Sabado, Hunyo 28 2008

களவு போகும் கொண்டாட்டங்கள்


பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன- இந்த மரபுத்தொடரை கிரிக்கெட் பற்றி இந்தியப் பத்திரிகைகளில் எழுதும் செய்தியாளர்களும், கட்டுரையாளர்களும் தொடர்ந்து பயன் படுத்த முடியாது.அர்த்தமிழந்த வாக்கியங்களை, அபத்த வாக்கியங்கள் என்று தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்துபவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த வாக்கியத்திற் கான அர்த்தத்தை நூறு சதவீதம் காலியாக்கி விட்டது சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல்.இருபதுக்கு/20 போட்டிகள்.
உயிரினங்களின் பரிணாமக் கோட்பாட்டை விளக்கிய சார்லஸ் டார்வினின் சூழலுக்கு மாறுவதே வாழும் என்ற விதியை நன்கு உணர்ந்துள்ள கிரிக்கெட்டின் ஆதரவாளர்கள் அதனைச் சரியாகவே பயன்படுத்துகின்றனர். ஐந்து நாள் நின்று நிதானமாக ஆடிக் கொண்டிருந்த கிரிக்கெட் விளையாட்டு, ஒரே நாளில் ஐந்து இன்னிங்ஸ் ஆடும் விதமாக மாறியதை என்ற டார்வினின் கோட்பாட்டைக் கொண்டு தானே விளக்க வேண்டும். ஒருநாள் ஆட்டமாக மாற்றிக் கிரிக்கெட்டைத் தக்க வைத்த அதன் சித்தாந்திகள் இன்று, இருபதுக்கு /20 என்ற வடிவத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்துடிப்பை வேகப்படுத்தி விட்டனர்.
கிரிக்கெட்டின் ஆதரவாளராகவும் திறந்த நிலைப் பொருளாதாரத்தின் விதிகளைக் கற்றுத் தேறியவருமான லலித் மோடி அதைப் பணங்காய்க்கும் மரம் என்று உறுதி செய்து விட்டார்.மேல் தட்டு மக்களின் விளையாட்டு என்ற சொல்லாடலை ஒரு நாள் போட்டிகள் காணாமல் செய்தன. நாள் முழுவதும் மைதானத்திலோ, தொலைக் காட்சிப் பெட்டியின் முன்போ உட்கார்ந்து கிடக்கும் ‘சோம்பேறிகளின் விளையாட்டு; நேரங்கொல்லும் கருவி’ என்றெல்லாம் பேசிய இடதுசாரிகளே கிரிக்கெட்டின் தீவிர ஆதரவாளர்களாகவும், ரசிகர்களாகவும் மாறி விட்டனர். கங்குலியின் அணித்தலைவர் பதவி பறிக்கப் பட்ட போது ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆளும் இடது முன்னணியினர் என்பதைப் பத்திரிகைகள் சொன்ன போது ஆச்சரியமாகத் தான் இருந்தது. மேற்கு வங்க அமைச்சர்கள் கூட கங்குலிக்கு ஆதரவாக அறிக்கைகள் விட்டதுண்டு.
கிரிக்கெட்டிற்கு எதிரான எல்லாக் கருத்துக்களையும் வீரேந்திர சேவாக் அடிக்கும் அதிரடி ஆறின் வேகத்தில் நொறுக்கும் உத்தியை இருபதுக்கு / 20 போட்டியின் வடிவமைப்பாளர்கள் கண்டறிந்து விட்டனர். மாலை நேரத்தில் தொடங்கி இரவு உணவுக்கு முன்பாக முடிந்து விடும் வகையில் போட்டி நேரம் குறுக்கப்பட்டுள்ளது. தன்னை- தனது வடிவத்தை மாற்றிக் கொண்டு நிலைத்து நிற்கத் தொடங்கி இருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது புதிதான குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை.
பன்னாட்டுக் கம்பெனிகள் ஏலம் எடுக்கப்படும் பொருட்களாக இந்திய அணியின் அதிரடி வீரர் தோனியும் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ§ம் (அதிக விலைக்குப் போன குதிரைகள்) ஆக்கப் பட்ட போது கிரிக்கெட்¢டின் ரசிகர்களும் அதன் ஆதரவாளர்களும் கொஞ்சம் கலங்கித் தான் போனார்கள். வியாபார உத்திகளில் ஒன்றான ஏலமுறை விளையாட்டின் கூறாக மாறுகிற போது விளையாட்டும் வியாபாரமாக மாறிப்போகும் என்பது ரசிகர்களின் கவலையாக ஆனது.இதுவரை கிரிக்கெட்டில் நடந்த மாற்றங்களையும், மற்ற விளையாட்டுக்களிலிருந்து தன்னை விலக்கி வைத்துக் கொண்டு ஆடம்பரமான அடையாளத்துடன் வளர்ந்து வருவதையும் தொடர்ந்து கவனித்து வரும் பலருக்கு இந்தக் கவலை அர்த்தமற்றது என்பது புரியக் கூடும். ஏனென்றால் கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் எல்லா நேரத்திலும் வியாபாரத்தோடும் வியாபார உத்திகளோடும் மட்டுமே நெருங்கிய தொடர்புடையதாக இருந்துள்ளது.விளையாட்டின் உத்திகளுக்கு அது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டைக் கட்டுப்படுத்தும் பிசிசிஐ எனப்படும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பதே அரசின் வாரியம் அல்ல. தன்னிச்சையான அதிகாரம் கொண்ட வாரியம் . அதன் கிளைகளுக்கும் மைய அமைப்புக்கும் நடக்கும் தேர்தல்களும் கூட தன்னிச்சையானவை. அவற்றை அவ்வமைப்பு உருவாக்கிய விதிகளும், நெறிமுறைகளும் தான் கட்டுப்படுத்தினால் உண்டு. இந்திய அரசின் விளையாட்டு அமைச்சகமோ, அவற்றின் பொதுவான நடைமுறைகளோ கட்டுப் படுத்துவதில்லை.இந்தியாவின் நீதிமன்றங்கள் கூட அதிகம் மூக்கை நுழைப்பதில்லை. இந்தக் காரணங்களால் தான் மற்ற விளையாட்டுக்களை விடக் கிரிக்கெட் பரவலான கவனிப்பையும் மாற்றங்களையும் அடைந்து வந்துள்ளது என்று சொல்பவர்கள் கூட உண்டு.
தன்னாட்சி அமைப்பான கிரிக்கெட் வாரியம் நடத்தி வந்த போட்டிகளையே இந்தியாவின் விளையாட்டுப் போட்டியாகவும், அதற்குத் தேர்வு செய்யப்பட்ட வீரர்களையே இந்தியக்¢ கிரிக்கெட் அணியாகவும் நமது அச்சு ஊடகங்களுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் முன்னிறுத்தி வந்தன. இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களும் அவற்றை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வந்தனர்.ரசிகர்கள் மட்டுமல்ல; பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் குடியரசுத் தலைவர்களும் கூட அந்த அடிப்படையிலேயே பாராட்டுப் பத்திரங்களையும் பரிசுகளையும் வழங்கி வந்தனர்.
இப்போது இந்த ரகசியங்களும் புனைவுகளும் களையத் தொடங்கியுள்ளன. கிரிக்கெட்டின் உள் ரகசியங்களையும் புனைவுகளையும் இதுவரைக் கட்டிக் காத்து வந்த இந்தியக் கிரிக்கெட் வாரியமே இப்போது களைத்துப் போடும் வேலையையும் செய்து விட்டது. பன்னாட்டு வீரர்களை அவர்களது தேச அடையாளங்களை நீக்கி வெவ்வேறு அணிகளில் இடம் பெறச் செய்தது புனைவுக் களைவின் முதல் படி எனலாம். கங்குலி தலைமையிலான இந்திய அணியை மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டித் திட்டம் போடும் ரிக்கி பாண்டிங், கங்குலியின் தலைமையில் நான்கு போட்டிகளில் விளையாடி 39 ரன்கள் மட்டுமே எடுத்து விட்டு ஆஸ்திரேலியா திரும்பினார் என்பதை நினைத்துப் பாருங்கள். அதே போல் இலங்கையின் முன்னணி மட்டையாளர்களின் விக்கெட்டைச் சாய்க்க முத்தையா முரளிதரன் தனது தூஸ்ரா வீச்சால் பல தடவை முயன்றதும் இந்தப் போட்டியில் தான் நடந்தது. ஒரே ஒரு நாள் மட்டும் விளையாண்டு நான்கு ஓவர்கள் பந்து வீசி நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்த ஷோயப் அக்தரை கங்குலியும் அவரது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர் ஷாருக்கானும் தோளில் தூக்கி வலம் வந்தார்கள். தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித்தும்,ஜாக் கல்லீஸ§ம் நிதினியும் விளையாடும் பன்னிரண்டு பேரில் இடம் பெறாமல் பெவிலியனின் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்ததும் நடந்து முடிந்து விட்டது. இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் எனக் குறி வைத்துக் கொண்டிருக்கும் மன்பிரித் கோனியும் யோமகேஷ§ம் வீரேந்திர சேவாக்கையும் சச்சின் டெண்டுல்கரையும் வீழ்த்தி விட்டுத் துள்ளிக் குதித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரசிங் தோனி, சென்னை அணியின் தலைவராக மாறி, வேட்டி கட்டி, மீசை வளர்த்து சென்னைத் தெருக்களில் வலம் வந்தார். சென்னையைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் முரளி கார்த்திக்கும் டெல்லி அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் முயற்சியில் ஷார்ன் மார்ஷ§ம், ஷேன் வாட்சனும் தடாலடியாக விளையாடி பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியையும், ராஜஸ்தான் ராயல்ஸையும் வெற்றி பெறச் செய்து கொண்டிருந்தனர். இவற்றிற் கெல்லாம் மேலாக பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள பன்னிரண்டு பேரும் இந்தியா வந்து ஒவ்வொரு அணியிலும் இடம் பிடித்துக் கொண்டு இன்னொரு பாகிஸ்தான் வீரருக்கு எதிராகப் பந்து வீசிக் கொண்டும் மட்டையைச் சுழற்றிக் கொண்டும் இருந்த அதிசயம் இந்த ஐ.பி.எல் போட்டியில் தான் நடந்தன.
