விளிம்புநிலைப்பார்வையும் திருக்குறளும்

முன்னுரை

கல்வித்துறை சார்ந்த இலக்கிய ஆய்வுகளும்,கல்வித்துறை சாராத இலக்கியத் திறனாய்வும் பலவிதமாகக் கிளைபிரிந்து கொண்டு வருகின்றன. இந்த விரிவுகளின் பின்னணியில் எழுத்தாக்கம் என்னும் வினையில் இருக்கும் ஆசிரியன், படைப்பு, வாசகன் என்ற மூன்று மையப் புள்ளிகளில் எதற்கு அழுத்தம் கொடுப்பது என்ற வினாக் கள் காரணங்களாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். இலக்கிய ஆக்கம், அதனை ஆக்கியவன், ஆக்கியவன் உண்டாக்கிய இலக்கியத்தின் வடிவம், அதன் உள்ளீடாக இருக்கும் கருத்துநிலை, அவற்றை எல்லாம் வாசித்தபின் எதிர்நிலையிலோ நேர்நிலை யிலோ நின்று தனதாக ஆக்கிக் கொள்ள முயலும் வாசகன் எனச் சில புள்ளிகள் சார்ந்து இலக்கியத் திறனாய்வின் அல்லது ஆய்வின் விரிவுகள் கூடுகின்றன.

இலக்கிய உருவாக்கம், இலக்கியத்தின் வடிவம், இலக்கியத்தின் வெளிப்பாடு, இலக்கியத்தின் பயன்பாடு என்பதான கலையியல் சார்ந்த கோட்பாடுகள் என்ற நிலையில் மட்டுமல்ல, இலக்கிய உருவாக்கத்தின் பொது மனநிலை, அதிலிருந்து மாற நினைக்கும் சிறப்பு மனநிலை,இலக்கியத்தை உருவாக்கிய சமூக மற்றும் கால நெருக்கடி, இலக்கியத்தை வாசிப்பதற்குக் கண்டு பிடிக்கப்பட்ட முறைகள், வாசிப்பின் விளைவுகள், வாசிப்பின் பின்னணிகள் என்பதான அணுகுமுறைகள் சார்ந்த நிலையிலும் இலக்கிய ஆய்வுகளும் திறனாய்வும் விரிந்துள்ளன.

இலக்கியத்திறனாய்வு அல்லது விமரிசனம் என்ற சொல்லால் தங்கள் வாசிப்பைக் குறிப்பதையே விரும்பும் கல்வித்துறை சாராதவர்கள் இன்னும் இலக்கியப் பிரதிக்குள் நின்று கொண்டிருக்க, கல்வித்துறை சார்ந்தவர்கள் எழுதும் ஆய்வேடுகள் அப்போக்கி லிருந்து விலகிப் போய்விட்டன என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கல்வித்துறை சார்ந்த ஆய்வுகள் இலக்கியத்தை அதன் உள்ளே இருந்து விளக்கும் ஆய்வுப் போக்கைக் கைவிட்டு விட்டு இலக்கியத்தோடு தொடர்புடைய பிறதுறைசார்ந்த கருத்தியல் அளவுகோல்களை முதன்மைப் படுத்தி ஆய்வு செய்யும் கடினமான பணிக்கு நகர்ந்து விட்டன. இலக்கியத்தை மட்டுமே தங்களின் அறிவுப்பரப்பின் களமாகக் கொண்ட தமிழ் இலக்கியக் கல்வியாளர்கள், தொடர்ந்து பிறதுறைகள் தரும் கருவிகளின் துணை யோடு இலக்கியப் பிரதிகளை வாசிக்கத் தொடங்கியிருப்பது ஆழமான போக்கின் வெளிப்பாடா? ஆரோக்கியமற்ற போக்கா? என்பதைச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படி நகரும் போது தங்களுக்குத் தெரியாத வழித் தடங்களுக்குள்ளும் நகர்ந்து விடும் ஆபத்தை ஆய்வாளர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குறிப்புரையை முன்னுரையாகச் சொல்லி விட்டு விளிம்புநிலை நோக்கில் திருக்குறள் என்ற தலைப்புக்குள் நுழைகிறேன். விளிம்புநிலை நோக்கில் திருக்குறளை வாசிப்பது முன்னர் சொன்ன அதே ஆபத்தைச் சந்திக்கும் வேலை தான் என்றாலும் கருத்தரங்கின் பொதுப் பொருளான பன்முக நோக்கில் திருக்குறள் என்பதற்குள் நிற்க இந்த விநோதமுரணைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்.

