நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்



இந்தியச் சாதீய முறை, இந்தியச் சமுதாய வரலாறு பற்றிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கின்ற அதே நேரத்தில் அவர்களுக்கு அறைகூவல் விடுக்கும் சிக்கலாகவும் இருக்கிறது.இந்திய வரலாற்றையறிய உதவும் சான்றுகளுள் மிகத் தொன்மையானவைகளாகக் கருதப்படும் வேதங்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து சாதிப்பிரிவுகள் இருந்து வந்துள்ளன. தமிழ் நிலப்பரப்பிற்குள் ஆகத் தொன்மையான தனிநூல் தொல்காப்பியம். அதன் முன்பின் இலக்கியங்கள் சங்கக் கவிதைகள். இவைகளும் ஒருவித சாதிவேறுபாடுகளைக் காட்டியுள்ளன. இந்தக்கட்டுரை தமிழக வரலாற்றில் சாதியமைப்பு இறுக்கமும் பெருக்கமும் பெற்றதாகக் கருதப்படும் நாயக்கர்களின் காலத்தில் சாதிகளின் இருப்பு நிலையை மையப்படுத்தி அக்கால சமூக அசைவியக்கம் எவ்வாறு இருந்நது எனப் பேச முயல்கிறது. அம்முயற்சியில் முதலில் சாதிகள் பற்றிய தகவல்களையும் அவற்றின் இயல்புகளையும் விவரித்துவிட்டு, அதன்பின்னர் அதன் கட்டமைப்பையும் அசைவுகளையும் பற்றிப் பேசுவது என்ற முறையிலைப் பின்பற்றியுள்ளது.
தகவல்களும் அதன் இயல்புகளும்


இக்கட்டுரைக்கான அடிப்படை ஆதாரங்கள் பெரும்பாலும் அக்கால கட்டத்து இலக்கியங்கள் தான். பிற ஆதாரங்கள் கண்டு கொள்ளப்படவில்லை என்று இதற்குப் பொருளில்லை. நாயக்கர் காலச்சமுதாயம், அதன் உள்ளமைப்பு, அவற்றிற்கிடையேயான உறவுகள், இயங்குநிலைகள் என அனைத்தையும் அறிவதற்கு உதவக் கூடிய தரவுகளாகக் கல்வெட்டுகள், வம்சாவளிக் கைபீதுகள், வெளிநாட்டார் குறிப்புகள், அவர்களின் கடிதங்கள் போன்றனவும் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் இடம்பெறும் தகவல்கள் பெரும்பாலும் அரசியல் வரலாற்றுக்கு உதவுவனவாக இருக்க, இலக்கியங்களை மையப் படுத்தி விவாதிக்கும் தன்மை அதிகம் இருந்தாலும், தேவை மற்றும் உறுதி கருதி பிறவகைச் சான்றுகளும் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இலக்கியங்கள் இன்று நாம் சாதியின் பெயர்களாக அறிந்துள்ள பல பெயர்களைத் தருகின்றன. அப்படித் தரும் பொழுது ஏதோ மக்கட்பெயர்களின் பின்னொட்டு என்ற நிலையில் தரவில்லை. ஒவ்வொரு சாதியையும் ஒரு தொழிலின் பின்னணியோடு தான் அவை அறிமுகம் செய்கின்றன. இலக்கியங்களில் சாதியின் பெயர் தொழிலுக்குப் பதிலாகச் சொல்லப்படுகிறது என்ற அளவுக்கு தொழிலோடு தொடர்புடையனவாகச் சாதிகள் இருந்துள்ளன. அப்படிக் கிடைக்கும் தவல்களைத் தொழில்களின் சாராம்சத் தன்மையின் பேரில் - இன்றுள்ள உழைப்பு நிலைமைகளின் அடிப்படையில் பின்வருமாறு நாம் வகைப்படுத்தலாம். இந்த வகைப்பாடு, இந்தியாவில் இன்றளவும் நடைமுறையில் இருக்கும் பிறப்புசார் சாதிக்கட்டுமானத்திற்கு மாறானது என்பதை அறிந்தே தரப்படும் வகைப்பாடு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மூளை உழைப்புக் குழுவினர்:பிராமணர்கள்

பிராமணர்கள், அந்தணர்கள், பார்ப்பணர்கள் என்ற பெயர்களால் சுட்டப்படும் குழுவினர் பெரும்பாலும் சமய நெறியோடு தொடர்புடையவர்களாகவே சித்திரிக்கப்படுகின்றனர். நான்கு வேதங்கள், இருபத்தெட்டு ஆகமங்கள் போன்ற சமய நூல்களை அறிந்தவர்கள் பிராமணர்கள் என்கிறது கமலாலயச் சிறப்பு (108). கல்வி அறிவுடையவர்களான பிராமணர்கள் கோயிலில் பூசை செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் என்கிறது மதுரைச் சொக்கநாதருலா (30-31). வழிபாடு, பூசை ஆகிய தொழில்கள் மட்டுமின்றிச் சமய நெறியோடு நேரடித்தொடர்பில்லாத பஞ்சாங்கம் பார்ப்பதும் பிராமணர்களின் தொழில்களின் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. இராமய்யன் அம்மானை,’பஞ்சாங்கம் பார்ப்பான்’ என்ற சொல்லைத் தருகிறது. வேதியர்க்கதிகமாம் சாதியும், (அறப்பளீசர சதகம்.55:1) என்று பிராமணர்களே சாதியடுக்கில் உயர்ந்தவர்கள் எனப்பேசும் இலக்கியங்கள், அவர்களை வணங்க வேண்டும்; துன்பம் செய்யக்கூடாது என்றெல்லாம் வலியுறுத்தியுள்ளன (கமலாலயச் சிறப்பு 250).பிராமணர்களைப் பெருமைப் படுத்தும் நாயக்கர் கால இலக்கிய வடிவங்களில் சதகங்களும் புராணங்களும் குறிப்பிடத்தக்கன.‘மறையோர்களாலே விளங்கும்; இவ்வுலகத்தில் மானிடத் தெய்வம் இவர்காண்’ (குமரேச சதகம்.2), ஆகம புராணகலை சாத்திரத் துண்மை யுணரதிமந்திர பலமகிமையும் யாகாதி கருமமோடியம் நியமங்களுடநுட்டான விதிமுறையும் ......பண்பு மறையோர் பெருமைகாண்’ (கயிலாசநாதர் சதகம். 3). அக்காலகட்டத்திய இலக்கியங்கள் மட்டுமல்லாமல் இலக்கண நூல்களிலும் இலக்கணங்கூறும் பாட்டியல்களில் எழுத்துக்களுக்கும், பாவகைகளுக்கும் வருணப்பொருத்தம் கூறும்போக்கு உள்ளது. அப்படிப் பொருத்தம் கூறும்பொழுது மனுகூறும் நால்வகை வருணங்களையே அவை கூறுகின்றன (வெண்பா பாட்டியல் 10, 11; இலக்கணப் பாட்டியல் 14 - 17).

வேளாண்மைசார் சாதிக்குழுக்கள்:உழுவித்துண்போர்

பிராமணர்களை மூளை உழைப்புக்குழுவினராகச் சித்திரிக்கும் இந்த இலக்கியங்கள, வேறுபல சாதிக்குழுவினரை வேளாண் தொழிலோடும், கைவினைத் தொழில்களோடும் இணைத்துப் பேசுகின்றன. வேளாண்குழு, உழுதுண்போரும் உழுவித்துண்போரும் என இருவேறுபட்ட கூட்டத்தை உள்ளடக்கி நிற்கக்கூடியது. நிலத்தை உடைமையாகக் கொண்டு அதன் வருமானத்தின் பெரும்பகுதியை அனுபவிக்கும் உரிமையுடையோர் உழுவித்துண்போர் எனவும், நிலத்தில் உழைத்து அதற்குக்கூலியாக ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்டவர்கள் உழுதுண்போர் எனவும் குறிக்கப்படுகின்றனர். இவ்விரு பிரிவினரை உள்ளடக்கிய சொல்லாகவே வேளாளர் என்ற சொல் நாயக்கர் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது. தொல்காப்பியத்திற்கான நச்சினார்க்கினியரின் உரை இதனைத் தெளிவுபடுத்துகிறது (தொல்காப்பியம் அகம். 30). ஆனால் நாயக்கர் காலத்தில் வேளாளர் என்ற சொல் நிலத்தை உடைமையாகக் கொண்ட உழுதுண்போரை மட்டுமே குறிப்பதாக உள்ளது. வேளாளர்களே இவ்வுலத்திற்கு அச்சாணி; பிற எல்லாப் பிரிவினரையும் தாங்குபவர்கள் என்று சதக நூல்கள் கூறுகின்றன.

வேளாண் என்ற குறிப்பிற்கு அடிப்படையாக இருப்பது குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கு உடைமையாளன் என்பதே எனக் கொள்ளலாம். இங்ஙனம் குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்குச் சொந்தக்காரர்களாகச் சில சாதிக் குழுவினர் குறிக்கப் படுகின்றனர். ‘முதலியார்’ என்ற சாதிப்பெயர் ‘வேளாண்மையில் முதன்மை’ காரணமாக ஏற்பட்டது என்று தொண்டை மண்டல சதகம் உரிமை கொண்டாடுகிறது (84). இங்கு மறவர், குலத்தைச்சேர்ந்த ரகுநாத சேதுபதியும் கூட ஓரிடத்தில் வேளாளன் என்ற சொல்லால் குறிக்கப்படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. (சேதுபதி பணவிடுதூது. 237) மறவர்கள் என்ற சாதியினர் திருநெல்வேலிப் பகுதியிலும், சிவகங்கைப் பகுதியிலும் உழுவித் துண்போராக இருந்துள்ளதை மான்விடுதூதும் (148-153), சந்திரகலாமஞ்சரியும் (வடகரை யாதிக்கத்தின் சரித்திரம். ப.26) தெரிவிக்கின்றன. இவர்கள் தவிரக் கவுண்டர், பிள்ளை முதலிய சாதிக்குழுவினரும் உழுவித்துண்போராக - வேளாளராக - இருந்துள்ளதை வம்சாவளிக் கைபீதுகள் தெரிவிக்கின்றன. அவை நிலவுடைமையாளர்களைப் பட்டக்காரர்கள், பட்டயக்காரர்கள், மானியதாரர்கள் எனக்குறிப்பிடுகின்றன.புதிதாகத் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து நிலவுடைமையாளர்களாக மாறிய தெலுங்கர்களில் ஒரு பகுதியினரும் உழுவித்துண்போராக இருந்துள்ளனர். இவர்கள், ‘நாயக்கர்’ எனவும் ‘வடுகர்’ எனவும் குறிக்கப்படுகின்றனர்.

