தமிழகத்தில் தலித் இலக்கியம்

தலித் - ஒரு பதமாக நுழைந்து நிகழ்வாக மாறிவிட்ட அந்த வார்த்தைக்கு வயது பத்து. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகள். நுழைந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தமிழ்ச் சிந்தனை மற்றும் செயல்பாட்டுத் தளங்களை ஆக்ரமித்துக்கொண்ட சொல்லை - இதைப்போல் வேறு சொல்லை - தமிழ் மொழி இதற்கு முன் சந்தித்திருக்க வாயப்பில்லை.
இந்தச் சொல் தமிழ்ச் சிறுபத்திரிகை வாசகர்களில் ஒரு சிறு குழுவினருக்கு எண்பதுகளின் தொடக்கத்தில் (தமிழவன் - 1982 ‘தமிழில் தலித் இலக்கியம் தோன்றுமா’, படிகள்) அறிமுகமாகியிருந்தது என்றாலும் அதன் காத்திரமான அர்த்தத்தில் நுழைந்தது தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தான். 1991, ஜனவரி 8 தொடங்கி நடந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் உடன் விளைவும் பின்விளைவுகளும் அந்த வார்த்தைக்கான அர்த்தங்களை அதிகரித்தன. அரசு, விழாவினைச் சடங்காக நினைக்க, அம்பேத்கர் இயக்கங்கள் அதனைப் போராட்டங்களாகவும் களியாட்டங்களாகவும் மாற்றின. இந்தப் பத்தாண்டுகளுக்குப் பின் தமிழக அரசியல், பண்பாடு, கலை இலக்கியமென அனைத்தின் போக்குகளையும் அந்த வார்த்தை தடுமாறச் செய்துள்ளது புரிகிறது. எல்லாவற்றின் பயணங்களும் தடுத்து நிறுத்தப் பட்டன. விசாரிக்கப்பட்டன. தேவையெனில் திசை மாற்றங்கள் நடந்தன. மொத்தத்தில் அந்தப் பதம் இன்று தவிர்க்க முடியாத ஒரு சொல்லாடல்.
 
நடந்த மாற்றங்களின் காரணிகள் எவையெனத் தொகுத்து அறிய வேண்டியது இன்றைய தேவை என்றாலும் இந்தக் கட்டுரைக்கு ஒரு எல்லை இருக்கிறது. ‘இலக்கியம்’ என்கிற பரப்பில் அந்த வார்த்தை உண்டுபண்ணிய வெடிப்புகள் எவை? அதிலிருந்து முளைத்தவை, புத்தம் புதிய பரிமாணங்களா? அல்லது, ஏற்கெனவே இருந்த ஒன்றின் கிளை நீட்சிகளா? முளைத்து வளர்வதில் என்ன வகையான தடைகள் அல்லது தயக்கங்கள் நிலவுகின்றன? அதற்கான காரணங்கள் எவையாக இருக்கக்கூடும் என்பதையெல்லாம் கவனித்துச் சொல்ல முயன்றுள்ளது இக்கட்டுரை. இந்தக் கவனிப்புக்குத் தேவையான அளவில் ‘தலித்’ என்ற சொல்லாடல் உருவாக்கப்பட்ட பின்புலத்தில் செயல்பட்ட நபர்களும் அமைப்புகளும் அடையாளங் காட்டப்பட்டுள்ளனர்.

முன் ஆய்வுகள்

தலித் இலக்கியம் தமிழில் பரவத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அதன் தாக்கத்தைத் தொகுத்து மதிப்பீடு செய்வதை அதன் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் செய்தனர். அச்செயல்களின் நீட்சி தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. அவற்றுள் என் கவனத்திற்கு வந்த சிலவற்றைச் சுட்டிக்காட்டிட வேண்டும். இந்தக் கட்டுரைக்கு அவையெல்லாம் முன்னோடிகள் என்ற அளவில் அவசியமானவைகளும் கூட.
 
தலித் இலக்கியம் மற்றும் தலித் எழுத்தாளர்களின் பங்களிப்பு தமிழ் இலக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாதது எனக்காட்டிட விரும்பிய அ.மார்க்ஸ், நிறப்பிரிகையின் இலக்கிய இணைப்பொன்றில் (எண் 2, 1994) ஒரு தொகுப்பினைத் தந்தார்.தலித் சாதியில் பிறந்து தலித்து களைக் கதாபாத்திரங்களாக்கி தலித் பிரச்சினைகளை மையப்படுத்திய எழுத்தாளர் களின் பட்டியலான இதில் அவர்களின் படைப்புகள் பெயர்களாகத் தரப்பட்டிருந்தன. அத்தோடு சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு களும் இடம்பெற்றிருந்தன.
 
இத்தொகுப்பினை உள்ளடக்கிக்கொண்டு இடதுசாரி எழுத்தாளர்கள் சிலர் தலித் பிரச்சினைகளைக் கையாண்டுள்ள விதங்களை எடுத்துக்காட்டி, மராட்டிய தலித் இலக்கிய வரலாற்றையும் சுட்டி முகில் செம்மலரில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். (இக்ட்டுரை 1996 இல் சண்முக சுந்தரம் தொகுத்த ‘தலித்தியம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. (காவ்யா, பெங்களூர்) முகிலுக்கு இடதுசாரி எழுத்தாளர்களையும் தலித் பிரச்சினைகளில் அக்கறை ª காண்டவர்களாக காட்டும் ஆசை இருந்தது.
 
1996 இல் புதுவை பிரெஞ்சு இந்திய நிறுவன ஆய்வாளர் கண்ணன் எம்.மும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியவியல் துறைப் பேராசியி£ர் ப்ரான்சுவா குரோவும் இணைந்து ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். பி.இ.எப்.இ.ஓ. எனும் (BEFEO) பிரெஞ்சு மொழி இதழில் வெளிவந்த (பாரிஸிலிருந்து வெளிவருகிறது) அக்கட்டுரை நிகழ் தேதிச் சேர்க்கையுடன் (upward version) ‘இலக்கியத்தைத் தேடும் தமிழ் தலித்துகள் (Tamil Dalits in search of Literature, South Asia Research, London) எனும் தலைப்பில் சவுத் ஏசிய ரிசர்ச் எனும் லண்டன் ஆய்விதழில் வெளிவர உள்ளது.
 
தமிழில் நடந்த தலித் இலக்கிய முயற்சிகளை - வெளிப்பாடுகளை - கவனித்துத் தொகுத்துத் தரும் இக்கட்டுரை களுடன் இன்டியன் லிட்டரேச்சரில் வெங்கட் சாமிநாதன் எழுதிய ‘தமிழ் இலக்கியத்தில் தலித்துகள் - கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும்’ என்ற கட்டுரையையும் ஒரு வகையான தொகுப்பு என்ற அளவில் சேர்க்க வேண்டியுள்ளது. (The Dalit in Tamil Literature - past and present, Indian Literature No 193, Sep - Oct 1999, New Delhi pp, 15 - 30) தமிழில் நடந்த தலித் படைப்பு முயற்சிகளைத் தொகுத்து இந்திய அளவில் அறிமுகம் செய்யும் வேலையைப் புறக்கணிக்க வாய்ப்பாக வெ.சா. தலைப்பைத் தேர்வு செய்து கொண்டுள்ளார். அதன் மூலம் தலித் கதாபாத்திரங்களை எழுதிய தலித் அல்லாத எழுத்தாளர்கள் பலரை இக்கட்டுரை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துள்ளது. அத்தோடு தலித் சொல்லாடல்களின் அரசியல் சிந்தனைத் தளங்களை வெறும் கருத்துரைப்புப் பாணியில் ஒதுக்கும் பணியையும் அக்கட்டுரை செய்துள்ளது. தலித்துகள் கோட்பாடுகளைப் பேசக்கூடாது என்பது அவரது அளவுகோல் போலும்.வெ. சாமிநாதனுக்கு ஒரு நோக்கம் இருந்தது போல் முன் ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொன்றிற்கு மேசில நோக்கங்கள் இருந்துள்ளன. தலித் இலக்கியம் என்ற இக்கட்டுரைக்கும் சில விருப்பு - வெறுப்பு சார்ந்த நோக்கங்கள் இருப்பது போல்.
 
பின்புலங்கள்

‘தலித’என்ற வார்த்தை சார்ந்த சொல்லாடல்கள் தமிழுக்குப் புதியன என்றாலும் தலித் இலக்கிய வெளிப் பாடுகளுக்குத் தமிழில் உள்ளடக்கம் சார்ந்தும் வடிவம் சார்ந்தும் தொடர்ச்சிகள் உண்டு. தமிழ்ப் புனைகதை வரலாற்றை அறிந்த வாசகன், தலித் இலக்கியப் பிரதிகளைத் தமிழின் வட்டார எழுத்துக்களோடு அடையாளப் படுத்திவிட முடியும். வட்டாரத்தை எழுதாமல் வட்டார எழுத்து என்ற வெளி (space) சார்ந்த பெயரை இந்த மண்வாசனை எழுத்துக்கள் தாங்கிப் பெருமை கொண்டன. உணமையில் அவை கதாபாத்திரங்களை முதன்மைப் படுத்திய எழுத்துக்களே.இதன் மறுதலையாக ‘தலித் இலக்கியம்’ கதா பாத்திரங்களை மையப் படுத்துவதான பொதுப் பெயரை - தலித் இலக்கியம் - கொண்டதாக நுழைந்தது. ஆனால் உண்மையில் அது ‘வெளி களை’யே மையங்களாகக் கொண்டுள்ளது. மண்வாசனை X தலித் இலக்கிய விவாதத்தைப் பின்னர் தொடரலாம். முதலில் தலித் சொல்லாடல்களை உருவாக்கியதில் பணியாற்றிய நபர்களின் பங்களிப்புகளையும் நிறுவனங்களின் பங்களிப்புகளையும் காணலாம். அது அந்நிறுவனங்களுக்கும் நபர்களும் தமிழ் தலித் இலக்கியத்திற்குத் தரவிரும்பிய அடையாளங்களை நமக்குக் காட்டக்கூடும்.

நபர்கள்

தமிழில் தலித் அரசியல், தலித் பண்பாடு, தலித் இலக்கியம் என்ற சொல்லாடல்களை உருவாக்கியதில் மூன்று நபர்களுக்கு முக்கியப் பங்குண்டு. ராஜ் கௌதமன், அ. மார்க்ஸ், ரவிக்குமார் என்ற அந்த மூவரில் ராஜ் கௌதமன் முழுவதும் எழுத்து சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர். மற்ற இருவரும் எழுத்துக்களோடு செயல் தளத்திலும் பணியாற்றியவர்கள், பண்பாட்டுப் பேரவைகள், கலை விழாக்கள், விமர்சன அரங்குகள் என தலித் இயக்கங்கள் தொண்ணூறுகளில் செயல்பட இம்மூவரின் எழுத்துக்களே அடித்தளங்களாக இருந்தன, இருக்கின்றன.
 
ராஜ் கௌதமன் எழுதிய தலித் பண்பாடு (1993 கௌரி பதிப்பகம், புதுச்சேரி) பலரது கூட்டு விவாதத்திற்குப்பின் அ.மார்க்ஸ் எழுத்து வடிவம் தந்த தலித் அரசியல் (1994, நிறப்பிரிகை, புதுவை) அரசு, சிந்தனை, இலக்கியம் என்பனவற்றின் நுண்வினைகளை அரசியல் (1995, விளிம்பு, கோவை) எனற மூன்று நூல்களும் அடுத்தடுத்து வெளிவந்து தலித் விவாதங்களை நிலை கொண்டுவிடாமல் நகர்த்தின எனலாம்.
 
