தொல்காப்பியத் திணைக்கோட்பாடும் அகநெடும்பாடல்களும்
முன்னுரை:தொல்காப்பியப் பொருளதிகாரத்தை மையப்படுத்திச் சிந்திக்கும்போது அதன் முதன்மை நோக்கம் பாவியல் அல்லது கவிதையியல் என்பதற்கான வரையறைகளை உருவாக்குவது எனக் கருதத்தோன்றுகிறது . அக்கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகின்றது . கருத்தரங்கின் பொதுப்பொருள் தொல்காப்பிய மரபும் செவ்வியல் ( சங்க இலக்கியங்களும் ) என்பதனை மனங்கொண்டு , தொல்காப்பியர் கூறும் திணைப்பொருள் மரபை நவீன இலக்கியக் கோட்பாடான நிலவியல் பண்பாட்டியலோடு தொடர்புபடுத்தி அமைகிறது இக்கட்டுரை . தொல்காப்பியம் மூன்று பொருட்களைக் கவிதையின் உள்ளடக்கமாகக் கூறியுள்ளது இக்கட்டுரை கருப்பொருளின் இடம் பற்றிய நிலையை விவாதிக்கிறது . கட்டுரை உருவாக்கிக் கொண்ட கருத்தியல் நிலைபாட்டைப் பொருத்திப் பார்க்கும் தரவுகளாகத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகளில் அகநெடும்பாடல்கள் இக்கட்டுரைக்கான முதன்மைத் தரவுகளாக அமைகின்றன .