அடுத்தடுத்துப் பார்த்த சினிமாக்கள்

 வாசிப்பும் எழுத்தும் தடைபடும்போது சினிமா கைகொடுக்கும். அதிலும் தர்க்கத்திற்குள் நிற்கும் வணிக சினிமாக்கள் உண்டாக்கும் கிளர்ச்சியும் தளர்வும் அடுத்த கட்ட பணிகளை உருவாக்கித் தரும். அந்த நோக்கத்தில் இந்த படங்களை ஒவ்வொரு நாள் இடைவெளியில் பார்த்து முடித்தேன். பார்த்த சினிமாக்களை மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கும் குறிப்புகள் இவை. நான்கில் இரண்டு நேரடி தமிழ்ப்படங்கள். ஒன்று தெலுங்கு; இன்னொன்று மலையாளம். நான்குமே இணையச்செயலிகளில் கிடைத்தவை.


சொர்க்கவாசலில் ஷோபாசக்தி
எழுத்தாளர் ஷோபாசக்தி நடித்த படம் என்பதற்காகச் சொர்க்கவாசல் பார்த்தேன். வன்முறையோடும் குற்றப் பின்னணிகளோடும் கூடிய மனிதர்களின் இடம் சிறை என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ள சொர்க்கவாசலின் நிகழ்வுக் களங்கள் எண்பது சதவீதத்திற்கும் அதிகமாகச் சிறைச்சாலையாகவே இருக்கிறது.

 சிறைச்சாலைக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளும் கூடச் சிறைக்கு உள்ளே நடக்கிறதோ என்ற எண்ணத்தைத் தூண்டுவனவாக இருக்கின்றன. தீவிர சினிமா அல்லது கலைப்படம் என வகைப்படுத்தப்படும் சினிமாக்களில் இதுபோல ஒற்றைக் களத்திலேயே மொத்தக்காட்சிகளையும் விவரிப்பதை அதன் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் வெகுமக்கள் ரசனைக்கான ஒரு சினிமாவின் மொத்த நீளத்திலும் வன்முறையும் குற்றமனமுமே நிறைந்திருக்கும் என்றால் அதன் பார்வையாளர்களின் மனம் தீர்மானமாக விலகிப் போய்விடும். ஏனென்றால் அவர்களின் ரசனை என்பது பலவிதமான உணர்வுகளைத் தூண்டும் காட்சிகளைப் பலவிதமான பின்னணியில் எதிர்பார்க்கக்கூடியது. இதனை சொர்க்கவாசலின் இயக்குநர் புரிந்துகொள்ளவில்லை.

சிறைக்குள் இருக்கும் மூன்று பெருந்தலைகள் இருக்கிறார்கள். அம்மூவர் வரிசையில் மூன்றாவதாக இருப்பவர் சீலன். ஷோபா சக்திக்குத் தரப்பட்டுள்ள அந்தப் பாத்திரம் வன்முறையை விரும்பாத ஒருவராகக் காட்டப்பட்டுள்ளார். அந்தப் பாத்திரம் சிறைக்குள் வந்த காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. சிலோன்காரர் என்ற தகவல் மட்டுமே உள்ளது. அவருக்கு மட்டுமல்லாமல் மற்ற இரண்டு பெருந்தலைகள் சிகா (செல்வராகவன்) இஸ்மாயில் ஆகியோருக்கும் வெளியுலக வாழ்வுப்பின்னணி விரிவாக இல்லை. சட்டத்துக்குப் புறம்பான குற்றப்பின்னணி கொண்ட தாதாக்கள் என்ற அளவில் தான் குறிப்புகள் உள்ளன. அவர்கள் இருவரும் ஏராளமான வன்முறைச் செயல்களைச் செய்துவிட்டு உள்ளே வந்திருக்கிறார்கள். உள்ளேயும் தங்களுக்கென அடிதடி கும்பலை உருவாக்கித் தங்கள் பிடியில் வைத்துள்ளார்கள்.