வேளாண்மையில் உழுவித்துண்போராகக் குறிக்கப்படும் முதலியார், பிள்ளை, கவுண்டர், நாயக்கர், மறவர் போன்ற சாதியினர் நிலங்களின் மீதான உரிமையை மானியங்களின் வழியாகவே பெற்றுள்ளனர். மானியதாரர்கள் நிலங்களை மானியமாகப் பெற்று பரம்பரையாக அனுபவிக்கும் உரிமையுடையவர்களாக இருந்தனர் என்னும் தகவலைக் குறவஞ்சி நூல்கள் தருகின்றன. இவர்கள் கோயில் நிர்வாகம், விழாக்கள் போன்ற சமய நிகழ்வுகளுக்காக நிலங்களைத்தானமாக வழங்கியதையும் அவை தெரிவிக்கின்றன (குற்றாலக் குறவஞ்சி. 131,திருமலையாண்டவர் குறவஞ்சி.73). சில குறிப்புகள் வணிகத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்ட செட்டியார், கைத்தொழிலினை முதன்மையாகக் கொண்ட தட்டார், விவசாயக் கூலிகளான பறையர், பள்ளர் முதலான சாதியினரும் நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருந்த செய்திகளைத் தருகின்றன (திருமலை முருகன் பள்ளு 67.) ஆனால் இவை மிகவும் சிறிய அளவு நிலங்களே என்பதையும் அப்பள்ளு நூல்களே தருகின்றன. இடைக்கால இந்தியாவில் நிலவிய சமூகச்சூழலில் சாதிமுறை இறுக்கமும் விரிவும் பெற்றதற்கான காரணத்தைக் கூறும் பொழுது வரலாற்றாசிரியர் இராம் சரண் சர்மா, (1979, ப.13).நிலக் கொடைகளும், துணைமானிய முறையும் சமபங்கில்லாத நிலம், வலிமை ஆகியவற்றிற்கு வழிவகுத்ததோடு, புதிய நிலைபெற்ற நால்வருணமுறைக்கு முற்றிலும் பொருத்தமில்லாத புதிய சமூகக் கூட்டங்களையும் வரிசைகளையும் உருவாக்கின என்கிறார்.
இக்காரணங்கள் நாயக்கர்காலத் தமிழகத்திற்கும் பொருந்துவனவாகவே உள்ளது. நாயக்கர்காலப் பாளைய முறையும் நிலக்கொடைகளும் துணை மானிய முறையை அடிப்படையாகக் கொண்டதே.நாயக்கர் காலத்தில் வேளாண்மைக் குழுக்களான கவுண்டர், பிள்ளை, முதலியார் முதலான சாதிகளின் துணைப்பிரிவுகள் இந்த அடிப்படையில் தோன்றியனவே. கவுண்டர்களின் துணைப்பிரிவுகளான ஒக்கலியர், ஒப்பிலியர் பற்றிக் கந்தசாமிக் காதலும் (93-96), பிள்ளைகளின் துணைப்பிரிவுகளான பணங்காடை, ஓதாளன், பொருளந்தை, பாண்டியர் குலம் முதலானவை பற்றிக் கல்வெட்டுக்களும் (கந்தசாமிக்காதல் பதிப்புரை, ப.7). கூறுகின்றன. இப்பிரிவுகள் வேறுவேறாகக் கூறப் பட்டாலும் வேளாண்மை மட்டுமே - குறிப்பாக உழுவித்துண்ணும் குழுவினராகவே சுட்டப்படுகின்றனர் என்பது உண்மையாகும்.

உழுதுண்ணும் சாதிக்குழுக்கள்

வேளாண்மைத் தொழிலில் உழுதுண்ணும் சாதிக்குழுக்களாகப் பள்ளர், பறையர், புலையர் முதலான சாதிப் பெயர்கள் இடம்பெறுகின்றன.அதிகம் குறிக்கப்படும் பெயராகப் பள்ளர்கள் இடம் பெறுகிறது. ‘மள்ளர்கள்’ என்ற பெயரையும் இவர்களுக்கு இலக்கியங்கள் தருகின்றன. வேளாண்மையில் நேரடியாக ஈடுபட்ட பள்ளன், பறையன் முதலான இச்சாதிகளை ‘கீழ்ச்சாதிகள்’ (திருமலை முருகன் பள்ளு, 103) என்றும், ‘தீண்டாச்சாதியினர்’ (ஐவர் ராசாக்கள் கதை, 888, 898) என்றும், ‘கொத்தடிமைகள்’ (திருமலை முருகன் பள்ளு, முக்கூடற்பள்ளு, 13) என்றும், இழிகுலத்தினர் (கமலாலயச் சிறப்பு, 873) என்றும் இலக்கியங்கள் பேசுகின்றன. அடிமைகள், கொத்தடிமைகள் என்று பேசுவதோடு விற்கப் படும் பொருளாகவும் இவர்களைச் சித்திரிக்கின்றன கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது, 364). பள்ளர் குலப்பெண்களும் உழவுத் தொழிலோடு தொடர்புடையவர்களாகவே இலக்கியங்களில் சித்திரிக்கப் படுகின்றனர். அவர்கள் உழத்தியர், அடிச்சியர், கடைசியர், பள்ளியர் போன்ற பெயர்களால் பள்ளு நூல்களில் குறிக்கப்படுகின்றனர்.

வேளாண்மையில் ஈடுபட்ட பள்ளர்களுக்குக் கூலியாக எதுவும் தரப்பட்டதாகக் குறிப்புக்கள் இல்லை. ஒவ்வொரு பள்ளர் குடும்பமும் ஏதாவதொரு பண்ணையோடு சேர்ந்தே பிழைத்திருக்கும் எனக் கூறுவதற்குச் சான்றுகள் உள்ளன. விளைச்சலில் அவர்களுடைய வாழ்க்கைத் தேவைக்கெனக் குடிச்சுதந்திரம், பிள்ளையாரடி, அரிநெல் போன்றன கிடைத்தன என இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. (வையாபுரிப்பள்ளு. 203 - 204, திருமலை முருகன் பள்ளு. 158, மாந்தைப்பள்.89). ஆனால் இவை மட்டுமே உழவர்களான பள்ளர்களின் வாழ்க்கைத்தேவை முழுவதையும் பூர்த்தி செய்தன என்று கூறுவதற்கில்லை. ஆனால் இவர்களே சமுதாயம் முழுமைக்கும் தேவையான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்தனர்; செய்யவேண்டும் என்பதும் அக்கால நியதியாக இருந்துள்ளது. இதனாலேயே இவர்களது தலையாய கடமை, ‘தொண்டு செய்தல்’ என இலக்கியங்களும் சாத்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வணிகக் குழுக்கள்

நாயக்கர்கால இலக்கியங்கள் வணிகத்தில் ஈடுபட்டவர்களை ‘வைசியர்’ என்ற சொல்லால் குறிப்பிட்டாலும் ‘செட்டியார்’ (வையாபுரிப் பள்ளு, 115, மூவரையன் விறலி விடுதூது, 173 - 174, கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூது, 745) ‘நகரத்தார்’ (வாட்போக்கி உலா, 115). முதலான சொற்களும் வணிகத்தில் ஈடுபட்டவர்களைக் குறிப்பனவாக இடம் பிடித்துள்ளன.இவர்கள் வணிகத்தோடு வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். செட்டியார்களின் உட்பிரிவுகளான சேடர், வாணியர் பற்றிய குறிப்புக்களையும் இலக்கியங்கள் தருகின்றன (கந்தசாமிக்காதல்). கி.பி.1650-1750 வரையிலான வணிகத்தின் நிலைகளைப் பற்றி எழுதியுள்ள எஸ்.அரசரத்தினம். (1968).
“ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகைபுரிந்த கம்பெனியினர் உள்நாட்டு வணிகத்தோடு உறவு கொள்வதற்காக இங்கிருந்த கோமட்டிகள் என்றும் செட்டிகள் என்றும் கூறப்படும் சாதியினரோடு பெருமளவில் உறவுகொண்டனர். இந்தச்சாதியினரோடு பிராமணர்கள், முதலியார்கள், பிள்ளைகள், ரெட்டிகள், நாயுடுகள் போன்ற சாதியினரில் சிலரும் வணிகத்தில் ஈடுபட்டனர். மீன் வியாபாரத்திலும் முத்து வியாபாரத்திலும் தென்கோடித்தமிழகத்தில் முஸ்ல¦ம்களும் கிறிஸ்துவப் பரதவர்களும் ஈடுபட்டிருந்ததாகவும் எழுதுகின்றார்.”


