சந்தேகங்களின் தொகுதி

எழுத்து மட்டுமல்ல எல்லாவிதமான கலைச்செயல்பாடுகளும் ஒருவிதத்தில் மனிதர்களின் அனுபவங்களாகவும், அனுபவங்களின்மேல் எழும் நம்பிக்கைகளாகவும் உள்ளன. அதேபோல் விமரிசனங்கள், அவற்றின்மேல் எழுப்பப்படும் சந்தேகங்களாகவும் சந்தேகங்களுக்கான காரணங்களைத் தொடுப்பதுமாகத்தான் இருக்கின்றன. விமரிசனங்களின் மேல் சந்தேகங்கொள்ளக் கூடுதலாகவே சாத்தியங்கள் இருக்கின்றன.கதாபாத்திரங்கள் அவர்கள் இயங்கிடும் பிரதேசம், அதற்கான காலம் என நிகழ்ச்சிகளை உருவாக்கும் நாடகம், நாவல், போன்றன ஒருவிதத்தில் வரலாறுதான். கவனம் ஒருவரலாறுதான். படைப்பாளியின் பார்வையில் படைப்பில் இடம்பெறும் நிகழ்வுகள் எல்லாமே நடந்தவைகளாகக்கூட இருக்கலாம். இவைகள் தவிர இன்னும் பல நடந்திருக்க கூடும், அவர்கள் அறியாமல். நடந்த எல்லாவற்றையும் பதிவுசெய்வது ஒரு படைப்பாளியின் வேலையும் அல்ல. ஆனால் பதிவுகள் அந்தப் படைப்பாளியின் கோணத்தில்தான் வாசகனிடம் வந்து சேர்கிறது என்பது விளக்கவேண்டிய ஒன்றல்ல.

தன் வரலாறாக எழுதப்பட்ட கருக்காக இருந்தாலும்சரி, சிலுவைராஜ் சரித்திரமாயினும்சரி படைப்பாளியின் கோணம் இருக்கத்தான் செய்கிறது. பிரக்ஞை பூர்வமாக சொல்லுவதிலும் சொல்லாமல் தவிர்ப்பதிலும் வேறுபாடுகள் இருக்கலாம். பாமாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விடவேண்டும் என்ற பிரக்ஞை கூடுதலாக இருந்திருக்கிறது; ராஜ்கௌதமனிடம் சொல்லாமல் தவிர்ப்பது குறித்தபிரக்ஞை கூடுதல். அதுதான் வேறுபாடு. அனுபவங்கள் எல்லாவற்றையும் சொல்லாமல்விட்டது ஏன் எனக் கேள்விகள் எழுப்பலாமேயொழிய சொல்லித்தான் ஆகவேண்டும் எனக் கட்டளையிட முடியாது. தன்வாழ்க்கையின் எந்தெந்தப் பகுதிகளையெல்லாம் சொல்லவேண்டும்; எவையெல்லாம் மறைக்கப் படவேண்டும் என்பது படைப்பாளியின் நம்பிக்கை, நோக்கம், விருப்பம் சார்ந்தது. கௌதமன் கவனமாக இருந்திருக்கிறார் என்பதை சிலுவைராஜ் சரித்திரத்தில் காண முடிகிறது. கவனமாக எழுதப்பட்டவைகளே சிறந்த எழுத்துக்கள் என்று நம்புவதும், மறைக்காமல் எழுதப்பட்டவைகளே சிறந்த எழுத்துக்கள் என்று நம்புவதும், வாசகர்களின் பாடுகள்.

பாமாவின் வன்மத்திலும், சுமதியின் கல்மண்டபத்திலும் சொல்லப்படுவனவும் படைப்பாளிகளின் கோணத்தில் சொல்லப்பட்ட வரலாறுகள். அவர்களின் எண்ணப்படி-மனச்சாட்சிப்படி உண்மைகளும் கூடத்தான்.ஆனால் இந்தப்படைப்பாளிகள் சார்ந்த சாதி மற்றும் வெளிவரும் காலம்சார்ந்து இவைகளுக்கு வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும் என்பது விமர்சகனின் சந்தேகம். இவ்விரு படைப்பாளிகளுக்கும் உண்மையில் அந்த நோக்கங்கள் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட சூழலில் அவர்களது படைப்புகளுக்கு வெவ்வேறு நோக்கங்கள் வந்து சேர வாய்ப்புக்கள் உண்டு என்பது எனது வாதம்.

