பரபரப்பின் கணங்களும் விளைவுகளும்

தமிழின் நிகழ்கால இலக்கியத்தளத்திலும் சிந்தனைத்தளத்திலும் செயல்படும் பத்து எழுத்தாளர்களின் பத்து நூல்களை வெளியிடும் வெளியீட்டு நிகழ்ச்சியை உயிர்மைப் பதிப்பகம் நடத்தியது. சென்னை ஓரியண்ட் லாங்மேன் புத்தகக்கடையின் பின்புறம் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் -07-01-06, மாலை 6 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுக்கு, தமிழ் நாட்டின் மதிப்புமிக்க அரசியல் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு தலைமை தாங்கினார். அவர் ஒவ்வொரு நூலாக வெளியிடுவதும் அதைப் பெற்றுத் கொண்டவர், பதினைந்து நிமிடத்திற்குள் நூலை அறிமுகப்படுத்தியோ, விமரிசனம் செய்தோ பேசி முடிப்பதும் என்பது பதிப்பகத்தாரின் ஏற்பாடு.

ஏற்பாட்டின்படி முதல் நான்கு நூல்கள் அ.ராமசாமியின் பிம்பங்கள் அடையாளங்கள், மு. சுயம்புலிங்கத்தின் நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள், எம். யுவனின் கைமறதியாய் வைத்த நாள், எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு என்ற நான்கு நூல்களும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதனைப் பெற்றுக் கொண்ட பத்திரிகையாளர் எஸ் விஸ்வநாதன் (ப்ரண்ட் லைன்), சுகுமாரன், பாவண்ணன், பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் பேசி முடித்தனர். நான்காவது நூலின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் மேடையிலிருந்து இறங்க முயன்ற போது கூட்டத்தின் பின்வரிசையிலிருந்து அந்தக் குரல் வந்தது.

திரும்பிப் பார்த்த போது தமிழில் பெண் அடையாளங்களை முன்னிறுத்திக் கவிதைகள் எழுதும் கிருஷாங்கினி, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, போன்றவர்களுடன் வேறு சில பெண்களும் சில ஆண்களும் எழுந்து நின்று கொண்டிருந்தனர். அவர்களோடு தனது கவிதைத் தொகுப்புக்கு முலைகள் எனத் தலைப்பிட்டதன் மூலமாகப் பலத்த எதிர்ப்பையும் பரபரப்பான கவனத்தையும் பெற்ற கவி குட்டி ரேவதியும் உடன் இருந்தார்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், குட்டி ரேவதியின் பெயரைச் சண்டக் கோழி படத்தில் கேவலப்படுத்தும் விதத்தில் பயன்படுத்தியது ஏன்? என்றும், தொடர்ந்து திரைத்துறையினரும் வெகுமக்களுக்கு எழுது வதாகச் சொல்லும் எழுத்தாளர்களும், மறைமுகமாகச் சிறுபத்திரிகைகளில் எழுதும் ஆண்களும் பெண் கவிகளைத் திட்டமிட்டுக் கேவலப்படுத்த முனைகின்றனர் என்றும்,  எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த வசனங்களும் அத்தகைய நோக்கம் கொண்டதே என்று கோபத்துடன் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பதில் சொல்லியாக வேண்டிய நெருக்கடிக்குள் வந்தபோது  எஸ்.ராம கிருஷ்ணன்:

இந்த உரையாடலை நான் எழுதவில்லை; தமிழ் சினிமாக்களில் பேசப்படும் எல்லா உரையாடல்களும் அந்தப் படத்தின் வசனகர்த்தா எழுதியன என்று கருத வேண்டியதில்லை; எழுதிக் கொடுத்த வசனத்தை இயக்குநரும், நடிக்கும் நடிகரும், பின்னணிக்குரல் கொடுக்கும் நபர்களும் கூட மாற்றிவிட வாய்ப்பு உண்டு. எழுதாத வசனங்களைச் சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்புக்கள் உண்டு. இந்த உரையாடல் அப்படி நிகழ்ந்த ஒன்றின் விளைவு. இதற்கு நான் பொறுப்பில்லை. அத்துடன் அந்த வசனம் உள் நோக்கத்துடன் எழுதப்படவும் இல்லை.

