சமூக இடைவெளிகள்
இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரேயொரு வேற்றுமை நிகழ்வெளி மட்டும் தான். முதல் நிகழ்ச்சி நடந்தது சென்னையின் நகரப் பேருந்து நிலையம் ஒன்றில். இன்னொன்று திருநெல்வேலி பேருந்து நிலையத்தில். நிகழ்ந்த வெளிகள் பேருந்து நிலையங்கள் என்பதால், பேருந்து நிலையத்தைக் களனாக –நிகழ்வெளியாகக் கொண்ட ஓரங்க நாடகத்தின் இரு வேறு நிகழ்வுகள் என்று சொல்லலாம். இரண்டிற்கும் நான் பார்வையாளன். நிகழ்ச்சிகள் நாடகமாவதற்குக் காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றுக்கும் இடையே ஒருவிதப் பிணைப்பும், முரண் வெளிப்பாடும் மட்டும் போதாது, அம்முரண்பாட்டிற்கு ஒரு முடிவும் அமைய வேண்டும். அத்தோடு பார்வையாளர்களும் வேண்டும். இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரு மாத கால இடைவெளியில் நடந்தன. முதலில் சென்னை நிகழ்வு. திருவான்மியூர் பேருந்து நிலையம்; இரவு பத்து மணிக்குச் சற்று முன்னதாகவே பேருந்துகள் எல்லாம் பணிமனைக்குள் சென்று அடைந்து கொண்டிருந்தன. பேருந்து நிலையத்திலிருந்து நகரத்தின் மையமான பகுதிகளுக்குச் செல்லும் இரவுப் பேருந்துகள் பத்தரை மணிக்கு மேல் கிளம்பும் என்பது வழக்கமாகச் செல்லும் பயணிகளுக்குத் தெரிந்திருந்ததால் பொறுமையாகக...