உலகமயச் சூழலில் கல்வி முறை மாற்றங்கள் :

நமது கல்வி புதியன படைக்கும் ஆற்றலை வளர்க்கவில்லை; மனப்பாடம்
செய்வதையும் அதன் வழியாகத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும்
வழிமுறைகளையையும் தானே வளர்க்கிறது?
இந்தக் கேள்வி, பேராசிரியர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் வந்த போது கேட்கப்பட்ட கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்டவர் கோவை நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவர். அதற்கு அவர் சொன்ன பதில்,
முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள கல்வி முறையில்
மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்
என்பது. கேள்வி ஒரு பள்ளி மாணவரால் கேட்கப்பட்டது என்றாலும், நமது கல்விமுறையின் மீது அதிருப்தி கொண்ட பலருக்கும் இதே கேள்வி உண்டு. இந்தக் கேள்வியைக் கேட்பவர் களுக்கு பேராசிரியர் அளித்துள்ள விடையும் கூட ஏற்றுக் கொள்ளத் தக்க விடைதான். ஏனென்றால் அவர் சொன்ன பதிலில் ஆழமான புரிதல் உள்ளது. அடிப்படையிலிருந்து மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது.
மாற்றம் என்பது தொடர்வினை
கொஞ்சம் பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால் சுதந்திர இந்தியாவின் கல்வித்துறை பல்வேறு கல்வி முறைகளைப் பரிந்துரை செய்ததும், அவை நடைமுறைப் படுத்தப்பட்டதும் நினைவுக்கு வரலாம். முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கி அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து உருவாக்கப்பட்ட வழிமுறைகள் இதுவரை வெற்றி பெறவில்லை என்பதும் கூட நினைவுக்கு வரலாம். இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று தேடினால், அனைவரும் சுட்டிக் காட்டுவது நாம் பின்பற்றும் கல்வி முறை யின் நோக்கத்தைத் தான். காலனிய அரசாங்கம் நடைமுறைப் படுத்திய மெக்காலே கல்வி முறையில் பெரிய அளவு மாற்றங்களைச் செய்யாமல் புதிய இலக்குகளை அடைய முடியாது எனச் சுட்டிக் காட்டு கின்றனர். பிரிட்டானிய ஆட்சியாளர்கள் தங்களுக்குத் தேவையான பணியாளர்களையும், அதிகாரிகளையும் உருவாக்கத் தேவையான கல்வியைத் தான் இந்தியர் களுக்கு வழங்கினார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் விடுதலை அடைந்த இந்தியா அக்கல்வி முறையில் தொடக்கத்திலேயே மாற்றங்களைச் செய்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திகின்றனர்.
கல்வி முறையில் அடிப்படை மாற்றங்கள் உடனடித் தேவை என்பதை நமது முன்னாள் குடியரசுத் தலைவர் உணர்ந்திருந்தது போல கல்வித் துறை ஆலோசகர்களும் உணர்ந்து தான் இருக்கின்றனர். அடிப்படை மாற்றங்கள் தேவை என்பது பற்றி இன்று தான் உணரப்பட்டுள்ளது என்பதும் உண்மை இல்லை. பல முறை அந்த யோசனைகள் முன் வைக்கப்பட்டு, மாற்றங் களும் கூடச் செய்யப்பட்டதுண்டு. ஒரு தேசத்தின்மக்கள் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும் என ஓர் அரசாங்கம் கருதுவதும், அதற்கான திட்டங்களைத் தீட்டுவதும் முன்னுரிமைப் பணிகளாகும். அம்முன்னுரிமைப் பணி அரசாங்கத்தின் மற்ற பணிகளை எளிமைப் படுத்தக் கூடியது, தேசத்தின் வளர்ச்சிப் போக்கோடும், நடைமுறைகளோடும் தேசத்தின் மக்களை ஒத்திசைந்தவர்களாக ஆக்கவல்லது கல்வி ஒன்றுதான் . இதனை உணர்ந்திருந்த அரசுகள் தொடர்ந்து கல்வித் துறைக்கு முன்னுரிமை வழங்கியே வந்துள்ளன. ஆனால் விளைந்த பயன்கள் எதிர்பார்த்தனவாக இல்லை. மாணாக்கர்களின் பயணம் என்னவோ செக்கு மாட்டுப் பயணமாகத் தான் இருந்து வருகிறது.
