குற்றப்பரம்பரை - சட்டம் உருவாக்கிய சொல்

குற்றப்பரம்பரை என்ற சொல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சொல். ஜமீந்தார்களால் வசூல்செய்யப்பட்டுத் தங்களுடைய பங்காக வந்துசேரவேண்டிய வரவுகளான வரி, திறை, கிஸ்தி ஆகியவற்றைக் கொண்டுவந்து கஜானாவில் சேர்ப்பதில் இடையூறுகளைச் சந்தித்தனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். இடையூறுகளை ஏற்படுத்தியவர்கள் அடக்கப்படவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பெற்ற சட்டமே குற்றப்பரம்பரைச் சட்டம். பிரித்தானிய ஆட்சியர்களால் 1871 இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்தச் சட்டம் செயல்படுத்தப்படும்போது ஒருவிதமான வட்டாரத் தன்மையை உள்வாங்கிக் கொண்டது.

பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு உதவியாகவும் அதிகாரிகளாகவும் இருந்த உள்ளூர் அறிவுஜீவிகள், இந்தியாவைச் சாதிகளாகவே பார்த்து விளக்கும் மனுதர்மவாதிகள். அவர்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் நேரடியாக நிலத்தோடு தொடர்பில் இல்லாத சாதிகள் எவைஎவையெனப் பார்த்துப் பட்டியலிட்டுக் கொடுத்தார்கள். அந்தப் பட்டியலில் இருந்த சாதிகளை முதலில் அடையாளப் படுத்தப்பட்ட சாதிகள் (De-notified Tribes) என்று அழைத்தார்கள். அவர்களைப் பரம்பரை பரம்பரையாகக் குற்றம் செய்த குழுக்கள் என முத்திரைகுத்திக் குற்றப்பரம்பரைச் சாதிகள் (Criminal Tribes)சட்டத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தார்கள்.
இப்போது இந்தச் சொல்லைப் பயன்படுத்தித் திரைப்படம் தயாரிக்கப் போட்டிபோடும் இயக்குநர்கள் பாலாவும் பாரதிராஜாவும் அவர்களுக்குத் துணை நிற்கும் கதாசிரிய எழுத்தாளர்களும் வட்டாரச் சொல்லைச் சாதியச் சொல்லாக - அதிலும் உள்சாதிச் சொல்லாக மாற்றிவிட நினைக்கிறார்கள். தேசிய அடையாளம் சாதிய அடையாளமாக மாறும் பாவனைகள் அரசியல் தளத்தில் மட்டும் நடக்கின்றன என நினைக்கவேண்டியதில்லை. கலை, இலக்கியத்தளத்திலும் நடக்கிறது.
சட்டத்தால் உருவாக்கப்படும் குற்றப்பரம்பரை என்ற சொல் மட்டுமல்ல. சட்டத்தால் உண்டாக்கப்படும் சொற்கள் எல்லாமே பொதுத்தளத்தில் ஒரு அர்த்தத்தில் இருக்கும்; பயன்படுத்தப்படும்போது வட்டாரத் தன்மையுடையதாக மாறிவிடும். எல்லாக்காலத்திலும் இதுதான் நிலைமை. தேசவிரோதச் சட்டம் தமிழ்நாட்டில் ” குடி" ஆதரவு சட்டமாக ஆகியிருக்கிறது அண்மைய உதாரணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்