அழகுகுட்டிச் செல்லம் என்னும் சோதனை முயற்சி


 எல்லாக் கலைகளிலும் சோதனை முயற்சிகள் விதம்விதமானவை.

பெரும்போக்குக்கு எதிரான மாற்று முயற்சிகளாக மட்டுமே இல்லாமல், பெரும்போக்கைத் திசை திருப்பி இன்னொரு பெரும்போக்கை உருவாக்க நினைப்பதுகூட சோதனை முயற்சிகள் தான். ஒற்றை இழையில் சொல்லப்படும் கதைப் பின்னலைக் கொண்ட பெரும்போக்குச் சினிமாவுக்குள் பல கதைகளை ஒரு புள்ளியில் இணைத்துக் காட்டுவதின் மூலம் பார்வையாளர்களைத் திளைப்புக்குள் ஆழ்த்த முடியும்; அவர்களின் ரசனைக்கான இன்னொரு வடிவத்தைத் தரமுடியும் என நினைப்பதும் சோதனை முயற்சிகள் தான். தெரிவுசெய்யப்பட்ட தலைப்பில் முன்னெடுக்கப்படும் விவாதங்களின் முன்னோடியான நீயா? நானா? நிகழ்ச்சியின் இயக்குநரான நெல்லை ஆண்டனி தயாரித்த அழகுகுட்டிச் செல்லம் என்னும் படம் அப்படியானதொரு சோதனைப் படம் என்ற வகைப்பாட்டிற்குள் அடக்கக் கூடிய ஒன்று.   

செய்யப்படுவது திரைக்கதை: 

ஒரு சினிமாவுக்கான திரைக்கதை என்பது செய்யப்படுவது. உயிரோட்டமான வாழ்க்கையைச் சொல்லும் நடப்பியல் சினிமாவும் சரி, உய்வித்துக் கரைசேர்க்கும் அறங்களைச் சொல்வதாக நம்பும் சினிமாவும்சரி செய்யப்பட்ட திரைக் கதைகளின் மேல் உருவாக்கப்படும் வேலையே. அதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பியில்லை. நீள, அகலங்கள் கொண்ட செவ்வகம் மாதிரியோ, நான்கு பக்கமும் சமமான சதுரம் மாதிரியோ, குறிப்பிட்ட தூரத்தை ஆரமாகக் கொண்டு உருவாக்கப்படும் வட்டப்பொருள் மாதிரியோ திரைக்கதையும் கூட எந்திரத்தனமாகச் செய்யப்படும் ஒன்றாகவே சினிமாவில் செயல் படுகிறவர்களால் நம்பப்படுகிறது. 


சினிமா அதன் தோற்றக் காலத்திலிருந்தே அப்படித்தான் இருக்கிறது. என்றாலும் திரைக்கதையை உருவாக்கத் தேவையான கதை செய்யப்பட்டதாக இருக்கவேண்டுமா? என்பது தொடர்ந்து கேள்வியாகவும் விவாதமாகவும் விமரிசனச் சொல்லாடலாகவும் இருக்கிறது. திரைக் கதையைச் செய்ய உதவும் ‘கதை’ செய்யப்பட்டதாக இருக்கும்போது அந்த சினிமா கலையின் பக்கத்திலிருந்து முழுமையாக வணிகத்தின் பக்கம் நகர்கிறது. ‘செய்யப்பட்ட கதையல்ல’ என்ற நம்பிக்கையைப் படத்தின் இயக்குநரால் உருவாக்க முடிந்தால் அந்த சினிமா கலையின் பக்கம் நெருங்கி வருகிறது. இந்த அடிப்படை வேறுபாடுதான் சினிமாவைப் பற்றிய சொல்லாடலாக மட்டுமல்ல; கலைகளைப் பற்றிய சொல்லாடலாகவே இருக்கின்றன. 