இந்த மாற்றங்களைப் பாரம்பரியமான கிரிக்கெட்டின் ரசிக மனம் ஏற்கத் தயங்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா விளையாட்டையும் தேசத்தின் விளையாட்டாகவும், அந்த அணியின் வெற்றியைத் தேசத்தின் வெற்றியாகவும், அந்த அணியில் இருக்கும் ஒரு வீரருக்கு நேர்ந்த அவப் பெயரைத் தேசத்திற்கு நேர்ந்த அவமானமாகவும் கருதி வந்த மனம் திடீரென்று அதிலிருந்து விலகி நிற்பது சிரமமான ஒன்றுதான். தேசம், தேசநலன், தேசப்பற்று என்ற புனிதமான ஒன்றுடன் இணைக்கப் பெற்ற ஒன்றை அதிலிருந்து பிரித்து முதலாளிகளின் பெயரோடு இணைத்துக் கோர்ப்பது ஏற்க முடியாத ஒன்று என்றாலும் நடந்து முடிந்து விட்டது அதுதான்.
ஆங்கிலம் ஓர் உலக மொழி. ஆனால் இந்தியாவில் நடத்தப்படும் ஆங்கிலப் பத்திரிகைகள் எப்போதும் தேச வெறியைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன என்பதற்குத் தனியாகப் புள்ளி விவர ஆய்வுகள் செய்து நிரூபிக்க வேண்டியதில்லை. கிரிக்கெட் பற்றி எழுதும் செய்திக் கட்டுரைகளையும், விமரிசனக் கட்டுரை களையும் படித்தாலே போதும். அக்கட்டுரைகளுக்குப் பக்கத்தில் வெளியிடும் படங்களையும் அதோடு சேர்த்துக் கொள்ளலாம். தென் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் போது பாகிஸ்தான் அணியினருடன் இந்திய அணியினர் பீரங்கி யுத்தம் நடத்தப் போவதாகப் படங்கள் போட்டவை தான் அவை. அதன் விளைவுகள் பலவிதமானவை. ஆங்கிலப் பத்திரிகைகள் உண்டாக்கும் தேசப் பற்று வெறும் தேசப் பற்றாக மட்டும் இருப்பதில்லை. மதப் பற்றாகவும் பல நேரங்களில் வெறியாகவும் கூட இருந்திருக்கிறது.
ஆங்கிலப் பத்திரிகைகளின் பெரும்பான்மைப் பணியாளர்களும் வாசகர்களும் பெரும்பான்மை இந்து மதத்தின் உயர் அடுக்கைச் சேர்ந்தவர்கள் என்பதால்,அவர்களின் மனவியல் விருப்பங்கள் சார்ந்தே அவை இயங்குகின்றன. இந்த அடுக்கைச் சேர்ந்தவர்களே இந்தியாவின் நடுத்தர வர்க்கமாகவும் உயர் நடுத்தர வர்க்கமாகவும் இருக்கின்றனர். மாறி வரும் தாராளமயப் பொருளாதாரத்திற்கு ஏற்றவர்களாக இந்திய நடுத்தரவர்க்கத்தைத் தகவமைக்க கிரிக்கெட் விளையாட்டு ஏற்றதொரு கருவி என்று உணரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட அதே வேளையில் துணை விளைவாகத் தேசப்பற்று உருவாக்கமும் சாத்தியம் என்பது உணரப்பட்டது.
உலகக் கோப்பைப் போட்டிகள் என்ற நிகழ்விற்காக ஒரு நாள் போட்டிகள் வடிவமைக்கப்பட்ட போதே இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டன.இப்போது இருபதுக்கு / 20 தேச அடையாளத்தைக் கைவிட்டுவிட்டு வியாபார அடையாளத்திற்குள் நுழைந்திருக்கிறது. கிரிக்கெட் ஒரு விளையாட்டு; அது தேசத்தின் அடையாளமோ புனிதமோ அல்ல என்பதை உணர்த்தும் மாற்றம் வரவேற்கப்பட வேண்டிய மாற்றமே. இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் போது தான் இந்திய வெற்றிக்காக யாகம் வளர்ப்பதும், பூஜை செய்வதும் நின்று போகும். பாகிஸ்தானோடு விளையாண்டு தோற்றால் முஸ்லீம் வீரர்களின் வீட்டைச் சூறையாடும் அடாவடித்தனம் மறையும். பல தடவை முகம்மது கைப்பும், ஜாகீர் கானும் அவரது குடும்பத்தினரும் குற்ற உணர்வுக்கு உள்ளாக்கப் பட்டதும், பாதுகாப்புக் கோரி காவல் நிலையத்தை நாடியதும் இந்த நாட்டில் தான் நடந்தது.
தேச அடையாளத்தை அழித்து விட்டு உருவாக்கப்பட்ட எட்டு அணிகளுக்கும் மாநிலம் சார்ந்த அடையாளம் உருவாக்கும் முயற்சிகள் கூட முழுமையாக வெற்றி பெறவில்லை. இந்தியப் பெரு நகரங்களான சென்னை, கல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், ஜெய்ப்பூர் சண்டிகர், ஆகியவற்றின் பெயரோடு சில ஒட்டுக்களைச் சேர்த்துக் கொண்டு பெயரிடப்படும் முயற்சியில் கடைசி மூன்று ஊர்களும் கண்டு கொள்ளப்படவில்லை. அணியை விலை கொடுத்து வாங்கிய முதலாளிகளின் விருப்பம் தான் பெயரிடலில் முதன்மை பெற்றது. தனது ராயல் சேலஞ்ச் என்னும் மதுபானக் நிறுவனத்தின் பெயர் தான் உருவாக்கும் அணிக்கு இடப் பட வேண்டும் என உறுதியாக இருந்து வெற்றி பெற்றார் விஜய் மல்லய்யா.
இருபதுக்கு /20 என்ற கிரிக்கெட் வடிவத்தை வரவேற்க இன்னும் சில காரணங்கள் உண்டு. இந்தியாவில் ஆகச் சிறந்த வீரர்கள் அணியில் இடம் பெறும் 15 பேர் மட்டுமே என்ற கருத்தையும் மாற்றி விட்டது. எட்டு அணிகளிலும் இடம் பெற்ற இளம் வீரர்கள் பலரை அந்தப் போட்டி வெளியே கொண்டு வந்திருக்கிறது. ஆனால் வீரர்களுக்கு ஏற்படப் போகும் நெருக்கடி களும் கடுமையானவைகளாக இருக்கப் போகின்றன.இந்த ஆண்டே இந்தியாவின் நளினமான மட்டையாளர் எனக் கருதப் பட்ட ராகுல் திராவிட் அத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்தார். லட்சுமணன் பல போட்டிகளில் விளையாடாத அணித் தலைவராகப் பெவிலியனில் உட்கார்ந்திருந்தார். கங்குலிக்கும் அவரை விலை கொடுத்து வாங்கிய ஷாருக்கானுக்கும் லடாய் என்று செய்திகள் வந்தன. தனியார் மயமாகும் எந்த ஒன்றுக்குள்ளும் மாட்டிக் கொள்ளும் தனி நபர்கள் இத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்.
ஒரு விளையாட்டு என்பதற்கு மாறாக தேசப்பற்றோடும் மதப் பற்றோடும் இணைக்கப்பட்ட கருத்தியலாகவும் கொண்டாட்டமாகவும் ஆக்கப்பட்டது கிரிக்கெட். அதிலிருந்து கிரிக்கெட்டை விடுவித்து இன்னொரு பெருவெளியான பொருளாதாரத்திற்குள் தள்ளியிருக்கிறது ஐ.பி.எ. இருபதுக்கு /20. அதற்காக அவ்வப்போது கொண்டாட்டங்களைப் பல அடுக்குக் களியாட்டங்கள் நிரம்பிய பெருநிகழ்வாகவும் வடிவமைத்து விட்டது. இப்போது கிரிக்கெட் வீரர்களின் முதல் பணி ரன்களைச் சேர்ப்பதும் விக்கெட்டுகளை வீழ்த்துவதும் பந்துகளைப் பிடித்துத் தாவிக் குதிப்பதும் என்று நினைத்தால் நீங்கள் அப்பாவி தான். கோப்பைகளை வாங்கித் தூக்கிப் பிடிக்கும் போது கையொலி எழுப்பும் மனிதர்களையும் , அதன் பார்வையாளர்களையும் நுகர்வோராக மாற்றுவதுதான் முக்கியமான வேலை. அதைச் செய்வதற்காகத்தான் ஒரு சில கோடிகள் விலையாகத் தரப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 18 தொடங்கி, ஜுன் முதல் தேதி வரை 59 போட்டிகளை நடத்தி முடித்த ஐ.பி.எல். இந்தியாவின் கோடை விடுமுறைப் பொருளாதாரத்தை மொத்தமாகத் திரட்டித் தனதாக்கிக் கொண்டுள்ளது என்பதை நிதிஅமைச்சரும் மாண்டேக் சிங் அலுவாலயா போன்ற பொருளாதாரத் திட்டமிடல் நிபுணர்களும் அறியாதவர்கள் அல்ல. பத்தாயிரம் கோடிகள் வரை புழங்கிய ஐ.பி. எல் .விளையாட்டின் வழியாக வெள்ளைப் பணமாக ஆன கறுப்புப் பணத்தைக் கண்டு பிடிக்கும் தணிக்கை முறைகள் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த இரண்டு மாதத்தில் உண்டான பணவீக்கத்திற்கும் கிரிக்கெட் பொருளாதாரத்திற்கும் கூட உறவு உண்டு என்றே பொருளாதாரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். கோடைகாலப் பயிற்சி முகாம்கள், கலைவிழாக்கள், பயணங்கள் எனப் பலவற்றிற்கும் கோடை விடுமுறைதான் வாய்ப்பான காலம். ஆனால் இந்த ஆண்டுக் கோடை விடுமுறை தொலைக்காட்சிப் பெட்டி களின் முன்னால் முடிந்து போய்விட்டன. ஒவ்வோர் ஆண்டும் வரும் கோடை விடுமுறை என்பது சுற்றுலாவின் பொருளாதாரத்தோடு, ரயில்வே, பேருந்து எனப் போக்குவரத்தின் பொருளாதாரத்தோடு, தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றின் பொருளாதாரத்தோடு தொடர்புடையது. ஆனால் இந்த ஆண்டு அவற்றில் வருவாயில் பெருமளவு குறைந்தது என்பதைக் கணக்குப் பார்த்து முடிவு செய்திருப்பார்கள்.