கைத்தொழில் குழுக்கள்

வேளாண்மையில் உழுதுண்போராக இல்லாமல் சில சாதிக்குழுக்கள் இருந்துள்ளன. ‘பொதுவர்’ எனவும் ‘இடையர்’ எனவும் கூறப்படும் சாதியினரும், கம்மாளர், கண்ணாளர், தச்சர், மனுவர், தட்டார், கொல்லர் போன்ற சாதியினரும் அத்தகையவர்களே. இடையர்கள் கால்நடைகள் மேய்த்ததாகவும், பால்பொருட்களை விற்றுப் பிழைத்ததாகவும் அறிய முடிகிறது. பள்ளு நூல்கள் பலவும் கிடைத்தொழிலோடு தொடர்புபடுத்தியே இடையர்களைக் குறிக்கின்றன.திருவருணைக்கலம்பகத்தின் பாடலொன்று (82) பொதுவர் குலப்பெண் பால்பொருள் விற்றதாகக் கூறுகிறது. வேளாண்மைக் குதவும் மரக்கருவிகளைச் செய்த தச்சர்களையும், கொழு முதலான உலோகக் கருவிகளைச் செய்த கொல்லர்களையும் கம்மாளர்களையும் தட்டார்களையும் மனுவர்களையும் விசுவகன்மர் என்ற ஒரே குழுவாகக் கூறுகிறது வையாபுரிப் பள்ளு. கொல்லன் கம்பியச்சு கொண்டு மெல்லிய கம்பிகளை உருவாக்குபவன் (திருவாருர்க் கோவை, 281), கம்மியன் பொன்வேலை செய்பவன் (கூளப்ப நாயக்கன் காதல், 110) எனவும் இலக்கியங்கள் காட்டுகின்றன. இக்கைத்தொழில் சாதியினர் அனைவருமே வேளாண்மை சார்ந்து இயங்கியதாகத் தெரியவில்லை. கம்மாளர், தச்சர் முதலானோர் வேளாண்மை சார்ந்து இயங்கியுள்ளனர். ஆனால் கம்மியன், கண்ணாளன், தட்டான் முதலானோர் வணிகம் சார்ந்து வாழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

சேவைக்குழுக்கள்
இன்னும் சில சாதிப்பிரிவுகளின் தொழில்களும் இலக்கியங்களில் சுட்டப்படுகின்றன. சவரகன் என்ற சொல் சவரம் செய்பவன் என்ற பொருளில் (கயிலாத நாதர் சதகத்தில், 31) இடம்பெற்றுள்ளது. அம்பட்டன் என்ற சொல்லும், வண்ணான் என்ற சொல்லும் தொழிலோடு சேர்ந்து குறிப்பிடப்படாமல் தாழ்வான சாதிகள் என்ற நிலையில் இடம் பெற்றுள்ளன. வேளாண்மை சார்ந்த குழுவினரைக் குறிக்கும் சொல்லாக ‘குடிமையாளர்’ என்பது அக்காலத்தில் இருந்துள்ளது. ஒரு குடும்பத்திற்குப் பரம்பரையாகப் பணிபுரியும் நிலையிலிருந்த தச்சனைக் குறிக்கும் ‘குடிமைத் தச்சன்’ என்ற சொல்லைத் தருகிறது திருவிளையாடற்புராணம் (மதுரைக்காண்டம், 423). தச்சர்கள் தவிரக் கொல்லன், அம்பட்டன், வண்ணான் போன்றோரும் ஒரு குடும்பத்திற்குரியவர்கள் என்ற நிலை இருந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் இவர்களின் கூலியை இலக்கியங்கள் ‘சுவந்திரம்’, ‘குடிச்சுவந்திரம்’ என்ற சொற்களால் குறிக்கின்றன. வண்ணார்களின் கூலியை வண்ணான் சுவந்திரம் என்றே வையாபுரிப் பள்ளு (117) கூறுகிறது.

சாதீய அமைப்புக்களும் அசைவுகளும்

நாயக்கர்கால இலக்கியங்கள் தனிப்பட்ட சாதிகள் ஒவ்வொன்றையும் ஏதாவதொரு தொழிலோடு சேர்த்தே பேசுகின்றன. ஆனால் அக்காலகட்டத்தில் சாதிகளை ஒரு திட்டவட்டமான அமைப்பாக்கும் முயற்சியும் நடந்துள்ளது என்பதும் இலக்கியச் சான்றுகளின் வழி தெரிய வருகின்றது. சாதிகள் பற்றிய குறிப்புக்கள் பல இலக்கியங்களில் காணப்பட்டாலும் சாதிகளை அமைப்பு ரீதியாகப் பேசும் இலக்கிய வகைகளாக இருப்பவை சதகங்களும் புராணங்களும் தான். பெரும்பாலும் பிராமண, வேளாளப் புலவர்களால் எழுதப்பட்ட புராணங்களும் சதகங்களும் தமிழ்நாட்டில் இருந்த சாதிப் பிரிவுகளை மனுஸ்மிருதியும் நால்வருணக் கட்டமைப்புக்குள் அடக்கிக்காட்ட முயன்றுள்ளன. ஆனால் சாதிகள் அவற்றுக்குள் அடங்காமல் இயங்கியதும் நடைமுறையில் இருந்துள்ளது.

சாதிமுறையை அமைப்புரீதியாக மாற்றும் முயற்சி தமிழகத்தில் நாயக்கர் காலத்திற்கு முன்பேயும் நடந்துள்ளது. நாயக்கர் காலத்தில் கோட்பாட்டு நிலையில் பேசப்படும் ‘வர்ணாசிரம முறையும், சோழர் காலத்தில் முயற்சி செய்யப்பட்ட முறையான வலங்கை- இடங்கைப் பகுப்பு முறையும் அத்தகைய முயற்சிகளே. பிற்காலச் சோழர் காலத்தியக் கல்வெட்டுக்களில் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன. முதலாம் ராசராசனின் ஆட்சிக்காலத்தியக் கல்வெட்டுக்களில் வலங்கை பற்றிய குறிப்பு உள்ளதாக கல்வெட்டாய்வாளர் சுப்பராயலு கூறுகிறார் (Y.Subbarajalu, 1975,p.109).

வலங்கை, இடங்கை என்ற பிரிவுகள் தொடக்கத்தில் படைப்பிரிவுகளின் பெயர்களாக இருந்து, பின்னர் சாதிப்பெயர்களாக மாறியிருக்கலாம் என்று கருத இடம் உண்டு. முக்கைப்படை என்ற குறிப்பு சோழமன்னர்களின் கல்வெட்டுக்களில் உள்ளன. வலங்கைப்படை, சோழமன்னர்களின் படையிலிருந்த சோழநாட்டு வீரர்களைக் குறிக்கும் சொல். இடங்கைப்படை என்பது சோழர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட போரில் பங்கேற்றவர்களாகக் கருத இடமுண்டு. இவர்களும் சோழ மன்னர்களுக்கு ஊழியம் செய்தவர்களே. மூன்றாவது கை எதுவெனத்தெரியாத நிலையில் தமிழர் அல்லாத படையினரைக் குறிக்கும் சொல்லாக அப்பெயர் இருக்கலாம் எனக்கருதும் ஆய்வாளர்களும் உண்டு. (S. Jeyaprakasam, 1980, pp.42-44) இப்படைப்பிரிப்பே பின்னர் வலங்கைச் சாதியாகவும் இடங்கைச் சாதியாகவும் மாற்றம் பெற்றன.

வலங்கைச் சாதியில் நிலத்தினை உடைமையாகக் கொண்ட பிராமணர்களும் வேளாளர்களும் இடம்பெற்றனர். இடங்கைக் சாதிகளாக கைத்தொழில் குழுக்களும் சேவைக்குழுக்களும் இடம் பெற்றனர். வலங்கை, இடங்கை என்ற இரண்டு பிரிவிற்குள்ளும் பல உட்பிரிவுகளும் இருந்துள்ளன. இரண்டு பிரிவினருள் ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரோடும் தங்களுக்குள்ளும் மோதல்களை நிகழ்த்தி உரிமைகளுக்காகப் போராடியதாகப் பல கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன (Y. Subbarajulu,op.cit.). சோழர்காலத்திலிருந்த படைப்பிரிவுகள் கொஞ்சங் கொஞ்சமாகச் சாதிப்பிரிவுகளாகப் பரிணமித்ததில் சோழமன்னர்களின் எராளமான நிலங்களை மானியமாக்கி வலங்கைச் சாதியினராக - உழுவித்துண்போராக மாற்றினார்கள்; தங்களால் வெற்றிகொள்ளப்பட்ட நிலையில் அடிமைகளான பிறநாட்டு மக்களைக் கைத்தொழிலிலும் உழவுத்தொழிலிலும் ஈடுபடச்செய்தனர் எனக் கொள்ள இடமுண்டு. நிலமானிய காலத்தில் இது சாத்தியமான ஒன்றே. தங்கள் நலனில் அக்கறை கொண்டவர்களை உயர் பதவிகளில் அமர்த்துவதும், அதிகமான சலுகைகள் அளிப்பதும் இயல்பான ஒன்றே. அரசர்கள் நலனில் விரும்பி ஈடுபட்டவர்கள் மேல்சாதிக்காரர்களாகவும் (வலங்கைச்சாதியினர்), வற்புறுத்தலின் பேரில் ஈடுபட்டவர்கள் கீழான சாதிக்காரர்களாகவும் (இடங்கைச் சாதியினர்) கருதப்பட்டதும் அத்தகைய நிகழ்வுகளில் ஒன்றே எனக் கொள்ளலாம்.

