எழுத்து மட்டுமல்ல எல்லாவிதமான கலைச்செயல்பாடுகளும் ஒருவிதத்தில் மனிதர்களின் அனுபவங்களாகவும், அனுபவங்களின்மேல் எழும் நம்பிக்கைகளாகவும் உள்ளன. அதேபோல் விமரிசனங்கள், அவற்றின்மேல் எழுப்பப்படும் சந்தேகங்களாகவும் சந்தேகங்களுக்கான காரணங்களைத் தொடுப்பதுமாகத்தான் இருக்கின்றன. விமரிசனங்களின் மேல் சந்தேகங்கொள்ளக் கூடுதலாகவே சாத்தியங்கள் இருக்கின்றன.கதாபாத்திரங்கள் அவர்கள் இயங்கிடும் பிரதேசம், அதற்கான காலம் என நிகழ்ச்சிகளை உருவாக்கும் நாடகம், நாவல், போன்றன ஒருவிதத்தில் வரலாறுதான். கவனம் ஒருவரலாறுதான். படைப்பாளியின் பார்வையில் படைப்பில் இடம்பெறும் நிகழ்வுகள் எல்லாமே நடந்தவைகளாகக்கூட இருக்கலாம். இவைகள் தவிர இன்னும் பல நடந்திருக்க கூடும், அவர்கள் அறியாமல். நடந்த எல்லாவற்றையும் பதிவுசெய்வது ஒரு படைப்பாளியின் வேலையும் அல்ல. ஆனால் பதிவுகள் அந்தப் படைப்பாளியின் கோணத்தில்தான் வாசகனிடம் வந்து சேர்கிறது என்பது விளக்கவேண்டிய ஒன்றல்ல. தன் வரலாறாக எழுதப்பட்ட கருக்காக இருந்தாலும்சரி, சிலுவைராஜ் சரித்திரமாயினும்சரி படைப்பாளியின் கோணம் இருக்கத்தான் செய்கிறது. பிரக்ஞை பூர்வமாக சொல்லுவதிலும் சொல்லாமல் தவிர்ப்பதிலும்...