தலித் அரசியல் ஒரு இயக்கத்தைக் கட்டி எழுப்பி வழி நடத்துவதற்கான ஆவணமாக வெளியிடப்பெற்றது. அச்சிறு வெளியீட்டை முன் வைத்து நடந்த விவாதங்களே தலித் அரசியலைப் பழைய அரசியல் தளத்திலிருந்து மாறுபட்டதாக நிலை நிறுத்தின. இந்த ஆவணத்தை உள்ளடக்கி, மேலும் ஆறு கட்டுரைகள் அடங்கிய ‘தலித் அரசியல’¢ என்னும் நூல் விடியல் வெளியீடாக 1995இல் வெளியிடப்பட்டது. இந்நூலின் மீதான விமரிசன நூல் தலித் விடுதலைக்கான அரசியல் (தலித் ஆதார மையம் 1998) என்ற தலைப்பில் மதுரையிலிருந்து வெளிவந்தது. இந்நூல் உண்டாக்கிய அலைகளை விடவும் ராஜ் கௌதமனின் தலித் பண்பாடு உண்டாக்கிய அதிர்வலைகள் கூடுதலானவை. அதுவரையிலான இலக்கிய, பண்பாட்டு வாதங்கள் மறுபரிசீலனைக் குரியன என முன்மொழிந்த ராஜ் கௌதமன் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் பார்க்கும் விமரிசன முறையை அந்நூலில் முன் வைத்திருந்தார். அவர் எழுதிய கட்டுரைகளோடு களப்பணியில் ஈடுபட்டிருந்த தலித் செயலாளி களின் விவாதங்களும் இடம்பெற்ற அந்நூலுக்கு ரவிக்குமார் ஏழுதிய முன்னுரையும் தலித் இலக்கியம், தலித் விமரிசனம் என்பவற்றின் செல்நெறியை அடையாளப் படுத்தின. ராஜ் கௌதமனும் ரவிக்குமாரும் இந்திய சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினையான ‘தீண்டாமைக்குள்ளாதல்’ என்பதே மையமான பிரச்சினை என்பதை வலியுறுத்திப் பேசியிருந்தனர். எழுது பவர்கயைம் வாசிப்பவர்களையும் ஒருசேர நினைவில் கொண்டு எழுதப்பட்ட ரவிக்குமாரின் முன்னுரை. இப்படிப் பார்த்தால் அறி வுஜீவிகளின் செயல்பாடு, இங்கு இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டியது புரிகிறது. ஒன்று, தலித் மக்களிடையே அறிவுரீதியான அதிகாரத்தைப் பெற்றுத் தரும் விமர்சனச் செயல்பாடு. மற்றது, தனக்கு அதிகாரம் குவிந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் சுய விமரிசனச் செயல்பாடு.(ரவிக்குமார், படிச்சவங்களும் பபூன் காமிக்கும், ப.4)என்று குறிப்பிட்டு எழுத்துத் தளத்தில் சிரிப்பையும், (laughter) சுய எள்ளலையும் (self parody) வலியுறுத்தியது.
 
பதிப்பகங்கள்
தமிழில் தலித் சொல்லாடல்களை உருவாக்குவதில் இம்மூன்று நபர்களின் பங்களிப்புகள் எவ்வுளவு முக்கியமோ அவ்வுளவு முக்கியம் மூன்று நூல் வெளியீட்டாளர்களின் பங்களிப்புகள். விடியல் / விளிம்பு டிரஸ்ட், கோவை, தலித் கலை விழாக்குழு, நெய்வேலி, தலித் சாகித்ய அகாதமி, சென்னை என்ற மூன்று பதிப்பகங்களும் தலித் சொல்லாடல்களுக்கான பல்வேறு பிரதிகளை அச்சிட்டுத் தந்துள்ளன. தலித் என்ற இதழை நடத்துவதற்கு முன்பு நெய்வேலி, தலித் கலை விழாக்குழு ‘தலித், கலை, இலக்கியம், அரசியல்’ (1996) ‘தலித் என்ற தனித்துவம’(1997) என்ற இரண்டு கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டது. (பதிப்பாசிரியர் : ரவிக்குமார்), இவ்விரு கட்டுரைத் தொகுப்புகளும் தலித் சொல்லாடலை அனைத்து விதமான அறிவுத் துறைகளுக்குள்ளும் நுழைத்து விட்டன. சமுதாயவியல், உளவியல், மானுடவியல், இன வரையியல், நாட்டார் வழக்காற்றியல், அரங்கவியல், விளிம்பு நிலைப் பார்வை, உருவவியல், இலக்கணம் எனப்பல தளங்களில் செயல்பட்ட அறிவுத் துறையினரையும் தலித் விவாதங்களுக்குள் இழுத்துவிட்டன.
காந்தியும் காங்கிரசும் தீண்டாத மக்களுக்குச் செய்தது என்ன? (1998) என்ற அம்பேத்கரின் நூலை மொழிபெயர்த்து, வெளியிடுவதற்காகத் தோன்றிய தலித் சாகித்ய அகாதமி, பின்னர் ஜோதிபா பூலே, அயோத்திதாசர் போன்றோரின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவதில் கவனம் செலுத்தியது. கோவை விடியல் பதிப்பகத்தின் வெளியீடுகளை ஒற்றைத் தளத்தில் சுருக்கிக் கூறிவிட முடியாது. 1990களில் தொடங்கி தலித் சொல்லாடல்களின் பயணம் விடியல் வெளியீடுகளின் வழியேதான் நீண்டு கொண்டிருக்கிறது. அ.மார்க்ஸும் ரவிக்குமாரும் ஆசிரியர் குழுவில் இருந்த நிறப்பிரிகையின் பதிப்பு, அம்பேத்கர் சிந்தனைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. பிறமொழி தலித் படைப்புகளின் - குறிப்பாகப் பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் கன்னடத் தலித் இலக்கியங்களை வெளியிட்டு முன்மாதிரிகளை உருவாக்குதல், பின் நவீனத்துவ விமரிசன நூல்கள், புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், கொஞ்சம் தமிழ் தலித் படைப்பிலக்கியங்களின் அச்சாக்கம் என விடியல் பதிப்பகம், இந்தப் பத்தாண்டுகளில் தமிழ் வாசக மூளைக்குள் நுழைத்தவை பலதரமானவை. பல தளங்கள் கொண்டவை. அவைகளுள் அதிகம் ஒலி எழுப்பியவை தலித் விவாதங்களே எனலாம்.
 
தலித் கலை விழாக்குழு, தலித் சாகித்ய அகாடமி, விடியல் வெளியீடு என்ற மூன்றின் பின்னணியிலும் தொகுப்பாளராகவோ, ஒருங்கிணைப் பாளராகவோ, பிரதிகளின் மெய்ப்புத் திருத்து நராகவோ இருந்து அம்முயற்சிகளின் பின்புலத்தில் செயல்பட்ட நபராக இருப்பவர் ரவிக்குமார். தலித் விவாதங்களின் தொடக்க நிலையிலிருந்து இன்று வரை தொடரும் ரவிக்குமாரது செயல் பாடுகளும் சிந்தனைகளும் முழுமையான நூல்களாகத் தமிழில் அச்சிடப்படவில்லை என்ற போதிலும் தமிழக தலித் இயக்கங்களின் சிந்தனையாளன் பிம்பம் ரவிக்குமாரைத் தவிர வேறு ஒரு நபருக்குப் போய்ச்சேராது. 

 இந்தப் பத்து ஆண்டுகளில் தலித் அரசியல் தலைவர்கள் (இரா. தலித் எழில்மலை, கிருஷ்ணசாமி, திருமாவளவன், இளையபெருமாள் போன்றோர்) எடுத்த கூட்டணி அரசியல், விலகல், குழப்ப நிலை, கலகச் செயல்பாடு, சட்டரீதியான நடவடிக்கை, வெகு மக்கள் ஊடகங்களைப் பயன்படுத்துதல் முதலான அனைத்து வித நிலைப்பாடுகளின் பின்னணியிலும் ரவிக்குமாரின் பங்களிப்புகள் உண்டு. பல நேரங்களில் அவர்களோடு நேரடித் தொடர்பு வைத்திருந்த ரவிக்குமார், அவர்களின் தந்திரோபாய உத்திகளையும் நிலைப்பாடுகளுக்கான சித்தாந்த விளக்கங்களையும் தருபவராக இருந்துள்ளார். திராவிட இயக்கச் சார்பு கொண்ட மாணவராக உணரத் தலைப்பட்ட ரவிக்குமாரின் பயணம் தலித்தியத்தை நோக்கி நகர்வதற்கு முன் இடதுசாரி அரசியல், மார்க்சிய லெனினிய அரசியல், நுண் அரசியல் சார்ந்த மக்கள் உரிமைகள் எனப் பல நிலைகளைத் தாண்டி வந்திருக்கிறது. (பார்க்க நேர்காணல் : காலச்சுவடு எண்கள - 30, 31, நாகர்கோவில்) காத்திரமான இப்பங்களிப்புகளோடு நினைவு கூரப்பட வேண்டியவை தலித் ஆதார மையம், சமுதாய சிந்தனை ஆய்வு மையம் (மதுரையில் செயல்படும் இம்மையங்கள் கிறித்துவ தலித்துக்களின் மீதான அக்கறைகளை அதிகம் வெளிப்படுத்துகின்றன) ஆகியவனற்றின் வெளியீடுகளாகும்.

கவிஞர் இந்திரனின் தொகுப்பாக வந்த பிணத்தை எரித்தே வெளிச்சம், தலித் கலை அழகியலையும் தமிழ் அழகியலாக முன்வைத்த அவரது நூல் ஆகியவற்றோடு, கோடாங்கி, மனுசங்க போன்ற இதழ்களின் வெளியீடுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக ஒரு மொழிபெயர்ப்பு நூலைக் குறிப்பிட வேண்டும். மராத்தியில் செயல்பட்ட தலித் இயக்கங்கள், இந்திய சாதி அமைப்பின் மீது செய்த விமர்சனத்தை விளக்கும் ஒரு நீண்ட கட்டுரையுடன், தலித் இலக்கியத்தின் செல் நெறியையும் நிலைபாடு களையும் பேசும் தலித் இலக்கியம் என்ற சிறு நூல். 1992 இல் தாமரைச் செல்வி பதிப்பக வெளியீடாக வந்த நூலை மொழிபெயர்த்தவர் தி.சு. சதாசிவம், தலித் கவிதைகளின் முன் மாதிரியெனக் கொள்ளத்தக்க வகையில் ஆறுகவிதைகளும் அந்நூலில் மொழிபெயர்த்துத் தரப்பட்டிருந்தன. நூலின் ஆசிரியர் அர்ஜுன் டாங்ளே.

தலித் அரசியல் X தலித் இலக்கியம்
தமிழகத்தில் தலித் சொல்லாடல்களை முன் மொழிந்து, பின்புலத்தில் செயல்பட்ட நபர்களும் அவர்களின் எழுத்துப்பிரதிகளும் வெளிப்படுத்திய மிக முக்கியமான அம்சம், கலக நிலைப்பாடு என்பதாகும். படிநிலை வேறு பாடுகளைக் கொண்ட இந்திய சாதி அமைப்புக்கெதிரான குரலாக முன் மொழியப்பட்டது. ஒதுக்குதல் - ஒதுங்குதல் என்னும் மன வினையில் மேல் கட்டமைக்கப்பட்ட சாதிப் படிநிலைகளை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம், தங்களுக்கான வெளிகளை உரிமையாக்குவது, தடை செய்யப் பட்ட வெளிகளுக்குள் அத்துமீறி நுழைவது, உயர்வானது எனப் புனையப்பட்டவைகளைத் தாழ்வானது என எள்ளி நகையாடுவது, தரமற்றவைகள் என ஒதுக்கியவற்றைத் தரமானவை என முன்னிறுத்துவது, உயர் நிலைகளில் உள்ளவை களைக் கவனித்து அவைகளின் பின்னணியில் உள்ள சதிகளை அம்பலப்படுத்திச் சிரிப்பது எனச் செயல் தளங்கள் உருவாக்கப்பட்டன. இச்செயல் தளங்கள் ‘தலித் அரசியலு’க்கும் ‘தலித் இலக்கியத்திற’¢கும் பொதுவானவைகளாக அமைந்து இரண்டையும் உடன் அமர் பயணமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பம் பல நேரங்களில் வெளிப்படுத்தப்பட்டது. அதற்கான சந்திப்புகள், விவாத அரங்குகள், பயிற்சி முகாம்கள், பத்திரிகைகள் வெளியிடல் எனப் பல வினைகள் தொண்ணூறுகளின் முதல் ஐந்து ஆண்டுகளில் பல நகரங்களிலும் கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் தமிழ் தலித் இலக்கியம் தலித் அரசியலோடு இணைந்து பயணிக்கத் தன்னைத் தயார் செய்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
 
தொண்ணூறுகளின் தொடக்க ஆண்டுகளில் சுழற்காற்றென வீசத் தயாரான தலித்கலை இலக்கிய முயற்சிகள், அதன் பிந்திய ஆண்டுகளில் அலைகளற்ற கடற்பரப்பாய் அமைதிகாக்கின்றன. ஆனால், அதற்கு மாறாக அரசியல் தளம் ‘தலித் அரசியலின்’ உத்திகளுக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அதிகாரத்தில் பங்கேற்பது’ என்ற முடிவுடன் பாராளுமன்றக் கட்சி அரசியலில் தலித் இயக்கங்கள் பங்கேற்கத் தொடங்கியுள்ளன. ‘சமரச அரசியல’¢ என்ற விமர்சனங்களை அவை சந்தித்த போதும், தலித் அரசியலின் இருப்பைத் தக்கவைப்பதும் புறமொதுக்க முடியாத சக்திகளாக மாறுவதும் அவைகளின் தவிர்க்க முடியாத கடமையாகிவிட்டன. அதற்காக எதிரிகளென அறியப் பட்டவர்களைக் கூட்டணித் தோழர்களாக்குவது-நட்பு சக்திகளை விமர்சித்து எதிரிகளாக்குவது என்னும் குழப்பங்களை முன்னிறுத்துகின்றன.

