காணிநிலம் என்னும் எழுத்தாளர் கிராமம்
நெல்லைப் புத்தகத்திருவிழா 2020, பிப்பிரவரி 1 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமை( 10/02/2020) நிறைவடையும். இந்தத் திருவிழாவின் சிறப்புநிலையாக ஒவ்வொரு நாளும் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சாகித்திய அகாடெமி எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்படுகிறார்கள். இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து மேடையில் அமரவைத்து, அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாற்றைக் காணொளிக் காட்சியாக ஒளிபரப்பியபின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் மேடைக்கு வந்து புத்தாடை அளித்து, நினைவுப்பரிசு வழங்கிக் கைகுலுக்குகிறார்.ஒவ்வொருநாளும் இது நடந்துகொண்டிருக்கிறது.
சாகித்திய அகாடெமி விருதாளர்கள் மட்டுமல்லாமல் வாசிப்பு, ரசனை, நூல்நயம், இலக்கிய விசாரணை எனச் செயல்படும் பலரும் மேடையேறுகிறார்கள். இலக்கிய அமைப்புகளை உருவாக்கிச் செயல்படுகிறவர்களும் மேடையேற்றப்படுகிறார்கள். அந்த வகையில் நெல்லைப்புத்தகத்திருவிழா இலக்கியவாதிகளின் கொண்டாட்டமாக இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் என்ற வகையில் நேற்று நானும் மேடையேறினேன். கூட்டத்தினரை நோக்கிப் பேசினாலும் என்னுடைய உரை நிர்வாகத்தை நோக்கியதாக அமைந்திருந்தது. எழுத்தாளர்களும் வாசகர்களும் நிரம்பிய இந்த மாவட்டத்தில் ஒரு எழுத்தாளர்கள் கிராமம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.
நமது அரசுகள் விளையாட்டுவீரர்களை உருவாக்கத் தேவையான அடிப்படை வசதிகளோடும் கருவிகளோடும் விடுதிகளை நடத்துகின்றன. மைதானங்களை உருவாக்குகின்றன. மாவட்ட வீரர்களாக உருவாக்கப்படும் அவர்கள் மாநிலத்தை - நாட்டை அடையாளப்படுத்தி விளையாடுகிறார்கள். உலக அளவில் புகழ் அடைகிறார்கள். பாளையங் கோட்டையின் அண்ணா மைதானத்தில் உருவாகி, ஹாக்கிவிளையாடியவர்கள் இந்திய அணியில் ஆடியிருக்கிறார்கள். சங்கர் நகர் கிரிக்கெட் மைதானத்தில் உருவானவர்கள் - இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடுகிறார்கள். தடகள வீரர்களும் இங்கே உருவாக்கப்படுகிறார்கள். இதுபோல எழுத்தாளர்களை உருவாக்கும் - ஆதரிக்கும் -வளர்த்தெடுக்கும் அமைப்பாக ஒரு எழுத்தாளர் கிராமம் உருவாக்கப்படவேண்டும். அங்கே தங்கி எழுத வரும் எழுத்தாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் அமைதியான சூழலும் அங்கே இருக்க வேண்டும். எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைச் சந்திக்க விரும்பும் வாசகர்கள் சந்திப்பிற்கான இடவசதியை உருவாக்கித் தரலாம். இதெல்லாம் பல நாடுகள் நடப்பதுதான்.
தமிழ் எழுத்தாளர்கள் உலக அளவில் எழுத்தாளர்கள் முகாம்களுக்குச் சென்று தங்கித் தங்களின் எழுத்துகளை உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். முதல் நிலை எழுத்தைத் திருத்தும் நிலைக்காகச் செல்கிறார்கள். அப்படியொரு எழுத்தாளர் முகாம் நடத்தக் கூடிய கிராமமாக ஓரிடத்தைத் தாமிரபரணிக்கரையில் உருவாக்க முடியும். அப்படி உருவாக்கக் கூடிய கிராமத்தில் இலக்கிய விழாவை (Literary Festival ) நடத்தலாம். மத்தியப்பிரதேசத்தில் போபாலில் இப்படியொரு இடம் இருக்கிறது. கேரள எழுத்தாளர்கள் உலக அளவிலான இலக்கிய விழாவை நடத்துகிறார்கள். தாகூரின் பெயரில் இருக்கும் சாந்திநிகேதனில் அப்படியொரு சூழல் இருந்ததாக வாசித்திருக்கிறேன். மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துத் தமிழக அரசின் அனுமதியோடு தொடங்கினால் சாகித்திய அகாடெமி போன்ற பண்பாட்டு அமைப்புகள் உதவும். பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவும் தனியார் நிறுவனங்களும் சமூகப்பொறுப்பைக் காட்டும் அக்கறையில் நிதியுதவிகளை வழங்குவார்கள்.
இப்படியொரு தேவையைத்தானே பாரதி தனது காணிநிலம் கவிதையில் வேண்டினான். காணிநிலம் என்ற பெயரிலேயே கூட அந்தக் கிராமம் அமையலாம்:
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
கருத்துகள்