உயர்கல்வியில் காலத்தின் தேவைக்கேற்பச் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்வதற்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் அமைப்புகள் இருக்கின்றன. பல்கலைக்கழக மானியக்குழு, மாநில உயர்கல்வி மன்றம், அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி மன்றம் போன்ற பெயர்களில் இயங்கும் இந்த அமைப்புகளே அவ்வப்போது பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வழிகாட்டு நெறிகளையும் விதிகளையும் உருவாக்கித் தருகின்றன. பல்கலைக்கழகங்கள் அவற்றை உள்வாங்கிக் கொண்டு அவை இயங்கும் வட்டாரத்திற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவது, தேர்வுகளை நடத்துவது, பட்டங்களை வழங்குவது எனப் பணிகளைச் செய்கின்றன. இப்பணிகளைச் செய்ய ஒவ்வொரு அமைப்பிலும் நியமன உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுமாக கல்விநிலைக்குழு, ஆட்சிப்பேரவை, ஆட்சி மன்றக்குழு எனச் சிற்றதிகாரம், பேரதிகாரம் நிரம்பிய அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றின் தலைவராக இருப்பவர்களே துணைவேந்தர்கள்.