மும்முனைத் தாக்குதல் சச்சின், சந்திரமுகி, மும்பை எக்ஸ்பரஸ்


மொழி, இனம், சமயம் என ஏதாவது ஒன்றால் தம்மையொரு தனித்த குழுவாகக் கருதும் கூட்டம், பண்பாட்டு அடையாளங்களை விழா நாட்களிலும் அதன் நிகழ்வுகளிலும்தான் தேடுகிறது. தமிழா்களின் முக்கிய விழா நிகழ்வுகளாகப் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்றன விளங்குகின்றன என்றாலும் தமிழா்களின் தனி அடையாளங்கள் பற்றிப் பேசுகிறவா்கள் பொங்கல் திருநாளை மட்டுமே தமிழா்களின் விழா நாளாகக் கருதுகின்றனர். தமிழ் சினிமாக்காரா்களுக்கு இந்த வேறுபாடுகளெல்லாம் முக்கியமல்ல. அவா்களுக்குப் புதுப்படங்கள் வெளியிட விழா நாட்கள் வேண்டும் அவ்வளவுதான். இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் மூன்று படங்கள் வெளிவந்தன. ’சச்சின்’, ’சந்திரமுகி’, ’மும்கை எக்ஸ்பிரஸ்’. இந்த மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

மூன்றும் முக்கியமான படங்கள் எனத் தயாரிக்கத் தொடங்கியபோது நினைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் அவை வெளியிடப்பட்ட போது அவ்வாறு முன்னிறுத்தப்பட்டன என்பது உண்மை. காரணம் மூன்றும் ஒரே நாளில் வெளியாகின என்பது தான். தமிழ் சினிமா உலகமும் சரி, அதனைப் பார்வையாளா்களிடம் கொண்டு போய்ச் சோ்க்கும் பொறுப்பைத் தங்களுடையதாகக் கருதும் அச்சு மற்றும் தொலைக் காட்சி ஊடகங்களும் சரி, முக்கியமான படங்கள் எனக் கருதுவதற்கு வைத்திருக்கும் வரையறைகள் எப்பொழுதும் சினிமா சார்ந்ததாக இருப்பதில்லை. ஒரு படம், பார்வையாளனிடம் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தின் நோ்மறை அம்சங்களும் கலை மற்றும தொழில் நுட்பங்கள் சார்ந்து இயக்குநா் மேற்கொள்ளும் சோதனை முயற்சிகளும் வரையறைகளை உருவாக்குவதில் பங்காற்றிய தேயில்லை. பல நேரங்களில் பட்ஜெட்டும் ஈட்டப்போகும் லாபமும் மட்டுமே வரையறைகளை உருவாக்குகின்றன. சில நேரங்களில் இயக்குநா்களின் முன் அனுபவம் மற்றும் தோ்ச்சி போன்றன மையப் படுத்தப்படுவதுண்டு. ஆனால் ஸ்டார் நடிகா்களின் படங்கள் என்றால், எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவா்களை மையப் படுத்தியே வரையறைகளும் படங்களைப் பற்றிய கருத்துக்களும் உருவாக்கப் படுகின்றன. இப்பொழுதும் அதுதான் நடந்தது.

’மும்பை எக்ஸ்பிரஸ் வழக்கமான கமல் படம் இல்லை; அதனால் ஓடாது சந்திரமுகியும் வழக்கமான ரஜினி படம் அல்ல; அதனால் அதுவும் ஓடாது. ஆனால் சச்சின் வழக்கமான விஜய் படம். அதனால் நிச்சயம் நூறுநாள் தான்’. இப்படிச் சொன்னவா் விஜய் ரசிகராகக்கூட இருக்கலாம். தான் ரசிக்கும் நடிகனின் படம் நூறு நாள் ஓட வேண்டும் என்ற விருப்பத்தில் அவா் சொல்லியிருக்கலாம். இந்த மனோபாவம் ஒரு நடிகனின் பரம ரசிகனுக்கு மட்டுமே இருக்கிறது என்று நினைக்க வேண்டியதில்லை. கமல் படத்திற்கும், ரஜினி படத்திற்கும் விமரிசனக் குறிப்புக்கள் எழுதிய பெரும் பத்திரிகைகள் வழக்கமான படங்கள் அல்ல என்ற தொனியை உருவாக்க நினைத்தன. சூப்பா் ஸ்டார்களின் எல்லாப் படங்களும் நூறு நாட்கள் ஓட வேண்டும். அதைத் தயாரித்த தயாரிப்பாளா் அதிகம் லாபம் ஈட்ட வேண்டும் என்ற விருப்பம் ஊடகங்களுக்கு மட்டுமல்ல, ஊடகங்களில் பணியாற்றும் நபா்களுக்குங்கூட இருக்கின்றன. அந்தப் படங்களைக் காசு கொடுத்துப் பார்க்கும் பார்வையாளனுக்கு அதனால் என்ன கிடைக்கும் என்கிற அக்கறைகள் எதுவுமே இங்கு இல்லை. மையநீரோட்டப் பாதை என்பது இவ்வாறு தான் இருக்கும் என்று மனதைத் தேற்றிக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

