இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிக்பாஸ் - சில குறிப்புகள்

படம்
பிக்பாஸ்-7:தவறவிட்ட முதலிடம் வெகுமக்கள் ஊடகங்களைக் கவனித்து வெகுமக்கள் பண்பாடும் அரசியல் தீர்மானங்களும் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதைத் தொடர்ந்து விவாதித்து வருபவன் என்ற வகையில் இந்தியர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கான கிரிக்கெட் விளையாட்டையும், தமிழர்களின் ஆகக் கூடிய நேரத்தை எடுத்துக்கொள்ளும் முதன்மை நேர நிகழ்ச்சிகளை- குறிப்பாகப் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பார்த்துவிடுவதைத் தவிர்ப்பதில்லை. நேரலையாகப் பார்க்கத் தவறினால் மறு ஒளிபரப்பிலாவது பார்த்துவிடுவேன். இப்போது அவற்றுக்கான செயலிகள் வந்தபின் நேரலையாகத் தான் பார்க்க வேண்டும் என்பதில்லை.இந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை (50 ஓவர்கள்) போட்டியின் இறுதிப்போட்டியை நேரலையாகப் பார்க்கவில்லை. அதேபோல் நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரலை நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை, இப்போது பார்த்து முடித்துவிட்டேன்.

வண்ணக்கலவைத் தொட்டியில் அலையும் குதூகலம்

படம்
இலக்கிய வாசிப்பு ஒவ்வொரு வடிவத்திற்கும் வேறானது. நாவலை வாசிப்பதுபோலவே நாடகத்தை வாசித்துவிட முடியாது. நாவலையும் நாடகத்தையும் விரும்பி வாசிக்கும் ஒருவருக்கு சிறுகதைகளும் கவிதைகளும் விருப்பமில்லாமல் போகவும் வாய்ப்புண்டு. சிறுகதைகளுக்குள் நுழைந்து மனம் ஒப்பும் ஒன்றைக் கைப்பற்றிக் கதையை ரசித்து விடும் ஒருவர் கவிதையின் வாசலைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கவும் கூடும்.

ஆண்டாளைச் சுற்றியும் தமிழ்த்தாயை முன்வைத்தும் -சில குறிப்புகள்

படம்
· மோதல்-முரண் · மாற்று-எதிர் · வேறுபாடு – வித்தியாசம் § மோதல் என்ற சொல்லும் முரண் என்ற சொல்லும் ஒரே பொருள் தரும் சொற்கள் அல்ல. மோதல் என்றால் மனம் நினைத்துக் கொள்ளும் அர்த்தம் வேறு; முரண் என்றால் மனம் உணரும் அர்த்தம் வேறு. § மாற்று என்ற சொல்லின் பொருளையே எதிர் என்ற சொல்லின் பொருளாகச் சொல்ல முடியாது; சொல்லக்கூடாது. இரண்டும் வேறுவேறு. § வேறுபாடு என்ற சொல்லுக்கு இணையான இன்னொரு சொல்லாக வித்யாசத்தைக் கருதமுடியாது; கருதக்கூடாது. ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட்டது.

இப்படிக்கடந்துபோனது 2023

படம்
2024 ஆம் ஆண்டு பயணங்களாலும் மன உளைச்சல்களாலும் ஆன ஆண்டு.  கோவையில் பணியில் தொடர்வதா வேண்டாமா என்பதையிட்டு மன உளைச்சல் இருந்த து. கடந்த மேயில் அங்கு பணியில் சேர்ந்து ஓராண்டு முடியும் நிலையில் வெளியேறிவிடலாம் என நினைத்ததுண்டு. விடுப்பு அளித்து போய்வாருங்கள் எனக் கல்லூரிச் செயலர் சொன்ன போது திரும்பவும் தொடர்ந்தேன். ஆனால் உடலும் மனமும் ஒத்துழைக்கவில்லை. பன்னிரண்டு மாதங்களில் மூன்று மாதம் அயல் நாட்டில். அமெரிக்காவில் 80 நாட்களும் கனடாவில் 40 நாட்கள்.    