உருப்படியான மாற்றம்
ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை மூன்று கட்டங்களாக இருந்த நமது பள்ளிக் கல்வி, ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்கல்வி,மேல்நிலைக் கல்வி என நான்கு கட்டங்களாக மாறியது. தமிழகத்தின் முதல்வராக திரு எம்.ஜி.ராமச் சந்திரன் இருந்த போது கல்லூரிகளில் இருந்த புதுமுக வகுப்புகள் நீக்கப்பட்டு, பள்ளிக்கல்வியின் பகுதியாக- மேல்நிலைப் பள்ளிக் கல்வியாக மாற்றப் பெற்றது. தமிழகப் பள்ளிக் கல்விமுறையில் இம்மாற்றம் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம்¢. பள்ளியில் தமிழ் வழியில் பாடங்களைக் கற்ற பலரும் கல்லூரியில் நுழைந்து புகுமுக வகுப்பில் ஆங்கில வழியில் பாடங்களைக் கற்க முடியாமல் திணறியதும், தேர்ச்சி அடைய முடியாமல் கற்றலைப் பாதியில் நிறுத்திக் கொண்டதும் நடந்து கொண்டிருந்தது. இதனை மாற்றி, ஏராளமான மாணாக்கர்களை ஓராண்டு கூடுதலாகப் படிக்கச் செய்தது அந்த மாற்றாம். அத்துடன் அதிகமானவர்களைக் கல்¢லூரிக்கல்வியைத் தொடர வைத்தது. கல்லூரிக் கல்வியில் எதனைத் தேர்வு செய்து, கற்பது எனத் திட்டமிட்டுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கிய அந்த மாற்றம் மிக முக்கியமான மாற்றம்¢. இன்று ஏராளமான தொழிற்கல்விக் கூடங்களும், பொறியியல் கல்லூரிகளும் தோன்றியுள்ள நிலைக்கும், அவற்றை நாடிச் சென்று மாணாக்கர்கள் கல்வி கற்க முனைவதற்கும் இந்த மாற்றம் தான் தூண்டுகோலாக இருந்தது.
பள்ளிக் கல்விமுறையில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறாத மெட்ரிக்குலேசன் பள்ளிகள் எனப் பலவகையான பள்ளிகள் செயல்படுவது போல் கல்லூரிக் கல்வி முறையிலும் கூட பல மாற்றங்கள் நடந்துள்ளன. சுதந்திரம் அடைந்து இருபது ஆண்டுகள் வரை சென்னைப் பல்கலைக்கழகம் என ஒரே பல்கலைக் கழகம் இருந்த நிலை மாறி, இன்று இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் பல்வேறு வகையான பாட முறைகள் வழக்கில் உள்ளன. பருவ முறை, அல்பருவ முறை, அரசுக் கல்லூரிகள், அரசு இணைவு பெற்று நிதி உதவி பெறும் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள், சுயநிதிக்கல்லூரிகள், சமுதாயக் கல்லூரிகள், பல்கலைக்கழகக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் எனப் பலவகையான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளிக் கல்வியிலும், கல்லூரிக் கல்வியிலும் பல வகையான நிறுவனங்களும் முறைகளும் செயல்பட்டாலும், பாட முறைகளும் தேர்வு முறைகளும் பெருமளவில் மாற்றமில்லாமலேயே இருக்கின்றன. அதை விடவும் முக்கியமாகக் கடந்த காலங்களில் கற்பித்தல் நெறியிலும் கற்கை முறையிலும் மாற்றங்களே நடக்கவே இல்லை என்பதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்று.