குஷ்பு:தமிழ் விரோதமா? பாதுகாப்பா?
இந்த இரண்டாம் கட்டப் போர் ஒருவிதத்தில் குதிரைப் படைத் தாக்குதல் என்று வருணிக்கத்தக்கது. சட்டம் என்னும் குதிரை ஏறி வாதம், மறுப்பு, சாட்சி, நிபந்தனைகள் என்று பலவித வாள்களுடன் தமிழ்ப் பண்பாடு காக்கும் வீரத்தமிழர்கள் நீதிமன்றக் களங்களில் குஷ்புவைச் சந்திக்கத் தயாராகியுள்ளனர். பழம்பெரும் நகரமான மதுரையம்பதியிலிருந்து தொடங்கிவிட்ட இந்தப் போர் திருச்சி, நெல்லை, சேலம் என்னும் மாநகரங்களின் மாவட்ட நீதிமன்றக் கூண்டுகளிலும், சங்கரன்கோவில், திருக்கோவிலூர், கோவில்பட்டி எனச் சிறு நகரங்களின் தாலுகா நீதிமன்றக் கூண்டுகளிலும் நடைபெறப்போகிறது.