சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்..?:சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள்

2009 தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போது இலங்கைப் பிரச்சினை உறுதியாகத் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை மனம் சொல்லத் தொடங்கியது. தீவிரமாக நடந்த ஈழ யுத்தம் தேர்தலுக்கு முந்திய நாள் ஒரு முடிவுக்கு வந்து விட்டது போலச் சர்வதேச ஊடகங்கள் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தன.ஒரு வேளை இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மாறிப் புதிய ஆட்சி வந்தால் இலங்கைப் பிரச்சினை வேறு வடிவம் எடுக்கக் கூடும் எனக் கருதிய இலங்கை அரசு தீவிரமாகப் போரை நடத்தி முடித்து விட்டுத் தேர்தல் முடிவோடு சேர்த்து சொல்ல வேண்டும் எனக் காத்திருந்தது போல முல்லைத் தீவு வெற்றியைக் காங்கிரஸின் வெற்றியோடு சேர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தது.எனக்குக் கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப் பட்ட அந்தக் கதையைத் திரும்பவும் எடுத்து வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. எடுத்து வாசித்து விட்டு அடையாளத்திற்கு ஒரு தாளில், “சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்” என எழுதி மூடி வைத்திருக்கிறேன். கதையின் தலைப்பு: ஒரு லட்சம் புத்தகங்கள். எழுதியவர் சுஜாதா. எழுதப் பட்ட ஆண்டு 1982.