அப்படியான மாற்றங்கள் நடக்காத வரை மாணாக்கர்களின் அறிவித்திறனில் முன்னேற்றம் என்பதோ, புத்தாக்க முயற்சிகளில் ஈடுபாடு காட்டுதல் என்பதோ சாத்தியம் இல்லை என்பது உணரப்பட வேண்டும். இன்று பள்ளிக்கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் படித்து முடித்து விட்டுப் பட்டப்படிப்பைத் தொடர வரும் பலரின் கற்றல் அறிவு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. தாய் மொழியான தமிழிலும், போதனை மொழியான ஆங்கிலத்திலும் பிழையின்றி எழுதும் திறன் இல்லை. ஒவ்வொரு நாளும் இந்த நாட்டிலும், சொந்த ஊரிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. பள்ளியில் கற்றுத் தந்த பொதுக் கல்வி எந்த ஆர்வத்தையும் அவரிடத்தில் உண்டாக்காமலேயே கல்லூரிக்கு அனுப்பி வைக்கிறது. தனக்குத் தரப்படும் கல்வி தனது எதிர் காலத்தைத் தீர்மானிக்க உதவும் அல்லது உதவாது என்ற விவரத்தைத் தெரிந்து கொள்ளா மலேயே அதனைக் கற்று முடிக்கின்றனர். பெறப்பட்ட பட்டத்திற்கும் பார்க்கப் போகும் வேலைக்கும் தொடர்பு இருக்க வேண்டுமா என்ற கேள்வியை அவர்கள் கேட்டுக் கொள் வதாகவும் தெரியவில்லை.
புரிதலில் இல்லாத இலக்கற்ற பயணங்களை முன்மொழியும் இந்தக் கல்வியைத் தரும் ஆசிரியர் களும் எந்தவிதக் கேள்விகளும் இல்லாமலேயே அவர்கள் பணியைச் செய்துவிட்டுச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கற்பிக்கிறவர்களும் எந்தவிதக் குற்ற உணர்வையும் தோற்றுவிக்காமல், கற்பவர்களிடம் எந்தவிதச் சிந்தனையையும் தோற்று விக்காத இந்தக் கல்வி முறையில் செய்ய வேண்டிய மாற்றம் என்பது இதுவரை செய்யப்பட்டது போல வடிவ மாற்றமாக மட்டும் இருக்கக் கூடாது. உள்ளடக்க மாற்றமாகவும், கற்பித்தல் முறையிலும் புதியன புகுத்தும் மாற்றமாகவும் இருக்க வேண்டும்.ஒரு மனிதன் மாறிவிட்டான் என்பது உடுத்தும் உடை, உண்ணும் உணவு, வாழும் இடம் ஆகிய அடிப்படைத் தேவைகளில் நடக்கும் மாற்றங்களை மட்டும் குறிப்பதில்லை; அவற்றிற்கும் மேலாக அவனது தன்னிலையில் ஏற்படுத்தும் பண்பு மாற்றமே அடிப்படை மாற்றமாகும். தன்னை உணர்தலும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை உணர்தலும் அவனது பண்பு மாற்றத்தின் காரணங்களாலேயே உண்டாகும். இதுவரை கல்வித்துறையில் நடந்த மாற்றங்கள் வடிவ மாற்றங்களையே முன் மொழிந்துள்ளன. அதனோடு சேர்ந்து பண்பு மாற்றங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் கல்வி, கற்பித்தல்- கற்றல் என இரு நிலையிலும் மாற்றங்களைப் பற்றி யோசிக்க வேண்டும்.