விளிம்புநிலைப்பார்வை -அறிமுகம்

விளிம்புநிலை என்ற தமிழ்ச் சொல் ஆங்கிலப் பதமான - Subaltern- என்ற சொல்லின் மொழிபெயரப்பு.சிலர் அடித்தட்டு மக்களின் பார்வை என்ற சொல்லால் இதை பெயர்ப்புச் செய்துள்ளனர். இந்தச் சொல்லை அதன் அரசியல் அர்த்தத்தில் முதன் முதலில் பயன்படுத்தியவர் இத்தாலிய மார்க்சீயரான அந்தோனியோ கிராம்சி (1881- 1937 ). கிராம்சியின் பயன்படுத்துதலில் இருந்து விளிம்புநிலை நோக்கு என்பது ஒரு மனநிலை எனப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.தனிப்பட்ட மனிதனின் மனநிலை அல்ல; குழுவின் மனநிலை. இனம், வகுப்பு, பாலினம், பாலுணர்வு விருப்பம், சமயம், மொழி போன்ற காரணங்களால் குறிப்பிட்ட சூழலில் தங்களைக் குழுவாகக் கருதும் கூட்டம் தாங்கள் கண்டு கொள்ளப் படாதவர்கள் அல்லது ஓரங்கட்டப் பட்டவர்கள் என்பதை உணரும் மனநிலை.

இந்த விளிம்புநிலை உளவியலை உலக அளவில் விளக்கிய அண்டோனியோ கிராம்சியின் தாக்கம் பெற்ற ரணஜித்குகா என்ற இந்திய அறிஞர் விளிம்புநிலை வரலாறு எழுதுவதற்கான கொள்கை அறிக்கையினை தயாரித்தவர்.அவரை உள்ளடக்கிய விளிம்புநிலை ஆய்வுக்குழு என்பது தெற்காசிய அறிஞர்கள் பலர் சேர்ந்து உருவாக்கிய ஓர் ஆய்வுக்குழு. இந்தியா, பர்மா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளின் வரலாறு மற்றும் சமூகவியல் துறைகளில் பணியாற்றிய அவர்கள்,பின் காலனிய வரலாற்றை எழுதுவதற்குப் பயன்படுத்திய முறையியலைக் குறிக்கும் சொல்லாக இன்று விளிம்புநிலை என்பது அறியப் படுகிறது. மையம்X விளிம்பு அல்லது ஓரம் என்ற இரட்டை எதிர்வுகளை அடையாளப் படுத்திப் பேசும் அவர்கள் இதுவரையிலான வரலாறு மைய நீரோட்டத்தின் வரலாறாகவே இருக்கிறது; ஓரத்தில் வாழ்கிற மனிதர்களின் வரலாறு எழுதப் படவும் இல்லை; கவனிக்கப்படவும் இல்லை என்ற வாதத்தின் அடிப்படையில் இந்தப் புதிய கருத்தோட்டத்தை உருவாக்கினர்.அடித்தளத்திலிருந்து வரலாற்றை எழுதுதல் என்ற நோக்கம் விளிம்புநிலை அறிஞர்களின் முக்கிய நோக்கம். அதனால் விளிம்பு நிலை வரலாறு வெகுமக்கள் வழக்கிலிருக்கும் வாய்மொழிக்கதைகள், பாடல்கள், சடங்குகள், வட்டாரத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு எனப் பலவற்றை ஆதாரங்களாகத் தொகுத்துக் கொண்டு வரலாற்றைச் சொல்ல முயற்சிக்கிறது

