முதல் பயணம் :அழகிய பெரியவனின் தரைக்காடு

பயணங்கள் எப்போதும் இனிமையானவை; அதிலும் முதல் பயணங்கள் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடியவை. பதின் வயதுக் காலத்தில் நாட்குறிப்புகள் எழுதும் பழக்கம் என்னிடம் இருந்தது. அந்தக் குறிப்புகளில் நான் சென்ற பயணங்கள் பற்றிய குறிப்புகளை விட தவற விட்ட பயணங்களைப் பற்றிய குறிப்புகளையே அதிகம் எழுதி வைத்திருந்தேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

இன்றும் மனதில் தங்கியிருக்கும் தவறவிட்ட பயணம் ராமேஸ்வரம் செல்லாமல் தவற விட்ட பயணம் தான். நான் ராமாயணம், பாரதம் போன்ற பேரிலக்கியங்களைப் பள்ளிப் பருவத்திலேயே படிக்கக் காரணமாக இருந்த தாத்தா ஒருவரின் அஸ்திக் கலயத்துடன் உற்றார் உறவினர்கள் கிளம்பிய அந்தப் பயணத்தில் என்னைச் சேர்க்காமல் ஏமாற்றி விட்டுப் போன அந்தப் பயணம் இன்னும் அப்படியே தங்கி இருக்கிறது. தவறவிட்ட அந்தப் பயணம் இன்னும் நிறைவேறவே இல்லை.

எனது பயணங்கள் எல்லாம் பெரும் பயணங்கள் அல்ல. மிகச் சிறிய பயணங்கள். அதிகாலையில் தொடங்கி நள்ளிரவில் முடியும் சின்னஞ்சிறு பயணங்களே எனக்கு அதிகம் வாய்த்திருக்கின்றன. அப்படியான பயணங்களுக்கு நான் ஒவ்வொரு நாளும் தயாராகவே இருப்பேன். நாட்கள் கணக்கில் திட்டமிட்டு வாரக்கணக்கில் தங்கும் பயணங்கள் எப்போதும் அலுப்பூட்டுபவை. அதற்காக நாம் சுமக்க வேண்டிய சுமைகள் தான் பயம் ஊட்டுபவை. கையை வீசிக் கொண்டு எங்கும் சுற்றித் திரிய முடியும் என்றால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எங்கும் தங்கலாம். ஆனால் அணிய வேண்டிய ஆடைகளுக்காகச் சுமைகளைச் சுமக்க வேண்டும் என நினைக்கும் போது பெரும் பயணங்களை விட்டு விடவே விரும்புகிறேன். சொந்தக் கதையை இந்த இடத்தில் நிறுத்திக் கொள்வோம். அழகிய பெரியவனின் கதைக்கு வரலாம்.

நீ நிகழ்ந்த போது என்ற கவிதைத் தொகுப்பைத் தனது இலக்கிய அறிமுகத்தைச் செய்த அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான தீட்டு தமிழினிப் பதிப்பாக வெளி வந்த 2000- க்குப்பின் கவனிக்கப் பட வேண்டிய சிறுகதையாளராக ஆனதோடு தனது முதல் நாவலான தகப்பன் கொடி வழியாக முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவராக அறியப்படுகிறார். அதற்குப் பிறகு அழகிய பெரியவன் கதைகள் என ஒரு சிறுகதைத் தொகுப்பும், உனக்கும் எனக்குமான சொல் என்றொரு கவிதைத் தொகுப்பும் வந்துள்ளது. இக் கவிதைத் தொகுப்பிற்காக அவருக்குத் தமிழக அரசின் விருதும் கிடைத்துள்ளது. 
********************
தரைக்காடு என்ற தலைப்பில் எழுதிய கதையை அவரது தீட்டு தொகுப்பிலிருந்து வாசிப்பவர் நான் வாசித்திருப்பது போல வாசிக்காமல் போகலாம். தரைக்காடு என்ற தலைப்பிட்டுக் கொண்டுள்ள அந்தக் கதை சமவெளிப் பிரதேசத்தில் வாழுகிற மக்களைப் பற்றி எதுவும் பேசாமல் முழுக்க மலப்பிரதேச மக்கள் பற்றிய சித்திரங்களையே தருகிறது.