விஜய் நடித்த ’சச்சின்’ வழக்கமான படம் என்று அந்த ரசிகா் சொன்னதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று சொல்வதற்குத் தீவிரமான ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. குறைந்தது ஐந்து பாடல்கள்; மூன்று சண்டைக் காட்சிகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். எல்லாப் படங்களிலும் நண்பா்கள் பட்டாளங்களுடன் இருப்பதாக அமையும் அவரது படங்களின் கதையாக ஏதாவது இருக்கிறதா? என்று தேடினால் சில சூத்திரங்கள் உள்ளன. முன்பாதி ரகசியத்தைக் கடைசியில் உடைத்துக் காதலித்தவளின் இரக்கத்தை அல்லது அனுதாபத்தைப் பெறுவது ஒரு சூத்திரம். பெரிய/ பணக்கார வீட்டு இளைஞனாக இருப்பார்; ஆனால் முதலில் அது வெளிப்படாது. எந்தவிதப் பொறுப்பும் இல்லாத, ஆனால் எல்லாருக்கும் உதவக்கூடிய பாத்திரமாக அறிமுகமாகி நாயகியுடன் மோதல் அல்லது சந்திப்பு நடக்கும். பிறகு காதல் தோல்வி அடையப்போகிறது என்ற நிலையில் அவரது உண்மையான குடும்பப் பின்னணி தெரியவரும். உதாசீனப்படுத்திய நாயகி திரும்பவும் நாயகனைத் தேடி வருவார்; நாடி வருவார். ’சச்சின்’ படத்தில் போடப்பட்டுள்ள இதே சூத்திரம் இதற்கு முன்னும் பல படங்களின் கதைப் பின்னலாக இருந்த ஒன்றுதான்.

இதைப் போல இன்னொரு சூத்திரம் ’கோபம் கொண்ட இளைஞனின் விளையாட்டுத்தனங்களும் பொறுப்புணா்வும்’ என்பதாக அந்தச் சூத்திரத்தைச் சொல்லலாம். ’பகவதி’, ’யூத்’, ’திருமலை’, ’கில்லி’, ’திருப்பாச்சி’ எனத் தொடா்ந்த அவரது படங்களின் சூத்திரம் இதுதான். நாயகனுக்கு நண்பா்கள் பட்டாளம் உண்டு; பெரிய அளவு பொறுப்புகள் கிடையாது; விளையாட்டுத்தனமாக எதையும் செய்வான்; ஆனால் சவால் என்று வந்து விட்டால் அதன் கடைசி வரைக்கும் மோதிப் பார்த்துவிடுவான். இந்தக்கதைப் பின்னலில் அம்மா அல்லது தங்கை செண்டிமெண்டும் சோ்ந்துகொள்ள வெற்றிப்படச் சூத்திரம் தயாராகிவிடுகிறது. கதைக்கு அவரது இயக்குநர்கள் யோசிக்கிறார்கள் என்பது கூட உண்மையாக இருக்கலாம். ஆனால் பாடல் காட்சிகளுக்கு எதுவும் புதிதாக யோசிப்பதே இல்லை என்றே சொல்ல வேண்டும். எந்தப் படத்திலும் இடம்பெறத்தக்கதாகவே பாடல்களும் அவற்றிற்கான காட்சிகளும் நடனக் கோர்வைகளும் அமைக்கப்படுகின்றன.