ஒருவனின் சாதி அடையாளத்தைத் தீர்மானிக்க அவனது பிறப்பையே அடிப்படை அளவுகோலாகக் கொள்ளும் வர்ணாசிரம முறைக்கு மாற்றாக இந்த ‘கைப்பிரிவு’ முறை முன்வைக்கப்பட்டதா..? அல்லது பிற்காலச்சோழர் தங்களை முதலிடத்தில் நிறுத்தும் வர்ணமுறையை ஏற்றுக்கொள்ளச் செய்யும் முயற்சியில் ஒரு முன்னோடித்திட்டமாக இந்தப் பகுப்புமுறைகளை அறிமுகப்படுத்திப் பின்னர் நால்வருண முறையைக் கொண்டுவந்தனரா..? என்பது விவாதிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் வலங்கை, இடங்கை எனச் சமூகத்தைப் பிரித்துப் பேசுவது பாதுகாப்பான ஒன்றாக இருந்திருக்க முடியாது. குறிப்பாக அதிகாரத்துவக் குழுவிற்கு அச்சத்தை உண்டு பண்ணும் தன்மை இந்தப் பாகுபாட்டில் உண்டு. மொத்த சமூகத்தையும் இரு கூறாக்கி நிறுத்தும் இப்பகுப்பு முறை உடையவன், இல்லாதவன் என்ற அடையாளங்களைத் தெளிவாக்கிக் காட்டும் தன்மை கொண்டது. உழைக்க வேண்டியவர்கள் யார்...? உழைப்பின் பலனை அனுபவிக்க வேண்டியவர்கள் யார்.. யார்..? என்பதையும் தெளிவு படுத்தக் கூடிய அம்சங்கள் அதில் உண்டு. இதனால் பல மோதல்களும் ஏற்பட்டுள்ளன. வலங்கைக் குழுக்களும் இடங்கைக் குழுக்களும் ஒன்றோடொன்று நடத்திய மோதல்களும் அதனைத் தீர்த்து வைக்க அரசர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் அளிக்கப்பட்ட உரிமைகளும் சோழர்காலக் கல்வெட்டுக்கள் பலவற்றில் பதிவாகியுள்ளதை வரலாற்றாசிரியர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர். செயல்பாட்டு நிலையில் அதிகாரத்திற்கு எச்சரிக்கை விடுத்த இப்பகுப்புமுறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. சோழர்காலத்தின் இறுதிக்கட்டத்திலேயே இப்பிரிப்பு முறையும் அதன் கட்டுமானங்களும் வழக்கொழிக்கப்பட்டுவிட்டதைக் காண்கிறோம்.

நாயக்க அரசர்களும் சாதிக்கட்டமைப்பும்

சோழர்காலத்தில் குறிப்புகளாகவும் நடைமுறைச்சிக்கல் நிரம்பிய அமைப்பாகவும் இடம்பெற்றுள்ள வலங்கை -இடங்கைப் பிரிவுகள் பற்றிய குறிப்புக்களையே நாயக்கர்கால இலக்கியங்களில் காண முடியவில்லை. ஆனால் அதற்கு மறுதலையாக மனுமுறையைக் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் போற்றுகின்றன.அவற்றை விரிவாக விளக்குகின்றன. நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாக வலியுறுத்துகின்றன. நிலைநாட்டவும் செய்துள்ளன. நாயக்கர் காலச் சமூகவாழ்க்கையைப்பற்றி எழுதும் ஆர். சத்தியநாதய்யர் பின்வருமாறு எழுதுகிறார்.

மரபான சமூக அமைப்பை நாயக்கர்கள் சீர்குலைக்கவில்லை. பிராமணர்கள் சமூகத்தின் முதன்மை இடத்தில் இருத்தப்பட்டு தனியுரிமைகள் பெற்றவர்களாக விளங்கினர். அரசை நடத்துவதற்கும் அதன் நலனுக்கும் அவர்களது சேவையும் ஆலோசனைகளும் பயன்பட்டன. பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையும் அங்கீகாரமும் நாயக்கர்கள் ஆட்சியில் எந்த விதத்திலும் குறையவில்லை. நாயக்கர்களின் சமூகக்கொள்கை அடிப்படையில் மிகவும் பிற்போக்கானதாகவே இருந்தது. சாதிக் கட்டமைப்பைப் புனிதமானதாகக் கருதிய நாயக்க அரசர்கள் சாதியொழுங்கை மீறுகிறவர்களைத் தண்டிக்கவும் தயங்கியதில்லை எனத் தெரிகிறது. கைத்தொழில் குழுக்களான கம்மாளரிடையே இருந்த ஐந்து பிரிவினரும் கலந்து விடக் கூடாது என உத்தரவிட்ட தகவலை 1623 ஆம் வருடத்திய கல்வெட்டு கூறுகிறது. 1705 -இல் மங்கம்மாள் காலத்தில் சாதி அடையாளங்களைப் பேணுவதற்கு மானியங்கள் தரப்பட்ட தகவல்களைக் கல்வெட்டுக்களும் ஐரோப்பியப் பாதிரிகளின் குறிப்புகளும் தருகின்றன.(R. Sathyanatha Aiyar, 1980, p.193)

அய்யரின் கருத்துக்களை வலுப்படுத்தும் விதமாகவே இலக்கியச் சான்றுகளும் கிடைக்கின்றன. ‘ வருணா சிரம தர்மங்களனுபாலித்த’, சகல வருணாசிரம தர்மங்களனு பாலித்த என்பன கல்வெட்டுகளின் வாக்கியங்கள் என்றால் ‘மநுவழி புரந்து’, ‘மனு அறம் உவந்து’ (திருவிளையாடற்புராணம், மதுரைக் காண்டம், 561, 521), ‘மனுவைக்கடவாமற் செங்கோல் படர்ந்து’ (சேதுபதி விறலி விடுதூது, 292) என்பன இலக்கிய வரிகள். அரசர்களின் செயல்களுக்கு இவை அடைமொழிகள்’. வருணமோர் நான்குமோங்க வேண்டும்’ (கூடற்புராணம், 20) என்ற விருப்பமும், ‘கலிகாலம் வந்துவிட்டால் நான்கு வருணத்தாரும் தங்கள் கடமைகளின்றும் மாறுபடுவர்’ (கமலாலயச் சிறப்பு 854 - 856) என்ற வருத்தமும் இலக்கியங்களில் வெளிப்படுகின்றன.

நாயக்கர் காலத்தில் அரசர்களின் ஆதரவு பெற்ற சாதீயக் கோட்பாடாக வருணமுறையே இருந்தது என்பதையும், அறிவாளிகளான புலவர்கள் அதையே வலியுறுத்தினர் என்பதையும் இன்னொரு சான்றும் உறுதி செய்கின்றது. கி.பி. 1604 - ல் தமிழகம் வந்த இயேசுசபை பாதிரியான ராபர்ட்-டி- நோபிலியும் இந்தியச் சாதிகளை நால்வருணப் பகுப்பிற்குள்ளேயே அடக்க முயற்சி செய்துள்ளார் (S. Rajamanickam, 1972, pp. 3-7). இவர்தம் சமயப்பிரச்சாரத்திற்காக தம் பெயரைத் ‘தத்துவபோதகர்’ என மாற்றியதோடு, மனுவின்படி உயர்சாதியினராகக் கருதப்பட்ட அந்தணர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றியவர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. மனுவின் வருணாசிரம சாதியமைப்பை அரசர்கள் பின்பற்றியதற்கான காரணம் வெளிப்படையானது.

 நாயக்க அரசர்கள் விசயநகரப்பேரரசின் வழிவந்தவர்கள். அப்பேரரசின் தோற்றத்திற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று. இசுலாமியர்களுக்கு எதிராகப் பழைய வைதீக நடைமுறைகளைப் பின்பற்றும் பேரரசை நிலைநிறுத்துவது தான். தற்காலத்தில் இந்து சமயம் என அறியப்படும் சமயம் பொதுவாக வைதீக- பிராமாண்ய சமயத்தையே குறிக்கும். எனவே விசயநகர அரசர்களின் வழியில் நாயக்கர்களும் பிராமணீய வருணமுறையையே ஆதரித்தனர் எனலாம். காரணம், ஆட்சியாளர்களான நாயக்கர்கள், தங்களுக்குப் பிராமணர்களுக்கு அடுத்த இடத்தை, அதாவது சத்திரியன் என்ற இரண்டாம் இடத்தை இந்த வருண முறைதான் தருகிறது என்று உணர்ந்திருக்கலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாகத் தஞ்சை, மதுரை, செஞ்சி ஆகிய இடங்களில் விசயநகரப் பேரரசின் மண்டலாதிபதிகளாகத் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட நாயக்கர்கள் தங்களோடு படை நடத்தி வந்த தளபதிகள் பலருக்கும் தங்களின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பைப் பிரித்துக் கொடுத்து அவர்களைப் பாளையக்காரர்களாக நியமித்ததின் மூலம் அவர்களுக்கும் சமூக அடுக்கில் இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்தனர். பாளையக்காரர்கள் வருணமுறையில் இரண்டாமிடத்தில் இருக்கும் சத்திரியர்களாகவே தங்களைப்பாவித்துக்கொண்டு நாட்டுக் காவலில் ஈடுபட்டனர். பொதுவாக நாயக்கர் காலத்தில் இருந்த பாளையங்களின் எண்ணிக்கை 72 என்பதாக ஒரு குறிப்பு இருக்கிறது. இந்த எண்ணிக்கை திட்டவட்டமான எண்ணிக்கை என்று சொல்வதற்கில்லை. நாயக்க மண்டலாதிபதிகளுக்குள்ளேயே சச்சரவுகளும் ஒற்றுமையின்மையும் நிலவிய நிலையில் தமிழ் நாட்டின் மொத்தப் பரப்பிற்குள்ளும் 72 பாளையப்பட்டுக்கள் தான் இருந்தன என்றும் அவர்களை இயக்குகிற சக்தியாக மைய அமைப்பு ஒன்று இருந்தது என்றும் சொல்வதற்கில்லை. இந்த 72 பாளையப்பட்டுக்களின் பொறுப்பாளர்களாக தெலுங்கு பேசும் நாயக்கர்கள் மட்டுமே இருக்கவில்லை என்பதை வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