 பாராளுமன்ற ஜனநாயத்தில் புனித வாசகங்களாகவும் முகஞ்சுளிக்கும் சொல்லாடல்களாகவும் இருந்த அனைத்தும் குழம்பி நிற்கின்றன. ஒவ்வொரு கட்சியின் பின்னணியில் இருந்த மறைமுகத் தீர்மானங்கள் வெளிச்சத்துக்கு வந்து விவாதிக்கப்படுகின்றன. தலித் இயக்கங்களைச் ‘சாதி அரசியல் சக்திகள்’ என்று விமரிசிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு கட்சிகளும் சாதி அடையாளங்களைத் தாங்கத் தயாராகிவிட்டன. இதனை மறுதலையாக இப்படிச் சொல்லலாம். ‘ ஒவ்வொரு சாதியும் அரசியல் கட்சிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன’. இந்த மாற்றங்கள் தலித் அரசியல் எதிர்பார்த்த மாற்றங்களே. மறைக்கப்படும் சாதிகள் வெளிவர வேண்டும். ஒவ்வொரு இயக்கமும் சாதி இயக்கமாக இருப்பது அம்பலப்பட வேண்டும் என்ற விருப்பங்கள் தலித் அரசியலுக்கு உண்டு. அவை நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. இவை எதையும் கண்டு கொள்ளாமல் - அதனைப் பதிவு செய்யாமல், உடன் பயணிக்காமல் அல்லது விமர்சிக்காமல், மாற்று வழிகளைக் காட்டாமல் தலித் இலக்கியவாதிகள் மலைத்து நிற்பது ஏனென்று தெரியவில்லை. பதிலளிக்க வேண்டியவர்கள் தலித் இலக்கியவாதிகள்தான். இதனை இங்கு விட்டு விட்டு முன்னர் நிறுத்திய விவாதம் ஒன்றை இங்கே தொடரலாம். தமிழின் வட்டார எழுத்துகளோடு தலித் எழுத்துகளைச் சுலபமாக அடையாளப் படுத்த முடியும் என்று சொல்லிவிட்டு நிறுத்திய விவாதம்.

வட்டார எழுத்து X தலித் எழுத்து

தமிழில் 1970களில் தீவிரத்தன்மை பெற்ற வட்டார எழுத்திற்கு இரண்டு நேர்மறையான அம்சங்கள் உண்டு. தரப்படுத்தப்பட்ட - ஒற்றைப் பரிமாணம் கொண்ட - எழுத்து மொழியே படைப்பு இலக்கியத்துக்குரியது என்று நம்பப்பட்டச் சூழலில் வட்டாரஞ் சார்ந்த மக்களின் இருப்பை - மண் மணத்தை - அடையாளப்படுத்திய ஓர் எதிர்ப்பு வடிவத்தின் வெளிப்பாடுகள் வட்டார எழுத்துகள். இது ஒரு நேர்மறையான அம்சம். இன்னொரு அம்சம், வட்டார வாழ்வை எழுத முயன்றது. வட்டார மொழியின் மணத்தைக்கொண்டு வரும் பிரயத்தனத்தின் விளைவாக வட்டார மொழியின் கதைகள் அந்தந்த பிரதேசத்தின் பிரச்சினைகளை அவற்றின் குணாதி சயங்கள் மாறாமல் சொல்ல முயன்றன.

நகர உருவாக்கமும் தொழில்மயமாதலும் சேர்ந்து தமிழ்நாட்டு கிராமங்களில் நிகழ்த்திய மாற்றங்களைப் பதிவு செய்துள்ளன. இந்த மண்வாசனைக் கதைகள். உணவுப் பயிர்கள் பயிரிட்ட விவசாயிகளைப் பணப்பயிர்கள் பயிரிடுபவர்களாக மாற்றிய பஞ்சாலைகளின் வரவுகள், விவசாயக் கூலிகளாக இருந்தவர் களைப் பஞ்சாலைத் தொழிலாளர்களாக - பீடி சுற்றுபவர்களாக - தீப்பெட்டி ஒட்டுபவர்களாக - பட்டாசு சுற்று பவர்களாக மாற்றிய சமூக நிகழ்வுகள், இந்த மண்வாசனை எழுத்துகளில் தான் பதிவாகிக் கிடக்கின்றன. இந்த மாற்றத்தினூடாகக் கிராமத்துப் பெரும் விவசாயிகளும் நிலக்கிழார்களும் பாதிப்புக்குள்ளாயினர். வேளாண்மை சார்ந்த சமூக மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாயின. கிராமத்து மனிதர்கள்இதையும் வட்டார எழுத்துகள் பதிவு செய்துள்ளன. இத்தகைய நேர்மறை அம்சங்களைக் கொண்ட வட்டார எழுத்துகளுக்கு எதிர்மறையான அம்சங்களும் கூட்டங்கூட்டமாக நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். உள்ளன. மண்வாசனை எழுத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சாதி எழுத்துக்களாக மாறிவிட்டன இன்று. சாதிக்குள்ளும் தங்கள் குடும்பத்து மூதாதையர்களின் வாழ்வுக்குள் உலக மனிதனின் வாழ்வே அடங்கியிருப்பதாக நம்பும் நிலைக்குச் சென்று விட்டன. வட்டார எழுத்து, எழுத்தாளனை, அவனது படைப்புலகின் எல்லையை வட்டாரமாகச் சுருக்கி அதற்குள்ளும் அவனது குடும்பத்து மூதாதையர்களின் - வாழ்ந்த பெருமைகளையோ அல்லது வாழ்ந்து கெட்டவைகளையோ பேசுவனவாக மாற்றி விட்ட ஆபத்துக்குத் தமிழில் நிறைய உதாரணங்கள் உண்டு.
ஆர். சண்முக சுந்தரத்தின் எழுத்தில் கொங்கு மண்டலத்தின் பிரச்சினைகள் கொங்கு வேளாளர்களின் பிரச்சினைகளினூடாகத்தான் காட்டப்படுகின்றன.

 அங்கிருந்த மற்றவர்கள் பற்றிய பேச்சுக்கள் குறைவே! கி. ராஜ நாராயணின் கதைகளில் பதிவாகி இருப்பவை, தெலுங்கு பேசும் நாயக்கமார்களின் பூர்வ கதைகளும் நிகழ்கால நிலைமைகளும் தான். மற்றவர்களுக்கு அங்கு இடமில்லை. நாஞ்சில் நாடன், நீல பத்மனாபன் நாவல்கள் அவர்களின் சாதி சார்ந்த சில குடும்பங்களின் கதைகள்தான். தங்கர் பச்சானின் நாவலான ஒன்பது மூபாய் நோட்டுக்குள் இருப்பது அவரது தந்தையின் அறியாமையும் சோகமும்தான். கோணங்கியின் கதை களுக்குள் புதைந்து கிடக்கும் மர்மங்களும் அவரது சாதி சார்ந்த தொன்ம நினைவுகளே.
 
சமகாலத் தன்மையை இழந்துவிட்டு கழிவிரக்க (nostalgic) மனநிலைக்குள் வாழ முயலும் மண்வாசனை எழுத்தாளர்கள் தங்களின் இளம்பருவத்துக் கிராம வாழ்வை நினைத்து அசைபோடுபவர்களாக உள்ளனர். இன்றைய நகர வாழ்க்கை தரும் நெருக்கடிக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள, படைப்பு வெளியாகத் தங்கள் கிராமங்களுக்குள் போய்த் தங்கிக் கொள்கின்றனர். அங்கே தங்கள் உற்றார்உறவினரும் சாதிசனங்களும் சொந்த பந்தங்களும் படும் துயர வாழ்வும் வாழ்ந்திருந்த பெருமித வாழ்வும் புனைவுகளாக மாறிவிடுகின்றன. அப்புனைவுகளை மற்றவர்களை (others) அதிகம் கண்டுகொள்ளவில்லை. கண்டு கொள்ளத் தயாராகவும் இல்லை.ஆனால், இன்றுள்ள கிராமங்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே யிருக்கின்றன. பல கிராமங்கள் இல்லாமல் போய்விட்டன. இருக்கும் வீதிகளிலும் தெருக்களிலும் கோவில்களிலும் அம்பலங்களிலும் சாதீயப் பிளவால் அக்னிக் குஞ்சுகள் பொரித்துத் தெறிக்கின்றன. இதையெல்லாம் பார்க்கக்கூடிய எழுத்து, சுய சாதி நிலமைகளைத் கவனித்த அதே நேரத்தில் பிற சாதியினரின் நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மொத்தத்தில் ‘வட்டார எழுத்து’ என்ற பெயரில் வட்டாரத்தை - வெளியை - முதன்மைப்படுத்தி அதற்குள் அலையும் அனைத்து வித முரண் பாடுகளையும் அவை பேசியிருக்க வேண்டும். ஆனால், அவை அவற்றிலிருந்து விலகி, அவ்வெளியில் உலவிய சில மனிதர்களை - கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்திவிட்டன.
 
இதேபோல் ‘தலித் இலக்கியம’¢ தனது பெயர் தரும் அர்த்தப்படி - மனிதர்களை - கதாபாத்திரங்களை மையப்படுத்தும் வெளிப்பாடாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் விலகி வெளிகள் எழுப்பும் பிரச்சினைகளை மையப்படுத்தி நிற்கின்றன. தலித் இலக்கியம் மையங் கொள்ளும் ‘வெளிகள்’ பரந்த ‘வட்டாரம்’ என்னும் வெளிகள் அல்ல (கரிசல், கொங்கு, குமரி, நெல்லை போல). தலித் இலக்கியம் மையங் கொள்ளும் வெளிகள், அவர்களுக்கு மறுக்கப்படும் ஊர்களாக, கோவில் களாக, சுடுகாடுகளாக, தெருக்களாக, வீடுகளாக உள்ளன. அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட சேரிகளாகவும், குடிசைகளாகவும், வெட்ட வெளிகளாகவும் இருக்கின்றன.
 
கிராமம் சார்ந்த - வட்டாரம் சார்ந்த - மக்களின் பேச்சு மொழி சார்ந்த வெளிப்பாடு என்ற அளவில் தலித் இலக்கியங்கள் மண்வாசனை எழுத்துக்களின் நீட்சிகளே. ஆனால் இலக்கியப் படைப்பு விவாதிக்கும் மையப்பிரச்சினை சார்ந்த நிலையில் வட்டார எழுத்தோடு முரண்பட்டது தலித் இலக்கியம்.இந்த விளக்கங் களும் விவாதங்களும் பெரும் அளவு கோட்பாட்டு நிலையிலான கணிப்புகளே. தமிழில் வந்துள்ள தலித் எழுத்துகள் அனைத்தும் இதற்கு உதாரணங்களாக நிற்கின்றன என்று சொல்வதற்கில்லை. இனி தமிழில் வந்துள்ள தலித் இலக்கியப் பிரதிகளுக்குள் நுழையலாம்.

