இமையம் - கலைஞர் மு. கருணாநிதி சந்திப்பு: ஒரு நினைவோட்டம்
அன்று காலை இந்தப் படத்தைத் தனது பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.அதன் பக்கத்தில்: வாழ்வில் நிகழ்ந்த அற்புத கணம் என்ற குறிப்பும் தந்திருந்தார். தொலைபேசியில் பேசியபோது உற்சாகமாக இருந்தார் இமையம்.. இமையத்தோடு எனக்குக் கால் நூற்றாண்டுப் பழக்கமுண்டு; அதனை நட்பென்று சொல்ல முடியாது. நண்பர்களிடம் மற்றவர்களைப் பற்றி விவாதிக்கலாம்; அவர்களின் நிறைகுறைகளைச் சொல்லமுடியாது. பழகியவர்களிடம் இரண்டையும் சொல்லலாம். இது எனது புரிதல். பக்தன் கடவுளைக் கண்டதாக நினைக்கும் தருணத்தை உச்சரிக்கும் சொல்லால் குறிப்பிடும் இமையத்திற்குக் கலைஞர் கருணாநிதியின் மீது இருப்பது அசைக்க முடியாத பக்தி. அந்தப் பக்தி திராவிட இயக்கத்தின் மீதும் உண்டு; ஆனால் கொஞ்சம் வேறுபாடுகளுடன். அந்த வேறுபாடுகள் தான் முற்றமுழுதான மூட நம்பிக்கையாக நினைக்காமல், நம்பிக்கையாக ஆக்கியிருக்கிறது. திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் மீது செலுத்தியிருக்கும் தாக்கம், மாற்றம், உண்டாக்கியிருக்கும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மீது இமையத்திற்கு அபரிமிதமான நம்பிக்கையும் ஈர்ப்பும் உண்டு.