போய்த் திரும்பும் பறவைகள் -ஜெயந்திசங்கரின் கதைகள்

ஒரு படைப்பாளியின் கதைகளை அவ்வப்போது வாசிக்கும்போது வாசிப்பவரிடம் உருவாகும் நினைப்புகள் ஒருவிதமானவை. நிதானமாக வாசித்து முடித்தபின் அந்தக் கதையின் வெளிகளுக்குள் வாசகரை அழைத்துச் சென்று கதைக்குள் உருவாக்கப் பெற்ற மனிதர்களின் வினைகளையும் அவ்வினைகளுக்கான காரணங்களையும் முன்வைக்க முயல்வது முதன்மைச் செயல்பாடாக இருக்கும். அப்படி முன் வைக்கும் காரணங்களாகக் கதாபாத்திரங்கள் வாழ நேர்ந்த சமூகச்சூழலும் அதை எழுதியவரின் காலச்சூழலும் இருக்க முயல்கின்றன. அந்த நேரத்தில், கதாசிரியன் உருவாக்கும் வெளி, பாத்திரங்கள், அவைகளின் வினைகள், அவை நிகழ்வதற்கான காரணிகள் என்ற எல்லைகளைத் தாண்டி வாசகமனம் செல்வதில்லை. ஜெயந்தி சங்கரின் பல கதைகளை நான் அப்படித்தான் வாசித்து முடித்திருந்தேன். அத்தகைய வாசிப்புகளின் போதெல்லாம் அவரால் உருவாக்கிய பாத்திரங்களே என்னோடு நெருக்கமாக நின்று என்னோடு பேசினார்கள்; தங்களை முன் வைத்தார்கள்; தங்களின் செயல்பாடுகளுக்கான காரணகாரியங்களைச் சொல்லப்பார்த்தார்கள். அப்படிச் சொல்லியபோதே இவர்களெல்லாம் என்னருகில் இல்லாதவர்கள் என்பதை உணர்ந்து வைத்திருந்தேன்.