தலித் எழுத்தாளர்கள்

‘தலித்’ என்பது யார் என்பதற்கு நிகழ்கால அணிச்சேர்க்கை அரசியல் வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கிக் கொள்ளப் பார்க்கிறது. அரசு தரும் பொருளாதாரச் சலுகைகள் கூடச் சில குழுக்களைத் தலித்துகள் எனச் சொல்ல வைக்கின்றன. முடிவற்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இக்கட்டுரை அதற்குள் நுழையாமல் ‘தலித் எழுத்தாளர்கள் எவர்?’ என்பதற்கு, ‘தீண்டாமைக்குட்பட்டும் சாதியில் பிறந்த’ என்பதையே வரையறையாகக் கொள்கிறது. அப்படிக் கொள்வதே சரியானது என்றும் நம்புகிறது.
‘எது தலித் இலக்கியம்?’ என்ற கேள்வியை எழுப்பி, ‘தலித் பிரச்சினைகளை எழுதுவது’ தலித் இலக்கியம் என்று பொதவாந்திர வரையறை உருவாக்கித் தரப்பட்டது. இந்த வரையறைக்கு விரிந்த அர்த்தம் தர விரும்பி யவர்கள் தலித் மொழியில் தலித் கதா பாத்திரங் களை எழுதுவது, போராட்டங்களை தூண்டுவதற்கு எழுதுவது என விரித்துக் கொண்டனர். இதையெல்லாம் தலித் அல்லாதவர்களாலும் எழுது முடியும். அதற்கு தலித்தாகத் தாங்கள் உணர்ந்தால் போதும் என்ற விளக்கங்களும் பலரால் தரப்பட்டதை அறிந்த நிலையிலேயே, ‘தலித் இலக்கியம்’ என்ற சொல் தலித் சாதியில் பிறந்தவர்களால் தலித் உணர்வோடு எழுதப்படும் படைப்புகளையே குறிக்கும் என்று இக்கட்டுரை நம்புகிறது. இந்தியாவில் தீண்டாமையை அனுபவிக்காத ஒரு சாதியில் - தலித் அல்லாத ஒரு சாதியில் பிறந்த ஒருத்தியால் / ஒருவனால் தலித்தாகத் தன்னை உணர்தல் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையையும் அதனோடு சேர்த்துக் கொள்ளலாம்.
 
இந்தியாவில் ஒவ்வொரு மனிதத் தன்னிலைகளும் பிறந்த சாதியினால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்சாதியில் பிறந்தவனுக்கு அடையாளத்தைத் தருவது அவனுக்குக் கீழுள்ள சாதிகள் தான். இடைநிலைச் சாதியினருக்கு மேலும கீழும் உள்ளவர்கள் மூலம் அடையாளங்கள் கிடைக்கின்றன. தான் அடிமையாக இருக்கும் அதே நேரத்தில் ஆண்டையாக இருப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி அடிமைகளாக மட்டுமே இருக்க நேர்ந்த கடைநிலை - தலித் - சாதிகளுக்கு அடையாளங்களைத் தருபவர்கள் மேலே உள்ள சாதியினர். அவர்களால் ஒதுக்கப்படுவதன் - தீண்டாமைக்கு உட்படுத்தப்படுவதன் - நசுக்கப் படுவதன் மூலம் கிடைக்கும் அடையாளமே கடைநிலைச் சாதியினரின் மன நிலையைக் கட்டமைக்கிறது. அந்த மனநிலை, தான் ‘அடிமையாக இருக்க நேர்ந்துள்ளது’ என்பதை உணரும் அதே நேரத்தில் ‘தன்னை அடிமையாக்குபவர்கள்’ மீதான கோபத்தை வெளிப்படுத்தவும் செய்யும். இந்த மனநிலையே தலித் மனநிலை (Dalit conscious). ஒரு தலித் மனநிலைக்குத் தன்னிலை (self) எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் பிறநிலையும் (others). இந்த அடிப்படையில் தான் ‘தலித் மனநிலையைக் கொண்ட தலித் சாதியில் பிறந்த’ என்ற வரையறை முன்னிறுத்தப் படுகிறது. இந்த மனநிலையை அடைவது சாத்தியப்படாத ஒரு தலித் அல்லாத எழுத்தாளர், ‘நான் எழுதியதும் தலித் இலக்கியம்தான்’ என வாதிடுவது தலித்துகளுக்குக் கிடைக்கப் போகும் படைப்பு இலக்கிய வெளிகளையும் அபகரித்துக் கொள்ளும் முயற்சியே ஆகும்.

தமிழில் தலித் சாதிகளில் பிறந்தவர்களென அறியப்பட்டுள்ள பூமணி, சிவகாமி, அறிவழகன், விழி. பா. இதய வேந்தன், பாமா, இமையம், அபிமானி, சோ. தர்மன், பாப்லோ அறிவுக் குயில், தலித் சுப்பையா, தலையாரி, ராஜமுருகபாண்டியன், மதிவண்ணன், ராஜ் கௌதமன், மதியழகன், உஞ்சை ராசன், விடிவௌ¢ளி, சுதாகர் கத்தக், அழகிய பெரியவன் முதலான எழுத்தாளர்களின் படைப்புக்களில் தலித் உணர்வுகள் வெளிப்பட்டுள்ளன; இவர்களில் பலர் தாங்கள் தலித் எழுத்தாளர் என்று சொல்லப்படுவதை விரும்புவதில்லை என்ற போதிலும், இவர்களில் சிலர் கவிதைகளில் செயல்பட்டுள்ளனர். சிலர் நாவல்களில், சிலர் சிறுகதை களில், சிலர் நாடகங்களில் செயல்பட்டுள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கிய வகைகளில் செயல்பட்டவர்களும் உண்டு. அவர்களின் படைப்புகளை மதிப்பிட்டுச் ‘சிறப்பான படைப்புகள்’ இவை யெனச் சொல்லும் வேலையை இக்கட்டுரை தவிர்க்க விரும்பியுள்ளது. அத்தகைய அடையாளங்காட்டுதலுக்குப் போதிய தலித் படைப்புகள் இன்னும் எழுதப்படவில்லை என்றே கூடக் கூறலாம். அத்தோடு, அவ்வகையான அடையாளங்காட்டும் முயற்சி தலித் இலக்கியத்திற்குப் புறம்பான அளவுகோல்களைப் பயன்படுத்திவிடும் அபாயம் கொண்ட தாகவும் கூடும்.

தலித் இலக்கிய வாசகர்கள்

தலித் இலக்கியப் படைப்புகளுக்கள் தன்னிலை வெளிப்படுவதும் பிறநிலையோடு கொள்ளும் முரணும் முக்கியமாவது போல், அப்படைப்பு யாரை வாசகர்களாக முன்னிலைப்படுத்துகிறது என்பதுவும் முக்கியம். தலித் கதையாடலாக இருப்பதில் ‘தன் வரலாறுகள்’ தனியிடம் வகிக்கத் தக்கன என்பவர்கள், இந்த அடிப்படையிலேயே சொல்கின்றனர். ஒரு தன் வரலாறு, எந்தெந்த வகையில் - சூழலில் - இவ்வாறு இருக்க நேர்ந்தது என்பதை வெளிப்படுத்தும் ஒரு எளிய வடிவமாகும். வாசிக்கின்றவனைச் சட்டென உள்ளே இழுத்துக் கொள்வதும் உடன் பயணிக்கச் செய்வதும் தன் வரலாற்றுக் கதையாடலின் சிறப்பம்சங்கள். இதன் காரணமாகவே தன்னிலை உணர்வதையும் தன்நிலை உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட பெண்ணிய எழுத்து, தலித் எழுத்து, விளிம்பு நிலை எழுத்து போன்றவைகளுக்குத் தன்வரலாற்றுக் கதையாடல்கள் (self narratives) ஏற்ற வடிவம் என்கின்றனர். இவ்வகையான எழுத்துக்கள் பெரும்பாலும் நான் / நாங்கள் X நீ / நீங்கள் என்ற எதிர்வுகளுக்குள் கதையாடலை நடத்துகின்றன.
 தன்கதை தன் ஒத்த வாசகனுக்குத் தன்னுணர்வைத் தந்து தட்டி எழுப்பிடும் பணியைச் செய்திடும் என்பதுவும் தன்னை இப்படியாக்கிய பிறநிலை வாசகனைக் குற்றவாளியாக்கி ‘மனம் மாறுதலை வேண்டும்’ என்பதுவும் அதன் பின்னுள்ள தத்துவ அடிப்படை ‘தலித் உணர்வு வெளிப்படல், வாசகனிடம் வேண்டும் மாற்றம்’ என்ற இரு அம்சங்கள் மட்டும் கவனிக்கப்பட்டு தமிழ் தலித் படைப்புகள் இங்கே விளக்கம் பெறுகின்றன.

தலித் கவிதைகள்
தமிழில் தலித் கவிதை வெளிப்பாடுகள் விவாதிக்கப்படும் அளவிற்கு நூலாக்கம் பெற வில்லை. யுத்தம் தொடரும் என்ற தொகுப்பை வெளியிட்டுள்ள தலித் சுப்பையாவின் கவிதைகள் நேரிடையாக எதிர்நிலைகளை நோக்கிய குரல்களை வெளிப்படுத்துகின்றன. ஒருவிதப் போர்ப் பிரகடனத் தன்மை கொண்ட அவரது கவிதைகள் / பாடல்களில் தான், ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்ததாக மனம் கலங்கவில்லை, அப்படிப் பிறந்ததற்கு நான் பொறுப்புமில்லை என்பதை உரத்துப் பேசுவன. சாதியக் கட்டுமானத்தில் மேலுள்ளவர்களுடன் தலித்துகள் நடத்த வேண்டியது. போராட்டங்கள் அல்ல; யுத்தம் என்பதாக அவை கருதுகின்றன.
 
எங்கே எனது முகம் (1990 வீடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிற்காக பஃறுளி பதிப்பகம், சென்னை) என்ற தலித் கவிதைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ள தலையாரியின் கவி வடிவமும் ஏறத்தாழ நாங்கள் / எங்கள் என்ற தன்னிலை வெளிப்பாடுகளாக உள்ளன. ‘குடிசைகள், ஓரவஞ்சனை, நேர்முகத் தேர்வுகள், தகுதி திறமை, தலைகீழ், சொல் நீ தலித்தா, நீங்கள் எதற்கு, நீ ஆடு அல்ல, குலப்பெருமை......’ போன்ற தலைப்புகளில் கவிதையாகியுள்ள தலையாரி ‘சாபன (சாவம்) பஞ்சமர்கள், எங்கே எமது முகம்? விடுதலை ராகம்’ போன்ற கவிதைகளில் தொன்மங்கள், நிகழ்வுகள், பழங்கதைகள், முதலானவற்றை உள்ளடக்கி எதிர்நிலை வாசகனைக் குறுகுறுக்க வைக்கும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.
 
இந்த வரிசையில் அண்மையில் வெளிவந்த ம. மதிவண்ணனின் நெரிந்து தொகுப்பு வேறு ஒரு தளத்திற்குள் நுழைந்துள்ளது. நடுத்தரவர்க்க வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட தலித்துகளின் எண்ணங்களும் நினைவுகளும் இயலாமைகளும் தப்பித்தல்களும் நெரிந்துவாக வெளிவந்துள்ளன. (நெரிந்து, வேறு வேறு, ஆத்தூர் 2000) ம. மதிவண்ணனின் கவிதைகள் தலித், கோடாங்கி, கவிதாசரண், வேறு வேறு போன்ற இதழ்களில் வந்தபோதே கவனித்துப் பேசப்பட்டன. ராஜ முருகு பாண்டியன் (சில தலித் கவிதைகளும்...) ஏற்கெனவே எழுதிய இரண்டு கவிதைத் தொகுதிகளின் விலகலாக தலித் உணர்வுகளைக் கவிதைக்குள் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். இதே வரிசையில் இளந்துறவியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
 
தொண்ணூறுகளின் சிந்தனைத் தளத்தில் ‘தலித்’ சொல்லாடல்களை விவாதிக்கக் களம் அமைத்த நிறப்பிரிகை (இலக்கிய இணைப்புக்கள்), சுபமங்களா, இந்தியா டுடே (ஆண்டு மலர்கள்), கோடாங்கி, தலித் போன்ற இதழ்களில் ‘தலித்’ கவிதைகளை எழுதியவர்களின் பட்டியலில் இடம் பெறும் கவிஞர்களாக மதியழகன், கருத்தம்மா, ப்ரதிபா ஜெயச்சந்திரன், கே. ஏ. குணசேகரன், உஞ்சை ராசன், விழி.பா. இதயவேந்தன், ரவிக்குமார் போன்ற பெயர்களும் இடம் பெறும்.
 