1947- இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் ஆட்சி செய்த பிரிட்டானிய ஆட்சியாளர்களுக்கும், சுதந்திரத்திற்குப் பின்னாள் இந்திய வரலாற்றை எழுதிய தேசிய வாத வரலாற்று ஆசிரியர்களும் இந்தியா முழுவதும் ஒரு விவசாய நாடு என்பதை மறந்து விட்டு வரலாற்றை எழுதினார்கள். இந்திய விவசாயிகளின் குரல்களோ, போராட்டங்களோ, நிலையோ அந்த வரலாற்றில் இடம் பெறவில்லை. எனவே, விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகத்தின் வரலாற்றை அவர்களின் வாய்மொழிச் சான்றுகளோடு பதிவு செய்வதே உடனடித் தேவை என்பது குகாவால் கொள்கையளவில் வலியுறுத்தப்பட்டது.

1980-இல் வெளிவந்த இந்தக் கொள்கை அறிக்கை இந்திய ஆய்வாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உழைக்கும் வர்க்கத்தின் பார்வையிலிருந்து வரலாறும், கலை இலக்கியங்களும் இயங்க வேண்டும் எனச் செயல்பட்ட மார்க்சிய அல்லது இடதுசாரிச் சிந்தனையாளர்கள் விளிம்புநிலைப் பார்வையால் அதிகம் ஈர்க்கப்பட்டனர். அதுவரை தங்களின் விமரிசனப் பார்வையாகக் கொண்டிருந்த வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறையையும் இயங்கியல் அணுகுமுறையையும் பின்னுக்குத் தள்ளிவைத்து விட்டு விளிம்புநிலை நோக்கை முதன்மைப் படுத்தத் தொடங்கினார்கள்.

கால்நூற்றாண்டைத் தாண்டி விட்ட விளிம்புநிலைச் சிந்தனை என்னும் கருத்தாக்கம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அடித்தள மக்களுக்காக ஏற்பட்ட சிந்தனை, பின் காலனியச் சிந்தனை, ஒதுக்கப் பட்டோருக்கான சிந்தனை என அழைக்கப்படும் இந்தக் கருத்தியலை இந்தியாவில் வளர்த்தெடுத்தவர் களாகச் சிலரைக் குறிப்பிடலாம். வங்காளத்தைச் சேர்ந்த ரணஜித் குகாவோடு சேர்ந்து செயல்பட்ட பார்த்தா சாட்டர்ஜி, சுமித் சர்க்கார், திபேஷ் சக்கரவர்த்தி போன்றவர்கள் முன்னோடிகள், தமிழ்நாட்டில் அச்சிந்தனையைக் கல்விப் புலத்திற்குள் அறிமுகம் செய்தவராக எம்.எஸ்.எஸ். பாண்டியனைக் குறிப்பிடலாம்.

வரலாற்றுப் புலத்தில் தொடக்கம் பெற்ற விளிம்புநிலைச் சிந்தனைகள் பின்னர் பல்வேறு சிந்தனைகளோடு இணைத்துக் கொண்டு வெவ்வேறு துறைகளுக்குள்ளும் பயணம் செய்திருக்கிறது. அமைப்பியல், பின் அமைப்பியல் கருத்தாக்கங்களையும், பின் நவீனத்துவச் சிந்தனைகளையும் உள்வாங்கிக் கொண்ட பல எழுத்தாளர்கள் விளிம்புநிலைச் சிந்தனைகளையும், தங்களது படைப்புக்கான அடித்தளமாக இன்று கருது கின்றனர். இந்தியச்சூழலில், அதன் சமூகக் கட்டமைப்பை மையம் , விளிம்பு எனப் பிரித்துப் பேசுபவர்கள் மிகச் சுலபமாக யார் ஓரத்தில் உள்ளவர்கள், யார் மையத்தில் அதிகாரம் செலுத்துபவர்கள் என அடையாளப் படுத்தி விட முடியும்.

