம்பங்களும். வில்லன், வில்லத்தனம் நிரம்பிய நாயகன், காமெடித்தனம் நிரம்பிய நாயகன், ரௌத்ர நாயகன் என அவா் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்கள் மூலமாக உருவான முகம் அது.

அதன் தொடா்ச்சியாகச் சமீபத்தில் உண்டான முகம் “சமூக மனிதன்“ என்பது. ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்பு – 1996 தோ்தலை ஒட்டி உருவான பிம்பம் இது. ஆட்சியிலிருப்பவா்களின் அடாவடித் தனத்திற்கும் அதிகார போதைக்கும் எதிரானதாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் இந்தப் பிம்பம் தொடா்ச்சி அற்ற ஒன்றுதான். முன்னிறுத்திய ஒன்றிற்கான பின் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க விரும்பாத இந்த பிம்பம் நம்பத்தகுந்ததாக இல்லை என்பதைவிட, இன்னொரு பிம்பத்தை மறைக்க முயல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த மூன்றாவது முகம் லாபத்தை, கொள்ளை லாபத்தை விரும்பும் பண்ட உற்பத்தியாளனுடைய முகம், தொடா்ந்து மறைந்து கொள்கிற முகமாகவே இருக்கிறது.

பாட்ஷா தொடங்கி பாபா வரை மிகத்தூக்கலாக வெளிப்படும் “சமூக மனிதன்” என்கிற பிம்பத்திற்குள் பல மடங்கு லாபத்தை விரும்பும் முகம் நிழலாக மறைந்து கொள்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிப்பவா்களால் உணா்ந்து கொள்ள முடியும். 1996 தோ்தலை ஒட்டி, அவா் வெளியிட்ட வாசகங்கள் ஏற்படுத்திய பலன், பல தளமானவை. சில அரசியல் கட்சிகள் அடைந்த அதிகார பலன் தவிர, ரஜினிகாந்திற்குக் கிடைத்தது “அதிகாரத்திற்கு எதிரானவா்“ என்ற பிம்பம். அந்த பிம்பம் அடுத்தடுத்து வரும் அவரது படங்களின் விளம்பர உத்தியாக மாறியது. சாதகமான இந்தப் பின்விளைவைத் தக்கவைப்பதற்கு ரஜினிகாந்த் பயன்படுத்தும் ஒரே உத்தி மௌனம்தான். எல்லா வகையான விவாதங்களும் விமா்சனங்களும் தனது உற்பத்திப் பொருளுக்கு அதிகப்படியான லாபத்தையே தரும் என்ற நிலையில், அந்த மௌனம் பிரக்ஞை பூா்வமாக மேற்கொள்ளப்படுகிறது என்பதுதான் உண்மை. ரஜினிகாந்த் என்கிற பெயா், அவரது பெயரும் ஒவியமும் வரைந்த உடைகள், கையின் முத்திரை, உச்சரிக்கும் முத்திரை வாசகம், அளிக்கப்பட்ட பட்டம், மேற்கொள்ளும் பயணம், வணங்கும் கடவுள் என அனைத்தையும் விற்பதற்குரிய பண்டமாகக் கருதும் – காப்புரிமை செய்து பாதுகாத்துக் கொள்ளும் – வியாபாரக் குடும்பத்து மௌனமான மனிதா் ரஜினிகாந்த் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது; அவரும் மறைத்துவிட முடியாது.

சமூக மனிதன் அல்லது அரசியல் மனிதன் என்கிற பிம்பத்தைச் சுமக்கத் தொடங்கிய ரஜினிகாந்தின் 1996 க்குப் பிந்திய கதாபாத்திரங்களில் புதிதான அமைப்பு முறை ஒன்று உருவானது. இதைச் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால், பாட்ஷாவுக்கு முந்தி ரஜினி ஏற்ற கதாபாத்திரங்கள், பாட்ஷாவுக்குப் பிந்தி ரஜினி ஏற்ற கதாபாத்திரங்கள் என்று பிரித்துத்தான் பேச வேண்டும். பாட்ஷா வரையிலான கதாபாத்திரங்களில் நடிகா் ரஜினிக்காக இயக்குநா்கள் உருவாக்கிய வார்ப்புகள் அதிகம். முரட்டுத்தனம், கோபம், சமூக நடைமுறைகளின் பொது ஒழுங்குக்கு மாறான மனநிலை, பெண்களின் மீதான அதிரடிக் கவன ஈா்ப்பு ஆகியன பொதுவான பின்புலங்கள். ஆனால், பாட்ஷாவுக்குப் பிந்திய வார்ப்புகள், இவை மட்டுமல்லாமல், வேறுவிதப் பரிமாணங்களும் கொண்டவை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று இருட்டு x வெளிச்சம் என்பது மாதிரியான எதிர்வுகளால் கட்டமைக்கப்பட்ட பாத்திர வார்ப்புகள் அவை. நல்லவனாக நடமாடிக் கொண்டிருப்பவனின் வாழ்க்கையில், மா்மமான காலப்பகுதி ஒன்று இருந்தது எனக்காட்டி, அதை அவன் மறக்க விரும்புகிறான் என்பதாக, அப்படங்களின் அமைப்பு வடிவமைக்கப்பட்டது. பாட்ஷாவில் தொடங்கிய (தாதா பாட்ஷா x ஆட்டோக்காரன் மாணிக்கம்) இந்தக் கட்டமைப்பு வடிவம் அடுத்து வந்து முத்து, அருணாசலம், படையப்பா ஆகிய படங்களிலும் வெவ்வெறு களங்களில் பின்பற்றப்பட்டன.