என்று சொன்னார். இந்தப் பதில் போதுமானதாக இல்லை என்றான போது [இப்படிச் சொல்வதில் பாதி தான் உண்மையாக இருக்க முடியும். அவர் எழுதவில்லை என்பது உண்மை என்றால், அவ்வசனத்திற்கு உள்நோக்கம் இல்லை என்பது இவருக்கு எப்படித் தெரியும். எழுதியவருக்குத் தானே தெரியும்] அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. ஜெயலலிதாவின் பெயரையோ, சோனியா காந்தியின் பெயரையோ இப்படிப் பயன்படுத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கிடையில் கூட்டத்தை ஏற்பாடு செய்த உயிர்மை பதிப்பகத்திற்கு மொத்த நிகழ்வும் வேறெங்கோ கடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வு தோன்ற, அதனை அங்கேயே நிறுத்திவிட முயன்றனர். அடுத்து வெளியிட  உள்ள ஜெயமோகனின் ஆழ்நதியைத் தேடி நூலைப் பெற்றுக் கொள்ள யுவன் சந்திரசேகரை அழைத்தனர். யுவன் மேடையேறிய பின்னும் பரபரப்பு அடங்காத நிலையில், கூட்டத்தை நடத்துவதற்கு ஏதுவாக இவர்கள் வெளியேற அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்றார் யுவன். அப்படிச் சொன்னது அடுத்த பொறியைக் கிளப்பி விட்டது. ரமேஷ்: பிரேம் என்ற இரட்டையர்களில் ஒருவரான ரமேஷ் மேடையேறி, நான் திலகவதி ஏற்பாடு செய்த கூட்டத்திலேயே இது பற்றிப் பேசினேன்; இதுவரை ராமகிருஷ்ணன் பதில் சொல்லவில்லை; இது கண்டிக்கத்தக்கது; குட்டி ரேவதியின் பெயரை எழுதியதால் தப்பித்தார்; மாலதி மைத்ரியின் பெயர் இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருந்தால் இந்நேரம் இரண்டு தலை உருண்டிருக்கும் என்றார்.

கூட்டம் பரபரப்பைத் தாண்டிப் பதற்றமானது. ஆனால் அந்தப் பெருங்கூச்சலுக்குப் பின் கூட்டம் அமைதியானது. எதிர்ப்புத் தெரிவித்த பெண்களும் அவர்களோடு வந்திருந்த ஆண்களும் அரங்கை விட்டு வெறியேற, வெளியீட்டு விழா தொடர்ந்தது. ஆனால் ஒரு மணிநேரம் கழித்து கு. அழகிரி சாமியின் கடிதங்கள் என்ற நூலைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் பிரபஞ்சன் சின்னதான சீனி வெடியை வெடித்தார்.

குட்டி ரேவதி உள்ளிட்ட பெண்களின் எதிர்ப்புணர்வுகளுடன் ஒன்றுபடுகிறேன்; அதனால் இங்கு பேசப் போவதில்லை; கூட்டத்தை விட்டு வெளியேறுகிறேன் என்றார். கூட்டத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த உயிர்மைப் பதிப்பகத்தைச் சார்ந்த லல்லி நன்றியுடன் வழி அனுப்பி வைத்தார்.

இதற்கிடையில் புக் பாயிண்ட்டின் கீழ் தளத்தில் நடந்தனவற்றை நான் முழுமையாகப் பார்க்கவில்லை. குட்டி ரேவதியின் எதிர்ப்பின் நியாயங்களுக்குத் தார்மீக ஆதரவு தெரிவிக்கலாம் என்று கீழே போன போது கவி சுகிர்தராணி உரையாற்றிக் கொண்டிருந்தார். தொடர்ந்து பெண்கவிகளுக்கு விடப்படும் சவால்கள் பற்றி அவர் உரை இருந்தது. தொடர்ந்து அங்கு சிறிது நேரம் நின்றிருந்த போது அச்சு ஊடகக்காரர்கள் வந்தார்கள்; செய்திகளைச் சேகரித்துச் சென்றார்கள். அப்பொழுது தான் தெரிந்தது, எஸ். ராமகிருஷணன் அவரது நண்பர்களுடன் வெளியேறிய போது, எதிர்ப்புத் தெரிவித்தவர்களால் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறார்; கோபப்பட்டிருக்கிறார்; குட்டி ரேவதி ஒரு பெயர். அதைச் சினிமாவில் பயன்படுத்தினால் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார். சட்டப்படி செய்ய முடிந்ததைச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப் பதற்றத்துடன் வெளியேறி இருக்கிறார்.