அரசியல் சட்டப்படி மனுஷ்மிருதி ஆட்சியில் இல்லையென்றாலும் மக்களின் மனநிலையில் அந்த நூல் வகுத்துக் கொடுத்த வேறுபாடுகள் இன்னும் ஆழமாகப் பதிந்துள்ளன. அகற்றப்படும் சூழலும் இல்லை. எனவே ஐந்தடுக்குத் தன்மை கொண்ட இந்திய சாதிக் கட்டமைப்பு ஐந்தாவது பிரிவினரான பஞ்சமர்கள் அல்லது தீண்டத் தகாதவர்களை ஓரத்து மனிதர்கள் அல்லது விளிம்புநிலை மனிதர்கள் என முன்பே வரையறை செய்திருக்கிறது.எனவே இந்தியச் சூழலில் விளிம்புநிலை ஆய்வுகள் முதன்மைக் கவனம் தந்து பேச வேண்டிய மனிதர்களாகப் பஞ்சமர்களையே அடையாளப்படுத்த வேண்டும். இந்தப் பின்னணியில் தான் 1990-க்குப் பின் இந்தியாவில் எழுந்த தலித் எழுச்சி, தலித் போராட்டம், தலித் கலை இலக்கியங்கள் போன்றவை விளிம்புநிலைப் பார்வைக்குள் வந்தன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த மனிதர்களை ஐந்தாகப் பிரித்த போதும் பாலின அடிப்படையில் ஆண், பெண் எனப் பிரிக்கப்படும் உயிரியல் பிரிவையும் , மேல், கீழ் என அடையாளப்படுத்தியுள்ளது. ஆண்களை மையமிட்ட கருத்துகளையும், ஆண்களுக்கான அதிகாரத்தைத் தடையின்றி வழங்கும் உரிமைகளையும் இலக்கியங்கள் வழங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக நீதிநூல்கள் அத்தனையும் ஆண்களுக்கான ஒன்றாகவே எழுதப் பட்டுள்ளன.

ஆண், பெண் என்ற வேறுபாட்டில் பெண்களை விளிம்புநிலை மனிதர்களாகக் கணிப்பது என்பது இந்திய சமூகத்தில் மட்டுமல்ல; உலக அளவிலும் நடந்தே வந்துள்ளது.19-ஆம் நூற்றாண்டில் எழுந்த பெண்களுக்கான இயக்கங்களால் உருவாக்கப்பட்டுப் பெண் தன்னிலைப்படுதல், பெண்சமத்துவம் பேணுதல், பெண் உரிமை வேண்டல், பெண் விடுதலையை அவாவுதல் என்பனவற்றை மையமிட்ட பெண்ணியச் சிந்தனைகளும் இயல்பாகவே விளிம்புநிலைச் சிந்தனைகளுடன் சேர்ந்து கொண்டன. இந்தப் பின்னணியில் இந்தியாவில் ஆய்வு செய்யும் எந்த ஓர் ஆய்வாளரும் விளிம்புநிலை ஆய்வுகள் என்ற பொருளைத் தேர்வு செய்கிற போது தலித்துகள், பெண்கள் என்ற இரண்டு கூட்டத்தையும் விலக்கி விட்டுச் செல்ல முடியாது. அவை இந்திய சமூகக் கட்டுமானத்தில் முக்கியமான விளிம்புநிலைக்¢ குழுமங்கள்.