ஒரு சினிமாவைப் பற்றிய இத்தகைய கருத்து எப்போது உருவாகுகிறது? அவர்கள் பார்க்கும் சினிமா, அவர்களின் வாழ்க்கையோடு எங்காவது பொருந்தும் நிலைக்குப் பக்கத்தில் இருக்கும்போதுதான் உருவாகுகிறது. திரையரங்கில் இருக்கும் பார்வையாளர்களின் பொதுவெளி இருப்பும் தனிமனித இருப்புமே திரைப்பட நிகழ்வோடு பொருந்தத் தூண்டுகிறது. அப்படியான தூண்டுதலால், தான் பார்க்கும் சினிமாவின் காட்சித் தொகுப்புகளை நிகழக்கூடியவை அல்லது எனக்கில்லையென்றாலும் இங்கே வாழும் என்னையொத்த மனிதருக்கேனும் நிகழக் கூடியவையே என்ற தர்க்கத்திற்குட்பட்டதாகப் புரிந்துகொள்கிறார்கள். அந்த மாற்றமே பார்க்கும் சினிமாவை, வாழ்க்கையைச் சொல்லும் சினிமா எனப் பார்வையாளர்களைக் கொண்டாடத்தூண்டுகிறது. அதற்கு மாறாக கதையும், திரைக்கதையும் தர்க்கங்கள் அற்ற தொடர்ச்சியோடு எடுக்கப்பட்ட நிகழ்வுத் தொகுப்புகளாக இருந்தால் பொழுதுபோக்கு சினிமா என்ற வகைக்குள் வைத்துப் பார்த்து ரசித்துவிட்டு மறக்கப்படுகிறது. இது பார்வையாளர்களுக்கு முன்னால் காட்டப்படும் படம்/ நாடகம்/ பனுவல் என அனைத்துக்கும் பொதுவானது. 

அழகு குட்டி செல்லம் என்னும் முயற்சி 

அந்தோனி சார்லஸின் அழகு குட்டி செல்லம் பொழுதுபோக்குப் படமாக இருக்கிறதா? பார்வையாளர்களுக்கு வாழ்க்கை சார்ந்த அனுபவத்தைத் தரும் கலைப்படத்தின் கூறுகளைக் கொண்டிருக்கிறதா? என்ற கேட்டுப் பார்த்தால், இரண்டுமாக இல்லை என்பதுதான் கிடைக்கக்கூடிய பதில். இந்தியக் குடும்பங்களில் குழந்தையை மையப்படுத்தி நடக்கும் நிகழ்வுகளை, ஒரு கதைக்குத் தேவையான சிக்கல்களோடு பின்னிப் பின்னித்தந்திருக்கிறார் சார்லஸ். அனைத்தும் நம்புவதற்கும் தர்க்கத்திற்கும் உட்பட்டே அமைந்திருக்கின்றன. படமாக்கப்பட்ட விதமும் கூட அந்தந்தக் கதைக்கேற்ற களனோடும், பாத்திரங்களின் சமூகப் பொருளாதாரப் பின்புலத்தோடும் பொருத்தமாகவே எடுக்கப்பட்டுள்ளன. பெரிதாகக் குறையெதுவும் சொல்ல முடியாது. முக்கியக் கதாபாத்திரம்போல வரும் ஆட்டோக்காரரின் (இதற்கு முன்பும் ஒரு படத்தில் கருணாஸ் ஆட்டோக்காரராக நடித்திருக்கிறார் என்றாலும் இந்தப் படத்தில் நடித்த ஆட்டோக்காரர் பாத்திரமும் நடிப்பும் அவருக்கொரு மைல் கல்) ஆண் குழந்தைக்கான ஆசையைப் பொய்யென்று சொல்லிவிட முடியுமா? செத்தபிறகு கொள்ளிவைக்கவும் பரம்பரையை விருத்திசெய்யவும் தேவை ஆண் வாரிசு என்ற நம்பிக்கை இல்லாத இந்தியக் குடும்பங்கள் பெரும்பாலும் இல்லை என்பது தெரிந்த ஒன்று. அதேபோல் தனது தொழில் விருத்தி, தனது சமூகத் தகுதி என்ற இரண்டிற்காகவும் வீட்டை மறந்து, குழந்தையின் நலனைக்கூடப் பொருட்படுத்தாமல், விவாகரத்துக்குச் செல்லும் வாழ்க்கைக்குள் உயர் வகுப்பு/ வர்க்க வாழ்க்கை நுழைந்துவிட்டது என்பதும் நடைமுறை உண்மைதான். கணவன் -மனைவி என்ற இருவருக்குமிடையே இருக்கும் வீம்புக்கிணையான இன்னொரு போக்கின் வகைமாதிரியே திருமணமாகாமல் குழந்தையைச் சுமந்து, காதலனால் கைவிடப்பட்டு, அவனிடம் நீரூபித்துக்காட்ட முயலும் இளம்பெண்ணின் தன்னம்பிக்கை வாழ்க்கை. இம்மூன்று கதைகளோடு இன்னும் இரண்டு சோகம் ததும்பும் கதைகளும் படத்தில் உள்ளன. தனக்குப் பிள்ளை பிறக்காது எனத் தெரிந்த பின் அனாதைப் பிள்ளையொன்றைத் தத்தெடுத்து வளர்க்கலாமா? வேண்டாமா? என அல்லாடும் ஆசிரியையின் தன்னிரக்கக்கதை. அக்கதையிலிருக்கும் சோகத்தைவிடவும் கூடுதல் சோகம் தரக்கூடியது ஈழத்துப் போரில் கண்முன்னே தனது குழந்தையை வெடிகுண்டுக்குக் கொடுத்துவிட்டுப் புலம்பெயர்ந்து வாழும் தம்பதியர்களின் அல்லாட்டம். அந்த அல்லாட்டத்தின் ஒரு பகுதியாகக் குழந்தைக்காகத் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு அலைந்து கொண்டிருப்பது. 