பரபரப்பைத் தூண்டிய வசனம்:

சண்டக்கோழி படம் திரைக்கு வந்து ஒரு மாதத்திற்குப் பின் இந்த நிகழ்வு நடந்தது. எட்டு பெண்களும் அவர்களோடு பின்னின்ற பத்துக்கும் குறைவான ஆண்களும் முன்னின்று நடத்திக் காட்டிய அந்த எதிர்ப்பு சிறிய நிகழ்வு தான். எதிர்ப்பின் நியாயங்களைப் பார்ப்பதற்கு  முன்னால் அந்த உரையாடலைக் காணலாம்:

அண்ணனுக்கும் தங்கைக்கும் நடப்பதாக அமைந்துள்ள இந்த உரையாடல்:

“ ஏய் ட்யூசன்.. ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லிட்டு சினிமாவுக்கு தான போயிட்டு வர்ற?”

 “சத்தியமா நான் ட்யூசன்லேர்ந்து தான் வர்றேன். இவ்ளோ நேரம் நானும் குட்டி ரேவதியும் அங்கதான் இருந்தோம். நீ வேணும்னா குட்டி ரேவதிக்கு போன் பண்ணி கேளு”

“ குட்டி ரேவதியா? அவ எல்லாம் உனக்கு ஒரு ஃப்ரெண்டு? அவ மூஞ்சியும் ஆளும்… கையில் துப்பட்டாவ எடுத்து சுத்திகிட்டு இருக்கா.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம? “

[சண்டகோழி படத்தின் இயக்கம்: லிங்குசாமி, வசனம் எஸ்.ராமகிருஷ்ண்ன். இவர் சிறுபத்திரிக்கைகளில் கதைகள் எழுதத் தொடங்கி ஆனந்த விகடன் வழியாகச் சினிமாவிற்குள் நுழைந்துள்ள எழுத்தாளர் என்பது தெரிந்த ஒன்று]

இந்த உரையாடலை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதவில்லை என்று அன்று மேடையில் சொன்னார். பிறகு படத்தின் இயக்குநர் லிங்குசாமியும் அந்த உரையாடலை ராமகிருஷ்ணன் எழுதவில்லை; நான் தான் எழுதினேன். சாதாரணப் பெயர் என்ற நிலையில் தான் அது உபயோகிக்கப்பட்டுள்ளது என்று சொல்லிவிட்டார். தான் எழுதவில்லை என்று சொன்ன ராம கிருஷ்ணனும் கூட உள்நோக்கம் எதுவும் இல்லை என்று தான் சொன்னார்.

குட்டி ரேவதி என்பது ஒரு பொதுவான பெயர். அதைப் பயன்படுத்துவது கிரிமினல் குற்றமா? என்பது வசனம் எழுதிய ராமகிருஷ்ணனின் வாதம். இயக்குநர் லிங்குசாமியின் வாதமும் அதுதான். ஜெயலலிதா ஒரு பொதுவான பெயர்தான்; சோனியாகாந்தி ஒரு பொதுவான பெயர் தான். அந்தப் பெயரை இப்படிப் பயன்படுத்த முடியுமா..? என்பது பெண் கவிகளின் வாதம்.

பொதுவான பெயர்களைப் பொதுவாகப் பயன்படுத்தினால் பிரச்சினைகள் எதுவும் வரப்போவதில்லை. பொதுவான நிலையில் -புதிய அடையாளங்களை உருவாக்கிக் கொள்ளும் நிலையில் - அதிகாரத்தையோ ஒளிவட்டத்தையோ தாங்கிக் கொள்ளும் நிலையில் - தான் உச்சரிக்கும்போது எச்சரிக்கையோடு உச்சரிக்க வேண்டியவைகளாக ஆகி விடுகின்றன. 

சிறப்புப் பெயர்கள் அல்லது ஒளிவட்டத்தைத் தாங்கும் பெயர்கள் அல்லது விசிறிகளைக் கவர்ந்த புனைபெயர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுவதையோ சாதாரணமாக மனிதர்களின் குணங்கள் கொண்டதாகச் சித்திரிக்கப்படுவதையோ அந்தப் பெயர்களுக்கு உரியவர்கள் விரும்புவதில்லை. அவர்களின் தொண்டர்களும், விசிறிகளும், அடியவர்களும் கூட விரும்புவதில்லை.பட்டங்கள் அல்லது புனைபெயர்கள் தரும் போதையில் மயங்கும் இவர்கள் சொந்தப் பெயர்களையே மறந்து கூட விடுவதுண்டு. சம்பளம் போன்ற பணவரவின் போது மட்டும் சொந்தப் பெயரைப் பயன்படுத்துவார்கள் என்றே நினைக்கிறேன்.