மலையகம், காடுகள், குளிர்ச்சி, இயற்கை வளம், மழைவளம், இயற்கை சார் வாழ்க்கை என்னும் இனிப்புத் தடவிய வார்த்தைகளால் அவர்களின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது; விளக்கப் படுகிறது. ஆனால் அவர்களின் நினைவுக்குள் தரைக்காடு எப்போதும் செல்ல வேண்டிய கனவாகவே இருக்கிறது என்பதும் மறுக்க முடியாது. கிடைத்ததில் இருந்து கிடைக்காததை நோக்கிய பயணம் தானே வாழ்க்கையில் இலக்குகள்.


விளிம்புகளில் வாழ நேர்ந்ததை நேசித்து வாழ வேண்டும் என்று நவீன மனம் அவர்களுக்குப் போதனைகள் செய்தாலும், அதை நோக்கிச் செல்வதில் பிடிவாதம் எதுவும் காட்டுவதில்லை. சின்னச் சின்னப் பயணமாக- சுற்றுலாவாக அங்கே போய்விட்டுத் திரும்பவும் தங்கள் காங்கிரீட் வனங்களுக்குள் வந்து தங்கி விடுவதையே நகர மனம் நாடுகிறது. ஆனால் வாழிடம் சார்ந்தும் பொருளாதார நிலையிலும் ஓரங்களில் வாழ நேர்ந்து மலையகக் கிராமத்தினருக்குத் தரைக்காடுகள் எல்லாம் நிரம்பிய ஒன்றாக இருக்கின்றன. அதை நோக்கித் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொள்ளவே விரும்புகின்றனர்.


அழகிய பெரியவன் கதை அந்தப் பிரச்சினைகளுக்குள் எல்லாம் செல்லவில்லை. அதற்கு மாறாக மலைக் கிராமம் ஒன்றில் வாழும் பெண்ணொருத்தியின் கர்ப்பப் பைக்குள்ளிருந்து தனக்கான மூச்சுக் காற்றைத் தனது நாசிகள் வழியாகவே தானே உறிஞ்சிக் கொள்ளும் முதல் வேலையைச் செய்வதற்காகச் செய்யும் பிறப்பு என்னும் முதல் பயணத்திற்கு முன் செய்த களைப்பு மிக்க பயணத்தை எழுதிக் காட்டுகிறது. 

******************
இரவின் பிடிவாதத்தை மாட்டு வண்டியின் சக்கரங்கள் பொடிப்பொடியாய் உதிர்த்துக் கொண்டிருந்தன. வண்டி சரளைக் கற்கள் தேலிய செம்மண் பாதையில், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போதெல்லாம் அம்மிணி கத்தினாள். அத்தையும், அம்மாவும் அவளைத் தேற்றினார்கள். காளாம்பட்டாவின் கைகள் மெல்ல அதிர்ந்தபடியே இருந்தன. விரித்திருந்த அவள் விரல்களில் மந்திரம் மையம் கொண்டு செய்வினைக்குக் காத்திருப்பது போலிருந்தது. மூவரின் கண்களும் அம்மிணியின் மீது நிலை கொண்டிருந்தன.
மாட்டு வண்டியின் மூங்கில் கட்டுக்குள் அம்மிணி நீண்டு படுத்திருந்தாள். வயிறு பெருத்திருந்தது. கால்களை உதைத்துக் கொண்டாள். காளம்பட்டா வலிமையாக அக்கால்களை அழுத்திப் பிடித்தார்.