கோடை விடுமுறைக் கொண்டாட்டங்களை நம்பித் திரைப்படங்கள் தயாரித்து வந்த திரைப் படத்துறையினர் ஸ்தம்பித்து நின்றது இந்த ஆண்டே வெளிப்படையாகத் தெரிந்தது. தசவதாரம் தள்ளிப் போனதற்கு நீதிமன்றக் காரணங்கள் இருந்தாலும் கிரிக்கெட் கொண்டாட்டங்கள் முடியட்டும் எனக் காத்திருந்ததும் காரணம் தான். கிரிக்கெட் கொண்டாட்டங்களைக் கவனத்தில் கொள்ளாமல் பறந்து வந்த விஜய் நடித்த குருவி வேறு நேரத்தில் வந்திருந்தால் இன்னும் உயரமாகப் பறந்திருக்கும் .
ஒவ்வொரு வருடமும் வரும் கல்லூரிப் பின்னணி கொண்ட படங்கள் இனி வரப் போவதில்லை. தொலைக்காட்சித் தொடர்களில் லயித்திருந்த பெண்கள் கூட அவற்றைத் தியாகம் செய்துவிட்டுக் கிரிக்கெட்டிற்கு இந்த ஆண்டே தாவி விட்டனர் என தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.தேசப்பற்று, மதப்பற்று என்ற மாயப் புனிதங்களைக் கிரிக்கெட் தொலைத்து விட்டது என்று மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் எல்லாவற்றையும் மொத்தமாகச் சுருட்டிச் சாப்பிடும் பன்னாட்டுக் கம்பெனிகளின் கைப் பாவையாக ஆகி விட்டது என்பதற்காக வருத்தப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
எல்லா விளையாட்டுக்களையும் இல்லாமல் ஆக்கித் தன்னை நிலை நிறுத்தித் தனியாட்சி நடத்தப் போகும் கிரிக்கெட் உண்டாக்கப் போகும் எதிர்கால விளைவுகள் மக்கள் நலனுக்கு உகந்ததாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். நமது மனநிலையையும் நமது சந்ததிகளின் மனநிலையையும் காப்பாற்றுவதைப் பற்றித் தனி மனிதர்கள் நினைத்துக் கொள்வதை விடவும் நமது திட்டமிடல் வல்லுநர்கள் நினைத்துப் பார்த்து தேசத்தைக் கிரிக்கெட்டிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.

Martes, Hunyo 24 2008

அங்கீகாரத்தின் அளவுகோல்

கிணற்றிலிருந்து வாளியில் நீரிறைத்து பாத்திரத்தில் ஊற்றும் சலசலப்பு ஓசையுடன் தொடங்கி ,
அரித்தாரத்த பூசிக்கொள்ள ஆசை.. நான்..
அடவு கட்டி ஆட்டம் போட ஆசை ..
என்ற வரிகளாக விரியும் அந்தத் திரைப்படப் பாடலை நான் திரும்பத் திரும்பக் கேட்பதுண்டு.
இசையமைப்பாளர் இளையராஜா மன விருப்பத்துடன் இசை அமைத்த படங்களுள் ஒன்றான அவதாரம் படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் செவி நுகர்கனிகளில் ஒன்று. இந்தப் பாடல் என்று இல்லை; அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே திரும்பத் திரும்பக் கேட்கத்தக்க பாடல்கள் என்பது எனது கணிப்பு. இசையின் கோலங்களைப் பல வண்ணங்களில் தீட்டிப் பார்த்த கலைஞனின் வெளிப்பாடு என்று கூடச் சொல்லலாம். ஏதாவது சிக்கலில் மனம் அலையும் போதெல்லாம் அந்தப் படத்தின் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது எனது வாடிக்கை.
பார்வையற்ற பெண்ணாக நடிகை ரேவதி அற்புதமாக நடித்திருந்த அந்த படத்தை இயக்கியவர் நடிகர் நாசர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வந்த அந்தப் படம் பார்வையாளர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப் படவில்லை. ஆனால் தீவிரமாகச் சினிமாவை நேசிக்கும் ரசிகர்களாலும் விமரிசகர்களாலும் குறிப்பிடப் படும் படமாக மட்டும் அந்தப் பெயர் இருந்துகொண்டிருக்கிறது. அங்கீகரிக்கப்படாத படங்களின் பட்டியலில் அவதாரம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன்.
பாடலை நிறுத்தி திரைப்படங்களை அங்கீகரிக்கும் காட்சி ஒன்றைத் தொலைக்காட்சியில் பார்க்கத் தொடங்கினேன்.
விஜய் தொலைக்காட்சியில், அத்தொலைக்காட்சி நிறுவனம் ரிலையன்ஸ் தொலைபேசி நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் திரைப்பட விழாவின் இரண்டாம் பாகம் ஓடிக் கொண்டிருந்தது. தமிழில் ஒளிபரப்புச் செய்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் தங்கள் நோக்கத்திற் கேற்பத் திட்டமிட்டு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி அலை வரிசை விஜய் தொலைக்காட்சி. எதையும் அவசரப்பட்டு ஒளிபரப்புவதில்லை என்பதற்கு இந்தப் பரிசளிப்பு விழாவின் ஒளிபரப்பே சாட்சி.
மே மாதம் முதல்வாரத்தில் நடந்த விழாவின் காட்சிகளை ஜூன் முதல் வாரத்தில் ஒரு நாளும் இரண்டாவது வாரத்தில் ஒரு நாளுமாக ஒளி பரப்பியது. அளிக்கப்பட்ட பரிசுகளுக்கும், நிகழ்த்தப் பட்ட விழாவிற்கும் ஆன செலவைத் திரும்ப எடுக்கும் வியாபார உத்தி தெரிந்தவர்கள் அந்தத் தொலைக்காட்சியின் பின்னணியில் பணியாற்றுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.
விஜய் தொலைக்காட்சியை விட்டு விடலாம். அது வழங்கிய பரிசுகளுக்கு வருவோம்.
2007 ஆம் ஆண்டின் சிறந்த நடிகராக சத்யராஜைத் தேர்ந்தெடுத்தது. வழக்கமான தனது நடிப்புப்பாணியை மாற்றிக் கொண்டு, தங்கர் பச்சானின் நாவலில் வரும் மாதவப் படையாச்சியின் திரைக் கதாபாத்திரமாக மாறுவதில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தார் சத்யராஜ். அதே போல் சிறந்த நடிகையாகப் பிரியாமணியைத் தேர்ந்தெடுத்திருந்தது விஜய் தொலைக்காட்சி. பருத்தி வீரன் படத்தில் அசல் கிராமத்துப் பெண்ணாக மாறிப் பிரியாமணி என்ற பெயரை மறந்து முத்தழகு என்ற பாத்திரப் பெயராலேயே அழைக்கப்படும் அளவுக்குத் தமிழர்களின் மனதில் இடம் பிடித்த அவரைச் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்ததையும் யாரும் குறை சொல்லி விட முடியாது.
இன்னும் பல ஏற்கத் தக்க தேர்வுகளைச் செய்திருந்தது ஆச்சரியமூட்டும் ஒன்று.தமிழக நகரங்களில் விஜய் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட ரசிகர்களின் வாக்குகளைப் பெற்றுத் தேர்வு செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் ஏற்கத் தக்கதாகப் பெரும்பாலான தேர்வுகள் இருந்தன. கற்றது தமிழ் படத்தின்நாயகியாக நடித்த அஞ்சலி சிறந்த புதுமுக நடிகையாகவும், பருத்தி வீரனில் நடித்த கார்த்தி சிறந்த புதுமுக நடிகராகவும் அறிவிக்கப் பட்டபோது மனம் கேள்விகளற்று ஏற்றுக் கொண்டது.
சிறந்த பொழுதுபோக்குப் படங்களின் வழியாகத் தமிழர்களுக்கு உற்சாகமூட்டிய நடிகராக நடிகர் விஜய்யை அறிவித்துப் பரிசை வழங்கிய போது மனம் ஆச்சரியத்தில் மூழ்கியது.சரியான தேர்வு தான் என்று மனம் குதூகலம் கொண்டது. தமிழக ரசிகர்கள் இவ்வளவு தௌ¤வாக முடிவு செய்கிறார்கள் என்றால் ஆச்சரியம் குதூகலமும் அடையாமல் என்ன செய்வது.? எனது ஆச்சரியங்களையெல்லாம் அடுத்து வந்த அறிவிப்பு தவிடு பொடியாக்கியது. ஆம் சிறந்த இயக்குநராக பிரபுதேவாவும், விரும்பத்தக்க படமாக அவர் இயக்கிய போக்கிரியும் அறிவிக்கப்பட்ட போது மனம் அதிர்ந்து போய்விட்டது.
சிறந்த படம் என்று சொல்லாமல் விரும்பத்தக்க படம் என்று அறிவிக்கப் பட்டாலும் போக்கிரிக்கு விருது என்பதையும், அதனை இயக்கிய பிரபுதேவா விற்கு இயக்குநருக்கான விருது என்பதை என் மனம் ஒப்பவில்லை. நான் ஒப்பவில்லை என்பதை விட கொடுத்த விருதைப் பெற்றுக் கொண்ட பிரபுதேவாவே ஒப்புக் கொள்ளவில்லை என்பதைத் தான் அவரது பேச்சு காட்டியது.
பல விதமான விமரிசனங்களை எதிர் கொண்டாலும் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் இயக்குநர் தங்கர் பச்சான் அப்படத்தை இயக்குநரின் படம் என்று நிறுவிக்காட்டியவர். சிறந்த நடிகர் பரிசைப் பெற்று கொண்ட சத்யராஜ் சுட்டிக் காட்டி அந்த விருதைத் தங்கர் பச்சானுக்குச் சமர்பித்த போது எழுந்த கைதட்டல் உறுதி செய்தது. பருத்தி வீரன் படத்தை இயக்கிய அமீருக்கு விருது அளிக்கப் படவில்லை. ஆனால் அப்படத்தில் பங்கேற்ற பிரியாமணியும், கார்த்தியும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு இயக்குநர் அமீருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போகின்றார்கள்.