தாதாக்கள் மூவரில் முதலிடத்தில் இருக்கும் சிகா வன்முறையைக் கைவிட்டுவிட்டு சாதாரணமான மனிதர்களைப் போன்றதொரு வாழ்க்கையை நோக்கி நகர நினைக்கிறார். அப்படி நகர்வதற்குக் காரணமாக இருந்த பாத்திரமும் இந்திய மனிதர் அல்ல.கேன்றிக்கா என்ற கறுப்பினப் பாத்திரம். வன்முறை வாழ்வு X வன்முறையைக் கைவிடும் மனநிலை என்ற எதிர்வுக்குள் இருக்கும் சிறை மனிதர்களின் முரண்பாட்டையே வளர்த்தெடுத்து நல்லதொரு சினிமாவை உருவாக்கியிருக்க முடியும். அதைச் செய்யாமல் வழக்கமான தமிழ்ச்சினிமாச் சூத்திரமான நல்லவனான நாயகன், கெட்டவர்களோடு மோதி வெல்லும் கதையை எடுக்க நினைத்துக் குழப்பமான காட்சிகளை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

நாயகப்பாத்திரமான பார்த்தி (ஆர்.ஜே.பாலாஜி) க்கு ஏன் ஜெயிலுக்குள் வருகிறார் என்ற விரிவான தகவல்கள் உள்ளன. உண்மையில் குற்றச் செயல்கள் எதிலும் ஈடுபடாத – தனது நேர்மையான உழைப்பின் வழியாக முன்னேற நினைத்த அவரைக் காவல்துறையிலிருந்தவர்களே குற்றவாளியாகச் சித்திரித்து தண்டனை வாங்கிக் கொடுத்து உள்ளே அனுப்புகிறார்கள். சிறை நிர்வாகத்தின் ஆடுபுலி ஆட்டத்தில் பகடைக்காயாக மாற்றப்படுகிறார். முதல் தாதாவான சிகாவைச் சந்தித்துத் தான் செய்யாத குற்றத்திற்குச் சிறைக்குள் வந்துள்ளேன் என்பதைச் சொல்லி முறையிட நினைக்கும் நாயகனே அந்தத் தாதாவைக் கொன்றவனாகக் கருதப்பட மொத்த நிகழ்வுகளும் அவனைச் சுற்றியே நடக்க ஆரம்பிக்கின்றன.

குறிப்பிட்ட நாளில் நடந்த சிறைக்கலவரத்தை விசாரிக்கும் ஆணைய அதிகாரியின் விசாரணையே இந்தத் திரைப்படத்தின் சொல்முறைமை. அதனால் நேர்கோட்டில் நிகழ்வுகள் உருவாக்கப்படவில்லை. சாட்சிகளாக அழைக்கப்படும் சிறைக்காவலர்கள், அதிகாரிகள், வழக்குரைஞர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் சொல்லும்போது நேர்கோட்டுத்தன்மை சிதைக்கப்பட்டு, துண்டுதுண்டான காட்சிகளின் தொகுப்பாக மாறுகிறது. அரசியல்வாதிகளின் ஆட்டத்திற்கு உயரதிகாரிகள் துணைபோகின்றார்கள்; உயரதிகாரிகள் தங்களின் பதவி ஆசையால் விதிகளையும் சட்டங்களையும் மீறுகிறார்கள். அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதைச் சொல்ல நினைத்துள்ளார் இயக்குநர். ஆனால் அந்த மையவிவாதம் பார்வையாளர்களுக்குக் கடத்தப்படவில்லை.