மதுரை நாயக்கர்களின் வரலாற்றை எழுதப் பலவழிகளில் உதவக்கூடிய நூல் ராமய்யன் அம்மானை. திருமலை நாயக்கரின் தளவாயாக இருந்த ராமப்பய்யனின் பெயரில் அமைந்துள்ள இந்நூலில் அவனது ஆணையை ஏற்று படைகொண்டுவந்த பாளையக்காரர்களின் பட்டியல் இடம் பெறுகிறது. அப்பட்டியலில் 36 தெலுங்கு நாயக்கர்களும், 2 தெலுங்கு ரெட்டிகளும் 13 இசுலாமியர்களும், 24 தமிழர்களின் பாளையங்களும் இருந்ததாக அதிலிருந்து அறிய முடிகிறது. (இராமய்யன் அம்மானை, பக்.23-26). திருநெல்வேலிப் பகுதியில் இருந்த 32 பாளையக்காரர்களில் திருநெல்வேலிக்கு மேற்கில் இருந்த பாளையங்கள் எல்லாம் தமிழ் பேசும் மறவர்களின் பாளையங்களாகவே இருந்தன. வடகரை, சிவகிரி, சிங்கம்பட்டி, ஊற்றுமலை, சுரண்டை, நெற்கட்டுஞ்சேவல் போன்ற பாளையங்களின் பொறுப்பு அவர்களிடம் இருந்துள்ளது. நாயக்கர்கள் தமிழகத்திற்குப் புதியவர்கள். எனவே, தங்களின் மேலாண்மையை நிலைநிறுத்துவதற்கு உதவி செய்கின்ற முறையை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம். தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கேற்ப அந்தந்தப் பகுதியில் செல்வாக்குடன் இருந்த தமிழ்ச் சாதிகளை அவ்வப்பகுதியின் பாளையக்காரர்களாக நியமனம் செய்திருக்க வாய்ப்புண்டு எனக் கொள்ளலாம். திருநெல்வேலிப்பகுதியில் மறவர்களின் பாளையங்கள் இருந்தது போல கொங்கு நாட்டில் ஊத்துக்குளி, தலைமலை, தாரமங்கலம், காங்கேயம், ஈரோடு போன்ற பாளையங்களில் கவுண்டர்கள் பாளையக்காரர்களாக இருந்துள்ளனர். திருச்சிப் பகுதியில் மழவராயர்கள், ராமநாதபுரம் பகுதியில் அம்பலகாரர்கள் போன்ற சாதிகளின் செல்வாக்கு பாளையக்கார முறையோடு தொடர்புடைய ஒன்று.

நாயக்கர் காலத்தில் மட்டுமின்றி பிற்காலச் சிற்றிலக்கியங்களில் வருணமுறையைப் போற்றும் பலவற்றை எழுதியவர்கள் வேளாளப் புலவர்களே. வேளாளப் பெருமை பேசும் சதக நூல்கள் அனைத்தும் வருண முறையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் எனத் தம்காலச் சமூகத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்து அவற்றின் கடமைகள், பண்புகள், பெருமைகள் பற்றிப் பேசுகின்றன சதகநூல்கள். ‘வேதியர்க் கதிகமாம் சாதியும்’(அறப்பளீசுர சதகம், 55), ‘மறையோர்களாலேயே விளங்கும், இவ்வுலகத்தில் மானிடத்தெய்வம் இவர்காண்’ (குமரேச சதகம்,2), ‘ஆகம புராணகலை சாத்திரத்துண்மை யுணரதி மந்திர பல மகிமையும் யாகாதி கரும மோடியம் நியமங்களு மநுட்டான விதிமுறையும் ... பண்பு முறையோர் பெருமைகாண் (கயிலாசநாதர் சதகம், 3) எனச் சதகநூல்கள் தெரிவிக்கும் கருத்து, மனுஸ்மிருதி அந்தணர்களைப் பற்றித் தரும் சித்திரங்களையொத்து இருப்பதைக் காணலாம். இக்காலகட்டத்தில் தமிழில் அறிமுகமான சதகநூல்கள் சாதிமுறையை விளக்குவதிலும் பின்பற்றவேண்டும் எனக்கூறுவதிலும் முதலிடத்தில் நிற்கின்றன. குறிப்பாக 17, 18 ஆம் நூற்றாண்டு இலக்கியப் பரப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சதக நூல்கள் தோன்றியதாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் பட்டியல் தருகின்றனர்.

சாதிப்பிரிவுகளைக் கோட்பாட்டு நிலையில் பிரித்துப் பேசும் வருணமுறைக்கு உயர்மட்ட அளவில் மட்டுமே அங்கீகாரமும் தகுதிகளும் கிடைத்திருந்தனவோ என்ற எண்ணம் தோன்றும் படியான தகவல்களும் இலக்கியங்களில் கிடைக்கின்றன. நடைமுறையில் இப்பகுப்புமுறையும், மனுதர்மத்தையும் ஏற்றுக்கொண்டு பாராட்டும் அதே இலக்கியங்களில் வருணப்பிரிவுகள், வருண உட்பிரிவுகள் பற்றி முரண்பாடான செய்திகள் கிடைக்கின்றன.
 
நாயக்கர்காலத்தில் வைசியர் என்ற சொல்லோடு’ தனவைசியர், பூவைசியர்’ என்ற சொற்களும் கிடைக்கின்றன (வெண்பா பாட்டியல், 16,17). சூத்திரர் என்ற சொல்லோடு ‘சத்சூத்திரர்’ என்ற சொல்லும் உள்ளது. அத்துடன் வருணத் தாரின் கடமைகளையும் தகுதிகளையும் சொல்வதிலும் இலக்கியங்கள் மாறுபட்டும் நிற்கின்றன. மனு கூறியதற் கொப்பவே அந்தணர்களுக்கு உயர்ந்த இடம் எல்லா இலக்கியங்களிலும் தரப்பட்டுள்ளன. ஆனால் மற்றைய பகுப்புகள் தெளிவாகக் காணப்படவில்லை. சத்திரியர் என்ற பிரிவினுள் எந்தச் சாதியினரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் போர்த்தொழில், பாதுகாப்புத்தருதல் என்பவற்றையே முழுமையான கடமையாகக் கொண்ட ஒரு சாதியைத் தமிழகத்தில் காட்டுவது இயலாது. கள்ளர், மறவர் போன்ற சாதியினர் போர் செய்தலோடும், வீரத் தன்மையோடும் இணைத்துப் பேசப்படுதல் மரபு. ஆயின் இவர்கள் பிராமணர்களை அடுத்து ஆதிக்கம் பெற்ற சாதிகளாக எந்தவொரு காலகட்டத்திலும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.
இதுபோலவே வைசியர், சூத்திரர் என்ற பிரிவுகளும் தமிழக வரலாற்றுச்சூழலில் தெளிவற்றனவாகவே உள்ளன. மனுஸ்மிருதி வைசியர்களுக்குரிய கடமைகளாக வணிகம் செய்தலோடு பயிர் செய்தலையும், தொழில் செய்தலையும் கூறுகின்றது. ஆனால் தமிழ் இலக்கியங்கள் வணிகம் செய்தலையும் அதனொடு தொடர்புடைய கடன்கொடுத்தல், வட்டிவாங்குதல் போன்றவற்றை மட்டுமே வைசியர்களுக்குரியனவாகக் கூறுகின்றன. பயிர் செய்தல் இவர்களுக்குரிய தொழிலாக இலக்கியங்களில் குறிக்கப்படவில்லை. பயிர் செய்தலோடு தொடர்புடைய சாதிகளாக ஏராளமான குழுக்கள் குறிப்பிடப்படுகின்றன. வேளாளர் என்ற பொதுப்பிரிவிலும் தனித்தனி நிலையிலும் இச்சாதிகள் குறிக்கப்படுகின்றன. முதலியார், கவுண்டர், பள்ளர், பறையர், முதலான சாதிகள் வேளாண்மையோடு தொடர்புடையனவாகக் கூறப்பட்டுள்ளன. எனவே இவர்களைச் சூத்திரர் என்ற பிரிவிலும் அடக்க இயலாது. வைசியர் என்ற பிரிவிலும் அடக்க இயலாது.

கிறித்துவ சமயமும் சாதிகளின் அசைவியக்கமும்

தமிழ்நாட்டிற்குள் நாயக்கர்கள் காலத்தில் புதிதாக நுழைந்த சமயம் கிறித்துவம். கி.பி. 1592 - ல் இயேசு சபை என்ற கிறித்துவ மிஷன் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கிய பெர்ணாண்டஸ் பாதிரிக்கு அனுமதி அளித்தவன் வீரப்ப நாயக்கன் என்ற மதுரை மன்னன். பெர்ணாண்டஸ் பாதிரி, ராபர்ட்-டி-நோபிலி போன்றோரின் பிரசாரம் குறித்தும், கிறித்துவச் சமயம் பரவலினால் தமிழகத்தில் ஏற்பட்ட சாதக, பாதகங்கள் குறித்தும் வரலாற்றாசிரியர்கள் விரிவாக எழுதியுள்ளனர் (R. Sathiyanatha Aiyar, Ibid, pp.9-10, 68-70, 79-80,103-106,138-141, 150-151, 161-165,233-240). ராமநாதபுரம், மதுரை போன்ற நகரங்களில் தங்கி உயர்சாதி மக்கள் பலரைக் கிறிஸ்துவ சமயத்திற்கு இழுத்ததோடு, கிராமப்புறங்களில் வாழும் மக்களையும் அதனை நோக்கி இழுக்கும் முயற்சியைச் சில பாதிரியார்கள் மேற்கொண்ட செய்திகளும் அவர்களால் தரப்பட்டுள்ளன. மதுரையில் தங்கி தமிழ் கற்று வீரமாமுனிவரான கான்ஸ்டண்டெய்ன் பெஸ்கி, தத்துவ போதகர் எனத்தன்னை அழைத்துக் கொண்ட டி-நோபிலி போன்றோரின் முயற்சிகள் நகரம் சார்ந்த மக்களை மதம் மாற்றும் முயற்சிகளே.