குட்டி ரேவதி என்பது ஒரு சிறப்புப் பெயர்; உடல் அரசியலை (Body Politics) முன் நிறுத்தும் பெண்ணியக் கவியின் பெயர்; அதனால் தான் போலியாக ஒழுக்கவியல் பேசும் ஆண் எழுத்தாளர்களும் சினிமாக்காரர்களும் அந்தப் பெயரைக் கேவலப்படுத்தும் விதமாகக் கொச்சைப்படுத்தி வருகின்றனர் என்று கருதலாம். அப்படியானதொரு உள்நோக்கம் இருக்கும் நிலையில் அந்தப் போக்கு எதிர்க்கப்பட வேண்டியது; கண்டிக்கத்தக்கது. அந்த அடிப்படையில் தான் அன்று எதிர்ப்புக் காட்டப்பட்டதாக நானும் கருதினேன். அதனால் தான் நான் கூடக் கூட்டத்தை விட்டுக் கீழே இறங்கி வந்து குட்டி ரேவதியிடம், உங்கள் எதிர்ப்பும் கண்டனமும் நியாயமானது; ராமகிருஷ்ணனின் வசனங்களும் அந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் விதமும் - சாதி உணர்வை கேள்விக்குட்படுத்தாமல், ஆதிக்கசாதி உணர்வுகளை பெருமைப்படத் தக்கதாகவும், வன்முறையை ஆராதிக்கும் தொனியுடன் வெளிப் பட்டிருக்கும் விதம் - மொத்தமாகக் கண்டனத்திற்குரியது; அதனை எனது விமரிசனத்தில் [ லீனா மணிமேகலையை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் திரை இதழில்] எழுதியிருக்கிறேன் என்று சொன்னேன். அவரும் நன்றி என்று சொன்னார்.

 அடுத்த நாள் மதியத்திற்கெல்லாம் வந்து விட்ட தமிழ் முரசும் அடுத்து வந்த ஜூனியர் விகடனும் (15 - 01- 06) என் நம்பிக்கைகளையும் பெண் கவிகளின் எதிர்ப்பையும் அர்த்தமற்றவைகளாக ஆக்கியதுடன் அவர்களை வெறும் பரபரப்புக்கு ஆசைப் படுகிறவர்களாகக் காட்டிவிட்டன. அப்படிக் காட்டுவதற்கு அவர்களே கூடக் காரணமாகி விட்டனர் என்றே தோன்றுகிறது.

தமிழ்நாட்டின் மகா நிகழ்வுகளோடு ஒப்பிடுகையில் இந்த நிகழ்வு முன்பே சொன்னது போல் மிகச் சிறிய நிகழ்வு தான். ஆனால் தமிழ் நாட்டிற்குப் பரபரப்பை அளிக்க என்றே அவதாரம் எடுத்துள்ள மாலைத் தினசரி தமிழ் முரசின் கைங்கரியத்தில் அச்சிறிய நிகழ்வு, மகாப் பெரிய நிகழ்வாக ஆகிவிட்டது. தமிழ் முரசு என்ற பெயரை மக்கள் கூட்டத்திற்கு அறிமுகப் படுத்திட விட வேண்டும் என்பதற்காக அந்தத் தினசரி கடைப்பிடிக்கும் உத்திகளும் எழுதும் முறையும் பரபரப்பின் உச்சமாகவும், இதழியல் துறையின் அறங்களை மறந்ததாகவும் இருக்கிறது.

சண்டக்கோழி படத்தில் எழுதப்பட்ட வசனத்தினால் உண்டாகும் ஆபத்தான விளைவுகளைவிட இந்தத் தினசரியில் செய்தி தரப்பட்டுள்ள விதம் தான் இந்தக்கவிகளுக்கு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. குட்டி ரேவதியைப் பற்றிய வசனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தை விடக் கூடுதல் வலுவுடன் தமிழ் முரசு பெண் கவிகளைச் சித்திரித்த விதமும் கையாளப்பட்ட மொழியும் கண்டிக்கத் தக்கது. தங்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதும் ஒரு குழு உணர்ச்சி வசப்பட நிலையில் சொல்லும் வார்த்தைகள் அத்தனையும் வாசகப்பரப்புக்குத் தரப்பட வேண்டியதில்லை என்பது இதழியலின் அரிச்சுவடிகளில் ஒன்று. ஜூனியர் விகடன் நிருபரிடம் பேசிய குட்டி ரேவதி,