உயர்கல்வியிலும் மாற்றங்கள்
ஆரம்பக்கல்வியில் அடிப்படை மாற்றங்கள் பற்றிப் பேராசிரியர் அப்துல்கலாம் முன் வைத்த கருத்துக்களோடு , இந்திய அளவிலும் தமிழக அளவிலும் செய்யப்பட உள்ள வேறு வகை மாற்றங்கள் பற்றிய பேச்சுகளும் செய்திகளாக அடிபடுகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி இரண்டு முன்மொழிதல்களை சட்டமன்றத்தில் முன் வைத்தார். அவ்விரண்டில் பொறியியல் கல்லூரிகள் சார்ந்த முன் மொழிதல் நடை முறைக்கு வந்து கொண்டிருக்கிறது. கலை, அறிவியல் பட்டங்களை வழங்கும் பொதுப் பல்கலைக் கழகச் சட்டம் (Common University Act)நடைமுறைக்கு வரக்கூடும். வரப்போகும் இம்மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டிய தேவை கல்வித் துறை சார்ந்தவர்களின் கடமை மட்டும் அல்ல; மக்கள் அனைவரின் கடமையும் கூட. ஏனெனில் இந்த மாற்றங்கள் இந்திய தேசம் உலகமயமாகிக் கொண்டிருக்கும் பின்னணியில் அறிமுகமாகின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பொதுநிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல் பட்ட பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஒன்றாக ஆக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் தன்னாட்சிக் கல்லூரிகளையும் தவிர அனைத்திலும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களுடன் பயிற்றுமுறை, தேர்வு முறை போன்றன ஏற்படுத்தப்பட்டு பொதுத் தன்மைக்குள் வந்தன. ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகத் திரும்பவும் அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப் பட்டுள்ளது. திருச்சி¢, கோயம்புத்தூரில் அதன் கிளைகள் தொடங்கி நடந்து வருகின்றன. அவை தனிப் பல்கலைக் கழகங்கள் என்பதாகச் செயல்படத் தொடங்காமல் அண்ணா பல்கலைக் கழகத்தின் கிளைகளாக மட்டுமே இருப்பது நல்லது எனப் பலரும் கருத்துரைக்கின்றனர். அந்த எண்ணத்தின் வெளிப்பாடாகத் தான் தனியொரு பெயரைச் சூட்டிக் கொள்ளாமல், அண்ணா என்றே பெயரே கோவையோடும் திருச்சியோடும் சேர்க்கப் பட்டுள்ளது எனக் கருதலாம். அதனால் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் பொது நிலைப்பட்ட சட்ட திட்டங்களோடும், பாடத் திட்டங்களோடும் சென்னை முதல் குமரிவரையுள்ள கல்லூரிகளின் வழியே பொதுவாகச் செயல்படும் வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் இந்தப் பொதுநிலைப் பாடத் திட்டங்களும், சட்டதிட்டங்களும், நடைமுறைகளும், கலை அறிவியல் பட்டங்களை வழங்கும் பல்கலைக் கழகங்களில் இல்லை.
தமிழகத்திலுள்ள பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் தனித்தனியே தங்களுக்கென விதிகள், அமைப்புக்கள், பாடத்திட்டங்கள் கொண்டவைகளாக உள்ளன. அடிப்படையில் இவை அனைத்தும் மைய அரசின் மனித வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுகின்றன. அதே நேரத்தில் பல்கலைக் கழகங்களின் பேரவை, ஆட்சிக்குழு போன்றவற்றைக் கூட்டித் தங்களுக்கான விதிகளை உருவாக்கிக் கொள்ளும் தன்னாட்சித் தன்மையையும் பெற்றுள்ளன. மாநில அரசும் அதன் சட்டமன்றமும் கூடத் தலையிட முடியாத அளவு பாதுகாப்பான நிலை பல்கலைக்கழகச் சட்டங்களில் உள்ளன. பல்கலைக்கழகங்கள் அறிஞர்களும், பொதுநலனில் அக்கறை கொண்ட கல்வியாளர்களும் பணியாற்றும் அமைப்பு என்பதால் இத்தகைய தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் செயல்படும் பாடத் திட்டக் குழுக்கள், அந்தப் பல்கலைக் கழகம் அமைந்திருக்¢கும் மாவட்ட மக்களின் உணர்வுகளையும் சூழலையும் மனதில் கொண்டு பாடங்களைச் சேர்த்துக் கொள்ள வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் அதன் பின்னணியில் இருந்தன. ஆனால் வரப் போகும் பொதுப் பல்கலைக்கழகச் சட்டம், இந்தத் தன்னாட்சி நிலைக்கு- சுயாட்சித் தன்மைக்கு எதிரான விதிகளைக் கொண்டது என்ற ஐயங்கள் உள்ளன.