கவிதைகள் பற்றிப் பேசும் அதே வேளையில், கவிதைகளைப் பாடல்களாக மாற்றிய நிகழ்வுகளையும் குறிப்பிட்டாக வேண்டும். 1995இல் டாக்டர் கே.ஏ. குணசேகரன் வெளியிட்ட மனுசங்கடா ஒலிநாடா, தலித் சுப்பையா, ரவிக்குமார், கே.ஏ.குணசேகரன் ஆகியோரது கவிதைகளைப் பாடல்களாக மாற்றின. மேடைகளிலும் பாடப்பட்டன. அதில் ரவிக்குமார் எழுதிய குறிஞ்சாங்குளம் கொலைச் சிந்து என்ற நாட்டார் கவி மரபு உள்வாங்கப்பட்டிருந்தது. கோவில்பட்டிக்கருகில் உள்ள குறிஞ்சாங்குளத்தில் நடந்த சாதீய மோதலில் நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டதை அந்நீண்ட கவிதை விவரித்துள்ளது.

தலித் நாடகங்கள்

நாடகப் பிரதி, மேடையேற்றம் என்ற இரண்டு நிலைகளிலும் செயல்படும் ஒரே தலித் நாடகவியலாளர் டாக்டர். கே.ஏ. குணசேகரன். அவரது நாடகப்பிரதிகளான பலி ஆடுகள், சத்திய சோதனை, பவளக்கொடி போன்றன மேடையேற்றங்கள் கண்ட பின்பு அச்சுக்கு வந்தன. தமிழின் நவீன நாடகப் பிரதிகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு இது. பலரது பிரதிகளும் அச்சு வடிவங்கொண்டு பல வருடங்கள் ஆகியும் மேடையேற்றம் காண்பதில்லை. ஆனால், கே.ஏ. குணசேகரனின் நாடகங்கள, தலித் இயக்கங்கள் சார்ந்த உள்ளடக்கங் களைக் கொண்டவையாக இருந்ததால் மேடையேற்றங்கள் முதலில் கிடைத்தன.
 
பொதுவாகத் தமிழ் நவீன நாடகங்கள் சந்திக்கும் அடையாளச் சிக்கல், கே.ஏ. குணசேகரனின் பிரதிகளுக்கு வேறுவடிவில் உண்டு. பிற நாடக ஆசிரியர்களும் இயக்குநர்களும் பொதுமக்களை எளிதில் சென்றடையும் நாடக வடிவங்களைத் தேர்வு செய்வதா? ஐரோப்பிய நவீனத்துவத்தை வெளிப்படுத்தும் நாடக வடிவங்களைத் தயாரிப்பதா என்ற குழப்பத்தில் சோதனை முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுள்ளனர். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால் கே.ஏ. குணசேகரனின் நாடகங்கள் இணைப்பிரதி (parallel text) உருவாக்கம், அந்நியமாதல் (alienation) தன்மை போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துச் சோதனை முயற்சிகளில் ஆர்வம் கொண்டுள்ளன என்று கூறலாம்.

 தன்னை ஒரு தலித் நாடகக்காராகக் கருதிக் கொள்ளும் அதே நேரத்தில் ‘நவீன நாடகக்காரர்’ என்ற பிம்பமும் தேவை என்பதால் வரும் சிக்கல் சார்ந்தது இது. இந்த இரட்டை நிலைக்குள் தவிப்பது நாடகக்காரரான கே.ஏ. குணசேகரனுக்கு மட்டும் உரியது அல்ல. தலித் சிந்தனைத் தளத்தில் மையக் கருத்தியல்களோடு சிறு பத்திரிகைகளின் நட்புப் போக்குகளான நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவத்தின் வெளிப்பாடுகளோடு இணைந்து செல்வதா.......?’ அல்லது எல்லாவற்றையும் மறுபரிசீலனைக் குட்படுத்தச் சொல்லும் தலித் இலக்கியச் செயல்பாட்டை மட்டும் தனது படைப்பு வெளியாகக் கொள்வதா என்ற குழப்பம் அனைத்துத் தலித் படைப்பாளிகளுக்கும் உரியது.
 
தலித் நாடகங்கள் பற்றிப் பேசும் போது நடிப்பு மற்றும் தயரிப்பு நிலையில் செயல்படும் டாக்டர் ஜீவா பெயரையும், நாடகப் பிரதியாக வார்த்தை மிருகம் எழுதிய ரவிக்குமாரையும் குறிப்பிட வேண்டும். டாக்டர் ஜீவாவின் செயல்பாடுகளில், தான் ஒரு தலித் என்ற உணர்வைவிடவும் மறுக்கப் பட்ட வெளிகளில் இயங்கத் தயாரான பெண் என்ற பிரக்ஞை கூடுதலாக உண்டு. நடிப்பதற்குக் கூடத் தயங்கும் பெண்களிடமிருந்து வித்தியாசப்பட்டு பின்னரங்க வேலைகளான இசை, ஒப்பனை, உடை, அலங்காரம், அரங்க நிர்வாகம், இயக்கம் என அனைத்துத் துறைகளிலும் வெளிப்பட ஆசைப்படும் பெண்ணாக ஜீவாவைக் கருதலாம். கடந்த பத்தாண்டுகளில் ஜீவாவின் செயல்பாடுகள் இந்தக் கோணத்திலேயே வெளிப்பட்டுள்ளன.
 
ரவிக்குமார் எழுதிய வார்த்தை மிருகம் அண்ணாமலை நகர் பத்மினியின் வாக்கு மூலத்தை அதே குரலில் பயன்படுத்தி, இருப்பின்மைக்கும் இருப்பிற்குமான கேள்விகளை எழுப்பிய நாடகம், அ. ராமசாமி இயக்கி நான்கு முறை மேடையேறி உள்ளது. கே.எ. குணசேகரனின் பலி ஆடுகளில் இடம் பெற்ற அம்மபேத்கர் - முல்க்ராஜ் ஆனந்த் இணைப் பிரதியைத் தமிழில் எழுதியதும்கூட ரவிக்குமார் அவர்களே.


டாக்டர் கே.ஏ. குணசேகரன், டாக்டர் மு ஜீவா போன்றவர்களுக்கு உள்ள குழப்பங்களும் அதற்குப் பிந்திய தெளிவும் தலித் படைப்பாளிகளின் திறமான படைப்புகள் வெளிப்பட்டுள்ள சிறுகதை மற்றும் நாவல்களில் வெளிப்படையாகத் தெரிகின்றன. குழப்பத்திற்குப் பிந்தைய தெளிவு, தலித் படைப்பிலக்கியக் கோட்பாடு களோடும் உறவோடும் தெளிவாக இல்லை என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று. தலித் சிந்தனை முன்னிறுத்திய மாற்றுமொழிதல் உத்திகளையோ புதிய விசாரணைகளையோ தங்களுக் குரியதாக ஆக்கிக் கொள்ளாமல் ஒதுங்கிச் செல்லும் மனோபாவமே வெளிப்பட்டு வருகின்றது. ஒதுங்கிக் கொள்ளும் படைப்பாளிகள் தங்களின் பழைய பாட்டையில் ‘ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்’ என்ற யதார்த்தவாதத்தின் மனித நேயப்பாட்டையில் பயணம் செய் கின்றனர். தலித் கலை இலக்கியக் கோட்பாடுகள் மற்றும் கதையாடல் கலவரங்கள் (ruptures) அடங்கி விட்டதாகத் தோன்றுகின்றன.

தலித் புனைகதைகள்

தமிழில் தலித் நாவல்களை எழுதியுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலில் இடம்பெறும் பெயர்கள் எண்ணிக்கையில் குறைவானவை. பூமணி, சிவகாமி, இமையம், பாமா, அறிவழகன், சோ. தர்மன், ஸ்ரீதர கணேசன் ஆகியோர் எழுதியுள்ள நாவல்கள் அனைத்தும் ஒரே தன்மையுள்ள நாவல்களும் அல்ல. தங்கள் வாசகர்களிடம் இந்த நாவல்கள் எழுப்ப விரும்பும் உணர்வுகளும் ஒற்றை நோக்கம் கொண்டனவும் அல்ல. நாவலின் வெளி, நாவலுக்குள் வெளிப்படும் காலம், அதன் பாத்திரங்கள், அக்கதாபாத்திரங்களின் எதிர் நிலைகளாக நிற்கும் பிற கதாபாத்திரங்கள், விசாரணைக்குள்ளாக்கப்படும் கருத்தியல் நிலைப்பாடு என அனைத்து அம்சங்களிலும் தலித் உணர்வோடு எழுதப் பெற்று பிரதிகள் இவர்களின் பிரதிகள் என்று சொல்வதற்கும் இல்லை. சிலர் கதை நிகழ்வுக்கான வெளியைத் தேர்வு செய்ததன் மூலம்நாவல்களை எழுதியவர்களாக அறியப் படுகின்றனர். சில நாவல்கள் தலித் கததாபாத்திரங்களின் வாழ்நிலையை விவரிக்கிறதன் மூலம் அடையாளப் படுகின்றன. சில நாவல்கள் எழுப்பும் விவாதத்திற்காக- சிலர் தேர்வு செய்து கொண்ட கதையால் உத்திக்காக அடையாளம் பெறுகின்றனர்.

சோ. தர்மனின் தூர்வை தலித் சொல்லாடல் தளத்தைத் தொட்டும் விலகியும் நிற்கக்கூடியது. தலித் சாதியில் பிறந்து விட்டதற்கான குற்ற உணர்வோ பெருமித உணர்வோ வெளிப்படுத்தாமல் அப்படி வாழ்வதற்கான காரணிகள் எவையென அடையாளப்படுத்துதலையோ செய்யாமல் மனநினைவுக்குள் சென்று திரும்பும் தலித் கதா பாத்திரங்களைக் கொண்ட நாவல் அது. அதிலிருந்து கொஞ்சம் விலகியது. ஸ்ரீதர கணேசனின் உப்பு வயல், உப்பள வாழ்க்கைக்குள் அல்லல் படும் தொழிலாளர்களாக தலித்துகளை நிறுத்தும் நாவல். இவர்கள் தலித்துகளாக இருப்பதால் ஏற்படும் கூடுதல் துயரங்கள் அல்லது மனநிலைகள் என்ன என்பதனைப் பேசாது, முதலாளிய எதிர் நிலையை - சாதி அடையாளமற்ற முதலாளியைக் காட்டும் நாவல்.
 
பூமணியின் முதலிரண்டு நாவல்களான பிறகுவும் வெக்கையும் வெவ்வேறு காரணங்களால் தலித் நாவல்கள் என அடையாளப்படுத்தப்பட வேண்டியன. ஊர், சேரி எனப் பிளவுண்ட வெளிக்குள் ஊரில் வாழும் பிற சாதியாளர்களுக்குச் சேரியில் வாழும் தலித்துகளின் வேலைகள் எத்தகைய உறவு நிலை கொண்டன என்பதை யதார்த்த பாணியில் வெளிப்படுத்திய நாவல்கள், நீர் இறைப்பதற்கான தோல்பெட்டியோடு, செருப்புத் தைக்கும் தொழிலைப் பரம்பரையாகச் செய்து வருபவர்கள் சக்கிலியர்கள். ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி தனது வாழ்தலுக்£க வேறு வேறு கிராமங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதும் மாறிவரும் வேளைண்மைத் தொழிலில் அவனது தொழில் சார்ந்த தேவைகள் குறைந்து வருவதும் அதனை எதிர்கொள்ளும் போக்கில் அவனது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளுமெனப் பிறகு வடிவங்கொண்டுள்ளது.இப்படியான சேரி வாழ்க்கை தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையெனக் கதாபாத்திரங்கள் நம்பும் தொனிகளே நாவல் முழுவதும் உண்டு. ஊரில் வாழும் பிறசாதி மனிதர்கள் மீது பொறாமையோ கோபமோ கொள்ளாத - எதிர்நிலையாகக் கருதாத சேரி மனிதர்களே பிறகுவில் வரும் சேரி மனிதர்கள்.
 
