இடுகைகள்

ஞானபீடத்துக்கான பாதை

இந்த வருடம் தமிழுக்கு ஞானபீட விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என அதன் பரிந்துரைக் குழுவில் இருக்கும் அந்தப் பேராசிரியர் சொன்னார். 1977 இல் அகிலனுக்குக் கிடைத்தபின்னர் 23 ஆண்டுகள் காத்திருந்து ஜெயகாந்தனுக்கு வழங்கப் பட்டது. இனியும் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதில்லை. நமது அண்டை மாநில மொழிகளான மலையாளத்துக்கும் கன்னடத்துக்கும் ஐந்து தடவை ஞானபீடம் வழங்கப்பட்டு விட்டதைச் சுட்டிக் காட்டியே தமிழுக்கான வாய்ப்பைப் பெற்று விட முடியும்; அதற்கு முன்னால் நாம் செய்ய வேண்டியது பரிந்துரைக்கத் தக்க எழுத்தாளர் யார் என்பதை முடிவு செய்வதும், அவரைப் பற்றி ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தின் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பிற இந்திய மொழிகளிலும் அறிமுகம் செய்ய வேண்டியதும் தான் முதல் பணி என்றார்.

தமிழில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது?

பட்டப்படிப்பை அமெரிக்கன் கல்லூரியில் முடித்து விட்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பில் சேர்ந்திருந்தேன். வகுப்புகள் தொடங்கி இரண்டு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. எனக்கொரு கடிதம் வந்திருப்பதாக வகுப்புத் தோழி சொன்னவுடன் அதை எடுப்பதற்காகத் துறைக்கு வரும் கடிதங்கள் போடப்படும் பெட்டிக்கு அருகில் போய்க் கடிதங்களைப் புரட்டினேன்.  எனக்கு வந்த கடிதத்தைத் தேடிக் கொண்டிருந்த போது எனது பெயரைச் சொல்லி அவர் அழைத்தார். அவருடன் இன்னும் நான்கு பேர் இருந்தார்கள். அருகில் போன போது எனது பெயருக்கு வந்த தபால் அட்டை அவர் கையில் இருந்தது. அழைத்தவர் மற்றவர்களை விட நல்ல உயரம்.  தயங்கித் தயங்கி அவரருகில் சென்றேன். காரணம் ’ராகிங்’ செய்யப்போகிறார்கள் என்ற பயம்.

கதவைத் திறந்து வையுங்கள் ; காற்றுக்காக மட்டுமல்ல.

அதைப் பயணம் எனச் சொல்வதை விடப் பங்கேற்பு என்றே சொல்ல வேண்டும். அந்தக் கல்லூரிக்குத் தரப்பட்ட   தன்னாட்சி நிலையை மேலும் தொடரலாமா? இல்லையென்றால் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் பழையபடி கொண்டு வந்து விடலாமா? எனப் பரிந்துரைக்கும் பல்கலைக்கழகக் குழு ஒன்றின் உறுப்பினராகச் சென்றிருந்தேன். நான் அந்தக் கல்லூரிக்குப் புதியவன். பிற பல்கலைக்கழக வல்லுநர் என்ற வகையில் அக்குழுவில் இடம் பெற்றிருந்தேன்.   

தூரம் அதிகம்; நேரம் குறைவு

தஞ்சையின் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய போது நேரம் காலை 6.35. நெல்லையில் நேற்றிரவு கிளம்பிய நேரம் 11.35. ஏழுமணி நேரப் பயணத்தில் வந்து சேர்ந்தாகி விட்டது. இத்தனைக்கும் ஒரே பேருந்தில் பயணம் செய்யவில்லை. இடையில் மதுரையில் இறங்கி முக்கால் மணி நேரம் காத்திருந்து அங்கிருந்து கிளம்பும் இன்னொரு அரசுப்பேருந்ததைப் பிடித்துத்தான் வந்தேன்.