மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்
இந்திய நாட்டின் சமூகவியலை ஆய்வு செய்த அறிஞர்களில் அயல் தேசத்து ஆய்வாளர்களும் உண்டு; இந்திய நாட்டின் அறிஞர்களும் உண்டு. இருவகைப்பட்ட ஆய்வாளர்களும் அதன் சிறப்புக்கூறாகவும், மாறாத இயல்பாகவும் குறிப்பிட்டுச் சொல்லும் கருத்தியல் ஒன்று உள்ளது. அது கருத்தியலா? செயல்தளமா ? என்பதைப் பற்றிய விவாதங்களும் அவர்களிடத்தில் உண்டு. தொடர்ந்து சமூகவியலாளர்களால் விவாதிக்கப்படும் அது இந்தியாவின் சாதி அமைப்புத் தான். ஒருவித கூம்பு வடிவத்தில்- எகிப்தின் பண்டைய பிரமிடு வடிவத்தில் -அதன் அமைப்பு உள்ளது எனப் படம் போட்டுக் காட்டும் ஆய்வாளர்கள், கூம்பின் உச்சி முனையாக இருப்பவர்கள் பிராமணர்கள் எனவும், அடித்தளமாக இருப்பவர்கள் சூத்திரர்கள் எனவும் கூறுகின்றனர்.