சிறைக்குள் சமையல் பொறுப்பாளராக இருக்கும் பாலாஜி சக்திவேல் ஏற்றுள்ள பாத்திரம், தட்டையான பாத்திரமாகவே அறிமுகமாகி அப்படியே முடிக்கப்பட்டுள்ளது. அவரிடம் வெளிப்படும் நல்ல அம்சங்களான காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறை வார்டனாக இருக்கும் கருணாஸ் ஏற்றுள்ள பாத்திரத்திற்குள்ளும் அதிகார ஆசை இருந்தது என்பதைத் தூண்டும் காரணிகள் சரியாக உருவாக்கப்படவில்லை.வெளி உலக வாழ்க்கையில் அதிகாரம் செயல்படுவதுபோலவே சிறைக்குள்ளும் அதிகாரம் செயல்படுகிறது என்பதைக் காட்சிகள் வழியாகக் காட்டியுள்ள இயக்குநர், அப்பாவியான நாயகனும் அதனைப் பயன்படுத்திக் கொண்டான் என்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதற்கான பின்னணிகளும் விவாதங்களும் படத்தில் இல்லை.

கலவர நாளில் நடந்த நாளில் நடந்த உண்மை என்பது என்ன? என்பதைத் தேடும் விசாரணை ஆணையம், உண்மையென்பது சொல்பவர்களின் கோணத்திலிருக்கிறது என்ற தீவிரமான கருத்தியல் நிலையைப் பேசும் விதமாக முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் தீவிரத்தை நோக்கிப் படத்தின் காட்சிகள் உருவாக்கப்படவில்லை; தொகுக்கப்படவில்லை. பாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதில் தவறியுள்ள இயக்குநர், ஒரே மாதிரியான உணர்வுக்கலவையால் படத்தை உருவாக்கியுள்ளார். வெகுமக்களைப் பார்வையாளர்களாக நினைத்து எடுக்கும் வணிகப்படத்தின் சூத்திரத்திற்குள் மென்மையான உணர்வுகளுக்கும் கொந்தப்பான மனநிலைக்கும், விலகலான பாத்திரங்களுக்கும் இடமுண்டு என்பதை இயக்குநர் உணரவில்லை. உணர்ந்திருந்தால் நாயகனின் அம்மா, காதலி என்ற பாத்திரங்களை உள்ளடக்கிய காட்சிகளை வலுவாகவும் மெல்லுணர்வுகளோடும் உருவாக்கிப் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டியிருக்க முடியும். சமையல் கூடத்தின் பொறுப்பாளராக இருக்கும் பாலாஜி சக்திவேல் பாத்திரத்தோடு நாயகப்பாத்திரத்தின் உரையாடல்கள் வலுவானதாக ஆக்கப்பட்டிருக்கலாம். அவர் அங்கிருக்கும் முதன்மைத் தாதாக்களோடு ஒருவிதமான நல்லுறவைக் கொண்டிருந்தவர் என்று காட்டியிருக்க முடியும். அந்த வாய்ப்புகளையெல்லாம் இயக்குநர் தவறவிட்டுள்ளார்.

நேரடியாகக் கதையோடு தொடர்பு இல்லையென்ற போதிலும், பார்வையாளர்களை விலக்கிக் கொண்டுவந்து ஒரு தளர்வான மனநிலையில் நிறுத்திவைத்துச் சிந்திக்க வாய்ப்பளிக்கும் விதமாகக் காட்சிகள் இடம்பெறவேண்டும். அதை உணர்ந்த இயக்குநர்கள் படத்தின் போக்கில் நேரடியாகத் தொடர்பில்லாத நகைச்சுவைப் பாதையொன்றை உருவாக்கி நகைச்சுவை நடிகர்களை நடிக்கச் செய்கிறார்கள். அந்தத் தனிப்பாதையை ஏதாவதொரு காட்சியில் மையக் கதையோட்டத்தோடு இணைக்கிறார்கள். சொர்க்கவாசலில் அதுவும் செய்யப்படவில்லை. படத்திற்கு நல்லவிதமான உணர்வுக்கலவைகளை உருவாக்கும் விதமாக இசைக்கோர்வைகளும் அமையவில்லை. பாடல் காட்சிகளும் கவனிக்கத்தக்கதாக இல்லை.