“ பொறுத்துக்க தாயீ. பொறுத்துக்க” என வலியின் உச்சத்துடன் தொடங்கிப் பயணப்பட்டுக் கடைசியில் ,
“அம்மிணிக்கு நீர்காஜை எடுத்திருந்தது. உடம்பு பச்சைப் புண் போல வலித்தது. ஏழு அகினி தந்தாலும் குடித்துவிடும் ஆங்காரம் வந்திருந்தது அவளுக்கு.
பிள்ளை பெற்றபின் தனிக்குடிலில் படுத்திருந்த போது, தாகம் தாங்காமல் ரத்தப் போக்குடைய தன் சிறுநீரை பிடித்துக் குடித்து விட்ட தன் பாட்டியின் நினைவு எழும்பி கலக்கமடைய வைத்தது அம்மிணியை. மிகுந்த தாகத்தோடு இருட்டுப் பொருக்குகள் உதிர்ந்து கொண்டிருந்த காலையூடே வண்டித்தட்டிக்குள் படுத்தபடி காத்துக் கொண்டிருந்தாள் அம்மிணி”.
என்று சுகமுடிவு நிகழ்வுடன் முடியும் கதை இடையில் செய்யும் பயணம் சாதாரணப் பயணத்தின் விவரிப்புகள் அல்ல. இரவு முழுவதும் அந்த பயணத்தில் அவர்கள் செய்த தூரம், சொந்தக் கார் வைத்திருப்பவர்களுக்கு அரை மணி நேரத்திற்குள் சென்று சேரக்கூடிய தூரம் தான். ஆனால் அவர்கள் கடந்து வருவது வெறும் தூரம் மட்டுமல்ல; விதிக்கப்பட்ட வாழ்க்கை வெளி என்பதைச் சொல்வதில் முதன்மைக் கவனம் செலுத்துகிறார் அழகிய பெரியவன். கதையின் வழியாக அழகிய பெரியவன் விவரித்துக் காட்டும் பயணக் காட்சிகளை இனிக் காணலாம். 