இதன் மறுதலையாக, தன் வாழ்க்கையில் குறுக்கிட்ட ஊர்மனிதன் ஒருவனை வெட்டிக் கொலை செய்து விட்டுக் காட்டில் கோபக்கனலுடன் அலையும் ஒரு இளைஞனின் சிதிதிரத்தையும் அவனது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மன உணர்வையும் வெளிப்படுத்தும் நாவல் வெக்கை. கொலை செய்யப்பட்டதற்கான காரணங்களும் வெளிப்பட்டிருக்கும் நிலையில் சிறந்த தலித் நாவலாக அறியப்படும் தன்மைகள் கொண்டது வெக்கை. அந்த அம்சங்கள் இல்லாத போதிலும் பூமணியின் பிறகுவிற்கும் ரீதி கதைகளுக்கும் பின்னால் வெக்கையை வாசித்த பொழுது, அந்த இளைஞனின் ஆவேச வேட்கை சேரி சார்ந்த வெக்கையாக அறியப் படுவதைத் தவிர்க்க முடியாது. பூமணியின் பிந்திய நாவல்களான நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால் போன்றன தன்னுணர்வுடன் தலித் வெளியை விலக்கிக் கொண்டு விட்டன.
அறிவழகனின் கழிசடை, கதாபாத்திரங்களின் வாழ்நிலையைச் சித்திரித்துள்ளதன் மூலம் தலித் நாவலாக அறியப்படக்கூடியது. மனித மலத்தை மனிதனே அள்ளுதல் என்கிற அவலம், அதன் நாற்றம் அவனது குடும்ப வெளிகளுக்குள்ளும் மன வெளிக்குள்ளும் நுழையும் சித்திரம் மிக எளிமையாகக் கழிசடையில் இடம் பெற்றுள்ளது. இத்தகைய வாழ்க்கை வாழ நேர்ந்துள்ளதற்கான காரணங்களைப் பற்றியோ, அதற்குள் அமுக்கப்பட்டுள்ளதையோ, உணர்ந்து அதிலிருந்து மீளும் முயற்சிகளை மேற்கொள்ளாத கதாபாத்திரங்களே கழிசடையின் மனிதர்கள்.

சிவகாமியின் ஆனந்தாயி தலித் சொல்லாடலை விடுத்து ஒரு பெண்ணின் துயரக் குரலாக விவாதிக்கப்பட வேண்டிய நாவல். ஆனால் பழையன கழிதல் தலித் சொல்லாடலுக்குள் நுழைந்த புதிய வரவு. மேல் சாதி மனிதர்களைப்போலவே அதிகாரம் சார்ந்து இயங்கும் ஒரு தலித் பெரியவரைப் ‘பழையனவற்றுள்’ ஒன்றாகக் காட்டும் நாவல் அது. மண்வாசனை எழுத்துகள் எழுத்தாளர்கள் - தங்கள் குடும்ப வெளிக்குள் தங்கள் மூதாதையர்களின் மனித நேயத்தையும் வாழ்ந்த பழங்கதைகளையும் பெருமைகளையும் எழுதிக் கொண்டிருந்தபோது சுயசாதி விமர்சனமாக வெளிவந்த நாவல் பழையன கழிதலும். ஜன நாயக வாழ்வு சார்ந்து, கிடைக்கும் உரிமைகளையும் வெளியையும் தலித் மக்கள் அடைய விடாமல் தடுக்கம் சக்திகள் பிற சாதிகளில் மட்டுமல்ல; அந்தந்த சாதிக்குள்ளேயும் இருக்கின்றன, அவை கிடைத்த அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன. புதிய வாழ்வு நெறிகளுக்குள் செல்லாமல் - செல்லவிடாமல் தடுக்கின்றன என்பதை அந்நாவலில் சிவகாமி உரத்துப் பேசியுள்ளார்.
சிவகாமியின் மூன்றாவது நாவல் ‘ப.க.ஆ.கு. என்பது. ‘பழையன கழிதலும், ஆனந்தாயி பற்றிய குறிப்புகளும்’ என்பதே அதன் விரிவு. நான்காவது நாவல் குறுக்கு வெட்டு, இவ்விரண்டும் ‘தலித்’ கதையாடல், பெண்ணியக் கதையாடல் முதலியன தமிழில் விரிவாக விவாதிக்கப்பட்ட பின்பு எழுதப்பட்ட பிரதிகள், ஒரு பிரதியில் ஆசிரியரின் இடம், வாசகனுக்கு இணைப் பிரதியையும் ஆசிரியரே தருதல் என்ற சிந்தனையோடு எழுதப்பட்ட நாவல்களை இவை.
 
சுயசாதி விமர்சனத்தை வேறு ஒரு வகையில் வைத்தவர் இமையம். மேல் - கீழ் சாதி அடுக்குகளில் தன்னை மேலாக வைத்து நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு சாதியும் தங்களை ஆண்டைகளாகவே கருதிக் கொள்கின்றன. தங்களின் அடிமை முகம் மறந்து ஆண்டை முகத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. இந்திய சாதி அமைப்பின் சாதுர்யமான தத்துவ வெளிப்பாடு இது. ஒதுக்கப்பட்டுச் சேரிகளில் வாழும் மனிதர்களும் கூட தனக்குக் கீழ் நிலையில் வாழும் மனிதர்களும் கூட தனக்குக் கீழ் நிலையில் வாழும் இன்னொரு குழுவிடம் ஆண்டான் -அடிமை உறவையே செலுத்துகின்றனர் என்று புரிந்து கொள்ள வைப்பது மட்டுமே இமையத்தின் கோவேறு கழுதைகளின் முதன்மையான நோக்கம் என்று சொல்லிவிட முடியாது. கோவேறு கழுதைகள் என்ற தலைப்பும் அந்தக் கழுதைகளின் சொந்தக்காரியான ஆரோக்கியத்தின் வாழ்வும் இந்தியக் கிராமங்கள் சார்ந்த மனிதர்களின் குறியீடு. வண்ணான் பொதிசுமக்கும் கழுதைகளுக்குத் தெரிந்த வழித்தடம் வண்ணான் துறைக்கும் வண்ணானின் வீட்டுக்குமான தூரம்தான். அதன் பயணம் அவ்விரு எல்லைகளுக்குள்ளும் இடைப்பட்டது. ஏற்றி வைத்த பொதியோடு ஓட்டுவதற்கு ஆளின்றிப் பயணம் செய்யும் கழுதைகள் போய்ச்சேரும் இடம் வண்ணான்துறை அல்லது வீடு. அந்தக் கழுதைகளின் வாழ்வுபோல ஆகிவிட்ட ஆரோக்கியத்தின் வாழ்வு புதிய தடங்களை நினைத்துக்கூடப் பார்க்க மறுத்து அங்கேயே கிடந்து உழல்கிறது. ஆனால், அடுத்த தலை முறை அங்கிருந்து கிளம்பத் தயாராகிவிட்டது. தடங்களுக்குள் - வெளிக்குள்-பிரவேசிக்க ஆரோக்கியத்தின் சந்ததிகள் வெவ்வேறு பயணமுறைகளைத் தேர்வு செய்துவிட்டனர் எனக் காட்டும் நாவல் அது.

யதார்த்த பாணி எழுத்துமுறை சார்ந்த நுட்பம் தலித் எழுத்தாளர்களுக்குக் கைவருவது சாத்தியமில்லை என்பதைத் தனது முதல் நாவலிலேயே மறுத்துக் காட்டிய இமையத்தின் இரண்டாவது நாவலும் யதார்த்தத்தின் ஈரத்தைப் பிழிந்து வெளிப்படும் நாவலே. ஊரிலிருந்து ஒதுக்கப்பட்ட வெளியான சேரிகளைப் போல, நகரங்களில் பகலில் மனித நடமாட்டங்கள் இல்லாத, ஆனால் இரவில் நடமாட்டங்கள் நிரம்பிய வெளி பரத்தையர் சேரிகள். அத்தகைய சேரி ஒன்றின் - பாண்டிச் சேரியிலுள்ள செக்குமேடு - வெளிக்குள் அலையும் பெண்களோடு பயணம் செய்யும் சிறுவனின் வாழ்க்கைத் தெளிவை விசாரணையாகக் கொண்ட நாவல் ஆறுமுகம். தாயின் கற்பு மீது - அவளது பாலியல் தேவையைக் குற்றமெனக் கருதி மகன் பிரிந்து விடும் நவீனத் தொன்மம் தமிழ் நாவல் பரப்பில் புதியது அல்ல. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாளும் ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவனும் எடுத்தாண்ட தொன்மம்தான். தி. ஜானகிராமனின் அலங்காரத்தம்மாளுக்கு அக்னி (வேதம்) அல்லது கங்கை நீர் கழுவாயாக இருக்க முடிகிறது. ஜெயகாந்தனின் தங்கத்திற்கு‘ தானும் மகனும்’ என்ற வெளிக்குள் முன்றாவதாக இன்னொருவனுக்காக வாதாட முடிகிறது. ஆனால், இமையத்தின் தனபாக்கியமோ செய்த குற்றத்திற்குத் தானே தண்டனையை - எல்லாவற்றையும் தன் மகனிடம் சொல்லி முடித்து விட்டுச் செத்துப்போகும் தண்டனையை - ஏற்றுக் கொள்பவளாக இருக்கிறாள். தலித் மக்களுக்குக் குடும்ப உறவு சார்ந்த மதிப்பீடுகள் இல்லை என நம்பும் மேல்சாதி மனோபாவத்திற்குப் பதில் சொல்லும் விதமாக இந்த நாவல் இருக்கிறது. எந்தச் சூழலிலும் தவறுகளைச் செய்துவிடாத ஆறுமுகம் தன் ஊரைச் சேர்ந்த மேல்சாதிப் பெண்ணோடு இருட்டில் அருகருகே இருக்க நேர்ந்தபோதும், அவளிடமிருந்து விலகி நிற்கவே விரும்புகிறான். வசந்தா ஆறுமுகம் சந்திப்புகளில் எந்த நேரமும் பழிவாங்கதலுக்கான சாதி அறிவு சார்ந்த அடிமனம் அவளைப் பற்றிப் படர நினைத்திருக்கலாம். ஆனால் இந்தச் செக்குமேடு, அவளையும் தன் சாதிக்காரியாக்கிவிட்ட உண்மையைப் புரிந்து கொண்டவனாகவே ஆறுமுகம் உலவுகிறான். இமையத்தின் இவ்விரு நாவல்களும் தலித் சொல்லாடல்கள் முன் வைத்த எந்த இலக்கியக் கோட்பாட்டையும் உள்வாங்கிக் கொண்டன அல்ல; என்றாலும் படைப்பு சார்ந்த நுட்பங்கள் என்று தமிழிலும் உலவும் அனைத்தும் கைவரப் பெற்ற ஒரு தலித் படைப்பாளி இமையம் என்பது மறுக்க முடியாத உண்மை.
 
கருக்கு, சங்கதி என்ற பிரதிகளுக்காகக் கவனிக்கப்பட்ட பாமா, தலித் சொல்லாடல்கள் முன் வைத்த மாற்று வடிவம் ஒன்றைத் தமிழில் சோதனை செய்தவர். தலித்துகள் தங்கள் துயரங்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வடிவம் தன் வரலாற்றுக் கதையாடல் என்பது தலித் சொல்லாடல்கள் முன் வைத்த ஒரு நம்பிக்கை நாவல் போன்ற விரிவான களனையும் தர்க்கங்களையும் எதிர்வுகளையும் கட்டமைக்க ஏற்ற வடிவம், தன் வரலாற்று வடிவம் என்று நம்பிய நிலையில்தான் வெளிவந்த தலித் தன் வரலாற்றுக் கதைகள் தமிழில் உதாரணங்கள் காட்டப்பட்டன. சில மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. தமிழில் தன் வரலாற்று வடிவத்தை எழுதிப் பார்த்த ஒரே படைப்பாளி பாமா மட்டுமே! அவரது கருக்கு, சங்கதி என்ற இரண்டுமே ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்துரைக்கும் கதையாடல் வடிவம் கொண்டுள்ளன. ஒரு பெண்ணாகத் தன் துயரங்களை உரைத்துச் செல்லும் பாமாவின் கருக்கிலிருந்து சற்று விலகியது இரண்டாவது நாவல் சங்கதி.