திருக்குறளின் கட்டமைப்பும் மைய நோக்கமும் :

வரலாற்றை எழுதுவதற்கு இலக்கியங்களை-குறிப்பாக வாய்மொழி வழக்காறுகள் உள்பட்ட நாட்டார் இலக்கியங்களை முதன்மைத் தரவுகளாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் விளிம்பு நிலைப் பார்வையின் அடிப்படையில் பழந்தமிழ்ப் பனுவல்களுள் ஒன்றான திருக்குறளை வாசிப்பதும் மதிப்பீடு செய்வதும் பொருத்த மற்றது எனச் சுலபமாகத் தள்ளி விடத் தோன்றலாம். ஆனால் திறனாய்வின் பன்முகத்தன்மையை முழுமையாக அறிந்த ஒருவரால் அப்படிச் சுலபமாகத் தள்ளிவிட முடியாது.

ஒரு பனுவலை அதன் தோற்றக் காலத்தின் சூழலில் வைத்து வாசிக்க வேண்டும் என்பது திறனாய்வில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு வாக்கியம். அப்படி வாசிக்கப்படும்போதுதான் அந்தப் பனுவல் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்ற வினாவிற்கான விடையைக் கண்டு பிடிக்க முடியும். ஒரு பனுவலின் உள்கட்டமைப்பையும், வெளிப்பாட்டு முறையையும், அதன் தொனியையும், அதற்கேற்பப் பயன்படுத்தும் மொழியையும் கொண்டு அப்பனுவலின் மைய நோக்கத்தைக் கண்டறிந்து சொல்லி விடலாம்.அப்படிச் சொல்லுவதே திறனாய்வின் முதன்மையான பணி ஆகும்.இத்தகைய நோக்கில் திருக்குறளை வாசிக்கும் ஒருவர், அப்பனுவல் தெளிவான -அதிகார அடுக்குகள் வரன்முறைப் படுத்தப்பட்ட சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது என்பதைக் கண்டறிய முடியும். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் கூட்டத்திற்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்ட மையமாக அரசமைப்பும் (State),அதன் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பல்வேறு சமூக நிறுவனங்களுக்குள் முறைப்படுத்தப் பட்ட குடும்ப அமைப்பும் மிகமிக இன்றியமையாதவை என்பதை வலியுறுத்தும் நோக்கம் திருக்குறளின் கட்டமைப்பிலேயே வெளிப்படுகிறது

அறம்,பொருள்,இன்பம் என்ற மூன்று பெரும்பிரிவுகளுக்குள் ஒன்பது உட்பிரிவுகள் இருக்கின்றன. பெரும் பிரிவுகளைப் பால் என்ற சொல்லால் குறிக்கும் திருவள்ளுவர் உட்பிரிவுகளை இயல் என்ற பெயரால் சுட்டுகின்றார். அறத்துப்பாலின் உட்பிரிவுகளாகப் பாயிரம், இல்லற இயல், துறவற இயல், ஊழ் இயல் என்ற நான்கையும் பொருட்பாலின் உட்பிரிவுகளாக அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்ற மூன்றையும், காமத்துப் பாலின் உட்பிரிவுகளாகக் களவியல் , கற்பியல் என்ற இரண்டையும் கூறுகின்றார். இந்த ஒன்பது இயல்களுள் பாயிரம் தவிர்ந்த எட்டு இயல்களும் அவரது மைய நோக்கமான அரசமைப்பு, குடும்ப அமைப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கம் கொண்டன. அரசியல், அங்கவியல் என்ற இரண்டு இயல்களும் அரசமைப்பு முறைகளையும், கூறுகளையும், கடமைகளையும், விதிகளையும் விரிவாகப் பேசுகின்றன. இவ்விரு இயல்களுக்குள் இருக்கும் அதிகாரங்கள் பெரும்பாலும் மையப்படுத்தப் பட்ட அரசதிகாரத்தின் தேவைகளை முழுமையாக வலியுறுத்துவன என்பதுபோல அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இல்லற இயல், துறவற இயல், என்ற இரண்டு இயல்களும் குடும்ப அமைப்பின் தேவையையும் அவ்வமைப்பில் ஆணின் முதன்மையையும் வலியுறுத்தும் நோக்கம் கொண்டன என்பதை எடுத்துக்காட்டுகள் தந்து இன்றும் விளக்கத் தேவையில்லை.