**********************
காளம்பட்டா நேற்றே சொல்லியிருந்தாள். அம்மிணியின் வயிற்றைத் தொட்டுப் பார்த்துவிட்டு, நாடி பிடித்தாள் அவள். காளம்பட்டாவின் முகச் சுருக்கங்களில் அர்த்தங்கள் கிளை விரிந்து படர்ந்து கொண்டிருந்தன. ‘ நாளக்கி, நாளன்னிக்கி பெத்துடுவா’
சாமன் லாந்தருடன் சுற்றிமுற்றிப் பார்த்தான். இரவு வண்டுகள் பெருங்கூச்சலிட்டன. மலையிலிருந்து இரவு வடிந்து இறங்கியது. மலையடிவாரத்தில் சிதறியிருந்த குடிசைகள் உறக்கத்தில் முடங்கிக் கிடந்தன. வடக்காய் ஊர் எல்லையில் தொடங்கும் பெரும் காட்டினுள்ளிருந்து காற்று குளிர்ந்து வீசியது. இரவின் வாசனையைத் தாங்கிய அது அங்கே சுழன்றது. இன்னும் பவுர்ணமிக்கு மூன்று நாட்கள் இருந்தன. நிலவைச் சுற்றி பெரும் ஒலி வட்டம் விழுந்திருந்தது. அக்னி மூலையில் சுக்கைகளின் மங்கிய பிரகாசத்தை சாமன் பார்த்தான். தனக்குள் எதையோ சொல்லிக் கொண்ட சாமன், வண்டியின் முன்னாக ஓடத் தொடங்கினான். குபேந்திரன் அவன் பிறகாகவே ஓடினான்.
“மச்சான் பந்தம் எடுத்துக்கினியா? எண்ணெ புட்டி எடுத்தாந்த இல்லே?” “ம் மாமாசி வண்டிக்கால்ல மாட்டிக்கிறேன்”
“குறுப்பா பாரு, சூரி கத்தி எடுத்துக்கிற?” “ ம்.. மாமாசியோவ்” ***********************
தெற்குப் பக்கமாய்ப் படுத்திருந்த மண் சாலையில் வண்டி உருண்டது. சக்கரங்களின் கீழே மண் நொறுங்கும் சப்தம் கூக்குரலெனக் கேட்டது. மாடுகளின் குளம்புகள் மண்ணைச் சீண்டி, புழுதி துரத்தின.
“மச்சான் பந்தத்தெ கொளுத்து” என்றபடி ஓடி வண்டியின் வலப்பக்கமாக சக்கரத்தைப் பார்த்தான். சின்னப் பள்ளந்தான். பள்ளத்தின் விளிம்பில் இருந்த வெள்ளைக்கல் மீது முட்டிக் கொண்டிருந்தது சக்கரம். சற்றைக்கெல்லாம் அந்தப் பிரதேசம் வெளிச்சமானது. சரசரவென்று எண்ணெய் வாசத்துடன் எழுந்த தீயில் இருட்டு ஜொலித்தது. அங்கு தூரத்தில் காட்டுக்குள்ளிருந்து ஊளையிடல்கள் சன்னமாகக் கேட்டன. நரிக்கூட்டங்களாய் இருக்கும் அவை. அவ்விடத்தில் பரவியிருந்த பழவாசனை, கரடிகள் குறித்த பீதியைக் கிளப்பியது. 
****************************
சடாரென அவர்கள் தலைக்கு மேலே பறந்துபோன ஆள்காட்டிக் குருவியின் அங்கலாய்ப்பைக் கண்டதும் அதிர்ந்தான் சாமன். பெரும் மரக்கூட்டங்கள் எழும்பி சூழ்ந்திருந்தன அங்கே. பாதை சரிவாக ஓடியது. மூப்பர் பள்ளம் என்றால் பகலிலேயே பயமாய் இருக்கும். மரங்களிடையே நுழைந்து வெளியேறிய காற்று ஆங்காரமாய் சிரித்துக் கிலியூட்டியது அவர்களுக்கு.
தெளிவான உறுமலை அவனால் கேட்க முடிந்தது. அந்தச் சத்தம் கிழக்குப் பார்த்து வந்தபடி இருந்தது. “ மச்சான் தீவட்டி தீவட்டி” என்பதற்குள் குபேந்திரன் கொளுத்தி விட்டிருந்தான். “மாசிலான் முடுக்குடா முடுக்குடா” என்றதும் பாயத்துவங்கி விட்டது வண்டி. சாமன் வண்டியை முன் விட்டு ஓடி வழி ஓரப் பாறையொன்றின் மீதேறினான். கிழக்காய்த் திரும்பி வினோதமாய்க் கத்தினான் அவன். குரல்வளையுள் சுழன்று எழுந்த ஒலி ஒரு மிருகத்தின் கூக்குரலாய் வெளிப்பட்டுப் பரவியது. சாமனும், குபேந்திரனும் வண்டியைப் பார்த்து ஓட்டம் பிடித்தார்கள். 
*****************************
“காணாறு மச்சான்?” “ ஆமாம் மாமாசி”
நீரில் இறங்கிய வண்டிச் சக்கரங்கள் கரகரவென மணலை அரைத்தன. மாடுகள் தவ்வித் தவ்வி நடப்பது போலத் திமிறின. மாசிலான் மாடுகளுடன் பேசுவது போல என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். வெகு தூரத்தில் மலைகள் அசைவது போல் சாமன் கண்களுக்குத் தெரிந்தது. பிளிறல்களும் கேட்டது அப்போது. சாமன் சொல்வதற்குள் வேகம் கூட்டியிருந்தது வண்டி. வண்டியுடன் போய்க் கொண்டே வழியில் லத்திக் குவியல்களைத் தேடினான் சாமன். நாலா பக்கமும் திரும்பித் திரும்பி மோப்பம் பிடித்தான் குபேந்திரன். மழைக்காலத்துக்குப் பின் எந்தப் பகுதியிலிருந்தோ வந்து விடும் யானைக்கூட்டங்கள். இந்த முறை அதிக நாள் தங்கி விட்டதாய் பேசிக் கொண்டார்கள் சனங்கள். 