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் உருவாக்கிக் கொண்ட தனிப் பல்கலைக்கழகச் சட்டங்கள் நீக்கப் பட்டு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான சட்டத்தைக் கொண்டுவரும் அரசின் நோக்கத்தில் உலகமயச்சூழல் என்ற பின்னணி இருந்த போதிலும் வேறு சில காரணங்களும் உள்ளன. பல்கலைக் கழகங்களின் வருவாய் மற்றும் செலவினங்கள், அதன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வு மற்றும் சலுகைகள், புதிய ஊழியர்களை நியமித்தல் போன்றவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறைகளைப் பின்பற்றுகின்றன. அவற்றில் சிக்கல்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு இழுபறிகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழலில் ஆட்சியில் அரசாங்கத்தாலும், நீதிமன்றங்களாலும் அவற்றைத் தீர்க்க முடியாத அளவு தனிச்சட்டங்கள் காரணங்களாக உள்ளன. ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் செயல்படும் ஆட்சிப் பேரவை, கல்வி நிலைக்குழுக்கள், பாடத்திட்டக்குழுக்கள் போன்றவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் வெவ்வேறு விதமாக உள்ளன. அவற்றின் அதிகாரங்களும் கடமைகளும் கூட ஒன்று போல இல்லை.
அறிவார்ந்த தளத்தில் விவாதங்கள் நடக்க வேண்டிய இந்த அமைப்புக்களில் நடக்கும் விவாதங்களும் கூடப் பல நேரங்களில் நமது சட்டமன்ற, நகரசபைக் கூட்டங்களோடு போட்டி போடுகின்றன. பல்கலைக்கழகங்களின் வருவாயில் பெருமளவுத் தொகை இந்த அவைகளின் உறுப்பினர்களுக்கான படிகளாகவே செலவாகின்றன என்ற கருத்தும் கூட ஓரளவு உண்மையாக இருக்கலாம். அத்துடன் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் உரிமையும் இப்போதைய தனிச் சட்டங்களில் இல்லை . எனவே எல்லாவற்றையும் களையும் விதமாகப் பொதுப் பல்கலைக் கழகச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அரசின் நோக்கமாக இருக்கிறது. அதன் படி பல்கலைக்கழக மானியக்குழு அனுப்பிய மாதிரிப் பல்கலைக்கழகச் சட்டம் சில ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் தமிழக அரசின் புதுச் சட்டம் தயாரிக்கப் பட்டது. இப்போது அது வருமா ? வராதா..? என்பதும் தெரியவில்லை.
தமிழக அரசால் கொண்டு வரப்படவுள்ள பொதுப் பல்கலைக்கழகச் சட்டம் கல்வியாளர் களாலும் கல்வித்துறை சார்ந்த அமைப்புக்களாலும் விவாதிக்கப் பட்டது. முடிவுகள் எதுவும் எடுக்கப் பட்டதாகவோ, செயல்படுத்தப் படப் போவதாகவோ தெரியவில்லை. ஆனாலும் விவாதப் பொருளாகியுள்ளது என்பதே வரவேற்கத்தக்கது தான். எந்த ஒரு கருத்தையும் பொருளையும் விவாதிக்கும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பும் தங்கள் நலனை மையப்படுத்தியே எதிர்ப்பு அல்லது ஆதரவு என்பதை வெளிப்படுத்துவார்கள் என்பது பொதுவான நியதி. அதே நேரத்தில் தங்கள் நலனுக்காக அதைச் செய்யவில்லை பொது நலனை முன்னிட்டே இந்நிலைபாட்டை மேற்கொள்கிறோம் எனக் கூறவும் செய்வார்கள்.
இதற்கு மாறாக எந்தவொரு மாற்றத்தையும் வெளியில் இருந்து பார்க்கும் மனநிலையில் யோசித்துப் பார்த்தால் தான் அதன் சாதக பாதகங்களைப் புரிந்து கொள்ள இயலும்.