இன்பத்துப் பாலில் இடம் பெறும் களவியல், கற்பியல் என்ற இரண்டு இயல்களிலும் இடம் பெறும் அதிகாரங் களையும் அவற்றின் குறள் பாக்களையும் வாசிக்கும் போது தொல்காப்பியர் கூறும் அகத்திணை மரபின் தன்மைகளைக் கூறுவன போல் தோன்றினாலும், அம்மரபிலிருந்து பெருமளவு விலகலைக் குறள் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. சங்க அக இலக்கியப் பாத்திரங்களில் தலைவன், தலைவி என்ற இரண்டை மட்டுமே இக்குறள்களில் காண முடியும். பிற அகப்பாத்திரங்களின் கூற்றுகளாகக் குறட்பாக்கள் எதுவும் இல்லை. அன்பின் ஐந்திணைகளை விரிவாகப் பேசும் சங்க அக மரபிலிருந்து விலகி, களவு, கற்பு மட்டுமே அக்குறள்களில் இடம் பெற்றுள்ளன. இவையெல்லாம் உணர்த்துவன ஒன்று தான். வள்ளுவருக்கு தான் வாழ்ந்த காலத்தில் தோன்றிய அல்லது தோன்றி இறுக்கம் பெறத் தொடங்கிய நிலமானிய அரசமைப்பை முறைப்படுத்துவதும், அதன் கீழ் ஆணின் தலைமையை உறுதியாகக் கொண்ட குடும்ப அமைப்பை வலுப்படுத்துவதும் தான் முதன்மை நோக்கங்களாக இருந்தன என்பது தான்.

திருக்குறளின் மெய்கூறு முறையும் விளிம்புநிலைப் பாத்திரங்களும்

திருக்குறளின் இயல் பகுப்புக்களோடு அதிகாரப் பெயரிடல்களையும் பார்க்கும் போது திருவள்ளுவரின் சொல்லாடல் முறை விளக்குவது; ஆதரிப்பது; எதிர்நிலைப்பாடு கொண்டு நீக்க முயல்வது என்பதாக அமைந்துள்ளது. அரசன் முதல் இரப்போன் வரையுள்ள மனிதர்களிடம் இருக்க வேண்டிய தனி மனிதக் குணங்களையும், அரசு முதல் காதல் வரையிலான சமூக ஒப்பந்தங்களால் ஆன நிறுவனங்களின் இயல்பையும் விளக்குவது, ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற மெய்காண் முறையிலேயே தனது சொல்லாடல்களை அமைத்துள்ளார் வள்ளுவர். இக்கட்டுரையின் மைய நோக்கத்திற்கேற்ப விளிம்புநிலைப் பாத்திரங்களான பெண்கள், மற்றும் சமூகப் படிநிலையின் கடைநிலை மனிதர்கள் பற்றிய குறள்களை மட்டும் எடுத்துக்காட்டாகக் காணலாம்.

குடும்ப அமைப்பைத் தீவிரமாக வலியுறுத்தும் வள்ளுவர் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு என்ற அதிகாரங்களில் அவற்றின் இயல்புகளை விளக்கிக் காட்டி ஏற்கச் செய்கிறார்.

[அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது- இல்வாழ்க்கை.5

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு - வாழ்க்கைத் துணைநலம்-10

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட் பேறல்ல பிற - மக்கட்பேறு.1] 
இல்லறவியலில் இடம் பெற்றுள்ள இம்மூன்று அதிகாரங்களோடு நேரடியாகத் தொடர்புடைய பிறனில் விழையாமை என்ற அதிகாரத்தின் தொனி நீக்குதல் நோக்கமா? தவிர்த்தல் நோக்கமா? என உறுதியாகச் சொல்ல முடியாத தன்மையுடன் அமைந்துள்ளது.

