நள்ளிரவு ரயில் பயணங்கள்



கோவையிலிருந்து திருப்பத்தூருக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டும் என நினைத்து கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ரயில் இரவு 09.50 -க்குத் தான். போத்தனூர் ரயில் நிலையக் கொசுக்களோடு நடத்திய யுத்தத்தில் சிந்திய ரத்தத்தை விடச் சோகமானதாக ஆகி விட்டது அந்தப் பயணம்.
நள்ளிரவு 01.15 க்குத் திருப்பத்தூர் போய்ச் சேரும்; ஆனால் 12.30 -க்குக் கண் விழித்துக் காத்திருங்கள் என்றார் பயணச்சீட்டுப் பரிசோதகர். பத்து மணியிலிருந்து கண்ணை மூடிப் பார்த்தும் விழிப்பதற்கான வாய்ப்பையே தரவில்லை கண் இமைகள். அவை மூடினால் தானே திரும்பவும் திறக்க முடியும். மூடாத கண்களோடு திருப்பத்தூரில் இறங்கியபோது தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றும் நண்பர் பார்த்திபராஜா ரயில் நிலையத்தில் காத்திருந்தார். குளிரண்டா ஆடைகளோடு வாருங்கள் என்ற எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதை உறுதி செய்து கொண்டு அழைத்துப் போனார். 

மறுநாள் அவரது ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “செவ்வியல் இலக்கியங்களில் புரவலரும் புலவரும்” என்ற பொருளிலான பயிலரங்கில் நான் பேச வேண்டும். தலைப்பை முழுமையாக ஏற்றுப் பேசினேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் செவ்வியல் கவிதை தொடங்கி நிகழ்காலக் கவிதை வரை வாசிப்பதற்கான தமிழ் மரபுசார்ந்த நவீன வாசிப்பு முறை ஒன்றை அறிமுகப்படுத்தினேன். பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்றார்கள் என்பது தெரிந்தது. நிறைவில் அதை உறுதி செய்வது போலப் பலரும் உரையாடியதிலிருந்தும் உணர முடிந்தது. 

திருப்பத்தூருக்கு வந்த அந்த நள்ளிரவுப் பயணம் போலவே அங்கிருந்து சென்னைக்குப் போன பயணமும் நள்ளிரவுப் பயணமாக ஆகி விட்டது. 12 மணிக்கு ஏறி அதிகாலை 04.15 -க்குப் பெரம்பூரில் இறங்கும் திட்டம். இந்த முறை இமைகள் என்னை ஏமாற்றி விட்டன. அவ்வப்போது விழித்து மூடிக் கொண்டே இருந்தன. நான்கு மணிக்கு வைக்கப் பட்டிருந்த நினைவூட்ட ஓசை ஒலித்தபோது ரயில் பெரம்பூரைத் தாண்டி பேசின்பிரிட்ஜ் போய் விட்டது. நல்ல வேளை பரிசோதனை எதுவும் இல்லை. செண்ட்ரலில் இறங்கித் திரும்பவும் நகர ரயில் அம்பத்தூர் பயணம். இந்த ராத்திரியும் தூக்கம் தொலைந்த ராத்திரியாகவே ஆகி விட்டது. குட்டிகுட்டி ரயில் பயணங்கள் செய்த காலங்கள் முடிந்து நீண்ட தூரப் பயணங்களுக்காகவே ரயிலை நாடும் நிலைமை ஏற்பட்டுப் பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டன. அதுவும் ஊதக் காத்து வீசும் ரயில் பெட்டிகளில் இறங்க வேண்டிய நிறுத்தத்தைத் தவற விட்டுவிடக் கூடாது என்ற தவிப்போடு காத்திருக்கும் அனுபவம் எனது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை. அவர்கள் பேருந்துப் பயணங்களையே தவிர்த்து விட்டு மகிழுந்துகளிலேயே பயணம் செய்கிறார்கள். தூக்கமில்லா நள்ளிரவு ரயில் பயணங்களை நான் தவிர்த்து விட மாட்டேன்.

கருத்துகள்

Avargal Unmaigal இவ்வாறு கூறியுள்ளார்…

உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்