வரலாற்றாசிரியர்கள் தரும் குறிப்புக்களோடு தொடர்புடைய செய்திகள், இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் உள்ளிட்ட ஐரோப்பியர் அனைவரையுமே ‘பறங்கியர்’ என்ற ஒரே சொல்லால் குறிப்பிட்டு இலக்கியங்கள் பேசுகின்றன. ‘பாஷை தெரியாத பறங்கிகள்’ நாடகசாலையில் அமர்ந்திருந்த செய்தியைச் சொல்கிறது ராமய்யன் அம்மானை (ப.8:22-23). அதே நூல் சேதுபதி சடைக்கத்தேவனை வெல்வதற்கு உதவிய பறங்கியர்களுக்கு ராமேஸ்வரம் தீவினை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்ற குறிப்பையும் தருகிறது (ப.55:5-15). கடற்கரையோரத்தில் வாழ்ந்த பரதவர்களே முதலில் கிறித்துவ மதத்திற்கு அதிகமாக மாறினர் என்ற வரலாற்றாசிரியர்களின் குறிப்போடு இத்தகவல் ஒத்துப் போகின்றது. அத்துடன் பள்ளர்களின் வாழ்க்கையைக் கூறும் பள்ளு என்னும் இலக்கியவகையைத் தன்னகப்படுத்தும் நிலைக்குக் கிறிஸ்தவம், கி.பி. 17 - ஆம் நூற்றாண்டில் வளர்ந்துவிட்டதைக் காணமுடிகிறது. நாஞ்சில் நாட்டுப் பின்னணியில் எழுதப்பட்ட செண்பகராமன் பள்ளுவில் விவசாயத் தொழிலில் ஈடுபட்ட பள்ளர்களின் பெயர்களைக் கூறும்பொழுது மரியாள், அன்னம்மை, இஞ்ஞாசி போன்ற பெயர்கள் சொல்லப்படுகின்றன. இப்பெயர்கள் முறையே மேரி, ஆனி, இக்னேஷியஸ் போன்றவற்றின் தமிழ் வடிவங்களே ஆகும் (ந.வீ.செயராமன், 1980, பக்.182-185).

இன்னொரு பள்ளு நூலான வையாபுரிப்பள்ளுவிலும் பள்ளர்களின் பெயர்களாகக் கிறிஸ்துவப்பெயர்கள் - ஏசுவடியான், அந்தராயன், சவரிமுத்தன், மரியாள் , அன்னம்மை, அந்தோனி முதலான பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன (161-162, 174, 181). அந்நூலில், ‘ரோமாபுரி வழிசேர் தென்பழனிப் பள்ளி’ என்றொரு வரி இடம்பெற்றுள்ளது (164). இவ்விரு பள்ளு நூல்களும் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்ட நூல்கள். இதன் வழி நாயக்கர்களின் இறுதிக்காலத்தில் கிறிஸ்துவ சமயம் பரதவர்கள், பள்ளர்கள் போன்ற கடைநிலைச் சாதிகளிடம் பரவ ஆரம்பித்துவிட்டது எனக்கூறலாம். தென் தமிழ்நாட்டின் நிலைமை இதுவென்றால் வடதமிழ்நாட்டில் பறையர் போன்ற சாதிகளிடம் பரவியது எனலாம்.கிறிஸ்தவசமயம் நோக்கி நகர்ந்தவர்கள் வைதீக சமயத்தின் கட்டமைப்பில் பஞ்சமர்கள் எனச் சேரிகளில் ஒதுக்கப்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பொருளாதார நிலையிலும் சமூக அங்கீகாரத்திலும் ஒதுக்கப்பட்ட இம்மக்கள் அவ்விரண்டிற்கும் ஓரளவு உத்தரவாதம் தந்த கிறிஸ்தவ சமயத்திற்கு மாறியது ஆச்சரியமான ஒன்றல்ல.


சமூக அசைவியக்கத்தில் கிராம நிர்வாகத்தின் பங்கு:


பொதுநிலையில் நாயக்கர்காலச் சமூகம் வருண அடிப்படையில் அதிகாரப் படிநிலைகளை உருவாக்கிக் கொண்ட சாதிக் கட்டமைப்பில் இயங்கினாலும் அதன் அசைவியக்கத்தின் ஆதாரமாக இருந்தது அதன் கிராமநிர்வாக அமைப்புத் தான். விசயநகர ஆட்சியின் தொடர்ச்சியான நாயக்கர்களின் ஆட்சியும் விசயநகர ஆட்சியாளர்கள் பின்பற்றிய ஆயங்கார முறையையே கிராமநிர்வாகத்திற்கான முறையாகக் கொண்டிருந்தது. அரசனை (நாயக்கனை)த் தலைவனாகக் கொண்ட மைய அமைப்பு, பாளையக்காரனைத் தலைவனாகக் கொண்ட வட்டார நிர்வாகமும், கிராமசபை உறுப்பினர்கள் அடங்கிய கிராமநிர்வாகம் என்ற மூன்றடுக்கு அமைப்பில் கிராம நிர்வாகம் ஒருவிதத்தில் நிர்வாக அமைப்பாகவும் இன்னொரு விதத்தில் கிராமத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவை அமைப்பாகவும் திகழ்ந்துள்ளது.

வரலாற்றாசிரியர் கிருஷ்ணசாமி, “ஆயங்காரமுறை பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்டது. முதல் மூன்று நபர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவர். கர்ணம், மணியகாரர், தலையாரி என்பவர்களே அவர்கள். இதர உறுப்பினர்கள் - புரோகிதர், பொற்கொல்லர், நீர்கண்டி அல்லது மடையன் (நீர் பாய்ச்சுபவன்), கொல்லன், தச்சன், குயவன், வண்ணான், அம்பட்டையன், செருப்புத் தைத்தல் போன்ற தோல்தொழில் செய்கிறவன் என்பவர்கள். இவர்கள் அரசாங்க ஊழியர்கள் அல்லர். அரசு இவர்களுக்குச் சம்பளமாக எதுவும் தருவதில்லை. ஆனால் வரியில்லாத (இறையிலி) நிலங்களை மானியமாக அளித்திருந்தது”(A. Krishnaswamy, 1964, pp. 104 -105) என அதன் அமைப்பைத் தருகிறார். ‘அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர்கள்’ என கிருஷ்ணசாமி கூறும் மணியம், கர்ணம், தலையாரி பற்றிய குறிப்புக்களை இலக்கியங்களும் தருகின்றன. வடகரைப் பாளையக்காரனை வாழ்த்திக்கூறும் பட்பிரபந்தம் அவனுடைய அதிகாரிகளான கருணீகர் துரைகளையும் சேருவைகாரரையும் சேர்த்தே வாழ்த்துகிறது. மணியகாரர்கள் மக்களிடம் பழிபாவம் கருதாது வரிவசூல் செய்வார்கள் எனக் கூறுகிறது கோவிந்தசதகம் (31) வீரையன் அம்மானை காவல்தொழில் செய்த தலையாரி பற்றி,’தலையாரி கண்டுபிடிச்சாரே நடுவழி வாளால்’ எனப் பேசுகிறது.

ஆயங்காரமுறையின் இதர உறுப்பினர்கள், அரசாங்க ஊழியர்கள் என்பதற்கோ, அவர்களுக்கெனத்தனிப் பொறுப்புகள் இருந்தன என்பதற்கோ சான்றுகள் இல்லை. இவர்களுக்கு இறையிலி நிலங்கள் வழங்கப்பட்டிருந்தனவா என்ற குறிப்புகளும் இலக்கியங்களில் இல்லை. ஆனால் வேளாண்மை உற்பத்தியில், நேரடியாக உழைப்பில் ஈடுபடாமல் பங்கு பெற்றனர் என்பதற்கானக் குறிப்புகள் உள்ளன. எனவே நிர்வாகசபை உறுப்பினர்களை இரண்டு பிரிவுகளாகக் கொள்ளலாம். நிலத்தை மானியமாகப் பெற்றுக்கொண்ட கர்ணம், மணியம், தலையாரி என்ற மூவர். இரண்டாவது பிரிவினர், விவசாயம் சார்ந்த கைத்தொழில்களைச் செய்தவர்களும், உடல் உழைப்பில்லாத சோதிடம், கல்வித்தொழில், கலைஞர்கள் போன்றவர்கள் இப்பிரிவினரைக் கிராம நிர்வாகத்தில் பங்கு பெற்றவர்கள் என்பதைவிட, கிராமத்திற்குத் தேவையான பொதுப் பணிகளைச் செய்தவர்கள் என்பதே பொருந்தும். இவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் வகையிலான நில உறவுகள் அக்காலத்தில் இருந்தன.
நாட்டின் அனைத்துப்பகுதி நிலத்தின் மீதும் நான்கு பேர் உறவுகொண்டாடத்தக்கதான உறவு அக்காலத்தில் இருந்துள்ளது. அரசன், பாளையக்காரன், மானியதாரன், உழவன் என்ற நால்வரே அவர்கள். நாட்டின் தலைவன் என்ற வகையில் அரசனுக்கே நாடு முழுவதும் சொந்தம். அவன் தனது நலன் சார்ந்த நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அதனைப் பிரித்துக் கொடுப்பதன் மூலமும், இறையிலியாகக் கொடுப்பதன் மூலமும் அதன் மீதான உரிமையை நிலை நாட்டி வந்தான். அரசனிடமிருந்து ஒரு பகுதியைப் பெற்று அதன் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதன் மூலம் பாளையக்காரனுக்கும் நிலத்தின் மீது அரசனுக்குள்ள உரிமை கிடைத்துள்ளது. கல்வெட்டுக்களிலும் இலக்கியங்களிலும் கிடைக்கின்ற ஆதாரங்கள் ஒரு பாளையக்காரன், தன் பகுதி நிலங்களைத் தனக்குப் பணிந்து நடக்கின்ற நபர்களுக்கும் தனது புகழைப் பரப்புகின்ற நபர்களுக்கும் மானியமாக வழங்கும் அதிகாரம் பெற்றிருந்தான் என்பதைத் தெரிவிக்கின்றன.