சங்கதியில் சொல்லப்படுவது அவளின் வரலாறுகள் அல்ல. பல பெண்களின் கதைகளை, சங்கதிகளைக் கேட்டுச் சொல்லும் வடிவிலேயே அவளின் குரல் உள்ளது. பெண்களைப் பற்றிய ஆண்களின் மதிப்பீடுகள் தலித் சாதியிலும் பிறசாதியிலும் உள்ள ஆண்களின் மதிப்பீடுகள் - அணுகுமுறைகள் சங்கதிகளாக வெளிவருகின்றன. தன்னை நெருங்கும் பிறசாதி ஆடவனைப் புத்திசாலித்தனமாகப் பழிவாங்கிய பெண்களும் ஏமாற்றிய பெண்களும் ஏமாந்த பென்களும எனப் பல பெண்கள் அதில் வருகின்றனர்.
பாமாவின் எழுத்தில் வெளிப்படும் ஓர் அம்சம் தன்னை ஒரு தலித் என்பதை உணர்த்தும் அம்சமாகும். தனது குரல் ஓர் தலித் பெண்ணின் குரல் என்பதை மறைக்க விரும்பாத குரலை உடையவர் பாமா. அந்த அம்சமே அவரைத் தலித் எழுத்தாளர்களில் கவனிக்கப்படவேண்டியவர் என்பதாக ஆக்கியிருக்கிறது. பாமாவிடம் வெளிப்பட்டுள்ள இப்பலமான அம்சம் தலித் அல்லாத சாதியினரைப் பற்றிய சித்திரங்களில் வெளிப்பட வேண்டிய நக்கல், கோபம், எள்ளல், ஆவேசம் முதலானவற்றில் இன்னும் வெளிப்படுத்தவில்லை. அதனாலேயே இந்தக் கதைகள் தலித்துகளின் துயர வாழ்வை, மிதிபட்டதை, ஒதுக்கப்பட்டதை எடுத்துச் சொல்லி வாசக மனதில் இரக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை எனக் கூறத் தோன்றுகிறது.
 
பல தளங்களில் இயங்கும் கதாபாத்திரங்கள், விரிவான காலம் வெளி சார்ந்த வாய்ப்புகள் உள்ள இலக்கியவகை நாவல். புதுவகையான சிந்தனைகளின் வரவோடு புதிய வடிவங்களின் வரவையும் உள்ளடக்கிக் கொள்ளும், ஏற்றுக் கொள்ளும் வடிவமும் கூட. தமிழிலேயே, எழுத்தின் சிந்தனைத் தள மாற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம் நாவல் வடிவமும் மாற்றங்களை அடைந்துள்ளது. தொடக்ககால ‘சரித்திரங்கள்’ போன்ற தல்ல 1930களில் வந்த கதைகள். அறுபதுகளில் எழுதப்பட்ட கிராமம் சார்ந்த எழுத்து முறை போன்றதல்ல எண்பதுகளில் வந்த நகரம் சார்ந்த எழுத்து முறை என்றாலும் புதிய சிந்தனை வெடிப்பாக வந்த தலித் சொல்லாடல் நாவல் தளத்தில் இன்னும் காத்திரமான வரவு எதையும் கொண்டு வரவில்லை என்பது ஆச்சரியமான உண்மை. முரண்களைக் கோட்பாட்டுகளுக்குள் நிறுத்தி, தீர்வுகளை முன் வைக்கும் சோசலிச யதார்த்தவாதத்தின் நம்பிக்கை நீட்சி இந்த ஆச்சரியமான உண்மையின் பின்னுள்ளது என்ற குறிப்பை மட்டும் இங்கே தந்துவிட்டுச் சிறுகதை களுக்குள் நுழையலாம்.

தலித் சிறுகதைகள்

தலித் நாவல்களின் - நாவலாசிரியர்களிடம் உள்ள சாதிகளற்ற மனிதாபிமானக் கருத்தியல் தளம் ஆரம்ப காலச் சிறுகதைகளில் உண்டு. என்றாலும், சாதிய முரண்களைச் சரியாக அடையாளப்படுத்தும் சிறுகதைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. நாவல்களின் வரவில் தெரிவிக்கும் நம்பிக்கையின்மையைச் சிறுகதைகளைப் பொறுத்த வரையில் வெளிப்படுத்திவிட முடியாது.
 
நீண்டகாலமாகச் சிறுகதைகள் எழுதிவரும் அறிவழகனும் விழி.பா. இதயவேந்தனும் சோ. தர்மனும் இடதுசாரி இயக்கங்களிலிருந்து செயல் பாட்டுத் தளத்தையும் சிந்தனைத் தளத்தையும் உள்வாங்கிக் கொண்டவர்கள். அபிமானி, உஞ்சைராசன், பாப்லோ, அறிவுக் குயில் போன்றவர்களின் தொடக்கம் இடதுசாரிக் கட்சிகளே என்ற போதிலும் தலித் இயக்கங்கள் தனித்த அடையாளமாக வெளிப்பட்ட தொண்ணூறு களில், அங்கிருந்து விலகிக்கொண்ட பார்வையுடன் கதைகள் எழுதத் தலைப்பட்டவர்கள் எனலாம். 
 ஒருதொகுப்புடன் (கிசும்புக்காரன்) எழுதிக் கொண்டிருக்கும் பாமா, தொகுப்பு வெளிவராத சுதாகர் கத்தக், அழகிய பெரியவன் போன்றோர்களின் சிந்தனைத்தளம் தலித் அரசியல் பயணத்தோடு தொடர்புடையது.
அறிவழகனின் முந்தைய தொகுப்புகளில் சாதி அடையாளம் அற்ற மனிதர்கள் இடம் பெற்ற அளவுக்கு சாதிசனம் (1995) தொகுப்பில் இடம்பெறவில்லை. எல்லாக் கதைகளுமே சாதி அடையாளம் கொண்ட கதாபாத்திரங்களாகவே வெளி வந்துள்ளன. என்றாலும், தலித் முகச் சுளிப்புகளோடு ரசிக்கும் படைப்பு மனம் இவற்றில் வெளிப்படுகின்றன. விழி.பா. இதயவேந்தன் கதைகள் பெரும்பாலும் சேரி மாந்தர்களை முன்னிறுத்தும் கதைகளே. 

 தொடக்க நிலையிலேயே தன்னைச் சுற்றி யுள்ளவர்களையும் தன்னையும் பற்றிய கதைகளை எழுதிவரும் விழி.பா. இதய வேந்தனின் கதைகள் வாசகர்களைக் குற்றவாளிக் கூண்டிலோ, எதிர் முகாமிலோ நிறுத்துவதில்லை. அதற்கு மாறாக இரக்கத்தை யாசிக்கும் தொனியைக் கொண்டவை.
கிளுக்கி என்ற தொகுப்பின் மூலம் அறியப்பட்டவரான பாப்லோ அறிவுக் குயில் தொடக்கத்தில் கவிதைகள் எழுதியதன் தொடர்ச்சியாகக் கதைக் களனைத் தேர்வு செய்தவர். கவிதையின் சாயல்கொண்ட நடையையும் அத்துமீறிய பாத்திரங்களின் துணிச்சல் மனோபாவத்தையும் இவரது கதைகள் சில வெளிப்படுத்தியுள்ளன. ‘வீடு’, ‘வலி’, ‘போதை’, ‘கோவம’¢, ‘சூரி’ போன்ற இவரது கதைகள் சாதீய முரணைத் துல்லியமாக நிறுத்திய கதைகள் எனலாம்.
பாமாவின் சிறுகதைகள் அவரது நாவல் வெளிப்டுத்தும் தொனியையே கொண்டுள்ளன. ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் நிகழ்வு அல்லது மனநிலை வெளிப்பாடாக - வரலாறாக உள்ளன. ‘பணக்காரி, அண்ணாச்சி, ஒரு தாத்தாவும் எருமையும், பொன்னுத்தாயி, அந்தக்காலம்’ என்று தலைப்பிட்டு எழுதியுள்ள பாமா, எல்லாக் கதைகளிலும் சாதீய முரணைக் காட்டத் தயங்கவில்லை. அவரது எல்லா வகையான எழுத்திலும் சாதி பேசப்பட வேண்டிய விசயம் என்னும் உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.
 
அபிமானியின் கதைகளும் உஞ்சை ராசனின் கதைகளும் தலித் அல்லாத சாதியினரை அதிக அளவு கதாபாத்திரங்களாக ஆக்கியுள்ளன. அபிமானியின் நோக்காடு தொகுப்பில் உள்ள ‘ருசி, கண்ணீர்ப் பட்டாளங்கள், தண்டம்’, பனைமுனி தொகுப்பில் உள்ள ‘பாறைகள், வெப்பம், வரம்பு, ஆட்டம்’ என அனைத்துக் கதைகளுமே மற்றவர்களைக் கதாபாத்திரங்களாக்க்¤ உள்ளன. உஞ்சை ராசனின் எகிறு தொகுப்பிலும் ‘துணிவு, பழி, ஆத்திரம், அடிமைக்கு அடிமை தனிக்கிராமம், நெருப்பு, மறுப்பு, உறுதி, சொந்தக்கால்’ என அனைத்துக் கதைகளும் சாதீய முரணில் மேல் சாதிக் கதாபாத்திரங்களை முன் நிறுத்தியுள்ளன. இத்தகைய கதைகள் தலித் வாசகனிடம் சாதி வேறுபாடு பற்றிய புரிதலையும் அடிமைத் தளை யைக் களைய வேண்டிய விழிப்புணர்வையும் தலித் அல்லாத சாதியினரிடம் மன மாற்றத்தையும் வேண்டி நிற்பன எனலாம். அபிமானியும் உஞ்சை ராசனும் எதிர்சாதிக் கதாபாத்திரங்களை முன்னிறுத்திச் சாதி வேறுபாடுகளைப் பற்றிய பிரக்ஞையை உண்டு பண்ண முயலும் முயற்சிக்கு மாற்றாக சோ.தர்மனின் கதைகள் தலித் கதாபாத்திரங்களைக் குற்றவாளிகளாக்கி - கிசும்பு செய்தவர்களாக நிறுத்தி ஒத்துப்போகச் சொல்கின்றன. சமாதான சக வாழ்வை முன்னிறுத்தும் கதைக் களன்களை அவரது நசுக்கம், சோகவனம், கதைகளில் வெளிப் படையாகக் காணலாம்.


குறிப்புகள்

1. தலித் என்ற சொல்லிற்கு என்னென்ன பொருள் உண்டு, அச்சொல் எந்தெந்தக் குழுக்களை உள்ளடக்கியது என நீண்ட விவாதங்கள் நடந்துள்ளன. பெரும்பாலும் தலித் அல்லாத எழுத்தாளர்களின் / சிந்தனையாளர்களின் கட்டுரைகளின் தொகுப்பான தலித்தியம் என்ற நூலில் ஆங்காங்கே இவ்விளக்கங்கள் கிடக்க இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
‘தலித் என்பவர் யார் என்ற கேள்விக்குக் கெய்ல் ஓம்வெத், ‘தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், புதிய பௌத்தர்கள், உழைக்கும் மக்கள், நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள், பெண்கள், அரசியல் ரீதியாகவும் மதத்தின் பெயராலும் பொருளாதார ரீதியாகவும் சுரண்டப் படும் அனைவருமே தலித்துகள்தான் என்கிறார். (1996, காவ்யா, சண்முகசுந்தரத்தின் மேற்கோள், பக். 138)
 
ஒரு சாதியைக் குறிக்கிற ஒன்றாக ‘தலித்’ என்கிற சொல்லைச் சுருக்கிவிடக்கூடாது. தலித் என்பது வேதனையின் குறியீடாக இருக்க வேண்டுமே தவிர சுரண்டலின் குறியீடாக ஆகிவிடக்கூடாது. சுரண்டல் மற்றும் கொடுமை, அக்கிரமங்களை எதிர்க்கிற குறியீடாக மலர வேண்டும். அவமானம், பாதுகாப்பின்மை, எதிர்ப்பு ஆகிய பொருள்களைத் ‘தலித்’ என்ற சொல் தரவேண்டும். (சித்தலிங்கையா நேர்காணல்; 1994. நிறப்பிரிகை) தலித் என்ற சொல்லுக்கு, குழியில் விழுந்தவன்; அமுக்கப் பட்டவன்;நசுக்கப்பட்டவன்; மண்ணாக இருப்பவன்; நசுக்கப்பட்ட மண் துகள்கள்; ஒடுக்கப்பட்டவன்; ஒதுக்கப்பட்டவன்; விலக்கப் படுகிறவன்....... இப்படிப் பல அர்த்தங்கள் கொள்ளலாம்.
 
