சென்னைப்பயணத்தில் இரண்டு நிகழ்வுகள்

சென்னை எனக்கு விருப்பமான நகரமல்ல. அங்கேயே தங்கி வாழும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் அதனைத் தவிர்த்தே வந்துள்ளேன். அதே நேரம் அந்த நகரத்தை வெறுத்து ஒதுக்கியும் விடமுடியாது. தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பதால் எனது விருப்பப்புலம் சார்ந்த நிறுவனங்களும் நிகழ்வுகளும் அங்கேதான் இருக்கின்றன; நிகழ்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பிள்ளைகள் இருவரும் அங்கே இருந்தார்கள். அதனால் அதிகம் போய் நாட்கள் கணக்கில் தங்கியதுண்டு. அதிகமாக இரண்டு வாரங்கள் அளவு தங்கியுள்ளேன். அப்போது சென்னையில் இலக்கிய நிகழ்வுகளில் பார்வையாளனாகப் பங்கேற்றுவிட்டுத் திரும்புவேன். இப்போது ஓய்வுக்காலம் என்றாலும் அங்கே தங்கி நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியவில்லை.