வெகுமக்கள் ரசனைக்கான கூறுகளைத் தவறவிட்ட சொர்க்கவாசலில் சில வசனங்கள் சிறப்பாக உள்ளன. ஆனால் அதனை வெவ்வேறு பாத்திரங்கள் வெவ்வேறு சூழலில் பேசுகின்றன. ஆனால் பொருத்தமான சூழலில் இடம்பெறவில்லை. படத்தின் தொடக்கத்தில் கருணாஸ் சொல்லும் முத்திரை வாக்கியம் அவரை முழுவதும் நேர்மையான பாத்திரம்போலவும் கதையை நகர்த்த உதவும் பாத்திரம் போலவும் காட்டுகின்றது; ஆனால் அவரும் ஆட்டவிதிகளைத் தனக்குத் தோதாக மாற்றி விளையாடுபவர் என்று ஆகிவிடும் நிலையில் அந்த வாசகங்களின் பொருத்தப்பாடு தவறாகிவிடுகிறது. இதே நிலையைத்தான் ஷோபா சக்தியின் பாத்திரப்படைப்பும் உள்ளது. சிகாவின் மரணத்திற்குப் பின் அவரது தலைமையை சிறைவாசிகள் ஏற்பதற்கான காரணங்கள் வலுவாக இல்லை. அவர் பேசும் வசனங்களும் கோரிக்கைகளும் படத்தில் வளர்த்தெடுக்கப்படாத நிலையில் அவரது பாத்திரமும் அந்தரத்தில் நிற்கும் பாத்திரமாகவே நிற்கிறது. இதுபோலப் பல இடங்களைச் சுட்டிக்காட்ட முடியும்,

 

கசடன் ஹரி - தற்செயல்களால் ஆன வாழ்க்கை

"என் பெயர் ஹரி; நான் பெரிய தவறு செய்துவிட்டேன். என்னுடைய கர்மவினை என்னைத் துரத்துகிறது." என ஒப்புதல் வாக்குமூலம் தருவது போலப் பேசிக்கொண்டே வேகமாகக் காரில் செல்லும் ஒருவனின் கடந்த கால நிகழ்வுகளே டர்ட்டி ஹரி (Dirty Hari)என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ள கசடன் ஹரி ஒரு தெலுங்குப்படம். 2020 இல் திரைக்கு வந்துள்ளது. இப்போது ஆஹா (aha) இணையச்செயலியில் வெப்பம் அதிக வெப்பம் - Hot Too Hot - என்ற வகைப்பாட்டில் பார்க்கக் கிடைக்கிறது.
 
உச்சநிலைத் தொனியில் வசனம் பேசுதல், பொருத்தப்பாடுகளைப் பற்றிக் கவலைப்படாத ஆட்டமும் பாட்டும், அடர்த்தியான வண்ணங்களில் ஆடைகளோடு கூடிய நபர்களின் கூட்டம், வேகமான வாகன ஓட்டம், அடிதடி சண்டைக்காட்சிகள் என்ற வழக்கமான தெலுங்குப்படம் இல்லை. அதற்கு பதிலாக முற்றிலும் மெல்லினச் சரக்குகளால் நிரப்பப்பட்ட படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வல்லினத் தன்மைகள் கொண்ட ஆண் - பெண் உறவுக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. படுக்கை அறைகளைத் தாண்டிக் கண்டதும் காமத்தோடு அணுகுதல் என்ற எல்லைகளைத் தொடும் காட்சிகள் என்பதால் வெப்பம் கூடுதல் வெப்பம் என்றாகிறது.

