காத்துக்கொண்டிருக்கும் பெண்கள்
காத்துக் கொண்டிருக்கும் பெண்கள் என்பது தமிழ் இலக்கியத்தின் அடிப்படையான அடிக்கருத்து(Motif ) களில் ஒன்று. ஓதல், தூது, பகை காரணமாகப் பிரிந்து செல்லும் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவிகளைத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகள் விதம்விதமாக எழுதிக் காட்டியுள்ளன. அன்பின் ஐந்திணைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் முல்லைத் திணையின் உரிப்பொருள் இருத்தல். முல்லையிருத்தலைப் பற்றிய விளக்கத்தைச் சொல்லும் உரையாசிரியர்கள் ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலும் என இரண்டுவகைப்பட்டதாகச் சொல்வார்கள். பிரிவில் தலைவியும் தலைவனும் பிரிந்திருந்தாலும், தலைவன்களின் பிரிவினைவிடத் தலைவிகளின் பிரிவுத்துயர்களே அதிகம் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாகப் போர்க்களத்திற்குச் சென்ற தலைவன் வருவானா? சொன்னநாளில் வருவானா? ஒருவேளை வராமலேயே போய்விடும் வாய்ப்புகளும் இருக்குமோ என்ற தவிப்போடு காத்திருக்கும் தலைவிகளைச் செவ்வியல் கவிதைகளில் வாசிக்கமுடியும்.