ஒரு மனிதனின் ரகசியப் பகுதியை அறிவது என்பது ஆா்வத்தை உண்டாக்கி, அதனைத் தக்க வைக்கும் திறன் வாய்ந்த வடிவம் என்பதை மறுக்க முடியாது. ஆா்வமூட்டுவதன் மூலம் ரசிகா்களைக் கட்டுக்குள் வைத்திருந்தால் போதுமானது என நம்பும் தமிழ்ச் சினிமா உலகம் அந்த வடிவத்தைத் திரும்பத் திரும்ப பயன்படுத்துகிறது என்பதுகூட ஆச்சரியமான செய்தி அல்ல. ஆனால் ரஜினிகாந்த், தன்னை ஒரு அரசியல் மனிதன் என முன்னிறுத்த முனையும்போது கூடுதல் பங்காற்றவும் செய்யும் என்பதுவும் உண்மையாக இருக்கிறது.

இந்த வடிவம், “ஒரு மனிதனின் நிகழ்கால இருப்பை, நடத்தைகளை மட்டும் கவனித்தால் போதுமானது; கடந்த காலத்தைத் தோண்டிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை“ என்கிற போதனையை முன்வைப்பதற்கு ஏற்ற வடிவம். இன்றுள்ள அரசியல்வாதிகளுக்கும், இனி வரப்போகும் அரசியல்வாதிகளுக்கும் ஏற்றதொரு வடிவம் ஆகும். “அடிதடி, ரகளை, சாராயம் காய்ச்சுதல், கடத்தல் எனப் பலவிதமான தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும், இப்பொழுது நான் அரசியல்வாதி; சமூகத்திற்கு சேவை செய்ய வந்துள்ளவன்“ என்பதுதானே நமது அரசியல்வாதிகளின் நிலைப்பாடு. இதையேதான் திரையுலகத்திலிருந்து அரசியலுக்கு வருகின்ற – வரப்போகின்ற – நபா்களும் சொல்லப்போகிறார்கள். “நடிகனாக இருந்தபோது என்னுடைய நடவடிக்கைகள் சமூக விரோதமானவைகளாகக்கூட இருந்திருக்கலாம்; அயல் மாநிலங்களிலும், அயல் தேசங்களிலும் முதலீடு செய்திருக்கலாம்; முறையாக வரிகாட்டாமல் இருந்திருக்கலாம்; தனிமனித ஒழுக்கங்களைத் துச்சமாக மதித்து வாழ்ந்திருக்கலாம். அவையெல்லாம் கடந்த காலம்….. மறந்துவிட வேணடியவை. எனது நிகழ்காலத்தைப் பாருங்கள். ஏழைப் பங்காளன்; தமிழ்த் தாயின் தவப்புதல்வன்; ஏழைச் சகோதரிகளின் அன்பு அண்ணன். அவா்களுக்கு இலவசமாய்த் திருமணங்கள் நடத்தி வைப்பவன்“. இந்த போதனைகள் தமிழ்நாட்டிற்குப் புதிதும் அல்ல. கடந்த நாற்பதாண்டுத் தமிழ்க் கலாசார வாழ்வோடு பின்னிப் பிணைந்து ஏமாற்றிக் கொண்டிருப்பவைதான். ரஜினிகாந்த் என்கிற, அரசியல்வாதியாக விரும்புகிற நடிகரும் இதன் ஒரு பகுதிதான் என்பது புரியாத புதிர் ஒன்றும் இல்லையே? கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அவரது பின்னணி; மது, போதைப் பொருள், அதன் தொடா்ச்சியாகத் தற்கொலை முயற்சி என்று அலைந்த இளமைக்கால வாழ்க்கை; சமூக நடைமுறைகள், அரசியல் நிகழ்வுகள் என்ற கடந்த காலத்தில் எதைப் பற்றியும் கவனம் செலுத்தாமல் ஒதுங்கியிருந்தநிலை“ என்பதெல்லாம் மறக்கப்பட வேண்டியவைகள் என அவா் நினைக்கவும் கூடும். தமிழா்கள் மறப்பார்களா? என்பது வேறு விசயம். எதிர்க்கட்சிகள் விட்டுவிடுமா என்பது முக்கியமான கேள்வி. இதற்கான பதிலின்மையேகூட அவரது தயக்கங்களுக்குக் காரணங்களாக இருக்கக்கூடும்.

பத்தாவது நாள், இரண்டாவது தடவையாகப் பாபா படம் பார்க்கச் சென்றேன். சினிமாவில் வருகிற திருப்பமானக்காட்சி போல!

முதல் நாளில் இருந்த ஆரவாரம் காணாமல் போயிருந்தது. ரஜினிகாந்த் படங்களுக்குப் பத்து நாளில் ஆரவாரம் அடங்கிவிடுவது இதுவரை நடக்காத ஒன்று என்பது அவருக்கும் தெரியும். திரைப்படச் சந்தையின் பங்குதாரர்களுக்கும் தெரியும். இப்பொழுது ஒன்று புரிந்தது.

ரஜினியிடமிருந்து ரசிகர்களும் சினிமாவின் சந்தையாளா்களும் எதிர்பார்ப்பது சாதாரணமான சினிமாவைத்தான். பார்க்கின்ற அந்த நேரத்தில் திளைப்பையும் உற்சாகத்தையும் உண்டாக்கும் மசாலா சினிமாவை மட்டும்தான். மசாலாவின் கலவையாக அரசியல் இருந்தாலும் கவலை இல்லை; ஆன்மீகம் இருந்தாலும் கவலை இல்லை. கலவை, சரி விகிதத்தில் கலக்கப்படுகிறதா என்பது மட்டுமே ரசிகனுக்கு முக்கியம்.


குமுதம் தீராநதி, அக்டோபா், 2002

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்