நாயக்கர் காலம் இயல் 4. சமயநிலை
மனிதகுல வரலாற்றில் சமயங்களின் இடம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதிலும், பல சமயங்களின் பிறப்பிடமாகவும், பல சமயத்தவர்களின் ஆட்சி அதிகாரத்தைக் கண்டிருந்ததாகவும் உள்ள இந்தியாவின் வரலாறு பற்றிய ஆய்வில் சமயங்களின் பங்கு, தவிர்க்க முடியாதது . “சமயம் மனிதரை நெறிப்படுத்துவது; முறைப்படுத்துவது; சமயம் ஒரு தூய்மையான வாழ்க்கை முறை; சமயவாழ்க்கையினால் புலன்கள் தூய்மையடையும்; பொறிகள் இன்ப வைப்புக்களாக மாறும்; இதயம் விரியும்; ஈர அன்பு பெருகி வளரும்; வேறுபாடுகள் மறையும்; ஒருமை தோன்றும்; ஓருலகம் மலரும்; இதுவே சமயத்தின் பயன் “ என ஆன்மீகவாதிகள் சமயத்திற்கு விளக்கம் தருகின்றனர்.1 ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமயமும் பரந்த அளவு மக்களைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது. இதன் காரணமாகத் தனது போதனைகளே உயர்வானது; உண்மையான வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியது என நிறுவவும் முயன்றுள்ளன. இருக்கின்ற சமயங்களின் போதனைகள் திருப்தி அளிக்காத நிலையில் புதிய சமயம் கிளைவிடுவதும், பழைய சமயத்தின் அதிகாரப் பரப்பைக் கையகப் படுத்தித் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதுமான செயல்களும் நிகழ்ந்த