இந்த ஐந்து கதைகளுமே உருக்கமான, நம்பும்படியான, சமகாலத் தமிழ்வாழ்வுப் பரப்பில் மிதக்கும் குமிழிகளே என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இந்த ஐந்துமே படத்தின் கதை அல்ல. தனித்தனியான கதைத்துண்டுகள். படத்தில் அவை திரைக்கதையின் பகுதிகளாகவே இருக்கின்றன. அடியோட்டமான கதையாக அமைக்கப்படவில்லை. அப்படி அமைக்கப்பட்ட இணைப்பு அல்லது கண்ணி வேறொன்றாகப் படத்தில் இருக்கிறது. அந்தக் கண்ணி நம்பும்படியாக - வாழ்க்கையின் அனுபவமாக இல்லாமல் விளையாட்டுத் தனமான கதையாக இருக்கிறது என்பதே இந்தப் படத்தின் பெரும் பலவீனம். உள்வாங்கும் சமூக மனப்பான்மையோடு அனாதைப் பிள்ளைகளுக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கும் உயர்வகுப்புப் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியைத் தரும் பள்ளியொன்றைப் படத்தில் காட்டுகிறார் சார்லஸ். இத்தகைய பள்ளிகள் தமிழ்நாட்டில் அருகிவரும் காலம் இது. அந்தப் பள்ளிக்கான நிதியைத் தரும் அமைப்பிடமிருந்து நிதியைப் பெறுவதற்காகப் போடப்போகும் நாடகமே படத்தின் கதையை நகர்த்தும் முடிச்சுகள் கொண்ட பின்னல். 

