நம் காலத்து நாயகா்கள் : பொது உளவியலும் ஊடக உளவியலும்
19.10.2004 அன்று நான் வகுப்பிற்குள் நுழைந்தபோது வழக்கத்தை விடக் கூடுதலான அமைதியுடன் இருந்தது வகுப்பறை. காலையில் தினசரியைப் பார்த்ததில் இருந்து தொற்றிக்கொண்ட அமைதி வகுப்பிலும் இருப்பதாக நான் நினைத்துக் கொண்டேன். 18.10.2004 இரவு வீரப்பன் கொல்லப்பட்ட தகவலைச் செய்தித்தாளைப் பாரத்துத் தான் நான் தெரிந்திருந்தேன். ஆனால் மாணவிகளில் பலரும் அத்தகவலைத் தொலைக்காட்சிகள் மூலமாக அறிந்திருந்தனா். அந்தச் செய்தி அவா்களிடம் ஒற்றைத் தன்மையான தாக்கத்திற்குப் பதிலாகப் பலவிதமான கேள்விகளை எழுப்பியிருந்தது என்பதை அன்றைய விவாதம் எனக்கு உணா்த்தியது. வகுப்பில் நடத்த வேண்டிய பாடங்களுக்குப் பின் நான் எழுப்பும் பொதுவான கேள்விகளுக்கு எந்த விதப் பதிலும் தராத மாணவிகளும் மாணவா்களும் என்னையே முந்திக்கொண்டு வீரப்பனின் கொலை குறித்து விவாதிக்கத் தொடங்கியது எனக்கு இன்னொரு உண்மையையும் உணா்த்தியது. வீரப்பன் காவிய நாயகனாக ஆகித் தமிழ் உள்ளங்களுக்குள் வாசம் செய்திருந்திருக்கிறான் என்பதுதான் அந்த உண்மை.