லிங்குசாமியும், ராமகிருஷ்ணனும் என்னைக் கேவலப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே அப்படியொரு காட்சியை வைத்திருக்கிறார்கள். இதை நான் அடித்துச் சொல்வேன்

என்று கவிஞராக ஆவேசப்பட்டவர், நான் சுய விளம்பரத்திற்காக அவர்களை எதிர்க்கவில்லை. சாதாரண ‘குட்டி ரேவதி’ என்ற பெயருடைய ஒரு பெண்ணாகத் தான் என் வேதனையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்று சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதுவும் கூட ஒருவிதத்தில் சரிதான். ஒரு பெண்ணியக் கவியாகவும் செயலாளியாகவும் அந்த வசனத்திற்கும் அந்த வசனம் இடம்பெறும் காட்சிக்கு வருத்தப்பட ஒன்றும் இல்லை தான். திரையரங்கில் சாதாரணமாக இளைஞர்கள் செய்யும் துடிப்பான செயல்களுக்கு எந்தவிதத்திலும் குறையாத செயல்களைச் செய்யும் பெண்களைக் காட்டியிருக்கும் - ஆரவாரம் செய்வது, விசிலடிப்பது, இதுவரை ஆண்கள் மட்டுமே உபயோகிப்பதாகத் திரைப்படங்களில் காட்டிய வசனங்களைப் பேசுபவளாகக் கதாநாயகியைக் காட்டியிருக்கும் - அந்தக் காட்சிக்காக லிங்குசாமியிடமும் அந்த வசனங்களை அவரே எழுதியிருந்தால் ராமகிருஷ்ணனிடம் கைகுலுக்கிக் கொள்ளத் தான் வேண்டும்.

பெண்ணியக் கவியாக செயலாளியாக எதிர்க்க முடியாத நிலையில் சாதாரணப் பெண்ணாக அந்தக் கதாபாத்திரத்தோடு தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொள்வது எப்படிச் சாத்தியம். வேதனைப் பட வேண்டிய அவசியம் என்ன? எல்லாமே கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பரபரப்பின் கணங்களுக்குள் பத்திரிக்கைகள் மட்டுமே இயக்குகின்றன என்று நினைப்பது தவறுதான் போலும். படைப்பாளிகளும் செயலாளிகளும் கூட அதிலிருந்து தப்பிக்க முயல்வதாகத் தெரியவில்லை.

இனி நிகழ்வு சார்ந்து என்னுள் எழுந்த கேள்விகளையும் கேட்டுவிடுகிறேன்:

1. சண்டக்கோழி படம் வந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் - வசனம் எழுதிய எஸ்.ராமகிருஷ்ணனும் இயக்குநர் லிங்குசாமியும் சென்னைவாசிகளாகவே இருக்கும் நிலையில் - எதிர்ப்புத் தெரிவிக்க உயிர்மை நூல் வெளியீட்டு நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்தது ஏன்? உயிர்மை அன்று வெளியிட்ட பத்து நூல்களில் எஸ். ராமகிருஷ்ணனின் ஒரு நூலும் இருந்தது என்பதைத் தாண்டி உயிர்மை பதிப்பகத்திற்கு அதில் வேறு பங்கு எதுவும் இல்ரையே…? உயிர்மையின் புத்தக வெளியீட்டு நிகழ்வைச் சீர்குலைத்தது எந்த வகையில் சரியானது?

2. ரமேஷ் (ப்ரேம்), எதிர்ப்பைத் தெரிவிக்கும் வடிவம் ‘தலைகளை உருளக் செய்வது தான்’ என்றால், பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணுக்காகவும் அதைப் பயன்படுத்தலாமே! மாலதி மைத்ரிக்காக மட்டும் தான் பயன்படுத்துவார் என்றால் என்ன அர்த்தம்? மாலதிக்கு நேரும் மான அவமானங்களுக்குப் பொறுப்பேற்கும் ஆண் அவர் என்பது தானே? ஆணின் பாதுகாப்பில் - அவனது உடைமைப் பொருளாக இருக்கும் விதமாகச் சித்தரிக்கப்படும் கருத்து மாலதி மைத்ரி என்ற பெண்ணியக் கவிக்கு உடன்பாடானது தானா…..? உடனடியாக அவர் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். எனக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