2007 இல் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய மொழி படமும் அதன் இயக்குநரான ராதா மோகனும் போட்டியில் இருக்கும் போது பிரபு தேவா நல்ல இயக்குநர் என்றால் அதை அவராலேயே நம்ப முடியவில்லை என்பது தான் அவரது பேச்சில் வெளிப்பட்டது. கொஞ்சம் குற்ற உணர்வுடன் விருதை வாங்கிக் கொண்ட பிரபுதேவாவைப் பாராட்டலாம்.
தமிழ் நாட்டில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கும் விருத ளிப்பில் தான் இந்த மாதிரியான முடிவுகள் வருகின்றன என்றால் விட்டு விடலாம்.
தேசிய அளவில் சிறந்த படங்களைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுவே இப்படித்தான் தேர்வு செய்கின்றது என்றால் சிக்கல் எங்கே இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.பருத்தி வீரன் பிரியாமணிக்கு அரசின் தேர்வுக்குழுவும் இந்திய அளவில் சிறந்த நடிகை என்று தேசிய விருதுக்கு தெரிவு செய்துள்ளது.சிறந்த நடிகராக வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜியைத் தேர்வு செய்துள்ளது.
தமிழில் சிறந்த படமாக வசந்த பாலன் இயக்கிய வெயில் படத்தைத் தேர்வு செய்த இதே தேர்வுக் குழு தான் ஒட்டு மொத்த இந்தியாவின் சிறந்த படமாக லகே ராஹ¨ முன்னாபாய் படத்தைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது. இந்த முன்னாபாய் படத்தின் முதல் பாகம் தான் தமிழில் கமல்ஹாசன் நடித்து வந்த வசூல் ராஜா எம்பிபிஎஸ். லகே ராஹ¨வும் அதே பாணியிலான வசூல் நோக்கம் கொண்ட படம் தான்.
நடிக, நடிகரைத் தேர்வு செய்ய ஒரு விதமான அளவுகோல்களும், இயக்குநரைத் தேர்வு செய்ய வேறுவிதமான அளவுகோல்களும் இருக்க முடியுமா? என்பது இந்த இடத்தில் எழும் முக்கியமான கேள்வியாக இருக் கிறது.
நடிகர், நடிகை, படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கலை இயக்குநர் எனப் படத்தின் கூறுகளில் சிறந்தவர்களைத் தேர்வுசெய்யும் போது கலையின் விதிகளைப் பார்க்கும் தேர்வுக்குழுக்களும், பார்வையாளர் மனங்களும் சிறந்த படம் என்றும் , சிறந்த இயக்குநர் என்றும் வரும்போது கலையின் விதிகளைப் புறம் தள்ளி விட்டு வியாபாரத்தின் விதிகளைப் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை.
வியாபாரத்தின் விதிகள் தான் முன்னாபாயையும், போக்கிரியையும் அங்கீகரிக்கும். திரைப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநருக்கான அங்கீ காரமே சிறந்த படங்கள் வர வகை செய்யும். அமீரையும், தங்கர் பச்சானையும், வசந்த பாலனையும், ராதா மோகனையும் நல்ல இயக்குநர்கள் இல்லை என்று ஒதுக்கி விட்டுப் போக்கிரி படத்தையும் அதன் இயக்குநரையும் அங்கீகரிப்பது ஆரோக்கியத்தின் வெளிப்பாடல்ல; நோய்க்கூறின் வெளிப்பாடு.
திரும்பவும் தொலைக்காட்சியிலிருந்து பாடலுக்குத் திரும்பிய போது அந்தப் பாடலின் பின் வரும் வரிகள் அர்த்தம் பொதிந்த வரிகளாகப் பட்டன.
ராக்கூத்தில வரும் சாமியெல்லாம் நிஜசாமியின்னு
பாக்காது ஊர்ஜனமே.. காசு தான்
பேரு தான்ஆசை நான் பட்டது
வேறே எதும் நான் சொல்ல வரல.

Miyerkules, Hunyo 18 2008

ஒற்றுமையில் வேற்றுமை


கல்வித்துறையில் மாற்றங்கள் என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே விவாதப் பொருளாக ஆக்கியிருக்கிறது. கடந்த ஆட்சி வரை கல்வித்துறை என்பது ஒரே அமைச்சரின் கீழ் இயங்கிய நிலையை மாற்றி, பள்ளிக் கல்விக்கென ஓர் அமைச்சரையும், கல்லூரிக்கல்வி தொடங்கி நடக்கும் உயர்கல்வித் துறைகளுக்கு இன்னொரு அமைச்சரையும் பொறுப்பாக்கியதே கூடக் கல்வித்துறை இந்த ஆட்சியில் கவனிக்கப் படத் தக்க துறையாக ஆகப் போகிறது என்பதன் குறிப்புணர்த்தலாக இருக்கலாம்.
பொறுப்பேற்றுக் கொண்ட இரு கல்வி அமைச்சர்களும் தொடக்கத்திலிருந்தே ஒரே நோக்கம் கொண்ட இரு சொற்றொடர்களை உச்சரித்த வண்ணம் உள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் சமச்சீர்க் கல்வி என்ற சொற்றொடரை அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார் என்றால் உயர் கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் பொதுப்பல்கலைக்கழகச் சட்டம் என்ற சொற்றொடரை அடிக்கடி உச்சரித்து வந்துள்ளார்.
இவ்விரண்டும் வேறுவேறான சொற்றொடர்களாக இருந்தாலும், தமிழகத்தின் அனைத்து மாணாக்கர்¢களுக்கும் ஒரே மாதிரியான கல்வியையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என நினைக்கும் அரசின் கொள்கை முடிவையே இந்தச் சொற்றொடர் வழியாகச் சொல்லி வருகிறார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. பள்ளிக் கல்வி சமச்சீர்க் கல்வியாக அமைய வேண்டும் என நம்பி முயலும் அமைச்சர் அதில் ஒட்டு மொத்தமாகச் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஏராளமாக உள்ளன.
வேறுபட்ட பின்னணிகளுடன் தொடங்கப் பட்டு நடைபெற்று வரும் பள்ளிகளின் உள்கட்டமைப்பையும், ஆசிரியப் பணிகளின் விகிதத்தையும் ஒரேசீரானதாக ஆக்கும் போதே சமச்சீரான கல்வி சாத்தியம். தொடர் நடவடிக்கைகளால் அவை சாத்தியப் படலாம். அதன் முதல் படியாகப் பள்ளிக் கல்வி அமைச்சகம் தேர்வு முறை மாற்றத்தை முன் மொழிந்து நடை முறைப் படுத்திக் கொண்டு வருகிறது.
பள்ளிப் படிப்பின் முடிவில் கிடைக்கும் மதிப்பெண் சான்றிதழில் வேறுபட்ட மதிப்பெண்கள் இல்லாமல், ஒரே மாதிரியான மதிப்பெண்கள் இருக்கும்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இம்மாற்றம் கற்கும் முறையிலும், கற்றுப் பெற்ற அறிவிலும், அவ்வறிவைப் பயன்படுத்திக் கொள்ளும் வழியில் மாற்றங்களை ஏற்படுத்தி விடப் போவதில்லை என்றாலும், கண்ணுக்குப் புலப்படும் படியான வேறுபாடு ஒன்று களையப்பட்டுள்ளது.
வரவேற்க வேண்டிய ஒன்று.இதே போல் பொதுப் பல்கலைக்கழகச் சட்டம் என்னும் முழுமையான மாற்றத்தை முன் மொழிந்த உயர்கல்வி அமைச்சகம், அம்முழுமையைத் தள்ளி வைத்துவிட்டு,பொதுவான பாடத்திட்டக் கட்டமைப்பு ஒன்றைத் தமிழகம் முழுமைக்கும் பரிந்துரை செய்துள்ளது.
ஆங்கிலத்தில் சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம் (Choice based credit system) என அழைக்கப்படும் தேர்வு அடிப்படைப் பாடஅலகு முறைத் திட்டத்தை அறிமுகம் செய்யும் விதமாக அனைத்துப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தையும் பொதுத் தன்மைக்குள் கொண்டு வரும் முயற்சியாக இப்பரிந்துரை அமைந்துள்ளது. அதனை ஏற்று இந்த ஆண்டு முதலாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பாடத்திட்டங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன.ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பைத் தொடங்கும் தவிர்க்க முடியாத காரணங்களால் இடம் மாற நேர்ந்தால் படிப்பைத் தொடர்வதில் இருந்த சிக்கலை இம்மாற்றம் எளிதாக்கக் கூடியது.
ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்கும் நிலையில் முதல் பல்கலைக் கழகத்தில் முடித்த இடத்திலிருந்து அடுத்த பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரலாம். அத்துடன் இந்தத் தேர்வு முறை இதுவரை ஆசிரியர்களை மையமிட்டு உருவாக்கப் பட்ட பாடத்திட்டத்திலிருந்து நகர்ந்து மாணாக்கர் அடிப்படை பாடத்திட்டமாக மாறுகிறது எனலாம். தான் விரும்பிச் சேரும் பாடப்பிரிவில் அடிப்படையான பாடங்களைக் கற்றுத் தேர்வதோடு, கூடுதல் விருப்பமாகப் பிறதுறைகளின் பாடங்களையும் கற்கும் வாய்ப்பு இப்புதிய முறையில் உள்ளது. முதன்மைப் பாடங்கள், சார்புப் பாடங்கள், என்ற வகைப்பாட்டிற்குப் பதிலாக வல் அலகுப் பாடங்கள் (Hardcore credit), மெல் அலகுப் பாடங்கள்,(Softcore credit), துறைசாராப் பாடங்கள், சமூக உணர்வுக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி என விரியும் தன்மை கொண்ட இப்புதிய திட்டம் ஆசிரியர்கள் மனது வைத்தால் திறமையான மாணாக்கர்களை உருவாக்கும் வாய்ப்பைத் தன்னகத்தே கொண்டதாக அமைந்துள்ளது.
ஆம் எத்தகைய பாடத்திட்டத்தையும் நிறைவேற்றும் நிலையில் ஆசிரியர்களே இருக்கிறார்கள் என்பது தவிர்க்க முடியாததாக உண்மை தான் .
அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்புதிய திட்டப்படி ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதன் விருப்பப்படி பாடங்களின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு பிரிவிலும் இத்தனைத் தாள்கள் என்னும் பொதுக்கட்டமைப்பு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. அதில் குறைக்கும் அதிகாரம் பல்கலைக் கழகங்களுக்கு இல்லை. விருப்பப் பட்டால் கூடுதலாகத் தரலாம். நிகழ்காலத் தேவையைக் கருதி கணினி அறிவு, தொடர்பு மொழிப் பயிற்சி, ஆளுமைத் திறன் வெளிப்பாடு, செய்ம்முறைக் கல்விக்குக் கூடுதல் வாய்ப்பு எனப் பாடத்திட்டங்களை அமைத்துக் கொள்ளலாம்.கூடுதலாக உழைக்கும் மாணவன் குறிப்பிட்ட கால அளவிற்கு முன்னதாகவே படிப்பை முடிக்கும் வாய்ப்புகள் கூட இம்முறையில் உண்டு.
ஒரு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தோடு வேறு பல்கலைக்கழகப் பாடத் திட்டதையம் இணைத்துக் கற்கும் முறை கூட மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் உள்ளன. அனைத்திலும் மேற்கைப் பார்த்து மாறிக் கொண்டிருக்கும் நாம் கல்வி முறையிலும் அப்படியே தொடர்கிறோம் என்ற குறைபாட்டைச் சிலர் சொல்லக்கூடும் என்றாலும் இம்மாற்றம் தவிர்க்க முடியாதது. மேற்கத்தியப் பல்கலைக் கழகங்கள் ஆசிரியர்களை மையமிட்ட பாடத் திட்டத்தைக் கைவிட்டு விட்டு மாணவனை மையமிட்ட பாடத்திட்டத்திற்கு அடுத்து நகர உள்ளன. அம்மாற்றமும் விரைவில் வரக்கூடும்.
தேசத்தின் பொருளாதார அடித்தளம் மாற்றம் அடையும் போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் மேல் தளங்களிலும் மாற்றங்கள் உருவாகும் என்பது இயங்கியல் விதி. இயங்கியல் விதி என்பது தானாக நடப்பதில்லை. நடக்கும் அடித்தள மாற்றத்திற்கேற்பச் சிந்திக்கும் மனிதர்களின் சிந்தனைத் தொகுதியின் வெளிப்பாடே இயங்கியல். இந்த இயங்கியலைப் புரிந்து கொண்டால், வேகமாக மாறிக் கொண்டிருக்கும் சந்தைப் பொருளாதாரத்தின் தேவைக்கேற்பக் கல்வியை மாற்றும் முயற்சி இது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
தவிர்க்க முடியாததும் வரவேற்கத் தக்கதுமான இந்த மாற்றத்தில் இன்னொரு பரிந்துரையும் செய்யப்பட்டது. நல்ல வேளை இந்த ஆண்டு நடைமுறைப் படுத்தப் படவில்லை. தமிழகம் முழுவதற்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே பாடத்திட்டக் குழு என நகரும் அந்த முயற்சி ஆபத்தானது. ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பதை ஒற்றைப் பாடத்திட்டம் எனப் புரிந்து கொண்டு முன் மொழியப்படும் அம்முயற்சி கைவிடப் பட வேண்டும்.
அப்படியான முறை பள்ளிக் கல்வியில் இருக்கிறதே எனப் பலர் வாதம் செய்யலாம். பள்ளிக் கல்வியிலிருந்து வேறுபட்டது கல்லூரி; கல்லூரிக் கல்வியிலிருந்து வேறுபட்டது பல்கலைக்கழகக் கல்வி. இந்த அடிப்படைத் தத்துவம் தகர்க்கப்பட்டால் தமிழகத்தில் புதியன புகுதல் நிகழாமல் போகும். சோதனை முயற்சிகள் தடைபட்டால் உலகத்தோடு சேர்ந்து பயணிக்கும் வாய்ப்புகளைத் தவற விட்டவர்களாக ஆவோம்.
பொதுவான அமைப்பில் வேறுபாடுகள் கொண்ட உள்ளடக்கம் என்பதே படைப்புத்திறனின் சிறப்பம்சம். உள்ளடக்க வேறுபாடுகளை ஒழித்து விட்டால் புதிய சிந்தனைகளும், புதிய காற்றும் வீசாது.

அமெரிக்கத்தேர்தலும் அடையாள அரசியலும்

அமெரிக்கத் தேர்தல் இந்தியத் தேர்தல் போன்றதல்ல என்பது பலருக்கும் தெரியும். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற இரு கட்சிகளும் தான் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு குடியரசு நாட்டில், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலையில் பெரிய வேறுபாடுகள் இருக்காது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் அடிப்படையான கொள்கைகளில் வேறுபாடுகள் எதுவும் இல்லை.
இப்போது அதிபராக இருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சி ஜான் மெக்கைன் என்னும் 71 வயது நபரைத் தனது வேட்பாளராக மூன்று மாதத்திற்கு முன்பே முடிவு செய்து விட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாது, ஜனநாயகக் கட்சி தான் வெற்றி பெறும் என ஊடகங்களும், கருத்துக் கணிப்புக்களும் சொல்ல , அதன் வேட்பாளராகப் போட்டியிடக் கடுமையான போட்டி நிலவியது. அந்தப் போட்டியும் கடந்த வாரம் முடிவுக்கு வந்து விட்டது.
ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபராக இருந்த கிளிண்டனின் மனைவி ஹில்லாரி போட்டியிட விரும்பினார். ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த தேர்தலில் அவரை விடவும் கூடுதல் வாக்கு களைப் பெற்று வேட்பாளராக உறுதி செய்யப்பட்டுள்ளார் பராக் உசேன் ஒபாமா. பராக் உசேன் ஒபாமா ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதை அமெரிக்க ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் விதந்து பாராட்டிக் கொண்டிருக்கின்றன.பாராட்டுவதிலும் வியப்பதிலும் காரணங்கள் இருக்கின்றன.
ஒபாமாவின் பூர்விகம் கென்யதேசம். வெள்ளைத்திமிர் கொண்ட பெரும்பான்மை மக்கள் இருக்கும் அமெரிக்காவில் இன வேறுபாட்டால் , நாளும் கூனிக் குறுகி நிற்கும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அவரைத் தனது வேட்பாளராகத் தேர்வு செய்துள்ள ஜனநாயகக் கட்சியின் இந்த முடிவு அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்பத்தைத் தொடக்கம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால், முதல் கறுப்பின அதிபர் என்று வரலாற்றில் குறிக்கப்படுவார். அமெரிக்க அதிபராகக் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் பதவி ஏற்கும் நிலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும்.? அமெரிக்காவின் முகத்தை உலக அளவில் வேறு விதமாகக் காட்ட முடிவு செய்து விட்ட ஜனநாயகக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளும் , உள்நாட்டு உற்பத்திக்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் வைத்திருக்கும் கொள்கைகளும் எதுவும் மாறப்போவதில்லை. குறிப்பாக ஆயுதங்களை உற்பத்தி செய்து எல்லா நாடுகளின் அரசுகளுக்கும், அவ்வரசுகளை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் ஒரே நேரத்தில் விற்பனை செய்யும் வியாபார உத்திகள் எதனையும் மாற்ற முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. அற நெறியற்ற வியாபார நோக்கங்கள் கொண்ட அமெரிக்காவின் பன்னாட்டு குழுமங்களின் பிடியில் இருக்கும் அரசின் கொள்கைத் திட்டங்களை பராக் ஒபாமா மாற்றுவாரா? முதலில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக ஆகட்டும். அப்புறம் பேசலாம் இதைப் பற்றி.
நேரடியாக அமெரிக்கத் தேர்தலோடு தொடர்பில்லை என்றாலும் வேறொன்றைப் பற்றிப் பேசலாம்.
நடக்க இருந்த கருத்தரங்கு மக்கள் தொகை மற்றும் மனித ஆற்றல் பற்றிய கருத்தரங்கு. அக்கருத்தரங்கை ஏற்பாடு செய்யும் பொறுப்பில் எனது நண்பர் இருந்ததால் அவசியம் வர வேண்டும் என்று அழைத்தார். நம் நாட்டின் தலையாய பிரச்சினையைப் பற்றிய கருத்தரங்கு என்பதால் பார்வையாளனாக அமர்ந்திருந்தேன். மக்கள் தொகைப் பெருக்கம் இந்தியாவின் தலையாய பிரச்சினை என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அதுதான் ஒரே பிரச்சினை என்று நான் நினைப்பதில்லை. மனிதனின் வயிறு சாப்பிட வேண்டும் என உணர்த்தும் போது கைகளும் கால்களும் உழைக்க வேண்டும் என நினைக்கவே செய்யும் என்பது எனது நம்பிக்கை.
மனிதர்கள் பிறக்கும் போது வெறும் வயிறோடு மட்டும் பிறப்பதில்லை; கைகளோடும் கால்களோடும் தான் பிறக்கின்றார்கள். அமெரிக்காவின் இப்போதைய அதிபர் இந்தியர்கள் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்று கருத்துச் சொன்ன போது, ஆம் இந்தியர்கள் அதிகமாகச் சாப்பிடுகிறவர்கள் மட்டும் அல்ல, அதிகமாக வேலை செய்கிறவர்களும் கூட என்று முகத்தில் அடிப்பது போலப் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். நமது தலைவர்கள் ஒருவருக்கும் அந்தத் தைரியம் கிடையாது. அமெரிக்க ஆதரவு என்பது இப்போது அமெரிக்காவிற்கு ஊழியம் செய்தல் என்பதாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி எதிர்பார்ப்பது அதிகம் தான்.
கருத்தரங்கிற்கு வந்திருந்த பல வெளிநாட்டுப் பேராசிரியர்களான அறிவுஜீவிகளை அறிமுகப் படுத்தி வைத்தார். அவர்களில் பலர் வெள்ளையர்கள். இரண்டு மூன்று பேர் தான் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள. வெள்ளையர்களை வெள்ளையர்கள் என்று சொல்வதை விரும்பி ரசிப்பார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் கறுப்பினத்தைச் சேர்ந்தவரை அப்படி அழைப்பதை விரும்புவதில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அன்றையக் கருத்தரங்கில் வெள்ளையர்களின் ஒருவர் தன்னை அவ்வாறு குறிப்பிடக் கூடாது என்று வலியுறுத்திப் பேசினார்.