*******************
வானம் இலேசாக வெளிறிக் கொண்டிருந்தது. காட்டுக் கோழிகளின் கூவல்கள் கேட்டதும் சாமனுக்குத் தெம்பு வந்தது. விடிந்து விடும். இன்னும் கொஞ்ச தூரம், காட்டு எல்லை முடிந்ததும் முதல் ஊர் வந்து விடும். தார்ச்சாலையில் போனால் டவுன் மருத்துவமனை வந்து விடும். அவனுள் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தன.
“ எத்தினி காலம் மாமாசி இப்படியே நாம ஓடறது? இந்தப் பக்கமா ஒரு ரோடு போட்டுத் தரமாட்டான்களா?” “ அடப்போ மச்சான் வெகாளத்த கெளப்பாத. கம்முனு வா. நம்ம எளுத்த அப்படி” 
***********************
சாமன் மேட்டின் இடது பக்கம் இருந்த பெரும் பாறையருகே ஓடினான். சூலம் நட்டு, கல்லுக்கு குங்குமம் பூசியிருந்தார்கள் அங்கே. அது தங்கலான் செத்த இடம். அவன் குடும்பத்து பெரிய தலை. அவன் பேர் சொன்னால் காட்டுக்குள்ளே பதுங்கியிருக்கும் மிருகங்கள் நடுங்கும். கரடியொன்றை ஆட்டுக்கு தழை கழிக்கும் துரட்டுக் கத்தியால் ரெண்டாய்க் கிழித்தானாம். டவுனுக்குப் போய்த் திரும்பியவன் பள்ளத்தில் சரிந்து செத்துப் போனான். பேய் இழுத்துப் போட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் வெகுகாலமாய்.
“எம்மா இத்தெ அது நெத்தியில வெய்யி” மண்ணை அம்மாவின் கையில் தந்தான் சாமன்.
வண்டி ஊரை நெருங்கிக் கொண்டிருந்த போது பெருத்த கதறல் சத்தமொன்று அம்மிணியிடம் எழுந்து அடங்கியது. மலைமீது மோதி எதிரொலித்தது அவளின் கதறல் காடும், மலையும் அதனால் நிரம்பிக் கதறின. இளம் சிசுவின் குரல் ஒன்று வண்டியுள்ளிருந்து எழுந்தது. மாடுகள் ஒரு கணத்தில் சிலையாய் நின்று விட்டிருந்தன. சாமனுக்கு மனசு உடைப்பெடுத்துக் கொண்டது. பொங்கி வந்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்தான்.
“ மச்சான் பொறந்துடிச்சி” சாமன் சந்தோசமாய் சிரித்தபடி அழுதான். “ எப்பா சாமங்களே, இந்தா இதுல ஓடிப்போயி எங்கியாவது ரவத் தண்ணீ வாங்கினு ஓடியாங்க”
“ மச்சான் ஆண்டமாருங்க ஊரு வந்துட்டுக்கீது” குபேந்திரனும் சாமனும் ஊரைப் பார்த்து ஓடினார்கள். ஊருக்குள் நுழைந்ததும் எதிர்ப்பட்ட வீட்டுக் கதவுகளைத் தட்டத் தொடங்கினார்கள் அவர்கள்.
இந்தக் கதையைப் படிக்கும் ஒரு நகரவாசி- அங்கு நமது அரசுகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் வழுக்கும் சாலைகள் உலகத்தை வெண் திரைகளில் கொண்டு வந்து நிறுத்திடும் கல்விக்கூடங்கள், நின்று விட்ட மூச்சுக் காற்றைத் திரும்பவும் கொண்டு வந்துவிடும் மருத்துவ மனைகள், கற்பனையில் மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் பொன்னுலகத்தைக் கட்டியெழுப்புத் தரும் களியாட்டக்கூடங்கள் என அனைத்து வசதிகளையும் அனுபவிக்கும் நகரவாசி இந்தக் கதையை வாசிக்கும் போது பெரும் குற்றவுணர்வுக்குள் தள்ளப்பட வேண்டும் என்பது தான் அழகிய பெரியவன் நோக்கமாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்கேற்ற மொழியையும் அதனைப் பயன்படுத்தும் நுட்பமும் அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. அதற்கென அவர் எழுதிய வரிகள் இரண்டே இரண்டு தான். திரும்பவும் அந்த வரிகள்:
“ எத்தினி காலம் மாமாசி இப்படியே நாம ஓடறது? இந்தப் பக்கமா ஒரு ரோடு போட்டுத் தரமாட்டான்களா?” “ அடப்போ மச்சான் வெகாளத்த கெளப்பாத. கம்முனு வா. நம்ம எளுத்த அப்படி”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்