பண்டிகைகள் - திருவிழாக்கள்- கொண்டாட்டங்கள்

நமது பண்டிகைகள் நமது வாழ்வின் சில மகிழ்ச்சியான தருணங்களாக இருந்தன; சில துன்பங்கள் தொலைந்ததின் நினைவுகளாக இருந்தன. சிலவற்றை வரவேற்கும் ஆரவாரமாக இருந்தன. ஆனால் இன்று ஒவ்வொரு அரைமணி நேரத்தையும் வணிக நிறுவனங்கள் பங்கு போட்டுக் கொண்டு பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும் பார்வையாளர்களோ அவற்றின் விளம்பரத்தைப் பார்த்து பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் ஏக்கத்தின் நாட்களாக பண்டிகை நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் பண்டிகை நாட்களை வியாபாரப் பண்டங்களின் நினைவு நாட்களாக ஆக்கி ஆண்டுகள் சில பத்துகள் ஆகிவிட்டன. இப்போது கிராமத்துக் குடிமக்களிடம் இலவசத் தொலைக்காட்சி அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. காலத்தைக் கடைச்சரக்காக்கும் வித்தையைச் செய்யும் வியாபாரிகளிடமும் அவர்களை அண்டிப் பிழைக்கும் ஊடகங்களிடமும் மனிதர்கள் எச்சரிக்கையோடு இருப்பார்களாக; இல்லையென்றால் எல்லா அடையாளங்களும் இல்லாமல் போய்விடும்.