இந்தக் கட்டுரையில் அப்படிக் குறிப்பிட்டு எழுதுவதை வாசித்தால் நிச்சயம் வருத்தப்படுவார். வருத்தப் படுவதோடு கோபம் கூடக் கொள்ளக் கூடும். தன்னை அயர்லாந்தைச் சேர்ந்தவன் என்றே குறிப்பிட வேண்டும் என்பதைப் பல காரணங்களோடு மேடையில் அவர் விளக்கினார். ஐரோப்பியன் என்று சொல்வதை அவர் விரும்ப வில்லை என்றார். அயர்லாந்தைச் சேர்ந்த ஒருத்தியோ பின்லாந்தைச் சேர்ந்த ஒருவனோ ஐரோப்பியன் என அழைக்கப்படுவதை விரும்பினால் அவன் தனது அடையாளத்தை இழந்து போகத் தயாராகிறான் என்பது அவரது வாதமாக இருந்தது.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஒன்றை உருவாக்கிக் கொண்டு யூரோ என்கிற நாணயத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் நெருங்கி வந்திருப்பதில் பலவிதமான பொருளாதார சாதகங்கள் இருந்தாலும், ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றுக்குமான அடையாளம் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் கூடிக் கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்திப் பேசினார். அவரது பேச்சில் அச்ச உணர்வோடு குற்ற உணர்வும் வெளிப்படுவதைக் கவனக்க முடிந்தது.
தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் தங்களது யூரோ நாணயத்தை உலகச் செலாவணி நாணயமாக மாற்றுவதில் முனைப்பாக இருக்கின்றன. இன்று ஓரளவு அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும், யூரோவின் மதிப்பு கூடிக் கொண்டே போவதும் இதைத் தான் காட்டுகிறது என்றார். இதன் காரணமாக உலக அரங்கில் அமெரிக்கா பிடித்திருக்கிற இடத்தை ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் பிடித்து விடலாம். அப்படிப் பிடிப்பதை அரசியல்வாதிகளும் பொதுஜனங்களும் விரும்பலாம்; ஆனந்தம் அடையலாம்; கொண்டாடலாம். ஆனால் சிந்திக்கின்ற ஒரு அறிவிஜீவி அதைக் கொண்டாட முடியாது; கொண்டாடக் கூடாது என்று சொன்ன போது அங்கிருந்த கல்வியாளர்கள் பலருக்கும் அவரது பேச்சு புரியவில்லை என்றே தோன்றியது.
ஆரவாரமற்ற அவர்களின் கையொலி அப்படித்தான் உணர்த்தியது. டாலரோடு, யூரோ போட்டி போடுவதும், இவற்றிற்கு மாற்றாக இந்தியா ரூபாயும் ஜப்பானின் யென்னும் தங்களது மதிப்பைக் கூட்டிக் கொள்ள முயல்வதும் வெறும் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் சார்ந்த ஒன்று என்று கருதக் கூடாது. ஒவ்வொரு நாடும் இந்த உலகத்தில் தங்களது இடத்தை உறுதி செய்ய முயலும் முயற்சியின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
அவரது பார்வையும் விளக்கங்களும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நண்பர் அவரை அறிமுகப்படுத்திய போது கை குலுக்கவே தயங்கிய நான், பேச்சின் முடிவில் அவரது வலது கரத்தை இரண்டு கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டே எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். இந்த உலகத்தின் தண்டல்காரனாகவும், கண்காணிப்பாளனாகவும் கருதும் அமெரிக்க அரசாங்கங்களுக்கு இத்தகைய குற்ற உணர்வு தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை.
வெள்ளையர்கள் என்ற ஆணவத்தைத் தொலைக்கத் தயாராகி விட்ட அமெரிக்கர்களுக்கு இந்த உலகத்தின் வளம் அனைத்தும் எங்களுக்கு முதலில் பயன்பட வேண்டும் என்று நினைப்பது தவறானது என்ற உண்மையை ஒபாமா உணர்த்த வேண்டும். இவ்வளவு காலமும் அவ்வாறு கருதியதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்.இல்லையென்றால் எழுந்து வரும் அடையாள அரசியல் அந்த நிர்ப்பந்தத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

Linggo, Hunyo 01 2008

விஜய் டெண்டுல்கர்

.
மராத்தியக் கலை இலக்கியத்தின் நவீன அடையாளமாகவும் முத்திரைப்பெயராகவும் இருந்து வந்த விஜய் டெண்டுல்கர் எண்பதாவது வயதில் இறந்து விட்டார் என்ற செய்தி மராத்தி மொழியைப் பேசும் கூட்டத்திற்கு மட்டுமே வருத்தமான செய்தி அல்ல. நவீன இந்திய நாடகத்தின் பரப்பைத் தனது வெளியாகக் கருதிய ஒவ்வொருவருக்கும் வருத்தமான செய்திதான்.
தமிழின் நவீன நாடகப் பரப்பிற்குள் விஜய் டெண்டுல்கரின் தாக்கம் முழுமையாக இருந்தது என்று சொல்ல முடியாது. மரபையும், மரபிற்குள் செயல்படும் வன்முறைகளையும் தீவிரமான தாக்குதலுக்குட்படுத்திய விஜய் டெண்டுல்கரின் நாடகங்கள,¢ தமிழ்நாட்டின் நவீன நாடகக் குழுக்களின் கவனத்தை ஈர்க்காமல் போனது இயல்பான ஒன்று தான். நிகழ்காலத் தமிழ் வாழ்வின் மீது கருத்தியல் சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்து விட்டு, நவீனத் தன்மையை மரபுக்கலைகளின் அழகியலில் தேடிச் சென்ற அறியப் பட்ட தமிழ் நவீன நாடகக் குழுக்கள் டெண்டுல்கரைப் பொருட்படுத்தத் தக்க நாடக ஆசிரியராகக் கருதியதில்லை.
தமிழில் அவரது முக்கியமான இரண்டு நாடகங்கள் மேடை ஏறியது என்பதை நான் அறிவேன். மதுரையில் செயல்பட்டுக் கொண்டிருந்த நிஜ நாடக இயக்கத்திலிருந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து, ஒத்திகை என்றொரு நாடகக்குழு உருவாகியது. அக்குழு மேடை ஏற்றிய முதல் நாடகம் டெண்டுல்கரின் அமைதி! கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது . வி.எம்.சுபகுணராசனின் முயற்சியில் தோற்றுவிக்கப் பட்ட ஒத்திகை நாடகக் குழு தொடர்ந்து செயல் பட்டிருந்தால் டெண்டுல்கரின் நாடகங்கள் இன்னும் சில தமிழில் மேடை ஏறியிருக்கலாம். சென்னையில் மேடை ஏறிய இன்னொரு நாடகம் கமலா.
வரலாற்றின் மீது விசாரணைகளையும்,நிகழ்காலத்தின் மீது விமரிசனங்களையும் தொடர்ந்து தனது நாடகங்களின் வழி செய்து வந்த டெண்டுல்கர், எனக்குப் பிடித்த இந்திய நாடக ஆசிரியர்களில் ஒருவர். ‘இது நாடகம் ‘ என்ற பிரக்ஞையைப் பார்வையாளர்களுக்குத் தந்த வண்ணம் இருக்கும் நாடகப் பிரதியே நவீன நாடக வடிவம் என நம்பும் நான், அவரது ‘’ சாந்ததா! கோர்ட் சாலு ஆஹே’’ [அமைதி! கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது] வால் ஈர்க்கப்பட்டவன் என்று கூடச் சொல்லலாம். பிராண்டெல்லோவின் ஆசிரியரைத் தேடும் ஆறு கதாபாத்திரங்கள் (Six characters in searct of an author) நாடகத்திலும் அத்தகைய கூறு உண்டு. நான் எழுதிய ஒத்திகை நாடகம் இவ்விரண்டு நாடகங்களையும் வாசித்ததால் ஏற்பட்ட தாக்கம் தான். பாரிஸ் நகரத்துப் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் எனது ஒத்திகையை மேடையேற்றிய தோழிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது விஜய் டெண்டுல்கரை நினைவுபடுத்திப் பேசிக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது.
பரிசோதனை பரிசோதனைக்காகவே என்றில்லாமல் சமூக முரண்பாடுகளையும் நாகரிக வளர்ச்சியின் அர்த்தமற்ற போக்குகளையும் நாடகங்களாக்கிய் மராத்திய நாடக ஆசிரியர்களின் வரலாறு 1930-களிலேயே தொடங்கியது. பாலசுந்தர்வா, கடிகார் போன்றவர்கள் தொடங்கி வைத்த இழையின் நீட்சி விஜய் டெண்டுல்கரில் முழுமை அடைந்தது என்று சொல்ல வேண்டும். மகேஷ் எல்குஞ்சுவார், டி.பி.தேஸ்பாண்டே போன்ற நாடக ஆசிரியர்களையும், டாக்டர் ஸ்ரீராம் லகூ,விஜய மேத்தா போன்ற நடிப்புக் கலைஞர்களையும், குமார் சஹானி, ஜாபர் படேல் போன்ற நாடக இயக்குநர்களையும் அளித்த மராத்திய நாடக வரலாற்றின் சகாப்தமாகவும் முத்திரைப் பெயராகவும் இருந்தவர் விஜய் டெண்டுல்கர்.
மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் 1928, ஜனவரி, 6 ஆம் தேதி பிறந்த டெண்டுல்கர், 1942 இல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். பலவிதமான வேலைகளைச் செய்து விட்டு, மராத்தித் தினசரியொன்றின் நிருபராக எழுத்துத் துறைக்குள் நுழைந்தார். நாடக ஆசிரியராக முயன்று கொண்டே நாடகங்களில் நடிப்பது, பின்னரங்க வேலைகளில் ஈடுபடுவது போன்ற அனுபவங்களையும் பெற்றார். 1973-74 களில் கிடைத்த நேரு பெல்லோஷிப் மூலம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் நேரிடையாகச் சந்தித்து இந்திய சமுதாயத்தில் நிலவும் பலதரப்பட்ட வன்முறைகள் பற்றி எழுதினார்.அந்த அனுபவம் அவரைப் பலவிதமான நாடகங்களை எழுதிப் பார்க்கும் நாடகாசிரியராக மாற்றியது.