கோயில்கள், சத்திரங்கள் போன்ற நிறுவனங்களும் கவிஞர்கள், அந்தணர்கள், கலைஞர்கள், தேவரடியார்கள், ஆசிரியர்கள் போன்றவர்களும் நிலங்களை மானியமாகப் பெற்றுள்ளனர். நிலங்களை மானியமாகப் பெற்ற நபர்களும் நிறுவனங்களும் தாங்களே நேரடியாக பயிர் செய்ததாகத் தெரியவில்லை. பயிர் செய்வதற்கான ஓர் அமைப்பாகவே அக்காலப் பண்ணை முறை இருந்தது எனக் கூறலாம். பண்ணை உற்பத்தி முறையில் ஒன்றோடொன்று தொடர்புடைய நான்கு கூறுகள் இடம் பெற்றிருந்த தகவலை அக்கால இலக்கியங்கள் தருகின்றன. அவை.
1. நில உரிமையாளன் அல்லது மானியதாரன்.
2. மேற்பார்வையாளனான பண்ணை விசாரிப்பான்.
3. கணக்குவைக்கும் அதிகாரி (முறையம்பிள்ளை அல்லது கணக்குப்பிள்ளை)
4. உழைக்கும் உழவர்கள் (பள்ளர்கள், கடைசியர், புலையர், பறையர்)
இத்தகைய உறவுடைய பண்ணைகள் தமிழகத்தின் பலபகுதிகளிலும் இருந்துள்ளதற்கான சான்றுகள் உள்ளன. இந்த நான்கு கூறுகளுள் நில உரிமையாளன் நிலத்தோடு நேரடியான தொடர்பில்லாமல் ஒதுங்கிக்கொள்ள ‘பண்ணை விசாரிப்பான்’ என அழைக்கப்பட்ட மேற்பார்வையாளர்களே. இடைநிலைச் சக்திகளாக அதிகாரம் செலுத்தியதாகப் பள்ளுநூல்கள் பேசுகின்றன. மானியதார்கள் தோன்றாப் பிரபுக்களாக (Absentees landlord) இருக்க, பண்ணை விசாரிப்பான்கள், முறையம் பிள்ளைகள், உழவர்கள் வேளாண்தொழிலோடு தொடர்புடையவர்களாகப் பள்ளு இலக்கியங்கள் வழி அறிகிறோம். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர்கள் இவர்களுக்கு இருந்துள்ளன. கணக்கு வைத்துக்கொள்ளும் வேலையைச் செய்தவரைக் கணக்கர் (மாந்தைப்பள். 91), முறையம்பிள்ளை (குருகூர்ப்பள்ளு.22-24), மணியம் (பட்பிரபந்தம்.139) என்பனசில. இதேபோல் பண்ணைவிபாரிப்பான்களின் இயல்புகளும் பணிகளும் இந்நூல்களில் இடம் பெறும் விதங்களும் கவனிக்கத்தக்க ஒன்று.

வேளாண் வேலைகளான உழவு, நடவு, களைஎடுப்பு, உரமிடுதல், அறுவடை முதலானவற்றை மேற்பார்வையிடும் பண்ணை விசாரிப்பான்களுக்குப் ‘பண்ணைக்காரன், காரியக்காரன்,’ என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உழவர்களோடு நேரடித்தொடர்பு கொண்ட இவர்களை ‘ஆள்பவன்’ (மாந்தைப்பள். 60) என்றே சொல்கின்றனர் பள்ளர்கள். ‘நாகமலையரசன் சொல்படியிந் நாட்டிலே நஞ்சை மணியங்கள் ஏகமாய் இங்கே ஏற்று வந்தவர்’ என்கிறது செங்கோட்டுப் பள்ளு. (135). வேளாண்மையை மேற்பார்வையிடும் இவர்கள் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குறிப்புகளும் உள்ளன. ‘திருட்டுக்காரன், காரியக்காரன், வம்புக்காரன், கைக்கூலிக்கிணங்கும் வலுக்காரன் எனச் சித்திரிக்கப்படுவதோடு, “பத்தஞ்சு கொடுத்தால் தண்டனை தரமாட்டான்” என்றும் அவனைப்பற்றிச் சித்திரிக்கின்றன
 இலக்கியங்கள். அவர்கள் தங்களுக்கிருந்த அதிகார மிகுதியால் உழவர்குலப்பெண்களான பள்ளியர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் தகவல்களும் பள்ளு நூல்களில் மிகுதியாகக் கிடைக்கின்றன (திருமலை முருகன் பள்ளு. 112, முக்கூடல் பள்ளு. 53, 54, பட்பிரபந்தம். 65, 105). 

பள்ளு நூல்கள் பண்ணைவிசாரிப்பானைக் கேலியாகச் சித்திரித்தாலும், பண்ணை முழுவதற்கும் பொறுப்புடையவன் அவனே என்பதும் அவை தரும் செய்திகள் தான். ‘மேட்டிமைசேர் பண்ணையில் விசாரிப்பான், ‘ ‘தன்பகுதி தலைவன் சொற்படி, பண்ணைகளைப் பார்த்துக் கொள்பவன்’ என்பன பள்ளு நூல்களில் வரும் வரிகள். தோன்றா நிலப்பிரபு அல்லது வெளிப்பட வாரா நிலப்பிரபுக்களை உடைய பண்ணைகளின் உரிமையை ஒரு நபர் சார்ந்த உரிமைநிலை எனச் சொல்ல முடியவில்லை. கி.பி.16,17 ஆம் நூற்றாண்டுக்கால அளவில் தோன்றிய பள்ளுநூல்கள் மூன்று வகையான பண்ணை களைப் பற்றிய செய்திகளைத்தருகின்றன.

1. கோயில் சார்ந்த பண்ணைகள் (தில்லைப்பள்ளு, கோட்டூர்ப்பள்ளு, திருமலை முருகன் பள்ளு, முக்கூடற்பள்ளு)
2. தனியார் பண்ணைகள் (பட்பிரபந்தம், செண்பகராமன்பள்ளு, தண்டிகைக்கனகராயன்பள்ளு, கங்கநாயகர்பள்ளு)
3. குழுவினருக்கான பண்ணைகள் (மாந்தைப்பள்ளில் விசுவகன்மர்; வைசியப் பள்ளுவில் வணிகர்)
பண்ணைகளை உரிமைசார்ந்து இப்படிப் பிரித்து கூறமுடியும் என்றாலும், பண்ணையின் வருமானப் பங்கீட்டில் உரிமையாளன், உழைப்பவன் என்ற இருவர் மட்டுமே பங்கு பெற்றனர் எனக்கூற முடியாது. அதற்குப் பதிலாகப் பல்வேறு தனிநபர்களும் நிறுவனங்களும் பங்குபெற்றுள்ளன. பண்ணை விளைச்சலிலிருந்து வட்டாரத்தலைவர்கள், கைத்தொழிலாளர்கள், கவிஞர்கள், வித்துவான்கள், அந்தணர்கள், தேவதாசிகள், விழாக்கள், சத்திரங்கள், அணைகள், தோப்புகள் எனப்பலவிதமான பங்கீடுகள் அளிக்கப்பட்ட செய்திகளையும் பள்ளு நூல்களேதருகின்றன. இவ்வகைப் பங்கீடுகளும் எல்லாப் பண்ணைகளிலும் ஒன்றுபோல இருந்ததில்லை என்பதும் அறியவேண்டிய செய்தி. மூவகைப் பண்ணைகளிலும் வெவ்வேறுவிதமாகப் பங்கிட்ட செய்திகள் காணப்படுகின்றன (அ.ராமசாமி, 2003, பக். 52 - 53).

நாயக்கர்கால சாதிகள், கிராமநிர்வாகம், பொருளாதார அடித்தளமான பண்ணைமுறை ஆகியவற்றை விளக்கியுள்ள நிலையில், பிரிட்டிஷாரின் வருகைக்கு முந்திய இந்திய சமூகத்தைப் பற்றிப் பேசும் பொழுது, ‘ஆசிய உற்பத்தி முறை, தன்னிறைவு கொண்ட கிராம அமைப்பு’ எனக்கார்ல் மார்க்ஸ் கூறுவதும், லூயி துய்மோன் அதை, “பரஸ்பர ஊழியப் பரிமாற்றமானது” என விதந்து பாராட்டுவதும் சரியான குறிப்புக்கள் அல்ல என்று தான் கூறத் தோன்றுகிறது. ஏனெனில் இந்தியக் கிராம நிர்வாகத்தில் எப்பொழுதுமே உழைப்பவர்களான உழவர்களுக்கு இடம் இருந்ததாகத் தெரியவில்லை.அவர்களின் அடிப்படைத்தேவையை அந்தக் கிராம அமைப்புகளும் அதிகாரப் படிநிலைகளும் பொருட்படுத்தியதாகக் கூடக் குறிப்புகள் இல்லை. சமூகத்தின் மேல்தட்டு உறுப்பினர்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் படி வற்புறுத்தப்பட்ட வன்முறை அமைப்பையே இடைக்காலத்தமிழகமும் - நாயக்கர் காலத்தை உள்ளடக்கிய பின்னிடைக்காலத் தமிழகமும் கொண்டிருந்தது.

முடிவுரை:

நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் வருணாசிரம சாதிப்பிரிப்பு முறையே அரசதிகாரத்தின் ஆதரவு பெற்ற முறையாக இருந்தது. வருணக்கலப்பும் சாதியொழுக்கமும் கடமைகளும் மீறக்கூடாத ஒன்று என்றும் அதைக் காக்கவேண்டியது அரசர்களின் கடமை என்றும் நம்பப்பட்டது.