3. மதிப்பிற்குரிய எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களே! குட்டி ரேவதியின் மன உணர்வோடு ஒன்றிய உங்கள் மனவுணர்வில் குறை எதுவுமில்லை. ஆனால் வெளிப்படுத்திய விதம்தான் பொருத்தமானதாக இல்லை. எதிர்ப்புக் காட்டியவர்களோடு உடன்பட விரும்பியிருந்தால் உடனடியாக நீங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே, நானும் உடன்படுகிறேன்; வெளியேறுகிறேன்‘ என்று சொல்லிவிட்டு வெறியேறி இருக்கலாம். நான்கு நூல்களை வெளியிடும் வரை காத்திருந்துவிட்டு, கு. அழகிரிசாமி கடிதங்கள் [கிராவுக்கு எழுதியது] நூலை பெற்றுக் கொண்டு பேச அழைக்கப்பட்டிருந்த நீங்கள், மேடையில் ஏறி நூலையும் வாங்கிக் கொண்டு புகைப்படம் எல்லாம் எடுத்து முடித்தவுடன் ஒலி பெருக்கியின் முன்னால் வந்து,

‘’ குட்டி ரேவதி உள்ளிட்ட பெண்களின் எதிர்ப்புணர்வுகளுடன் ஒன்று படுகிறேன்; அதனால் இங்கு பேசப் போவதில்லை; கூட்டத்தை விட்டு வெளியேறுகிறேன். என்று வெளியேறுவது பொறுப்புடைய செயல் தானா..? உங்களை அழைத்த மனுஷ்யபுத்திரன் மட்டுமே வருத்தப்பட்டிருப்பார் என்று நினைக்க வேண்டியதில்லை. கு. அழகிரிசாமியின் வாசகர்களாகப் பலரும் வருத்தப்பட்டிருப்பார்கள். வெளியிடப்பட்ட பத்து நூல்களில் நீங்கள் பெற்றுக் கொண்ட நூலின் ஆசிரியராகிய கு.அழகிரிசாமி மட்டும் தான் அன்று அரங்கில் இல்லை; உயிரோடும் இல்லை. அங்கிருந்த ஒருவரின் நூலை வாங்கிக் கொண்டு பேச அழைக்கப்பட்டிருந்தால் இவ்வாறு பேசாமல் வெளியேறி இருப்பீர்களா…? எனக்கென்னமோ அப்படிச் செய்திருக்க மாட்டீர்கள் என்றே தோன்றுகிறது.’’

இன்னொரு பரபரப்பு முன் நிகழ்வோடு நேரடித் தொடர்பில்லை என்றாலும் இதுவும் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வு தான்.

வாழ்க்கையின் திருப்புமுனை ஒவ்வொருவருக்கும் எப்படி வந்து சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தற்செயலாக நடந்த ஒரு வினையோ அல்லது சொன்ன ஒரு வாக்கியமோ கூட ஒருவரைப் பிரபலமாக்கி விடும். அதன் மூலம் அவரது வாழ்க்கை ஓட்டம் பெரிய திருப்பத்தில் பயணமாகி விடும். ஏற்படும் திருப்பம் ஒரு மனிதனை என்னவாக மாற்றும் என்பதை அதற்குப் பிந்திய வாழ்க்கை தான் வெளிச்சம் போட்டுக் காட்டும். இதற்குப் பல உதாரணங்களை உலக அளவிலும் காட்ட முடியும்; தமிழக அளவிலும் சொல்ல முடியும்.

நடிகை குஷ்பு தமிழ்நாட்டில் பிரபலமாக இருப்பதற்கான காரணங்கள் தற்செயலானவை அல்ல. தனது தாய்மொழியான இந்தியில் குழந்தைப் பருவத்திலிருந்து நடித்து அனுபவங்கள் பெற்றவர். பதினாறாவது வயதில் வருஷம் 16 என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ்¢ சினிமாவுக்குள் நுழைந்தவர். முதல் படத்தில் பெற்ற நடிப்புத்திறமையைத் தக்கவைத்துக் கொண்டு பலவகையான பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் நடிகை என்ற பெயரைப் பெற்றவர்.

