கி.ரா.வின் கோபல்ல கிராமம்: நான் அறிந்த மனிதர்களும் எனக்குத் தெரிந்த கதைகளும்
நான் அறிந்த மனிதர்களும் எனக்குத் தெரிந்த கதைகளும் நீங்கள் வாசித்த நாவல்களில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது ? என்ற கேள்விக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ” கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் ” என நான் சொன்ன போது எனக்கு வயது 21. நிகழ்கால அரசியல் , பொருளாதாரச் சமூகச் சிக்கல்களைப் பேசும் விதமாகப் பாத்திரங்களை உருவாக்கி , அவற்றின் உளவியல் ஆழங்களுக்குள் செல்வதன் மூலம் வாசகர்களையும் உடன் அழைத்துச் செல்லும் தன்மையிலான எழுத்தே சிறந்த எழுத்து எனவும் , நாவல் என்னும் விரிந்த பரப்பில் தான் அதற்கான சாத்தியங்கள் அதிகம் எனவும் எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும் , நான் படித்திருந்த இலக்கியத் திறனாய்வு நூல்களும் சொல்லியிருந்தன.