தஸ்தியெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் ( Crime and Punishment) நாவலை நினைவூட்டும் சொல்லாடலும் காட்சிகளும் கொண்ட படத்தின் முதன்மைப் பாத்திரம் பணத்தாலும் காமத்தாலும் கிடைக்கும் திளைப்பைக் கைவிட முடியாமல் தவிக்கும் பாத்திரமாக உருவாக்கப் பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டில் தனித்திறன் பெற்றுள்ள ஹரியின் பாத்திரம் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து சாதித்துவிட வேண்டும் என நினைத்து இடம்பெயர்ந்த பாத்திரம். ஆனால் அவனுக்குத் தெரிந்த நண்பனோ கீழ்நடுத்தர வாழ்க்கைக்குள் இருப்பவன். அவனது உதவியோடு நகர வாழ்க்கைக்குள் நுழையும் ஹரிக்கு ஒரு விளம்பரத்தில் இருக்கும் இளம் நடிகையின் (ஜாஸ்மின்) அழகில் ஏற்படும் ஈர்ப்பு நகரம் தரக்கூடிய பாலியல் சுதந்திரத்தின் குறியீடாக மாறுகிறது. தற்செயலாகக் கிடைத்த அறிமுகத்தின் வழியாகப் பெரும்பணக்காரக் குடும்பத்தின் அறிமுகம் கிடைக்கிறது. அவனது சதுரங்க விளையாட்டும் இசை ஆர்வமும் அந்தக் குடும்பத்தின் மருமகனாக ஆக்கும் திசை நோக்கி நகர்த்திவிடுகிறது. வ்சுதா என்னும் பணக்காரரின் மகளை மணந்து பணம் தரும் கொண்டாட்டத்தையும் சொகுசையும் அனுபவிக்கிறான். ஆனால் வசுதாவுக்குக் கணவனாகத் தரவேண்டிய உடலுறவில் திருப்தியை அளிக்கவில்லை.

கணவன் - மனைவி உறவில் திருப்தி இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவனது மனதிற்குள் இருக்கும் நடிகை ஜாஸ்மினின் அண்மை இருப்பு. அந்தக் குடும்பத்தின் மருமகளாக வரும் நிலையில் அந்த நடிகை இருக்கிறாள் என்பதும் தற்செயல் நிகழ்வு தான் . ஒரு விளம்பரப்படத்தில் பார்த்த அந்த உடலின் மீதான விருப்பம் திருமணத்திற்குப் பின்னும் தொடர்கிறது. ஒருவிதத்தில் சகோதரி உறவுக்குள் வரப்போகும் அவள் மீதுள்ள காமம் நீள்கிறது என்பது அவனுக்குள் சிறு குற்றமாக அரும்புகிறது. ஆனால் அதிலிருந்து விலக மறுக்கிறது. அவளிடம் தனது நேசத்தையும் பிறழ்வான காம ஈர்ப்பையும் தடையில்லாமல் சொல்வதின் மூலம் அவளின் பிரியத்திற்குரியவனாகவும் மாறுகிறான்.
 
இன்னொரு தற்செயல் நிகழ்வால் நடிகை ஜாஸ்மினுக்கும் அவனது காதலனான பணக்காரனுக்கும் இடையே ஏற்படும் பிரிவு அவளைப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கிறது. அந்த நேரத்தில் ஹரி தனது பணக்கார மனைவியின் பணத்தைக் கொண்டு அதை இட்டு நிரப்புகிறான். அதன் வழியாகத் தனது காமவிருப்பத்தை நிறைவேற்றிக்கொள்கிறான். ஒரு கட்டத்தில் மனைவியிடமிருந்து பிரிந்து வந்து உன்னோடு இருப்பேன் என்று வாக்குறுதியும் அளிக்கிறான். ஆனால் மனைவியின் பணக்காரக் குடும்ப உறவை விட்டுப் பிரியவும் முடியவில்லை.
 
துப்பாக்கி முனையில் மிரட்டிப் பணிய வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் போனவனைக் கொலைகாரனாக மாற்றுவதும் தற்செயல் நிகழ்வுகள்தான். உனக்கு வைப்பாட்டியாக இருக்க முடியாது என்று சொல்லும் ஜாஸ்மினையும் அவளது தோழியையும் கொன்று இரட்டைக்கொலையைச் செய்தவனாக நிற்கிறான் ஹரி. கொலையின் சாட்சியங்களை அழித்துவிட்டதாக நினைத்தாலும் நுட்பமான சாட்சியங்களால் வழக்கை நடத்துகிறது காவல் துறை. அதிலிருந்தும் தப்பிவிடுகிறான். ஆனால் அவனது மனைவி தரும் நேரடித் தண்டனையிலிருந்து தப்பமுடியுமா? என்ற கேள்வியைக் கொண்டதாக இருக்கிறது படம். ஜாஸ்மினின் அம்மாவைத் தன் வீட்டில் தங்கவைத்துப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்படுத்திக் கணவனுக்கு உண்டாக்கும் தண்டனை ஒவ்வொரு நாளும் தண்டனையாக மாறப்போகிறது என்பதாகப் படம் முடிகிறது.