தமிழ் சினிமாவிலிருந்து சொந்த வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் முன் மாதிரிகளைத் தேர்வு செய்கிறார்கள் தமிழ்ச்சினிமாவின் ரசிகர்கள். அதிலும் பால் அடையாள வேறுபாடு இருக்கிறது. பொதுப்புத்தி நாயக நடிகனை நாட்டை வழி நடத்தும் தலைவனாக ஆக்கிப் பார்க்கிறது. நடிகையைத் தனது கனவுக்கன்னியாக நினைத்து அந்தரங்க வெளிக்குள் குடும்பம் நடத்த உதவும் பிம்பமாக நினைக்கிறது. அந்தப் பொதுபுத்தி குஷ்புவையும் விட்டு விடவில்லை. அவரது உடல் அழகுக்காக உணவுப் பண்டங்களுக்கு அவர் பெயரை வைத்துச் சொல்லிப் பார்த்தார்கள், அவருக்குக் கோயில் கட்டி விழா எடுக்கும் அபத்தத்தைக் கூட முயற்சி செய்தார்கள். இவை எதற்கும் அவர் பொறுப்பு அல்ல என்பதால் ஊடகத்தின் கவனம் தகவல் தருவது என்ற அளவோடு ஒதுங்கிக் கொண்டது.

அதேபோல் குஷ்புவை மையப்படுத்தி உருவாக்கப்படும் சர்ச்சைகள் எதற்கும் அவர் பொறுப்பல்ல. அதனால் அவர் ஒளிவெளிச்சம் உண்டாக்க விரும்பி இவ்வாறு நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டை அவர் மீது சுமத்த விட முடியாது என்பதுதான் நடுநிலையான பார்வையாக இருக்க முடியும். திருமணத்திற்கு முன் ஆண்-பெண் உடலுறவு பற்றி குஷ்பு சொன்ன கருத்து தற்செயலானதா?ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடா?என்று தீர்மானிக்காத தமிழ்ப்பொதுப்புத்தியும் அப்புத்தியை உருவாக்கும் ஊடகங்களும் தொடர்ந்து அவரை விளம்பரத்திற்காகச் சர்ச்சைகளை உருவாக்குபவராகக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

பள்ளிக் கல்வியிலேயே பாலியல் கல்வியின் அவசியம் பற்றி விவாதிக்கத் தொடங்கியிருக்கும் கால கட்டத்தில் இருக்கிறோம். இந்திய சமூகத்தில் நிலவும் சில கட்டுப் பெட்டித்தனத்திற்கும், உடல் சார்ந்த நோய்களுக்கும், குறைபாடுகள் கொண்ட குழந்தைப் பிறப்பிற்கும் பாலியல் சார்ந்த அறிவும் புரிதலும் இல்லாததே காரணங்கள் என மருத்துவ அறிவியல் கூறுகின்றது. அதன் பின்னணியில் பாலியல் கல்விக்கான பரிந்துரைகளைச் செய்வதற்கு ஓர் ஆணையமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை அது பற்றிக் கருத்துக் கூறுவது எப்படித் தவறாகும்?

படப் பிடிப்பின் போது உருவாக்கப்படும் தற்காலிக வழிபாட்டிடத்தில் காலணியுடன் செல்வதும், காலணியுடன் அமர்வதும் சினிமாக்காரர்கள் அனைவரும் செய்யும் ஒன்று என்றாலும், குஷ்புவின் செயல்பாடு மட்டும் குறி வைத்துத் தாக்கப்படுகிறது.

எப்போதும் ஒளிவெளிச்சத்தை விரும்புகிறவர்கள் தினசரி எதையாவது சொல்வதன் மூலமும் செய்வதன் மூலமும் சர்ச்சைகளை உருவாக்கி அதன் மையத்தில் சிரித்துக் கொண்டு நிற்பார்கள்.அவர்கள் சொல்வதற்கு அவர்களே உதாரணமாக இருக்கிறார்களா? என்ற கேள்வியைக் கூட கேட்டுப் பார்த்துக் கொள்வதில்லை. தனது வேலை அறிவுரைகளை வழங்குவதும், வெளிச்சப் பெருக்கில் இருப்பது மட்டுமே என நினைக்கிறவர்கள் தான் தமிழ் அரசியலையும் பண்பாட்டையும் தீர்மானிக்கிற சக்திகளாக வலம் வருகிறார்கள்.