வெங்கட் சாமிநாதன், சுமதியின் நாவலை முன்வைத்து இடஒதுக்கீட்டை விவாதிக்கும்பொழுது (கணையாழி) கல்மண்டபம் இதற்காகத்தான் எழுதப்பட்டுள்ளதோ என ஐயப்பட்டார். அதேபோல் பாமாவின் வன்மம் வந்தவுடன் குமுதம் போன்ற பெரும் பத்திரிகைகளில், இந்நாவலில் தலித்துக்களிடையேயுள்ள உள்சாதி முரண்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளன என சுட்டிக் காட்டப்பட்டதை மறக்கமுடியுமா..? உள்சாதி முரண்பாடுகளைப் பேசவே கூடாது எனச் சொல்லவரவில்லை. அப்படிப் பேசும்பொழுது சொந்த சாதி ஆதரவு என்பதைவிட அதன் மேலான விமரிசனம்தான் படைப்பாளியிடம் எதிர் பாக்கப்படுகிறது.

இமயத்திடம் கோவேறுகழுதைகளில் வெளிப்பட்டது சுயசாதி விமரிசனமும் வெறுப்பும். தன்சாதி மனிதர்கள், அவர்களின் துணிகளையெல்லாம் வெளுத்த ஆரோக்கியத்தின் மேல் செலுத்திய அதிகாரத்தை அவர் சரியென நியாயப்படுத்தவில்லை. சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி நாவல்களின் வெளிப்பாடுகளும் சொந்த சாதிக்காரர்களின் மேல் பச்சாதாபங்கள் அல்ல. விமரிசனங்கள்.ஆண்கள்-தந்தையர்கள்- குடும்பத்துப் பெண்கள் மேல் செலுத்தும் அதிகாரம் குறித்த விமரிசனங்கள்.ஆனால் சுமதி போன்ற முற்பட்ட சாதிக்காரர்கள், தன் சொந்தசாதி மனிதர்களிடம் பச்சாதாபம் ஏற்படும்படி எழுதவில்லையென நம்பினால் நம்புபவரது நம்பிக்கை கேள்விக்குரிய ஒன்று .

அதேபோல் வன்மத்தில், இரண்டுசாதிகளும்-பள்ளர்,பறையர்- ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டியவர்கள் ஆதிக்க சாதியினரான ரெட்டிகளும் நாயக்கர்களும் தான் என்கிற குவிமையம் விலக்கப்பட்டு இவர்களுக்குள்ளேயே கலவரம் நடக்கிறதே என்னும் ஆதங்கம் மட்டுமா பாமாவால் முன்வைக்கப்படுகிறது..? அதிகம் பாதிக்கப்பட்டவர்களாகச் சித்திரிக்கப்படுவர்கள் பறையர்கள்தான் என்பது சாதாரணமான முதல் வாசிப்பிலேயே வெளிப்படுகிறது. பள்ளர்கள் அதிகம் முரண்டு பிடிப்பவர்களாகவும் புரிந்து கொள்ள மறுப்பவர்களாகவும் பதிவு செய்யப் பட்டுள்ளனர். பறையர்சாதிப் பெண்களின் வலியும் துயரமும் பதிவு செய்யப்பட்ட அளவுக்கு பள்ளர் குலப்பெண்களின் வலியும் துயரமும் பதிவாகாமல் போகக் காரணங்கள் என்னவாக இருக்கமுடியும்..? பாமாவுக்குள் இருந்த உள் நோக்கம் என்று சொல்லவரவில்லை. இந்த இடங்கள் எல்லாம் சொந்தசாதியின் பக்கம் சார்ந்து விடாமல், விமரிசனம் செய்திட வாய்ப்புள்ள இடங்கள் என்பதுதான் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. அந்த வகையில் தான் வன்மம் தலித் விரோதத் தன்மையின் அருகில் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்தச் சந்தேகம் அப்படித்தான் தோன்றுகிறது.