செய்த குற்றத்திற்குக் கிடைத்துள்ள தண்டனையை விவரிக்கப்போகும் தனிமொழியாகத் தொடங்கும் படம், தண்டனையின் பாரத்தை - வலியை -தவிக்கும் தவிப்பைக் காட்சிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, ஹரி செய்த குற்றங்கள் என்ன? அதை எப்படி மறைக்கப்பார்த்தான்? என்பதையே நிகழ்வுகளாக்கித் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறது. அதன் மூலம் குற்றத்திற்கான தண்டனை என்ற காவியத்தன்மை கொண்ட உரிப்பொருளிலிருந்து விலகி நிற்கிறது. அதற்கான காட்சிகளைத் திரைக்கதையாக்கினால் ஒரு கலைப்படமாக மாறியிருக்கும். அதற்குப் பதிலாகக் குற்றங்கள் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதைக் காட்சிப்படுத்துவதன் மூலம் வணிகசினிமாவின் சட்டகத்திற்குள் நிற்கிறது. பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் - தக்கவைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

பெருநகர வாழ்க்கை -உயர்வகுப்பினரின் பொருளாதாரப்பின்னணி என்பதற்கேற்பப் பொருத்தமான நடிக, நடிகையர் தேர்வும் காட்சி அமைப்புகளும் கச்சிதமாக உள்ளன. தரமான ஒளிப்பதிவும் இசைக் கோலங்களின் கோர்வையும் நேர்கோட்டுக் கதைசொல்லலும் பார்வையாளர்களைத் திளைப்புக்குள்ளாக்கும் தன்மையோடு உள்ளன. காட்சிகளுக்கான வண்ணங்களும், வெளிச்சமும் நிழல்களும் உருவாக்கும் அழகியல் எனப் பார்க்கத்தக்க படமாக உள்ளது. ஆனால் மரபான பண்பாட்டின் மீது பிடிமானம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் சினிமா..