பொதுப் பல்கலைக்கழகச் சட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் எதிர்நிலைப் பாட்டுடன் கருத்துக்களை கூறுவதில் முன்னிலை வகிப்பவர்களாக ஆசிரியர் சங்கங்களும் அவற்றின் பிரதிநிதிகளும் இருந்தனர். ஒரு சில பல்கலைக் கழக நிர்வாகங்களும் கூட எதிர்நிலைப் பாட்டை வெளிப்படுத்தின. அத்தகைய எதிர்நிலைப் பாட்டை முன் வைப்பவர்கள், வட்டார அடையாளம், அனைத்துத் தரப்பினருக்கும் பிரதித்துவம், தனித்தன்மை, உயர்கல்வியில் தன்னாட்சி என்ற கருத்துக்களை முன் வைத்துப் பேசினார்கள். அதே நேரத்தில் பொதுப் பல்கலைக் கழகச் சட்டம் வந்தால் ஒரே இடத்தில் பணியாற்றும் இப்போதைய நிலை மாறி, மாறுதலுக்குரிய பணியாகத் தங்களின் பணிநிலைமை மாறலாம் என்ற அச்சம் ஆசிரியர்களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் இருக்கிறது. அதே போல் தங்கள் பல்கலைக் கழக நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்திப் பெற்ற உரிமைகள், சலுகைகள் போன்றன பறிக்கப்படலாம் என்ற அச்சமும் இருக்கிறது. இதைத் தவிர நிர்வாகத்தில் இருப்பவர்களின் அதிகார வரம்புகள்- பணி அமர்த்தல், பதவிகள் அளித்தல், சலுகைகள் வழங்குதல் போன்றன - குறைக்கப்படும் என்ற அச்சமும் முன் நிற்கின்றன. ஆனால் இந்த அச்சங்களும் நிலைப்பாடுகளும் மாணவர்களை மையப்படுத்தியனவாக இல்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அவர்களில் பெரும்பாலோர் இப்படியொரு சட்டம் வர உள்ளது என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் அல்லது தங்களுக்குத் தொடர்பில்லாத விவாதங்கள் என்பதாக ஒதுங்கிப் போகிறார்கள் என்பது வருந்தத் தக்க யதார்த்தம். பணிப் பாதுகாப்பு ,இருக்கும் அதிகாரம் பறி போதல் போன்றன தனிநபர் நலன் என்பதை அடிப்படை யாகக் கொண்டவை. பொது நலன் என்னும் பார்வையில் விவாதிக்கத் தக்கன அல்ல. அந்த விவாதங்கள் எப்போதும் வளர்ச்சிக்கு தடை போடும் நோக்கம் கொண்டவை எனக் கருதி விட்டு விடலாம். ஆனால் பாடத்திட்டங்கள் பற்றிய முன் வைப்புக்கள் அப்படிப் பட்டன. பொருட்படுத்தி விவாதிக்க வேண்டியன.
