பயணிகள் கவனிக்கவும் . . . . . .

மனமும் கண்களும் ஒன்று படும் நேரங்கள் மிகக் குறைவு. நண்பரின் வருகைக்காக ரயில் நிலையத்தின் இருக்கையில் அமர்ந்து கைவசம் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். மனம் படிக்க விரும்பினாலும் கண்கள் காட்சிகளில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. திருநெல் வேலி தொடர்வண்டிச் சந்திப்பு மாலை ஆறுமணி தொடங்கி ஒன்பது மணி வரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
திருநெல்வேலி நகரம் மட்டும் அல்ல; தமிழ் நாட்டுப்¢ பெருநகரங்கள் பலவற்றின் ரயில் சந்திப்புகளில் மாலை நேரக் கூட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. வார நாட்களை விட வெள்ளி, சனி, ஞாயிறுகளில்¢ கூட்டம் சில மடங்கு கூடுதலாகவே இருக்கும். பயணத்தைத் தொடங்குகிற பயணிகளின் கூட்டத்தை விடப், பயணத்தைத் தொடங்கு கிறவர்களை வழி அனுப்பும் கூட்டம் தான் அதிகமாக இருக்கும். எப்போதும் ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கையைப் போல் இரண்டு மடங்கு எண்ணிக்கையில் வழி அனுப்புகிறவர்கள் இருப்பார்கள் என்பது எனது எண்ணம்.

நீண்ட தூரப் பயணங்களின் விருப்பம் இரவாகவே இருக்கின்றன. அதிலும் ரயில் பயணங்கள் இரவுப் பொழுதில் விரும்பத்தக்கனவாக இருக்கின்றன. மாலை தொடங்கி நீளும் முன்னிரவு நேரம் என்பது ரயில் பயணத்தைத் தொடங்கும் நேரமாக ஆக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போதே தூங்கும் வாய்ப்பும் கழிப்பறை வசதிகளும் கொண்ட ரயில் பயணங்கள் அவ்வாறு ஆனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

பயணிகளின் விருப்பம் காரணமாகப் பல ரயில்கள் - தலைநகர் சென்னையை நோக்கிச் செல்லும் ரயில்களும் சென்னையிலிருந்து தமிழக நகரங்களை நோக்கிக் கிளம்பும் ரயில்களும் மாலை தொடங்கி முன்னிரவில் தான் கிளம்புகின்றன. திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குக் கிளம்பும் நெல்லை -சென்னை விரைவு வண்டி, கன்னியாகுமரி- சென்னை விரைவுவண்டி, அனந்தபுரி விரைவு வண்டி என மூன்று ரயில்களுமே மாலை ஆறரை தொடங்கி எட்டு மணிக்குள் சென்று விடும். வாரம் ஒரு முறை செல்லும் நாகர்கோவில் சிறப்பு ரயிலும் ஒன்பது மணிக்குக் கிளம்பி விடும். நெல்லைக்கு வருகிறவர்களை வரவேற்கவும், சென்னைக்குச் செல்பவர்களை வழி அனுப்பவும் என இன்னொரு கூட்டம் ரயில் நிலையத்தின் கலகலப்பைக் குறைய விடாது.
நண்பர் வருவதாகச் சொன்ன ரயில் திருநெல்வேலிக்கு எட்டு மணிவாக்கில் வந்து சேரும். திருவனந்த புரத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் அனந்தபுரி விரைவு வண்டியும் குருவாயூரை நோக்கிச் செல்லும் சென்னை- குருவாயூர் விரைவு வண்டியும் சந்தித்து விலகிக் கொள்ளும் சந்திப்பு நிலையம் திருநெல்வேலி.