*********************

ரைபிள் கிளப் -காட்சித்திளைப்பு
மலையாளத்திரைப்பட உலகில் தேர்ந்த நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நடிப்பதற்குச் சவாலான பாத்திரங்கள் கொண்ட சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் திரும்பத்திரும்ப உறுதி செய்கிறார்கள் மலையாள சினிமா இயக்குநர்கள். ரைபிள் கிளப் என்ற பெயரில் ஒரு மர்மப் படத்தைக் கொஞ்சம் அங்கதச்சுவையோடு தருவதுதான் முதன்மை நோக்கம். ஆனால் அதற்குக் கேரளத்தின் இடம் சார்ந்த பின்னணியைத் தருவதின் மூலம் மலையாளப் படமாக மாற்றியிருக்கிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆஷிக் அபு.
திலேஷ் போத்தன், அனுராக் காஷ்யப், வாணி விஷ்வநாத், தர்ஷனா, சுரபி லக்ஷ்மி உன்னிமாயா பிரசாத், வினீத்குமார், சுரேஷ்கிருஷ்ணா, விஜயராகவன்,
விஷ்ணு அகஸ்தியா, ராம்ஷன் முகம்மது எனப் பெரும்பட்டாளமே நடித்துள்ள படத்தில் நாயகப் பாத்திரம் என்று எதனையும் சொல்லிவிட முடியாது. ஆனால் அனுராக் காஷ்யப் தான் முதன்மை வில்லன.
அடாவடித்தனமாகத் தனது காமத்தைச் சொல்லும் மகனின் மரணத்திற்குப் பலிவாங்கப் புறப்படும் காஷ்யப்பின் வன்முறை ஆட்டத்தைக் குறிப்பான ஓரிடத்தில் குவிப்பதின் மூலம் படம் கேரளத்தின் முதன்மையான வயநாடு காட்டுப்பகுதியைப் படப்பிடிப்புப் பகுதியாக ஆக்கியிருக்கிறது. அந்தக் காட்டுப்பகுதியில் இருக்கும் பழைய பங்களா ஒன்றை - துப்பாக்கி சுடும் பயிற்சிக்கூடமாகத் திகழும் ஒன்றை நிகழிடமாக ஆக்கிக் கதை பின்னப்பட்டுள்ளது. அந்தப் பங்களா தனியார் ஒருவரிடம் இருக்கிறது என்ற தகவலோடு திப்புசுல்தானிடமிருந்து, பிரிட்டிஷாரிடம் போனது, பின்னர் ஒரு கிறித்தவக்குடும்பத்திடம் வந்தது எனக் கதையின் பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் மொத்தப்படமும் வன்முறை - மர்மம் என்ற வகைப்பாட்டிலிருந்து ஒரு வெளிசார் வரலாற்றுப் படம்போல மாறிவிடுகிறது. இந்த மாற்றமும் வேட்டையின் சாகசமும், திகிலும் சேர்ந்து பார்க்கத்தக்க படமாக மாற்றிவிடுகிறது. இந்த மாற்றம்தான் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் காட்சி இன்பம். உணர்ச்சித்திளைப்பு.

நிறங்கள் மூன்று: பார்க்கவேண்டிய படமல்ல

வீட்டில் ஒரு முகம்; வெளியில் ஒரு முகம் - இந்த ஒருவரிக் கதையாடலைக் கொண்டு விவாதிக்கத்தக்க சினிமாவை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் சினிமாவைச் செய்தி சொல்லும் ஒன்றாக நினைத்து வணிக வெற்றிப்படத்தைக் கூட உருவாக்கவில்லை இயக்குநர் கார்த்திக் நரேன்.
இளம் தலைமுறையின் தவறுகளுக்குப் பெற்றோர்களைக் குற்றவாளியாக்கித் திரைக்கதை உருவாக்கியுள்ள இயக்குநர் அப்பாத்திரங்களுக்கான பின்னணிகளில் தனித்துவத்தை உருவாக்கவில்லை. பள்ளியில் நல்ல ஆசிரியராக (ரகுவரன் ) விளங்குபவர் குடும்ப வெளிக்குள் குடி அடிமையாகவும், எல்லை மீறிய பாலியல் உறவை நாடுபவராக -போதையில் மகளையே (அம்மு அபிராமி) வல்லுறவுக்கு விரும்புபவாராக இருக்கிறார் என்பது ஒரு கதையோட்டம். குற்றச் செயல்களுக்கேற்ப லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படும் இன்ஸ்பெக்டர் (சரத்குமார்) படைப்பு மனமும் போதை விருப்பமும் கொண்ட மகனுக்கு(அதர்வா) நல்ல தந்தையாக இருக்க முயற்சி செய்கிறார் என்பது இன்னொரு கதையோட்டம்.
இரண்டு கதையோட்டத்திலும் உண்டாக்கப்பட்டுள்ள பாத்திரப்பின்னணிகளில் புத்தாக்க முயற்சி இல்லை. அழகியல் சார்ந்த இடப்பின்னணியைப் பற்றிய சிந்தனையே இல்லை. மலையாளப்படங்கள் இந்தக் கூறுகளில் எப்போதும் புதுமையாக்கத்தை உருவாக்கி வெற்றி பெற்று விடுகின்றன.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கீழடிச் சான்றுகள்: தமிழ்ப் பழைமையின் அறிவியல் ஆதாரங்கள்

உலகத்தமிழர்களை நோக்கிய தமிழ்ச் சினிமாக்கள்

தனித்தமிழ் இயக்கம்