ஒரு புத்தக வெளியீட்டில் தனது கருத்துச் சுதந்திரத்தையும் அடையாளத்தையும் உறுதியாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்த விரும்பிய குஷ்புவின் வெளிப்பாடு நிச்சயம் ஒளிவெளிச்சம் விரும்பிய செயல் அல்ல. அதை மிகுந்த பொறுப்புணர்வோடு எதிர்கொண்ட விடுதலைச்சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பேச்சும் செயல்பாடுகளும் கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல்வாதியின் நாகரிகமான வெளிப்பாடு. ஆனால் அவரது கட்சியினரை உணர்ச்சி வசப் படச் செய்து கொடும்பாவி எரிப்புக்கும் கண்டன அறிக்கைக்கும் தூண்டிய ஊடகங்களின் வேலை பொறுப்பானவைகள் அல்ல. பரபரப்பை உருவாக்கும் இதழியல் போக்கின் வெளிப்பாடு என்ற வகைப்படுத்தத்தக்க செயல்.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வை நமது தினசரிப் பத்திரிகைகள் சித்திரித்ததன் பின்னணியில் தான் கடலூர் மாவட்டத்திற்குள் குஷ்புவை நுழைய விட மாட்டோம் என அறிக்கை வெளியிட்ட விடுதலைச்சிறுத்தைகள், நாகர்கோவிலில் குஷ்புவின் கொடும்பாவியைக் கொளுத்தினார்கள். உண்மைக்கு மாறான செய்தியின் பேரில் வினையாற்றும் போது இயக்கத்திற்கு ஏற்படும் இழப்பைத் திருப்பிக் கொண்டு வருவது இயலாது என்பதை அறியாமலேயே இவையெல்லாம் நடந்து விடுகிறது.

ஆண் - பெண் உறவு பற்றிய தனது கருத்து சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை; புரிந்து கொள்ளப்படாமலேயே எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் தலைவர் தொல்.திருமா வளவன். அவரை நேரில் சந்திக்கும் இந்த வாய்ப்பைத் தனது கருத்தைப் புரியவைக்கப் பயன்படுத்த வேண்டும் என நினைத்த குஷ்புவின் நோக்கத்தில் பெரிய தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. புத்தக வெளியீட்டு மேடையில் தனது கருத்தையும் நிலைபாட்டையும் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட தொல். திருமாவளவனும் அந்தக் கருத்திற்கு நாங்கள் எதிரி அல்ல; அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில்- போகிற போக்கில் ‘தமிழ் நாட்டுப் பெண்கள் அனைவரும் திருமணத்திற்கு முன்பு உடல் உறவு வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்’ என்ற அர்த்தத்தில் சொன்னதைத் தான் நாங்கள் எதிர்த்தோம்; போராட்டங்கள் நடத்தினோம் எனத் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். அத்தோடு உங்கள் மீது வழக்குகள் போட்டவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் அல்லர் என்ற உண்மையையும் புரிய வைத்துள்ளார்.

குஷ்பு தனது நிலைபாட்டைப் புரியவைக்க முயன்ற அதே மேடையைப் பயன்படுத்தித் தொல்.திருமா வளவனும் தங்கள் கட்சியின் நிலைபாட்டையும் செயல்பாடுகளையும் குஷ்புவிற்கும் புரிய வைத்துள்ளார். பரஸ்பரம் புரிதலை உண்டாக்கும் விதத்தில் நடந்த அந்த மேடை நிகழ்வில் கவிஞர் அறிவுமதியின் தூண்டுதலான பேச்சுக்கள் மட்டுமே சர்ச்சைகளை உண்டாக்கும் விதமாக இருந்துள்ளது. ஆனால் ஊடகங்கள் அவரை விட்டு விட்டு குஷ்புவை சர்ச்சையின் நாயகி என்பதாகச் சித்திரிப்பது ஏன்?அவர் பிரபலமான நடிகை என்பதாலா? நிகழ்காலத்துச் சமூகம் யோசிக்க வேண்டிய கருத்துக்கள் கொண்ட பெண் என்பதாலா?

தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதார அடித்தளத்தில் இயங்கும் இன்றைய வாழ்க்கை ஓட்டம், எந்த ஒரு துறையிலும் போட்டிகளை அனுமதிப்பதை வரவேற்கவே செய்கிறது. போட்டிகளை அனுமதிக்காத மனிதர்களை, அமைப்புக்களை, இயக்கங்களைப் பழைமைவாதிகள் அல்லது வளர்ச்சிக்குத் தடையானவர்கள் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைக்கலாம் என்ற முடிவுக்கும் கூடப் போய்விடுகிறது. ஊடகங்கள் இப்படி மட்டுமே செயல்பட முடியாது . பொறுப்பற்ற சர்ச்சைகளை உருவாக்குவதற்குப் பதிலாக முன் மாதிரிகளை உருவாக்குவதிலும் முன் மொழிவதிலும் ஊடகங்கள் போட்டி போடலாம். நிகழ்காலச் சமூகத்திற்கு அது தான் தேவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்