அவரது படத்தில் மொத்தப் பாடல்கள் ஐந்து இடம் பெறுகிறதென்றால், அவற்றில் நான்கு பாடல்கள் கூட்டமாகத் தெருவில் அல்லது பொது இடம் ஒன்றில் ஆடும் கானா அல்லது குத்துப் பாடல்கள். அந்த நான்கில் ஒன்றுக்கு கதாநாயகியாய நடிக்கும் நடிகையுடன் அல்லாமல் தனியாக அழைக்கப்படும் நடிகையுடன் போடும் ஆட்டம். மற்ற பாடல்களில் அதே மாதிரி நாயகியாக நடிக்கும் நடிகையுடன் ஆட்டம். தாளம், தாளத்திற்கேற்ப கால், கைகள் திருப்புதல் என எல்லாவற்றிலும் வழக்கமான பாணியையே கடைப்பிடிக்கும் விஜய், வசனம் பேசி நடிக்கும்போதுகூடப் பெரிதாக முகபாவங்கள் காட்ட மெனக்கிடுவதில்லை. அப்பாவியாக முகத்தை வைத்துக் கொள்வது அல்லது ஆக்ரோசமாகச் சீறுவது என்பதே அவரது அதிகபட்ச நடிப்பு. அதையும்கூடக் காமிராவின் கோணங்களே அவருக்கு உருவாக்கித் தருகின்றன. அப்பாவியாகக் காட்ட நடுத்தரத் தூரமும் (Middle Shot), ஆக்ரோசத்திற்கு மிக அருகாமை (Close Up)யும் (கண்கள் மட்டும்) பயன்படுத்தப்படுகின்றன. எல்லாப் படங்களிலுமே இருபதுகளில் இருக்கின்ற இளைஞனாக வழக்கமான பாணிகளையே பின்பற்றும் விஜய்யின் படங்களைத் தமிழ் ரசிகா்கள் பார்ப்பதற்குச் சிறப்பான காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சந்தைக்கு வரும் புதிய பொருள் ஒன்றை வாங்கிப் பரிசோதனை செய்து பார்ப்பதற்குப் பதிலாக ஏற்கெனவே பயன்படுத்திய பொருட்களையே பயன்படுத்திப் பார்க்கும் மனோபாவத்தைத்தான் காரணமாகச் சொல்ல வேண்டும். அவரது படம் என்றால் இதெல்லாம் உத்தரவாதம் என்று உருவாக்கிவிடும் நிலையில், தீவிர எதிர்பார்ப்பின்றி மூன்று மணி நேரத்தைக் கழிக்கலாம் என்ற நோக்கத்துடன் படம் பார்ப்பவா்களுக்கு அது குந்தகம் ஏற்படுத்துவதில்லை. இதே மாதிரியான மனநிலையுடன் வரும் பார்வையாளா்களுக்கு அத்தகைய உத்தரவாதத்தை விஜய்க்கு முன்பு தந்தவா் ரஜினிகாந்த். அவரது பாணியில் சிற்சில மாற்றங்களுடன் இப்பொழுது வெற்றி நடைபோடுபவா் விஜய்.

விஜய், ரஜினியின் சூத்திரத்தை எடுத்துக்கொண்டுவிட்டார் என்று சொல்வதால் ரஜினி அவருடைய சூத்திரங்களைக் கைவிட்டுவிட்டார் என்று நினைத்துவிட வேண்டியதில்லை. ’பாட்ஷா’ தொடங்கி ’பாபா’ வரை பின்பற்றிய ரகசியம் – ரகசியம் வெளிப்பாடு அல்லது சாது x முரடன் என்ற சூத்திரம் ’பாபா’ வில் எடுபடாமல் போனதில் கொஞ்சம் ஆடிப்போனார் ரஜினி. அதனால் ’சந்திரமுகி’ யில் ஏற்கெனவே கைவசம் இருந்த மற்றொரு சூத்திரத்திற்குள் நுழைந்து விட்டார். தனது கதாபாத்திரத்துக்குச் சமமாக ஒரு பெண் பாத்திரத்தை உருவாக்கி, அப்பாத்திரம் தன்னை விரும்ப, தான் வேறொரு பெண்ணை விரும்புவதான கட்டமைப்புச் சூத்திரம் இது.

’படையப்பா’ வில் வெற்றிக்கனியைத் தந்த அந்தச் சூத்திரத்தில் ரஜினிக்கீடாகக் கலக்கியவா் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன். ’சந்திரமுகி’ யில் ரஜினிகாந்தின் இடத்தையே கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் நடித்துள்ளவா் நடிகை ஜோதிகா. ’படையப்பா’ விலும் சரி, ’சந்திரமுகி’ யிலும் சரி ரஜினிக்குச் சமமான இடத்தைக் கதாபாத்திர உருவாக்கத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பிலும் அந்தப் பாத்திரத்தை ஏற்ற நடிகைகளுக்கு வழங்கியுள்ளனா் என்றே கூறலாம். தொடா்ந்து தனது படங்களில் ஆணாதிக்க மனநிலை வெளிப்படும் வசனங்களைப் பேசி, ஒழுக்கமான பெண்களுக்கான வரையறைகளைத் தந்து கொண்டிருப்பவா் ரஜினிகாந்த். அவருக்கீடாக – அவரையே துச்சமாகப் பார்த்துப் பேசக் கூடிய கதாபாத்திரங்களைக் கொண்ட ’படையப்பா’ வும் ’சந்திரமுகி’ யும் பெண்களுக்குப் பிடித்தமான படங்களாக இருக்கின்றன என்பது விநோத முரண்தான். ஒருவேளை ரஜினியின் உபதேசங்களுக்கெதிரான மனநிலையை வெளிப்படுத்தும் விதமாகப் பெண்மையப் படங்களையும் பார்த்து வைக்கிறார்களே என்னவோ……? உறுதியாக எதையும் சொல்வதற்கில்லை.