எனது நண்பர் இரவுப் பயணத்தைத் தவிர்த்து விட்டுப் பகல் பயணத்தைத் தேர்வு செய்திருந்தார். சென்னை- குருவாயூர் விரைவு வண்டியில் தான் நண்பரின் பயணம். நண்பர் இரவுப் பயணத்தைத் தவிர்த்து விட்டுப் பகல் பயணத்தைத் தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்களைக் கூறினார்.‘’ பேச வேண்டிய கூட்டம் சனிக்கிழமைக் காலை பத்து மணிக்குத் தொடங்கு கிறது. ரயில் தாமதம் என்று சொல்லிக் கூட்டத்திற்குத் தாமதமாகப் போவதை நான் விரும்பவில்லை’’ அவர் சொன்ன முதல் காரணம். இரவு முழுவதும் பயணம் செய்து காலையில் இறங்கிக் குளித்துப் பத்து மணிக்குள் தயாராகி விடலாம் என்றாலும் பயணக்களைப்பும் சோர்வும் பேச்சிலும் விவாதத்திலும் வெளிப்படுவதை எப்போதும் விரும்புவதில்லை என்றார்.
அவர் கலந்து கொள்ள வந்துள்ள கூட்டம் ஒரு தன்னார்வ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். நதிகளைக் காப்போம் என்னும் தலைப்பில் நடைபெற இருந்தது அந்தக் கூட்டம். நண்பர் திருநெல்வேலிக்கு- மதுரையைத் தாண்டித் தெற்கே தென் மாவட்டங்களின் எல்லைக்குள் இதுவரை நுழைந்ததில்லை , இதுதான் முதல் முறை என்று தொலைபேசியில் சொல்லியிருந்தார்.
அவருக்குத் தெரிந்த தென்மாவட்டங்கள் என்பது மடித்துக் கட்டப்பட்ட வேட்டி யும், கண்களில் ரத்தச் சிவப்போடு கையில் அரிவாளோடு திரியும் தமிழ் திரைப்படக் கதாபாத்திரங்கள் தான். இந்தத் தோற்றம் கொஞ்சம் அச்சமூட்டக் கூடியது என்றாலும், சொற்களை நீட்டிப் பேசும் இசைத் தன்மை கொண்ட வட்டார வழக்கு விருப்பமானது என்றும் சொன்னார். வந்து இறங்கிய வுடனேயே அல்வாக் கொடுத்து வரவேற்கலாம் என்று கருதி அல்வாப் பொட்டணத்துடன் மாலை ஆறுமணிக்கே நெல்லை சந்திப்புக்கு வந்துவிட்டேன்.
நெல்லையில் சென்னைக்குச் செல்லும் துறை சார்ந்த ஒருவரை வழியனுப்பி விட்டுக் குருவாயூர் வண்டி வரும் வரை காத்திருப்பதற்குத் தயாராகவே வந்திருந்தேன்.கையில் சமீபத்தில் வந்த நாவல் ஒன்று இருந்தது. காத்திருப்பது துயரமானது எனச் சொல்லப்பட்டாலும் எல்லா நேரமும் அப்படிப்பட்டதில்லை.
காத்திருப்பதைப் பயனுள்ளதாக ஆக்குவதும் நம் கையில் தான் இருக்கிறது. காத்திருக்கும் போது புத்தகத்தைப் படிக்கலாம் அல்லது மனிதர்களைப் படிக்கலாம்.நண்பரை வரவேற்பதற்காக நான் காத்திருந்த நாள் ஒரு வெள்ளிக் கிழமை. கூட்டத்திற்குக் குறைவில்லை. மனிதர்களின் வெவ்வேறு மனநிலை களைப் படிப்பதற்கும், உரையாடல்களைக் கேட்பதற்கும் பொருத்தமான இடம் ரயில் நிலையங்கள் என்றே சொல்வேன்.
மனித வாழ்வின் அத்தனை வகையான உணர்வுகளோடும், நோக்கங் களோடும் காத்திருந்து ரயிலேறும் பயணிகளும், வழியனும் சுற்றமும், நட்பும், வரவேற்கும் உறவுகளும், பணியாளர்களும் என மனித உணர்வுக்கலவையின் கொள்கலன் ரயில் என்பது எனது கணிப்பு.பகல் நேரத்துப் பயணத்திற்கு நண்பர் சொன்ன இரண்டாவது காரணம் எனக்கும் உடன்பாடானது . புதிய பயணங்களைப் பகல் நேரத்துப் பயணமாக அமைத்துக் கொள்வதையே நானும் செய்வேன்.