[பிறன்மனை நோக்காப் பேராண்மை சான்றோர்க்கு

அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு.- பிறனில் விழையாமை.8]

இவற்றின் மறுதலையாக பொருளதிகார நட்பியலில் இடம்பெறும் வரைவின் மகளிர், பெண்வழிச்சேறல் ஆகியவற்றை எதிர் நிலைப்பாட்டுடன் தாக்குதல் கொடுத்து நீக்கப் பார்க்கிறார் வள்ளுவர்.

அன்பின் விழையார் பொருள்விளையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும்

பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணம்தழீஇ அற்று

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரைஇலாப்

பூரியர்கள் ஆழும் அளறு (வரைவின் மகளிர்,1,4,9)

வரைவின் மகளிரை வெறுத்து ஒதுக்கும்படி வலியுறுத்தும் வள்ளுவர் குடும்ப வாழ்க்கையில் பெண்ணின் குரலுக்கு மதிப்பளித்துச் செயல்பட்ட கணவனைக் கடுமையாகச் சாடவும் செய்கிறார்.

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது

பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

பெண்ஏவல் செய்வார்கண் இல் (பெண் வழிச்சேரல்1,7,9) இந்தக் குறள்களை வாசிக்கும் போது அக்காலகட்டத்தில் குடும்ப மகளிரும், வரைவின் மகளிரும் விளிம்புநிலையில் வைக்கப் பட்டவர்களாகவே உள்ளனர் எனக் கூறத் தோன்றுகிறது.

சமூகப்படிநிலை வேறுபாடுகள் பற்றிய பார்வையில் திருவள்ளுவருக்கு அக்கால கட்டத்துக்கு மைய நோக்கத்தோடு முரண்பாடு இருந்துள்ளது என்பது புலனாகிறது.‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்ற குறள் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பேசும் சமூக அமைப்பை மட்டுமே தவறெனக் கூறுகிறதே ஒழிய, செய்யும் தொழிலால் வேறுபாடுகள் உண்டு என்பதை ஒத்துக் கொள்ளவே செய்கிறது.

விளிம்புநிலை நோக்கில் திருக்குறளை வாசிக்கும் ஒருவர், அதில் இடம் பெற்றுள்ள ஒழிபியல் என்னும் இயலின் இடத்தையும் தேவையையும் கேள்விக்குட்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. திருவள்ளுவரின் மைய நோக்கமான அரசமைப்பையும் குடும்ப அமைப்பையும் உருவாக்கும் நோக்கத்தோடு ஒழிபியல் கொண்டுள்ள உறவுநிலை நேர்மறைத் தன்மையுடையதா? எதிர்மறைத் தன்மையுடையதா? என்று கேட்டுக் கொண்டு வாசிக்கும் போது நேர்மறை உறவல்ல என்பதை உறுதியாகச் சொல்ல முடிகிறது. குடிமை, மானம்,பெருமை,சான்றாண்மை,பண்புடைமை, நன்றி இல் செல்வம்,நாண் உடைமை,குடிப்பெருமை, உழவு, நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை என்னும் 12 அதிகாரங்களில் விரிக்கப்பட்டுள்ள குறள்கள் பெரும்பாலும் தனிமனிதர்களை நோக்கிப் பேசுகின்றன. இத்தனிமனிதர்களும் கூட மையத்தின் அதிகாரத்தையும் அதன் விதிகளையும் அப்படியே ஏற்றுச் செயல்படுவதில் விருப்பமற்ற தனிமனிதர்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அவர்களை நோக்கிப் பேசும் இக்குறள்களில் இருக்கும் தொனி கடுமையான எதிர் மனநிலைத் தொனி என்பதை ஓரிரு குறள்களை வாசித்தாலே உணர முடியும்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் (குடிமை 9,2,4) 