நாடக அரங்கின் எதிர்காலம் எத்தகையது என்ற கேள்விக்கு, ‘ மக்கள் அது வேண்டுமென்று விரும்பினால் அது இருக்கப்போகிறது’ எனக் கூறிய டெண்டுல்கர் எழுதிய முழு நீள நாடகங்கள் 27. முழு நீள நாடகங்களைத் தவிர ஐந்து குழந்தைகள் நாடகங்கள், எட்டு ஓரங்க நாடகங்கள், மூன்று கட்டுரை நூல்கள், நான்கு சிறுகதைத் தொகுதிகள், நான்கு மொழி பெயர்ப்பு நாடகங்கள், ஒன்பது மொழி பெயர்ப்பு நாவல்கள் ஆகியவற்றின் ஆசிரியர்.இந்திய நவீன வாழ்க்கையின் அகமுரண்களையும் புறமுரண்களையும் பேசும் அமைதி! கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது , கன்யாதான், சகாராம் பைண்டர், காசிராம் கோட்வால், கமலா, வல்லூறுகள், போன்றன அவரது புகழ்பெற்ற நாடகங்கள். அமைதி! கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது என்ற நாடகம் அவரைப் பிரபலப் படுத்தியது. மரபார்ந்த உள்ளடக்கங்களிலிருந்து விலகி, சமூகத்தின் குறுகிய மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கிய சகாரம் பைண்டர் (1972) ,காசிராம் கோட்வால் (1973), கமலா (1982) கன்யாதான் (1983) முதலான நாடகங்கள் அவரை இந்திய அளவில் அறிமுகம் செய்து வைத்தன. மகாராஷ்டிரத்தில் 1970 களில் தோன்றிய சிவசேனா போன்ற பிராந்திய அடிப்படைவாத இயக்கங்களின் மூல வேர்களை நினைவுபடுத்தும் காசிராம் கோட்வாலும் , இந்திய சமுதாயம் பெண்களை வாங்கி விற்கப்படும் பண்டமாக வைத்திருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிய கமலாவும் அரசியல் நாடகங்களில் முக்கியமான நாடகங்கள்.
இந்திய நாடகத்தை உலக நாடக வரைபடத்தில் இடம்பெறச் செய்த பெருமை அவரது காசிராம் கோட்வாலுக்கு உண்டு. ஜாபர் படேலின் இயக்கத்தில் அந்நாடகம் மேற்கத்திய நாடுகளில் அரங்கேற்றம் கண்டுள்ளது. மராத்தியில் தோன்றிய தலித் இலக்கிய முயற்சிகளின் பின்னணியில் அவரது கன்யாதான் குறிப்பிட்டுச் சொல்லும் நாடகம் எனத் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். தனது எழுத்துக்காக இந்திய அரசின் உயர்ந்த விருதான பத்ம பூஷன் (1984) விருதினைப் பெற்றவர். இந்திய அரசு வழங்கும் சங்கீத் நாடக அகாடமி விருது (1970) மட்டும் அல்லாமல் நாடகத்துறையின் உயர்ந்த கௌரவமான ரத்ன சதஸ்யா என்னும் பெல்லோஷிப் ( 1984)பையும் வழங்கியது மைய அரசு. மகாராஷ்டிர மாநில அரசின் விருதான மகாராஷ்டிர கௌரவ புரஷ்காரினை மூன்று முறை (1956, 1969,1972) பெற்றுள்ள விஜய் டெண்டுல்கர், எழுத்துத்துறை ஈடுபாட்டிற்காகக் காளிதாஸ் சம்மான், சரஸ்வதி சம்மான் போன்ற விருது களையும் பெற்றவர்.
நாடக ஆசிரியராக அறியப்பட்ட விஜய்டெண்டுல்கரை மராத்தி மற்றும் இந்தி திரைப்பட உலகத்தினரும் தக்க விதத்தில் பயன்படுத்திக் கொண்டனர்.சிறந்த கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர் என்ற வகையில் மூன்று பிலிம்பேர்(1981,1983) விருதினைப் பெற்றவர்.2001 இல் கதாசூடாமணி விருதையும், 2006 இல் ‘லிட்டில் மேகஜின் ‘ வழங்கும் சலம் விருதையும் பெற்றவர். பதினைந்துக்கும் மேற்பட்ட இந்தி, மராத்தி சினிமாக்களுக்குக் கதை, திரைக்கதை எழுதியுள்ள டெண்டுல்கர் இந்தியச் சினிமாவின் புதிய அலை மற்றும் இணை நிலைச் சினிமாக்காரர்களான ஷ்யாம் பெனகல், (மந்தன், நிஷாந்த் ) கோவிந்த் நிஹலானி, (ஆக்ரோஷ்) ஜாபர் படேல் (சம்னே சின்ஹஷன்) போன்றவர்களோடு இணைந்து பணியாற்றியுள்ளார். அவரைப் பற்றிய திரைப்படம் ஒன்று ‘’ டெண்டுல்கரும் வன்முறையும்; இன்று நேற்று’’ என்ற தலைப்பில் 2007 இல் எடுக்கப்பட்டுள்ளது.
[1989 இல் டெண்டுல்கரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில் மொழிபெயர்ப்பு. 1995, செப்டம்பர்- அக்டோபர் மாத நாடகவெளியில் நான் மொழி பெயர்த்து வெளியிட்ட இந்த நேர்காணல் இன்றைய தேதியிலும் புதிய நேர்காணலாகவே இருக்கிறது.]
வன்முறையின் இயல்பும் பரிமாணங்களும் எத்தகையனவாக உள்ளன.?
வன்முறை என்பது ஒரு தனிநபரிடத்தும், ஒரு குழுவிலும், ஒரு பெருந்திரளின் இடத்திலும் வெடிக்கக் கூடியது. அப்படி வெடிப்பதற்கான காரணங்களிலும் பல தரநிலைகள் உள்ளன. ஒருவனது நம்பிக்கைகள் முற்றிலும் சிதைந்து போய், பாதுகாப்பற்றவனாக உணரும் நிலையில் பயமும் பீதியும் தாக்கும் சூழலில் அவன் வன்முறையாளனாக மாறுகிறான். அவனது மனிதத்தன்மை அல்லது சுயமரியாதை பாதிக்கப்படும் நிலையில், அதைத் தடுக்கும் விதமாகவே வன்முறை வடிவம் கொள்கிறது. வன்முறையின் வெடிப்புப்புள்ளி ஓர் உணர்வு வயப்பட்ட புள்ளிதான். அந்தப் புள்ளியைக் கடந்து விட்டால், அந்த நிகழ்வு ஏற்படாமல் கூடப் போகலாம். தன்னை விடப் பலவீனமானவனிடம் ஒருவன் செலுத்தும் வன்முறை ஒருவிதத் தொடர் நிகழ்வாகும்.
மது அருந்திவிட்டு மனைவியையோ குழந்தையையோ அடிக்கும் மனிதனிடம் குறைந்த அளவில் வன்முறை தொடர்ச்சியாக வெளிப்படும். அதுவும் கூடத் தனது விரக்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் விதம்தான். பொதுவாகக் குழுநிலைப்பட்ட வன்முறைகள் சமூக , பொருளாதார , அரசியல் காரணிகளால் உருவாகின்றன. தலித்துகள் அல்லது விவசாயக் கூலிகள் காரணமாக உருவாகும் வன்முறைகள் முதலிரண்டு - சமூக, பொருளாதார- காரணி களால் உருவாகக் கூடியவை. முற்போக்கு சக்திகளால் உரிமைகளை உணர்ந்து கொண்ட கூலி விவசாயிகளை மிரட்டி,பழைய நிலையில் பணிய வைப்பதற்காக ஆதிக்க சாதி, பணம் படைத்த , அதிகாரத்துவ சக்திகள் கிராமப்புறங்களில் குழு வன்முறையை உண்டாக்கு கின்றன.
அதிகாரத்துவம் நிறைந்த வர்க்கத்தினர் மீது இருக்கின்ற சட்டங்களும் நடவடிக்கை எடுக்கத்தயங்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் , வன்முறையாளர்களுக்கெதிரன ஆதாரங் களைத் தரப் பயப்படுகின்றனர். நிலக்கிழார்கள், சம்பந்தப்பட்ட அடக்குமுறை நிகழ்ச்சிகள்- நிஷாந்த் சினிமாவில் வருவது போன்றன- நம் கிராம சமுதாயத்தில் நிகழாதவைகளல்ல. வெறும் காய்களுக்காகவே கூட, சுரண்டப்படும் மக்கள் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது. இந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொள்கின்ற மனோநிலை , அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று நம்புவதால் தங்கள் முன் வினைப் பயன் இது என்று சொல்லிக் கொள்வதால் உருவாகிறது. சாதி வேறுபாடு என்பது இன்றும் முக்கியமான ஒன்று. பலர் நினைப்பது போல் தொழில் சார்ந்த, காரணங்களால் உருவான சாதி வேறுபாட்டை ‘புனிதம்’ என்ற அடிப்படையில் கட்டப்பட்ட சாதிவேறுபாடாக மாற்றிக் கட்டினர். கூலி விகிதங்களை நிர்ணயிப்பதில் கூட சாதி வேறுபாடு பெரும்பங்காற்றுகிறது. ஒருவருக்குத் தங்கம் என்றால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதற்கீடாக காரட் என்பது போல. நகரங்களில் நிலைமைகள் வேறானவை. பாதிக்கப்படும் சாதிகளின் இளைஞர்கள் அவற்றைத் தடுக்கும் பொருட்டு ஒன்றிணைந்து போராடத் தொடங்கியுள்ளனர். அரசியலில்,குறிப்பாகத் தேர்தல் அரசியலில் சாதி வேறுபாடுகளை உண்டாக்கும் வன்முறை யைச் சில சுயநல அரசியல்வாதிகள் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதுண்டு.
நம்முடைய சமுதாயத்தில் வன்முறை கூடியுள்ளதா..?
இந்திய சமுதாயத்தில் வன்முறை கூடிவிட்டது அல்லது குறைந்து விட்டது என்று துணிச்சலான அறிக்கைகள் தர நான் தயாரில்லை. என்னுடைய நீண்ட பயணக்களங்களும் ரகசிய நேர்காணல்களும் அதை உயிர்ப்புள்ள - ஒரு நிலவும் பிரச்சினையென்று உணர வைத்துள்ளன. அதை எதிர்கொள்ளும் விதிகளும் சட்டமுறைகளும் நகரங்களுக்கும் கிராமங் களுக்கும் வெவ்வேறானவைகளாக இருக்கின்றன. இதற்கான ஆதாரங்களை என்னால் தர முடியும். ஆனால் நமது அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் , கிராமப்புற மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் படும் கொடுமைகளையும் இன்னல்களையும் அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.