வழக்கமான பாதைகளில் செல்லும் பயணங்கள் என்றால் இரவு நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். ஒய்வை முதன்மையாகக் கருதுவதால் இரவுப் பயணமே அதற்கு ஏற்றது. புதிய இடங்களுக்கு, புதிய பாதைகளில், செல்லும் பயணங்கள் என்றால் பகல் நேரத்தில் பாசஞ்சர் வண்டிகளையே நான் விரும்புவேன். சென்னையிலிருந்து கிளம்பிய நண்பர் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டு காலிப் பாட்டில்களைப் பாத்திரமாகக் கொண்டு வந்திருந்தார்.
அடுத்த நாள் பேச்சின் போது அந்தக் காலி பாட்டில்களை வரிசையாக வைத்து விட்டுப் பேச்சைத் தொடங்கினார். வரும் வழியில் தான் பார்த்த எல்லா நதிகளும் நீரின்றி வற்றிப் போய்க் கிடக்கிறது என்பதைப் பார்வை யாளர்களிடம் சித்திரமாகத் தீட்டிக் காட்டினார். ஓடைகளாக மாறிய ஆறுகளின் மணல் லாரிகளில் அள்ளப்பட்டுச் சாலைகளில் வரிசையாகச் செல்வதை நீங்கள் பார்த்ததில்லையா? என்று கேட்டுவிட்டு நிறுத்தினார்.
நதிகளைக் காப்பது என்பது லாரிகளில் செல்லும் மணல் பயணங்களைத் தடுப்பதில் முதன்மையாக இருக்கிறது என்று சொன்ன போது கூட்டம் மெதுவாக கைதட்டியது. சிறிய அமைதிக்குப் பின் வரிசையாக அடுக்கப் பட்டிருந்த பாட்டில்களின் வியாபாரப் பெயரை வாசித்து காட்டினார். பெண்ணை, அமராவதி, பாலாறு, காவிரி, வைகை, சிறுவாணி, சிற்றாறு, பரணி என நதிகளின் பெயரும் ஐந்தருவி, சுருளி அருவி என அருவிகளின் பெயரும் வியாபாரப் பெயராக மாறியிருந்தன.
தமிழ் நாட்டு நதிகளும் அருவிகளும் பாட்டிலில் அடைக்கப்பட்டு பாலின் விலையைக் காட்டிலும் கூடுதலாக விற்கப்படுகின்றன. உடல் நலம் பேணுவ தாகக் கருதி நடுத்தர வர்க்க மனிதர்கள் அரை லிட்டர் தண்ணீரை எட்டு ரூபாய் கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். அச்சமூட்டி வாங்கச் செய்து பழக்கப்படுத்தும் நுகர்வுக் கலாசாரத்திலிருந்து மனிதர்களை விடுவிக்காமல் எதனையும் காக்க முடியாது என்று பேசி முடித்த போது கையொலி பேரொலியாக மாறியது.
பயணிகள் வண்டி எண், புறப்படும் நேரம், இருக்கை எண் என்பனவற்றை மட்டும் கவனிப்பவர்களாக இருக்க வேண்டியதில்லை. உடன் வரும் பயணி யையும், விலகிச் செல்லும் கிராமங்களையும் சூடு கிளம்பும் புஞ்செய்க் காடு களையும்கானல் நீர் தகிக்கும் கரிசல் பூமிகளையும் கவனித்துக் கொள்ளலாம். அப்படிக் கவனிக்க ஏற்ற பயணம் பகல் நேரத்துப் பயணங்களே.
பகல் நேரத்துப் பாசஞ்சர் வண்டிப் பயணம் என்பது அறிதலின் திறவுகோல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்