இந்த வசதிகள் எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களுக்குக் கிடைக்காதவை. வளைவுகளற்ற நான்குவழி, ஆறுவழிச் சாலைகளில் வழுக்கிக் கொண்டு போகும் ஆம்னி பஸ்கள், விரைவுப் பேருந்துகள் உட்பட்ட போக்கு வரத்து வசதிகள், விதவிதமாய்க் கல்வியைக் கற்றுத் தரும் கல்விச் சாலைகள், தனித்தனி உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவம் தரும் பாலி கிளினிக்குகள், டிக்கெட் கிடைக்கவில்லையென்று தியேட்டருக்குப் போன பின்பு திரும்பி வரத் தேவையில்லாத அளவுக்கு ஒரே இடத்தில் பல தரப்பட்ட சினிமாக்களைச் சேர்த்து வைத்திருக்கும் மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், சாப்பிடும் போதே பிள்ளைகள் விளையாடத் தனி அறைகள், குடும்பமாகச் சாப்பிடும் போது மற்றவர்களுக்குக் கேட்காதவாறு தடுக்கும் இசைக் கோலங்களை உமிழும் ரம்மியமான சூழல் கொண்ட உணவு விடுதிகள், அந்நிய நாடுகளில் மட்டுமே கிடைத்த வண்ண ஆடைகளைக் கட்டித் தொங்க விட்டு அசத்தும் துணிக்கடல்கள், காலனிக் காட்சிக் கூடங்கள், வீட்டுபயோகப் பொருட்காட்சி அரங்குகள் என வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது உலகமயப் பொருளாதாரம்.