நற்குடிப் பிறப்பில்லாதவர்களிடமும் காட்டும் இதே கடுமையான நிலைப்பாட்டையே திருவள்ளூவர் சூதாடிகள், இரப்போர், நன்று இல் செல்வம் உடையோர், மானத்தை விரும்பாதவர்கள், கள் குடியர்கள், வரைவின் மகளிர், கயமைக்குணம் உடையோர் போன்றோரிடமும் காட்டுகிறார்.குடிமை, குடிப்பெருமை என்ற அதிகாரங்களில் இடம் பெற்றுள்ள குறள்கள், அக்காலகட்டத்தில் இருந்த வேறுபாடுகளில் உயர்குடிப் பிறந்தாரின் பக்கம் திருவள்ளுவர் இருந்ததை உறுதி செய்கின்றன.

சூதாடிகளிடத்திலும், கள்ளுண்டு திரிபவர்களிடத்திலும் காட்டுகிறார்.

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின் என்பன (சூது1,9)

அதிகாரத்தில் இருக்கும் இரண்டு குறள்கள்.

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள்ளுண் பவர்.

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார்

இவை கள்ளுண்ணாமை (6,4,2)யில் காணப்படும் குறள்கள். இந்த எச்சரிக்கைகளும் கடுமையான நிலைப்பாடுகளும் கூட அவரது மைய நோக்கத்தை ஏற்கும்படி விளிம்பு நிலை மக்களைத் தூண்டும் தன்மையுடையனவே. முறைப்படுத்தப்பட்ட அரசமைப்பிற்கும், குடும்ப அமைப்பிற்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய தனிமனித விருப்பங்களைக் கடுமையான தொனியில் பேசும் திருவள்ளுவர் அதற்காக நேர்மறை அணுகுமுறைகளையும் எதிர்மறை அணுகுமுறைகளையும் ஒருசேரப் பின்பற்றியுள்ளார். இதைக் கண்டு சொல்ல விளிம்புநிலை நோக்கு உதவியுள்ளது என்ற வகையில் அதன் கருத்தியல் இன்று தேவையாகியுள்ளது.

முடிவுரை

புதிய ஆய்வுக் கருவியான விளிம்புநிலைப் பார்வையின் ஊடாக வள்ளுவரின் திருக்குறளை வாசிக்கும் போது, அவரது காலத்தின் சூழலில் மையக் கட்டமைப்பை உருவாக்கத் தேவையான விதிகளை எழுதியவர் அவர் என்பதை ஊகிக்க முடிகிறது. மைய அமைப்பை ஏற்று நடப்பவர்களுக்கு அறிவுரைத் தொனியிலும் , மீறி நிற்பவர்களுக்கு எச்சரிக்கைத் தொனியிலும் குறள் வெண்பாக்கள் என்னும் சட்ட இலக்கியத்தை எழுதியவர் வள்ளுவர் என்பதை உறுதி செய்ய திருக்குறள் முழுமையையும் மீளாய்வு செய்ய வேண்டியது அவசியம். அப்படியான ஆய்வைத் திருக்குறளின் பெருமையைக் குறைக்கின்ற ஆய்வாகக் கருதாமல், அவரது கால கட்டத்தின் தேவை ஒன்றை உருவாக்கிய அறிஞர் என்பதை நிரூபிக்கும் ஆய்வாகக் கருத வேண்டும்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2008, மார்ச்,27,28, 29

தேதிகளில் நடக்கும் பன்முக நோக்கில் திருக்குறள் என்னும்

கருத்தரங்கில் வாசிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாத்திகம் என்னும் ஆன்மீகம்

சென்னைப் புத்தகக்கண்காட்சிப் பரிந்துரைகள்