நாயக்கர்களின் வருகைக்கு முன்பே ஆதிக்க சாதிகளாக - வேளாண்மையில் உழுவித்துண்ணும் குழுக்களாக இருந்த வேளாளர்கள், முதலியார்கள், மழவராயர்கள், அம்பலகாரர்கள், மறவர்கள் போன்ற சாதிகளுடன் புதிதாக வந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள், ரெட்டிகள், கன்னடம் பேசிய கவுண்டர்கள், செட்டிகள் போன்ற சாதிகளும் நிலங்களை மானியமாகப் பெற்றுக் கொண்டதன் மூலம் ஆதிக்க சாதிகளாக ஆகிக் கொண்டன. வேளாண்மையில் உழுதுண்ணும் சாதிகளாக இருந்த பள்ளர், பறையர், புலையர் போன்ற சாதிகள் தாழ்ந்த சாதிகளாகக் கருதப்பட்டன. அவர்கள் மீது தீண்டாமையும் சேரிகளில் ஒதுக்கப்பட்ட நிலையும் இருந்துள்ளது. நிர்வாக அமைப்புக்களான பாளையக்கார முறையிலோ ஆயங்காரமுறையிலோ இவர்கள் இடம் பெறவில்லை. கிராம நிர்வாகத்தில் மட்டுமல்ல பொருளாதார உற்பத்தி முறையான பண்ணைமுறையிலும் அவர்களுக்கு அடிமை நிலையே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தேவையான உற்பத்தியில் ஈடுபடவேண்டிய கட்டாயநிலையிலும் அவர்கள் இருந்துள்ளனர்.

பொருளாதார நிலையிலும் சமூக நிலையிலும் நிலவிய இவ்வடக்குமுறை காரணமாக அவர்கள் தங்கள் சாதியடையாளத்தைத் துறக்கும் பொருட்டு புதிதாக வந்த கிறிஸ்தவ சமயம் நோக்கி நகரும் நிலையும் இருந்துள்ளது.
================================================================
மேற்கோள் தரவுகள்
[நாயக்கர் கால இலக்கியத்தரவுகள் நூல் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பு விவரம் என்ற வரிசையில் தரப்படுகிறது]


அறப்பளீசுர சதகம், அம்பலவாணக் கவிராயர், கழகவெளியீடு, சென்னை, 1980.
இலக்கண விளக்கம் பொருளதிகாரம், வைத்தியநாத தேசிகர், சரஸ்வதி மகால் வெளியீடு, தஞ்சை, 1972.
ஐவர் ராசாக்கள் கதை, நா. வானமாமலை (பதி.), மதுரைப் பல்கலைக்கழகம், 1974.
கமலாலயச் சிறப்பு, மறைஞானசம்பந்தம் (பதி.), உ.வே.சா.நூல்நிலையம், சென்னை, 1961.
கயிலாசநாதர் சதகம், சதகத்திரட்டு, (2-ம் பாகம்) , மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914.
குமரேச சதகம், குருபாததாசர், கழகவெளியீடு, சென்னை, 1954.
குருகூர்ப்பள்ளு, ந.வீ. செயராமனின் பள்ளு இலக்கியம் என்ற நூலில் இந்நூல் விரிவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966.
கூடற்புராணம், கி. ராமானுஜய்யங்கார் (பதி.,) மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடு, மதுரை, 1929.
கூளப்பநாயக்கன் காதல், சுப்ரதீபக்கவிராயர், துரைசாமி முதலியார் (பதி.), சக்கரவர்த்தி அச்சுக்கூடம் 1936.
கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது, சுப்ரதீபக்கவிராயர், ராயசொக்கலிங்கன் (பதி.,) காரைக்குடி, ஆ.இ.
கோவிந்தசதகம், சதகத்திரட்டு, (2-ம் பாகம்), மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914.
செண்பகராமன் பள்ளு, ந.வீ. செயராமனின் பள்ளு இலக்கியம் என்ற நூலில் இந்நூல் விரிவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது., மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1996.
சேதுபதி பணவிடுதூது, ரகுநாதனின் சமுதாய இலக்கியம் என்ற நூலில் இந்நூல் விரிவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி புத்தகநிலையம், மதுரை, 1964.
சேதுபதி விறலிவிடுதூது, சரவணப்பெருமாள் கவிராயர் (பதி.) இலக்கியப் பதிப்பகம், காரைக்குடி, 1947.
திருக்குற்றாலக் குறவஞ்சி , திரி கூடராசப்பக் கவிராயர், கழக வெளியீடு, சென்னை, 1968.
திருமலை முருகன் பள்ளு, பெரியவன்கவிராயர், மு. அருணாசலம் (பதி.), சக்திகாரியாலயம், சென்னை, 1944.
திருமலையாண்டவர் குறவஞ்சி, உ.வே.சாமிநாதய்யர் (பதி.), கலைமகள் வெளியீடு - 9, சென்னை, 1938.
திருவாரூர்க்கோவை, சைவஎல்லப்பபூபதி, உ.வே. சாமிநாதய்யர் (பதி.,) கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1937.
திருவிளையாடல் புராணம் மதுரைக்காண்டம், பரஞ்சோதிமுனிவர், ராயசொக்கலிங்கன் (குறிப்புரை),
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வெளியீடு, மதுரை, 1973.
தொண்டைமண்டலசதகம், தொல்காப்பியம், சதகத்திரட்டு, (2 - ம் பாகம்), மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914.
பட்பிரபந்தங்கள், வடகரையாதிக்கத்தின் சரித்திரம், (வாலம்-2), பலவித்துவான்களியற்றிய பதினான்கு பிரபந்தங்கள், மு.ரா. அருணாசலக்கவிராயர், மு.ரா. கந்தசாமிக்கவிராயர் (பதி.,) மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை, 1916.
மதுரைச்சொக்கநாதருலா, புராணத்திருமலைநாதர், உ.வே. சாமிநாதய்யர் (பதி.), கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1931.
மாந்தைப்பள், சிதம்பரதாண்டவ மதுரகவிராயர், சங்கரலிங்க பாரதி (பதி.), யதார்த்தவசனீ அச்சியந்திரசாலை, கும்பகோணம், துன்மதிவருடம், புரட்டாசி மாதம்.
மான்விடுதூது, குழந்தைக்கவிராயர், உ.வே.சாமிநாதய்யர் (பதி.),கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1956.
முக்கூடற்பள்ளு, மு.அருணாசலம்பிள்ளை (பதி.), தமிழ் நூலகம் சென்னை, 1949.
ராமய்யன் அம்மானை, ராமச்சந்திர செட்டியார் (பதி.,) சரசுவதி மகால் நூல் நிலைய வெளியீடு, தஞ்சை, 1950.
வாட்போக்கிநாதருலா என்னும் இரத்தினகிரியுலா, சேறைக்கவிராசபிள்ளை,
உ.வே. சா. நூலகம், சென்னை, 1980.
வெண்பாப்பாட்டியல், கழகவெளியீடு, சென்னை, 1969.
வையாபுரிப்பள்ளு, விசையகிரி வேலச் சின்னோவையன், தளவாய்புரம் அ.அருணாசலம்பிள்ளை, (பதி.), உடுமலை கோபால் எலக்டிரிக் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பெற்றது.1943
வைசியப்பள்ளு, ந.வீ. செயராமனின் பள்ளு இலக்கியம் என்ற நூலில் இந்நூல் விரிவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966.
==============================================================
துணை நூல்கள்
[வரலாற்றுச்சான்றுகள் ஆசிரியர் பெயர், நூல்பெயர், பதிப்பு விவரம் என்ற வரிசையில் தரப்பட்டுள்ளன.]

இராம்சரண் சர்மா, இடைக்காலத்திற்கு முற்பட்ட இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள், (மொ-ர்) மங்கள முருகேசன், ந.க., 1979, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை.
ராமசாமி, அ., ஜீன், 2003, நாயக்கர் காலத்தமிழகம், தலித் இதழ் (பக்.48-54), நெய்வேலி .
ராமசாமி, அ., 1986, நாயக்கர் காலத்தமிழ் இலக்கியங்கள் காட்டும் சமுதாயம், பிஎச்.டி. பட்ட ஆய்வேடு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
Arangasamy, K., & Bharathi, T.P.J., 1983, Poligars and Pattagarers, Society of South Indian History, Velur.
Arasaratnam, S., 1971, Commercial Policies of the Sethupathies Ramanathapuram 1660-1690.
Proceedings of Second International Tamil Conference Seminar of Tamil Studies, Vol-II, International
Association of Tamil Research, Madras.
Jeyaprakasam, A., 1964, The Tamil Country Under Vijayanagar, The Annamalai University, Annamalainagar.
Karashima, Noboru, Subbarayalu, Y., & Toru Matsui, South Indian History and Society (Studies from Inscriptions A.D.850-1800, Oxford University Press, Delhi, 1984.
Sathiyanatha Aiyar, r., 1980, History of the Nayaks of Madura, University of Madras, Madras.
Subbarajalu, Y.1975, The State in the Medival South India, Ph.D thesis, Madurai Kamaraj University,
Rajamanickam, S., 1972, Robert -de-Nobili on Indian Customs De Nobile Research Institute, Palayamkottai.

கருத்துகள்

T.K.Theeransamy,Kongutamilarkatchi இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com
இரா.மீ.தீத்தாரப்பன் (R.M. THEETHARAPPAN) in short (RMT) இவ்வாறு கூறியுள்ளார்…
இது ஒரு நல்ல முயற்சியாக தான் படுகிறது. தமிழில் சாதிய புரிதல் மட்டும் அதன் கட்டுமானங்களை வெளிபடையாக சொல்லும் இலக்கியங்கள் அரிது,அதைவிட தங்கள் சாதியின் பெருமைகளின் வேர்களை அதிகபடுத்தி சொல்லும் தகவல் தான் ஏராளமாக கிடைக்கின்றன, மிக்க நன்ற் வாழ்த்துக்கள்
இப்படிக்கு
இரா.மீ.தீத்தாரப்பன்( இராஜபாளையம்)
அ.ராமசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
என்னுடைய ஆய்வேடு; இலக்கியமும் வரலாறும்- நாயக்கர் காலம் என்பதே. நியுசெஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. அது சாதிபற்றிய ஆய்வு அல்ல. அத்தோடு நாயக்கர் என்பதே ஒரு பட்டம் தான். அதுவே பின்னர் சாதியாக ஆகியிருக்கிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்