இடிந்தகரை X கூடங்குளம் : நிரந்தரத்தைத் தற்காலிகமாக்கும் எத்தணிப்புகள்
”ஆத்துக்குப் போனயா? அழகரைச் சேவிச்சயா?” – இந்தச் சொற்றொடரை மதுரை மாவட்டத்துக்காரர்கள் தன் வாழ்நாளில் பல தடவை உச்சரிக்க நான் கேட்டிருக்கிறேன். வாயால் சொல்லியிருக்கா விட்டாலும் யார் வாயாவது சொல்லத் தங்கள் செவி வழியாகவாவது பலரும் கேட்டிருப்பார்கள். செவிக்கும் வாய்க்கும் பழக்கப்பட்ட இந்தச் சொற்றொடர் தரும் அனுபவத்தை நேரில் பெற விருப்பம் காட்டுவது வட்டாரம் சார்ந்த வாழ்தலின் அடையாளம். அந்த வாக்கியம் இன்று சின்னஞ் சிறியதாகப் போய்விட்ட மதுரை மாவட்டத்துக்கு உரியது மட்டுமல்ல. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகித் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் எனப் பல மாவட்டங்களின் வழியாக ஓடி வங்கக் கடலில் கலக்கும் வைகை ஆற்று நீரோடு கொள்வினையும் கொடுப்பினையும் கொண்டுள்ள மாவட்டங்கள் அனைத்திற்கும் பொதுவான மரபுத் தொடரும் கூட.