இதுவரை நாம், அரசியல், சமூகம், இலக்கியம் எல்லாவற்றிலுமே சாதியத்தைக் காத்து வைப்பதையே வேலையாகச் செய்து வந்திருக கிறோம். இதுவரை நாம் செய்த பணியினையே ‘தலித்’ எனும் சொல்லுக் குள்ளும் செய்வோம். இதை விடுத்து ‘தலித்’ என்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்களையெல்லாம் குறியீடாக்கும் ஒரு தமிழ்ச் சொல்லை உருவாக்குங்கள். இல்லாத பட்சத்தில் இச்சொல்லைச் சாதிய பாவத்திலிருந்து போராட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். (தமிழ் நாட்டில் அட்டவணைச் சாதிக்குள் ஒன்றான பள்ளர்கள் - தலித்துகள் அல்ல என வாதிட்டுவரும் தே. ஞானசேகரன், டிசம்பர் 1995, மள்ளர் மலர், கோவை).
தலித் விவாதங்கள் தொடங்கிய முதல் இரண்டு ஆண்டு (1991 - 1992)களில் நிகழ் (20 - 23), மேலும் (1), சுபமங்களா (1992 பல இதழ்களில்), ஆய்வு (1992), சிலேட் (1992) போன்ற இதழ்கள் பங்கெடுத்தன. அந்த விவாதத்தில் விழுப்புரம் சீராளன், ப.கிருஷ்ண சாமி, உஞ்சை ராசன், முருகன், மனுஷ்ய புத்திரன், முங்காரி, தமிழவன்,ராஜ்கெதமன், தி.க.சி., கோமல், பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, ஞானி போன்றவர்கள் பங்கெடுத்தனர். இவ்விவாதங்கள் தலித் அரசியல் என்ற ஆவணம் வந்த பின்பு (1994) நின்றுபோனது.

2. இம்மூவரில் ராஜ் கௌதமன், புதுவை அரசுக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிபவர். எந்தப் பத்திரிகை ஆசிரியர் குழுவிலும் எந்த அரசியல் பண்பாட்டு அமைப்புகளிலும் உறுப்பினர் என்ற அளவில் கூட இணைத்துக் கொள்ள விரும்பாத சுதந்திரச் சிந்தனையாளர், நவீன இலக்கிய விமரிசனத் துறையில் செயல்பட்டு வந்த இவர், 90களுக்குப்பின் ‘தலித’ சிந்தனைகளை உள்வாங்கி விமர்சன நூல்களை எழுதினார்.
1. தலித் பண்பாடு, 1993, கௌரி பதிப்பகம், புதுவை.
2. தலித்திய நோக்கில் தமிழ்ப் பண்பாடு, 1994, கௌரி பதிப்பகம், புதுவை,.
3. அறம், அதிகாரம், 1996, விடியல் வெளியீடு, கோவை.
4. பொய் + அபத்தம் - உண்மை, 1995, விளிம்பு டிரஸ்ட், கோவை.

மார்க்ஸும் ரவிக்குமாரும் தொண்ணூறுகளில் தமழ்ச் சிந்தனைகளைத் திசை திருப்பிய நிறப்பிரிகை இதழின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டவர்கள். (இன்னொருவர் பொ. வேல்சாமி) அ. மார்க்ஸ் இயற்பியல் துறைப் பேராசிரியர். ரவிக்குமார் வங்கி ஊழியர், தலித் சிந்தனைகள் அடங்கிய அ.மார்க்ஸின் நூல்கள்.
1. மார்க்சியமும் இலக்கியத்தில் நவீனத்துவமும், 1993, பொன்னி, சென்னை.
2. உடைபடும் மௌனங்கள், 1994, விடியல், கோவை.
3. பின்நவீனத்துவம், இலக்கியம், அரசியல், 1995, விடியல், கோவை.
4. உடைபடும் புனிதங்கள், 1997.

ரவிக்குமார் : ஆதவன் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்வது உண்டு. கதைகள் கவிதைகள், உரையாடல்கள், கட்டுரைகள் எனப் பல மொழி பெயர்ப்புகளைச் செய்துள்ள ரவிக்குமார், கல்வித்துறையாளர்கள், பத்திரிகை யாளர்கள், பிற மொழிகளில் செயல்படுகிறவர்கள் எனப் பலரையும் அடையாளங் கண்டு தலித் சொல்லாடல்களின் தளத்தை விரித்தவர். அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்றுதான். அவரது பதிப்பில் வெளியான நூல்கள் பல. தலித் இதழின் பின்னணியில் இருந்து செயல் படுபவர்.
1. கண்காணிப்பின் அரசியல், 1995, விடியல், கோவை.
2. உரையாடல் தொடர்கிறது, 1995, விடியல், கோவை.
3. தலித் கலை இலக்கியம் அரசியல், (தொ.ஆ), 1996, தலித் கலை விழாக்குழு, நெய்வேலி.
4. பூனா - ஒப்பந்தம் - அம்பேத்கர் (ப.ஆ), 1996, விளிம்பு டிரஸ்ட்.
5. தலித் என்ற தனித்துவம் (தொ.ஆ), 1997, தலித் கலை விழாக்குழு, நெய்வேலி.

இம்மூவரும் அக்காலக்கட்டத்தில் வந்த இதழ்களான கிழக்கு, கோடாங்கி, கவிதா சரண், முன்றில், சுபமங்களா, ஆய்வு ஊடகம், களம் புதிது, நிகழ், சிதைவு, அடையாளம், சிலேட், கேப்பியார் முதலான பலவற்றிலும் தலித் சொல்லாடல்கள் குறித்து எழுதினர். அதில் முன்னிலை வகித்தவர் அ.மார்க்ஸ் எனலாம்.
3. தலித் கலை விழாக்குழு :
,இதன் முதன்மை நோக்கம் நூல் வெளியிடுதல் அல்ல. புதுவையில் தொடங்கப் பட்ட தலித் பண்பாட்டுப் பேரவையின் கிளைகள் ஆங்காங்கே தொடங்கப் பட்டு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் சாத்தியமாகாத நிலையில் நெய்வேலியில் தொடங்கப்பட்ட அமைப்பு இது. நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் கூட்டு முயற்சியில் பணம் திரட்டப் பட்டு ஆண்டு தோறும் கலை விழாக்கள் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஓரிரு ஆண்டுகள் கலை விழாக்களையும் நடத்தியது.


4. தலித் சாகித்ய அகாதமி :
மத்திய அமைச்சராக இருந்த இரா. தலித் எழில் மலையின் அக்கறை சார்ந்த வெளிப்பாடு.


5. விடியல், கோவை :

கோயம்புத்தூரில் இயங்கும் இப்பதிப்பகம், மார்க்சிய லெனினியச் செயலாளி யாக இருந்த சிவஞானம் என்ற தனி நபரின் உழைப்பு சார்ந்து இயங்குகிறது. அரசியல் சிந்தனைகளை மையப்படுத்தும் நூல்களை வெளியிடுவதில் அதிக அக்கறை காட்டுபவர் சிவஞானம். புத்தகத்தில் போட்ட பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தைவிட விடியல் வெளியீடுகள் வாசிக்கப் பட வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும் என விரும்புபவர். தலித் செயல் பாடுகளின் வெளிப்பாடுகளாக நூல்கள் வெளியிட ‘விளிம்பு டிரஸ்ட’¢ நிறுவப் பட்டபோது அதன் பொறுப்பையும் கவனித்தார். தலித் கலை விழாக் குழுவினரின் நூல்களை விற்கும் பொறுப்பைக்கூட விடியல் பதிப்பகமே ஏற்றது. நிறப்பிரிகை, ஊடகம் போன்ற இதழ்களின் விற்பனைகளைக் கூட இப்பதிப்பகம் சில காலம் ஒருங்கிணைத்தது. தலித் இலக்கிய முயற்சிகளில் விடியலின் பங்களிப்பாக மொழி பெயர்ப்பு நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வந்த கன்னட நூல்கள் :
1. புதைந்த காற்று, சிறுகதைகள், 1996.
2. ஊரும் சேரியும், சித்தலிங்கையாவின் தன் வரலாற்று நூல், 1996.
3. கவர்மெண்ட் பிராமணன், அரவிந்த் மாளகத்தி - தன் வரலாற்று நூல், 1998.
4. பசித்தவர்கள், தேவனூரு மகாதேவ, பாவண்ணணின் மொழிபெயர்ப்பான இந்நூல் நேஷனல் புக் டிரஸ்ட்டால் வெளியிடப்பெற்றது.


மேலும் சில குறிப்புகள்


தலித் நாவலாசிரியர்கள் - நாவல்கள்
பூமணி -பிறகு (1972)
வெக்கை (1982)
சிவகாமி -பழையன கழிதலும் (1989)
ஆனந்தாயி (1998)
ப.க.ஆ.கு. (1998)
குறுக்குவெட்டு (1999)

பாமா - கருக்கு (1992)
சங்கதி (1993)
இமையம் -கோவேறு கழுதைகள் (1994)
ஆறுமுகம் (1999)
அறிவழகன் -கழிசடை (1992)
சோ.தர்மன் -தூர்வை (1998)
ஸ்ரீதர் கணேசன் -உப்பு வயல் (1998)
ஆசிரியர்கள் சிறுகதைத் தொகுப்புகள்
விழி.பா.இதயவேந்தன் நந்தனார் தெரு (1991)
வதைபடும் வாழ்வு (1994)
தாய்மண் (1996)
பாமா - கிசும்புக்காரன் (1995)
பாப்லோ அறிவுக்குயில் - கிளுக்கி (1995)
அறிவழகன் -சாதிசனம் (1995)
குற்றவாளிகள்
பயணம்
நினைவுகள்
உஞ்சை ராசன் - எகிறு / 1995
அபிமானி -நோக்காடு (1993)
பனைமுனி (1998)
சோ. தர்மன் -நசுக்கம் (1996)
சோகவனம் (1999)
தலித் கதாபாத்திரங்கள் இடம் பெறும் தமிழ் நாவல்கள்
1. முருகன் ஓர் உழவன், கா.சீ. வேங்கட் ரமணி, 1927.
2. சர்க்கா, பி.எம். ராஜகோபாலான், 1948.
3. தியாக பூமி, கல்கி, 1962.
4. ஊர்வலம், நித்யானந்தன், 1962.
5. இருபது வருஷங்கள், ம.சீ. கல்யாண சுந்தரம், 1965.
6. வீடும் வெளியும், வல்லிக்கண்ணன், 1967.
7. மலரும் சருகும், டி. செல்வராஜ், 1966.
8. கரிசல், பொன்னீலன், 1967.
9. தாகம், கு. சின்னப்ப பாரதி, 1975.
10. குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி, 1977.
11. தோழர், தனுஷ்கோடி, ராமசாமி, 1985.
12. ஜெய ஜெய சங்கர, ஜெயகாந்தன், 1976.
13. புதிய தரிசனங்கள், பொன்லன், 1992.
தலித் அல்லாத படைப்பாளிகளின் இந்நாவல்களில் தலித் நிலைபாடுகள் / சித்திரிப்புகள் உள்ளன. (இப்பட்டியல் இ. முத்தையாவின் தமிழ் நாவல்களில் தலித் நிலைபாடுகள் என்பதிலிருந்து உருவாக்கப் பட்டது.)
---------------------------------------------------------------------------

=================================================================================
தமிழினி 2000 என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை. காலச்சுவடு அக்கருத்தரங்கக்கட்டுரைகளை நூலாக வெளியிட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்

சி சு.செல்லப்பாவைச் சந்தித்த வேளைகள்