அன்பின் வடிவமான இயேசு பிறப்பைச் சொல்லும் வழக்கமான நாடகத்தையே வித்தியாசமாகப் போடத்தயாராகும் பள்ளிப் பிள்ளைகளின் விளயாட்டுத்தனங்களும் செயல்பாடுகளுமாகக் கதைப்பின்னல் நகர்கிறது. அவர்கள் நினைத்தபடி எப்படியாவது நாடகத்தை மேடையேற்றியாக வேண்டும் என நினைத்துப் போடும் திட்டங்களும், அதனை அவர்கள் நடைமுறைப்படுத்துவதும் என விரியும் மையக்கதைப்போக்கு எந்தவிதத் தர்க்கமும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நகைச்சுவை, வேகமாகக் கதையை நகர்த்துதல், வில்லன்களோடு மோதுதல், பார்வையாளர்களிடம் பதபதைப்பை உண்டாக்கும் நோக்கத்தோடு உயரமான இடத்திலிருந்து குழந்தையைத் தூக்கிப் போட்டு விளையாடும் சாகசம் போன்றவற்றையெல்லாம் தருவது ஏனென்ற கேள்வி பார்வையாளர்களுக்கு உண்டாவதைத் தடுக்கமுடியாது. அவையெல்லாம் பொழுதுபோக்கு சினிமாவை விரும்பும் பார்வையாளர்களுக்குத் தரவேண்டுமென நினைத்து உருவாக்கப்பட்ட காட்சிகள். இந்தக் காட்சிகள் எல்லாம் சேர்ந்து உருக்கமான ஐந்து கதைத்துண்டுகளை அதே ஆழமான உணர்வுகளோடு இணைக்காமல், அவற்றிலிருந்து விலக்கி வைக்கும் தன்மையை உண்டாக்கிவிட்டது. அந்த விலகல் படத்தை வாழ்வின் மீதான விமரிசனக் கதைகொண்ட படமாக ஆக்கத்தவறுகிறது. 
தீமையைக் கண்டு பொங்கியெழும் நாயகன் அல்லது குடும்பத்தை நாசம் செய்தவர்களை அழிக்கக் கிளம்பும் ரோசக்கார இளைஞன் என்னும் நம்பகமான ஒருவரிக்கதை மீது நம்பமுடியாத காட்சிகளைத் திரைக்கதையாக அமைப்பது ரஜினி,விஜய், அஜித் வகையறாக்களின் திரைக்கதைக் கட்டமைப்பு. ஆனால் சார்லஸ் அந்தக் கட்டமைப்பை மாற்றிப் போட்டிருக்கிறார். அதுதான் அவர் செய்த திரைக்கதைப் புதுமை. தர்க்கமற்ற அந்த ஒருவரிக்கதையோடு ஒட்டவைக்கப்பட்ட ‘சமகால இந்திய வாழ்வில் குழந்தை ; அதனால் குடும்பங்கள் சந்திக்கும் நெருக்கடி’ என்னும் முக்கியமான சொல்லாடலின் கண்ணிகள் தனித்தனியாகவே ஒட்டாமல் நின்றுவிட்டன. 
தொடர்ச்சியை உருவாக்காத திரைக்கதையை ஒட்டவைக்கத் திரைப்படத்தின் இசையும் திரும்பத் திரும்பவரும் பாடலின் லயமும் முயன்றுள்ளன. ஆனால் ஓசையைப் போலவே மௌனங்களும் அர்த்தம் உண்டாக்கக்கூடியவை என்பதை உணர்ந்தவராக இசையமைப்பாளர் வெளிப்படவில்லை. அவரது இசைக்கோர்ப்பே படத்திற்கு ஒருபடித்தான தன்மையை உண்டாக்கிவிட்டது. 
ஒரு படத்தின் விளம்பரமே எல்லாப் பார்வையாளர்களையும் திரையரங்கிற்கு அழைத்துவந்துவிடாது. பார்த்த பார்வையாளர்களின் பரிந்துரையே பார்வையாளர்களைத் திரட்டித் தரும் சரியான விளம்பரம். சார்லஸ் ஆண்டனியின் அழகு குட்டி செல்லம் படத்தைப் பக்குவமான பார்வையாளர்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் படம் பார்க்க நினைப்பவர்களுக்குப் பரிந்துரைக்கவேண்டிய சங்கதி எவையென்று உறுதிப்படுத்திச் சொல்லக் குறிப்பான சங்கதிகள் எவையென்று தெரியவில்லை. தங்களுக்கே தெரியாத ஒன்றைச் சொல்லிப் பார்வையாள நண்பர்களை அவர்களால் அனுப்பிவைக்க முடியவில்லை. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்