பொதுப் பல்கலைக்கழகச் சட்டம், உருவாக்கப் படும் பாடத்திட்டத்தில் 60 சதவீதம் பொதுநிலைப் பாடங்களையும், 40 சதவீதப் பாடங்கள் அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் வட்டாரச் சூழலைக் கணக்கில் கொண்டும் அமையும் என்ற கருத்து நிலவுகிறது. வட்டாரச் சூழலைக் கணக்கில் கொள்ளுதல் என்பதும், அப்பகுதி மக்களின் மன உணர்வுகளுக்கு இடம் அளித்தல் என்பன பெரும்பாலும் கலையியல் மற்றும் சமுதாய அறிவியல் துறைகளுக்கு மட்டுமே பொருத்தமானது. அறிவியல் துறைகளின் பாடங்கள் எப்பொழுதும் உலக அளவில் அமையக் கூடியனவாக இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் இங்கு வட்டார நிலைமையைக் கணக்கில் கொள்ளுதல் என்ற பெயரில் ஆசிரியர்கள் நலன் முன்னிறுத்தப்பட்டு பாடங்களைக் குறைத்தல், புதிய பாடங்களுக்குத் தடை போடுதல் போன்றன தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் இத்தகைய சிந்தனைப் போக்கு உலகமயச் சூழலுக்கு நமது மாணவர்களைத் தயார் படுத்தாமல் பின்னுக்கு இழுத்துப் போகும் காரியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகமயம், தாராளமயம், தனியார் மயம் நமது தேசத்திற்குத் தேவையா என்று கேட்டால் அதற்கான விவாதங்கள் வேறானதாக இருக்கலாம். தேசத்தின் பொதுத் தன்மையாக இவற்றை ஏற்றுக் கொள்வது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பின்பு ஒன்றிரண்டு பல்கலைக் கழகங்களோ, மாநிலமோ அத்தோடு ஒத்துப் போக மாட்டேன் என்பது தங்களின் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களைக் கூட்டத்தோடு ஓட விடாமல் தடுத்து நிறுத்தும் செயல்களாக ஆகி விடும். ஒரு வேளை உலகமயம் என்னும் இன்றைய நடைமுறை எதிர்பார்த்த வெற்றியையும் இலக்குகளையும் தரத் தொடங்கி விட்டால் அப்போது பொது நீரோட்டத்திற்குள் அந்த மாநிலத்தையோ, பல்கலைக் கழகத்தையோ சேர்த்து விடுவது சிக்கலான ஒன்றாகி விடும். இந்த நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் எதிர்ப்புணர்வை மட்டும் காட்டிக் கொண்டிருப்பது அர்த்தமுடையதாக ஆகாது.
மாணவர்கள் கோணத்தில் பார்க்கும் போது எளிமையான இன்னொரு நன்மையும் இருக்கிறது. ஏதாவதொரு காரணத்தால் இடம் மாற நேரும் ஒரு மாணாக்கர் சிக்கல் இல்லாமல் புதிய இடத்தில் ஒரு கல்லூரியில் சேர்ந்து கல்வியை இடையீடின்றித் தொடரும் வாய்ப்பு பொதுப் பல்கலைக் கழகச் சட்டத்தின் படி உண்டு. இப்போதுள்ளது போல் வேறுபாடான கட்டணங்கள் வசூலிப்பது மாறலாம். தமிழகம் முழுக்க ஒரே கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் வசூலிக்கும் நிலை உருவாகும். ஒரே கட்டணம்; ஒரேவிதமான கல்வி என்பது உலகமயச் சூழலின் அடிப்படைத் தத்துவமாக இருக்க வேண்டியது என்பது காலத்தின் நிர்ப்பந்தம். காலம் தரும் நிர்ப்பந்தத்திற்கு நாம் பணியாவிட்டால் அதே காலம் நம்மை இறந்த காலத்து மனிதர்களாக ஆக்கி விடும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகமயமாகும் சூழலை இந்திய அளவில் தடுக்க முடியாத நிலையில் பொதுநிலைக் கல்வி முறைக்கு மாறுவதே புத்திசாலித்தனமும் கூட. அப்படி மாறும் போது பள்ளிக் கல்விக்கென முன் வைக்கப்பட்ட கற்கை நெறி- கற்றல் முறை என்ற இரண்டையும் கணக்கில் கொள்ளவும் வேண்டும்.கரும்பலகைகளும் அவற்றில் எழுதும் சுண்ணாம்புக் கட்டிகளும் இன்னும் பல்கலைக் கழகங்களின் வரவு செலவுகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு முடிவு கட்டும் போது தான் வகுப்பறைக் கல்வி முடிவுக்கு வரும். வகுப்பறைகளின் இடத்தைத் தொழில் நிறுவனங்களும் சமூக நிறுவனங்களும் பிடித்துக் கொள்ளும் நிலையில் உலகமயத்தின் பலன்கள் வெளிப்படையாகத் தெரிய வரலாம்.

கருத்துகள்

காம கடவுள் இவ்வாறு கூறியுள்ளார்…
Nice psot. Thank u for giving this .........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்