ஒரு நாடக ஆசிரியராக , மனித இயல்பின் பூச்சற்ற ஒரு பகுதியைக்
காட்டுவதிலேயே விருப்பம் கொண்டவராக நீங்கள் இருக்கிறீர்கள்.
இதற்கு உங்கள் நாடகங்களிலிருந்து உதாரணங்கள் சொல்ல வேண்டுமென்றால்,
கிட்கேடு, சகாரம் பைண்டர், காசிராம் கோட்வால், ஆக்ரோஷ்,
ஆகியனவற்றைச் சொல்லலாம்.
இதற்குச் சிறப்பான காரணங்கள் ஏதேனும் உண்டா?
உண்மையில் அது அப்படி இல்லை. உதாரணமாக கிட்கேடின் ரமாகாந்த், பைண்டரின் சம்பா, கோட்வாலில் காசிராம் (அந்தந்த நாடகங்களின் முக்கியப்பாத்திரங்கள்) பார்வையாளர்களிடம் அனுதாபத்தையே பெறுகின்றனர். அவர்களை ‘மோசமானவர்கள்’ என்று முழுவதும் வகைப் படுத்தி விட முடியாது. சொல்லப்போனால், சம்பா (பைண்டரில்) தன் சுயமரியாதையைக் காத்துக் கொள்ளவே கணவனை விட்டுப் பிரிகிறாள்.ஆக்ரோஷ் நம் சமூகத்தின் நிஜமான பிரதிபலிப்பு. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தன் சாவின் மூலம் தான் அவளது மானத்தைக் காத்துக் கொள்ள முடியும் என்பது நம் சமூகத்தின் நிதர்சனமான வெளிப்பாடு. அந்த மாதிரி யான பயம் இல்லாத இடங்கள் இல்லையென்றே சொல்லலாம். பல இடங்களில் பயம் ஆழமாகவும் , சில இடங்களில் மேலோட்டமாகவும் வெளிப்படுகின்ற ஒன்றுதான்.
சர்வதேச நாடகங்களுள் ஒன்றாகக் கருதப்படும் காசிராம் கோட்வாலைப்
பற்றி எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
காசிராம் கோட்வாலை எப்போதும் நான் வரலாற்று நாடகமாக நான் கருதியதில்லை. சில வரலாற்றாசிரியர்கள் நானா பத்னவாஸின் வரலாற்றோடு தொடர்புபடுத்தி, அந்தக் கதாபாத்திரத் திற்குப் பொருத்தமற்ற விளக்கங்களைத் தந்துள்ள போதிலும், நான் அதை உறுதியாகச் சொல்வேன். நானா பத்னாவிஸ் , ஒரு குற்றமனப்பான்மை கொண்ட , பெண்களை விரும்பக் கூடிய ஒரு கதாபாத்திரம் என்பது அவனது சுய வரலாற்றிலிருந்து தெரியக்கூடியது. அவனது கால கட்டத்துப் பிறசான்றுகளும் அப்படித்தான் தெரிவிக்கின்றன. பத்னாவாஸை சிவாஜியோடு ஒப்பிட்டுப் பேசும் ஒரு கூட்டம் சமூகத்தில் உள்ளது. அவர்களிடையே உள்ள பழைமை வாதிகள், கவர்ச்சிகரமான வரலாறாக அதனைத் தரவில்லையெனக் கோபம் கொள்கின்றனர். அந்நாடகம் அயல்நாடுகளில் மதிக்கப்படுவதற்குக் காரணம் எடுத்துக் கொண்ட பொருளை நடுநிலையோடு அணுகியதும், அதன் உத்திகளும் தான் என்றே நான் நினைக்கிறேன்.
டெண்டுல்கர் அவர்களே! உங்கள் நாடகங்கள் பெரும்பாலும் சிக்கலான,
கருவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால் தான் பரபரப்புக்குள்ளாகின்றன.
இலக்கியம் என்பதற்காகவோ, நாடகம் என்பதற்காகவோ அல்ல
என்ற விமரிசனம் பற்றி என்ன சொல்கிறீர்கள்.
நீங்கள் சொல்வது சரிதான். நாடக உலகில் உள்ள குழு மனப்பான்மை காரணமாக இத்தகைய மதிப்பீடுகள் நிலவுகின்றன.பெரும்பாலான நேரங்களில் என்னுடைய நாடகங்களை அரசியல் நிகழ்வுகள் தனதாக்கிக் கொள்கின்றன. வட்டார நிகழ்வுகள் மட்டுமல்லாமல், ஒன்றிய , நகரிய தேர்தல்களும் கூட என் நாடகத்தைப் பாதிக்கின்றன. பூனா நகரத்தேர்தல் கூடப் பாதித்ததுண்டு. அரசியல் கட்சிகள் தங்கள் தேவைக்கேற்ப ஆதரவாகவோ, எதிராகவோ என் நாடகத்தை நிறுத்திக் கொள்கின்றன. டெண்டுல்கரை எதிர்க்கும் ஒரு சகாரம் பைண்டர் மேடையேறியதைத் தங்களது சொந்தத் தோல்வியாகக் கருதினர். அதனால் எனது அடுத்த நாடகமான காசிராம் கோட்வால் மேடையேறுவதைத் தடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு என்னை மனமுடையச் செய்தனர்.
காசிராம் கோட்வால் வரலாற்றைத் தெரிந்தே சிதைக்கும் முயற்சியெனக்
கூறப்படுகிறது. நீங்களும் உடன் படுகிறீர்களா..?
முடிந்துபோன வரலாற்றின் ஒரு பகுதியை அதில் சித்திரித்துள்ளேன். அச்சித்திரிப்பு முழுமை யாகவும், சில நிகழ்வுகளாகவும், சில தனித்தனி பாத்திரங்களின் மூலமும் நிகழ்ந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு காசிராம் என்ற நாவலை வாசித்தேன். அதில் காசிராம் என்ற பாத்திரத்தை மையப்படுத்திய நாடகக் கூறுகளால் கவரப்பட்டேன். அதனை நாடகமாக்கப் பல்வேறு வடிவங்களை - தமாஸா, கோந்தால், தசாவதாரம், பரூத் போன்றவற்றைப் பரிசீலனை செய்தேன். முடிவாக வரலாற்றின் ஒரு காலகட்டத்து இசையையும் பழைய அரங்க வடிவங் களையும் மட்டும் பயன்படுத்தினேன். மனிதர்களைத் திரையாகப் பயன்படுத்தியதும் கூட அதில் இருப்பதுதான்.
உங்கள் நாடகங்கள் மேடை மூலமும் சினிமாக்களாகவும்பார்வையாளர்களைச்
சென்றடைந்துள்ளன. உங்களுக்குச் சிறப்பாகக் கிடைத்த வாய்ப்பு இது.
ஒரு எழுத்தாளர் என்ற நிலையில் இந்த இரண்டு ஊடகங்களையும் ஒப்பிட முடியுமா.?
சினிமா அடிப்படையில் , ஒரு இயக்குநரின் ஊடகமாக உள்ளது. காமிராவால் பதிவு செய்யப்பட்ட பிம்பங்களின் தொகுப்பை எடிட்டிங் டேபிளில் வைத்து உயிர் கொடுக்கும் படைப்புச் செயல் கொண்டது சினிமா. சினிமாவிற்கு கதை அல்லது திரைக்கதை எழுதும் எழுத்தாளன் அதன் அடிப்படையான கூறுகளைத் தருபவனாக இருக்கலாம். ஆனால் அதன் தரத்தில் எந்தப் பாதிப்பையும் அவனால் உண்டாக்க முடியாது. படப்பிடிப்புத் தளத்தின் சூழல், சில வசதியின்மை போன்ற காரணங்களினால் கூட ஒரு இயக்குநர் அடிப்படைத் திரைக்கதை யிலிருந்து விலகவோ, புதிய ஒன்றை உருவாக்கிக் கொள்ளவோ கூடும். ஒரு நாடக இயக்கு நரோடு நெருங்கி நின்று மேடைத் தயாரிப்பு முறைகளைக் கவனிக்கவும் ஆலோசனை சொல் லவும் ஒரு நாடகாசிரியனுக்குக் கூடுதல் சாத்தியங்கள் உண்டு. சினிமாத் தயாரிப்பில் அது குறைவுதான். எழுத்தாளன் தனது திரைக்கதைக்குத் துரோகமிழைக்கப்படுவதை விரும்ப வில்லை யென்றால் அவனே சினிமாவை இயக்குதலே ஒரே வழி.
‘’புதிய அலை’’ சினிமாக்கள் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன..?
புதிய அலை சினிமா தன்னை நிலை நிறுத்திக் கொண்டதும் முழுமையாக வணிக சினிமா வைப் பாதித்தது. வணிக சினிமாவின் வேறுபாடற்ற ஒற்றை முகத்தை மாற்றியதில் புதிய அலை சினிமாவைச் சேர்ந்த பல படங்களுக்குப் பங்குண்டு. அதன்பின்பு புதிய அலைப் படமாக வும் வணிக சினிமாவாகவும் தோன்றும் வகையில்- இதுபாதி அது பாதியென ௲ சமரசம் செய்து கொண்டன. அவைகளும் வசூலில் சக்கை போடு போட்டன. வட்டார சினிமாவினால் நன்மை உண்டு என நினைக்கிறீர்களா.?ஒரு இந்தி சினிமா, எளிமையான கருவைக் கொண்டு நாடு முழுவதும் உள்ளவர்களையும் அயல்நாடுகளில் உள்ள இந்தியர்களையும் பார்வையாளர் களாகக் கருதித் தயாரிக்கப்படுகிறது. ஆனால் வட்டார சினிமா அப்படியல்ல. ஒருபடித்தான அல்லது ஒரே தன்மையிலான - பார்வையாளர்களுக்காக அவர்களின் கலாச்சார உட்கூறுகளை யெல்லாம் கலந்து தயாரிக்கப்படுகின்றன. அந்தப் பார்வையாளர்கள் அதனை விரும்பிப் பார்க்கின்றனர். அதனால் உண்டாகும் பாதிப்பும் கூடுதலாகவே இருக்கும்.
1. Contemporary Indian theare ௲ SNA- NewDelhi, 19892.
Profiles in Creativity- Dr.Madhu upadyaya ௲ Namuste Exports Ltd-Bangalore,1992