தலித் எழுத்தாளர்கள் சொந்தசாதிகளின் மீது விமரிசனம் செய்பவர்களாக இருக்க வேண்டும் எனச் சொல்லும் பொழுது தலித் அல்லாத சாதி எழுத்தாளர்கள் எப்படி எழுதுவது என்று யாருக்காவது கேட்கத்தோன்றும். தலித் அல்லாதவர்கள், அவர்கள்-பிராமணர்களாக இருந்தாலும்சரி, பிராமணர்களையே எல்லாவற்றிற்கும் காரணமாகச் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கும் இடைநிலைச் சாதியினராக இருந்தாலும்சரி சொந்த சாதிகளை விமரிசனம் செய்தால் மட்டும் போதாது. சுயசாதிஎதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும். தலித்துக்களின் துயரத்தை அவர்களை விடவும் அசலாகப் பதிவு செய்ய எம்மால் இயலும் எனப்போட்டி போடுவதை விட்டுவிட்டு தங்கள் சாதி மனிதர்களிடம் தங்கியுள்ள மேட்டிமைத் தனத்தைக் களைவது எப்படியென யோசிக்கலாம். தங்கள் வீட்டுப் பெண்கள், மாறிவரும் நகர நாகரீகத்திற்குத் தக்க மாறுவது எப்படியெனக் கதையெழுதுவதை விடவும், அடுத்த வீட்டில் வாழும் குடும்பத்தினருடன் சாதி வேறுபாடு காட்டாமல் பழகுவது எப்படியெனக் கதை எழுத முயற்சி செய்யலாம்.

மனிதனின் வாயில் மலத்தைத் திணிப்பதைத் தங்களுக்கு நேர்ந்த துயரமாகத் தலித் எழுதும் பொழுது வெளிப்படுவது இயலாமையாகவும் ஆவேசமாகவும் இருக்கும். அதைவிடவும் அதனைச்செய்த ஆதிக்கசாதி எழுத்தாளன், குற்ற வுணர்வும் அச்சமும் வெளிப்பட எழுதும் கதைதான் இன்றைய அவசரத் தேவை என நினைக்கிறேன். இனமரபுப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கும் மண்சார்ந்த அடையாளங்களை எழுதும் எழுத்தாளர்கள், தங்களின் மூதாதையர்கள், சேரி மக்களூக்குச் செய்த துரோகத்தை எழுத முன்வரவேண்டும்.

தலித்துக்களாக உணராத நிலையிலேயே கூடத் தலித் சாதிகளில் பிறக்க நேர்ந்த டி.செல்வராஜுவும் (மலரும்சருகும்), பூமணி (பிறகு, வெக்கை) போன்றவர்கள் தங்கள் நாவல்களில் பல்வேறு சாதி மனிதர்களை அவரவர் இயல்புகளோடு உலவ விட்டுள்ளனர். ஆனால் இடைநிலைச்சாதி எழுத்தாளர்களும் (கி.ரா.,நீலபத்மநாதன், நாஞ்சில்நாடன், சி.ஆர்.ரவீந்திரன்.), பிராமண எழுத்தாளர்களும் (சி.சு. செல்லப்பா, தி.ஜானகி ராமன்...) போன்றவர்கள் தங்கள் குல மனிதர்களுக்குள்ளேயே நின்று கொள்கின்றனர். எல்லையைச் சுருக்கிக் கொள்வதுகூட தப்பித்துக் கொள்வதற்கான வழிகளில் ஒன்றுதான். அவர்கள் உண்மையான வரலாற்றையெழுத விரும்பியிருந்தால் மனிதாபிமானத்தோடு கூடிய குலப் பெருமைகளை எப்படியெழுதியிருக்க முடியும். சாதியபிமானம் நிரம்பிய கீழ்மைகளையல்லவா எழுதிக் குவித்திருக்க வேண்டும்.

தனிமனித சுதந்திரத்தையும் சமூகத்தில் வேறுபாடுகள் களையப் படவேண்டும் என்பதையும் முன்மொழிந்த நவீனத்துவத்தை உள்வாங்கியதிலேயே இந்திய சமூகம் ஏராளமான தவறுகளைச் செய்திருக்கிறது. அந்தத்தவறுகள் முதலில் களையப்பட வேண்டும்.
அதுவரை சந்தேகப்படுவதைத்தவிர்க்கவேண்டியதில்லை.

சந்தேகங்களின் தொகுதிகள் பெருகுவதாக.!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்