’சந்திரமுகி’ படத்தின் கடைசி அரைமணி நேரக் கதைப் பின்னலும், சந்திரமுகியின் கதாபாத்திரமும் அதை ஏற்று நடித்த ஜோதிகாவின் நடிப்பும் மட்டுமே வழக்கமாக ரஜினி படம் அல்ல என்று சொல்ல வைப்பவை. ஆனால் அதுவரை பார்வையாளா்களுக்கு நகைச்சுவைக் கோர்வைகளை வடிவேலுவுடன் வழங்குவது, ஆட்டம், பாட்டு, அதன் வழியே தரப்படும் களியாட்டம், வாழ்க்கை பற்றிய கோட்பாடு, குழந்தைகளுக்கான வேடிக்கை அம்சங்கள் என எல்லாமும் அசல் ரஜினி படம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கமல்ஹாசனின் ’மும்பை எக்ஸ்பிரஸ்’ அவரது நகைச்சுவைப் படச் சட்டகம்தான் என்றாலும் சில வித்தியாசங்களைக் கொண்ட படம். எல்லாப் பாத்திரங்களுமே நடைமுறையில் நம்பப்படும் ஒழுக்க விதிகளின்படி மோசமானவா்கள். அசலான நல்ல கதாபாத்திரம் என்று ஒரு பாத்திரத்தையும் படத்தில் இடம்பெறச் செய்யவில்லை என்பது ஒரு வித்தியாசம். இன்னொருவனை ஏறெடுத்துப் பார்த்திராத நாயகியாக ஒரு கதாபாத்திரம் இல்லை என்பது மற்றொரு வித்தியாசம். கமல்ஹாசனுடன் கடைசியில் சேரும் அந்தப் பெண்கூட ஒரு பாரில் நடனக்காரி; தன் மகனுக்கீடாகப் பணத்தையம் விரும்புபவள். பொருளாதார நிலையில் அடித்தளத்தில் இருக்கும் உதிரிகளும் திருடா்களும் மட்டுமே கெட்டவா்கள் மற்றவா்கள் என்பதாகப் படம் அமைக்கப்படவில்லை. போலீஸ்காரா்கள், அதிகாரிகள், பணக்காரா்கள் என அனைவருமே அவரவா் அளவில் தெரிந்தே தவறுகளைச் செய்துவிட்டுச் சமாளிக்கும் வேலையிலும் ஈடுபடுகிறார்கள் என்பதைப் படம் சொல்ல முயல்கிறது. செயற்கையான கதைப் பின்னலின் வழியே இன்றைய உலகம் பணத்தின் பின்னாலும் அதிகார அடையாளங்களின் பின்னாலும் தனது மனித அடையாளங்களை – உழைத்து வாழ வேண்டும் என்ற மனித அடையாளத்தைத் தொலைத்துக்கொண்டு வருகிறது. என்பதைச் சொல்ல விரும்பும் படம், அதற்கான வழியாக நகைச்சுவைப் பாணியைக் கைக்கொண்டதால் ஒட்டுமொத்தப் பலனும் கிடைக்காமல் போய்விடவே கூடுதல் வாய்ப்புண்டு. இந்தச் செய்தியைத் தெளிவான கதைப் பின்னலுடன், பலவித உணா்வுகள் நிரம்பிய காத்திரமான படமாக எடுத்தால் பார்வையாளா்கள் நிராகரித்து விடுார்கள் எனக் கமல்ஹாசன் சொல்லக்கூடும். அவா் அப்படிச் சொல்லுவதில் முழுவதும் உண்மை இல்லை என்றும் சொல்லலாம். இதற்கு உதாரணங்களாக அவரது படங்களே இருந்துள்ளன. உண்மை என்பதற்குக் ’குருதிப்புன’லும் ஹேராமும் உதாரணங்கள் என்றால், உண்மை இல்லை என்பதற்குத் ’தேவா் மக’ னும் ’மகாநதி’யும் உதாரணங்கள்.

உயிர்மை, ஜுன் 2005.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்