கி.ராஜநாராயணன்-புதுச்சேரி - அ.ராமசாமி

படம்
35 கி.ரா.வைத் தொகுத்தளித்த கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்ட எனக்கு எல்லாப் படங்களையும் வீட்டில் வைத்துப் புரட்டிக்காட்டினார் கி.ரா. அப்படிக் காட்டும்போது, அவரை ஓவியங்களாக வரைந்த ஆதிமூலத்தின் ஓவியங்களில் இருக்கும் பாவனைகளோடு இளவேனிலின் படங்களை ஒப்பிட்டுப் பேசினார். படங்கள் எடுப்பதற்காக இளவேனிலோடு புதுவையைச் சுற்றிவந்ததைச் சிரிப்போடு சொல்லிக் கொண்டே வந்தார். நான் முதன் முதலில் வந்து தங்கியிருந்த ஜமீன்தார் கார்டனிலும், அங்காளம்மன் நகரிலும் படம் எடுக்கவில்லை. நீங்கள் இருந்திருந்தால் ஒருவேளை அங்கும் போய்ப் படங்களை எடுத்திருப்போம் என்று சொன்னார்.

அ.ராமசாமி -புதுச்சேரி- கி.ராஜநாராயணன் -3

படம்
30 ஒரு இடத்தை அதன் பூர்வீகத்தோடும் மனிதர்களின் நிகழ்கால இருப்போடும் சேர்த்து வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர் கி.ரா. அவரோட புனைகதைகளில் இந்தக்கூறு தூக்கலாவே இருக்கும். ‘என்னோட கதைகள் இட த்தெ எழுதிக்காட்டுதா? இடத்திலெ இருக்கிறெ மனுசங்களெ எழுதிக்காட்டுதான்னு உறுதியாச் சொல்ல முடியாது’ என்று ஒருமுறை சொன்னார். பாண்டிச்சேரிக்கு வந்தபிறகு அந்த ஊரைப் பற்றிப் பலரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் காட்டிய ஆர்வத்தைப் பின்னர் நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதிலும் காட்டினார்.

கி.ரா. -புதுச்சேரி - நான் -2

படம்
21 புதுவைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியனைத் தடாலடியான நிர்வாகி என்றுதான் சொல்ல வேண்டும். அவர் நினைத்ததைச் செய்துவிடுவார். அப்பல்கலைக் கழகத்திற்குத் தேசிய அளவிலும் உலக அளவிலும் இடங்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வெவ்வேறு துறைகளில் அதற்கான நபர்களை அழைத்துவந்தார். பன்னாட்டு உறவுகளும் அரசியலும் என்ற துறையில் உலக அளவில் அறியப்பட்ட ஒருவரை வருகைதரு பேராசிரியராக ஆக்கினார். அவர் திரு ராஜீவ்காந்தி காலத்தில் நடந்த மூன்றாம் உலக நாடுகளின் கூட்டறிக்கையை - பெல்கிரேட் முன்வைப்பு - உருவாக்கியவர். உயிரியல் துறைக்குச் சலீம் அலியின் பெயரைச் சூட்டி, அவரது சீடர் ஒருவரைக் கொண்டுவந்தார். விளையாட்டுத்துறையின் முதன்மையராக இந்திய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரை நியமனம் செய்தார்.

கி.ராஜநாராயணன் - புதுச்சேரி - நான் -1

படம்
1 . அமெரிக்கன் கல்லூரி, இரண்டாமாண்டு பட்டப்படிப்பில் சிறுகதை வகுப்பு. பேரா.சுதானந்தா வட்டார இலக்கியம் என்ற வகைமைப்பாட்டை விளக்கிச் சொல்லிவிட்டு “கதவு” கதையை வகுப்பிலேயே வாசிக்கச் சொன்னார். வகுப்பு முடியும்போது நமது துறை நூலகத்தில் அவரது நூல்கள் உள்ளன. இன்று மாலை நூலகம் திறந்திருக்கும். விரும்புபவர்கள் எடுத்துச் சென்று வாசிக்கலாம் என்றார்.  நூலகத்திலிருந்து  கோபல்ல கிராமத்தை - வாசகர் வட்டம் வெளியீடு – எடுத்துக் கொண்டேன்.

சேவாலயத்தோடு சில நினைவுகள்

படம்
சீடு அமைப்பின் மார்கழிக்கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாகப் பிரபாகர் இயக்கிய ‘மனைவியர் பள்ளி’ நாடகம் (மோலியரின் மூலத்தைத் தழுவிய நாடகம்)  ஷெனாய் நகரில் இருக்கும் சேவாலய வளாகத்தில் நடக்கிறது என்பதைக் கூகுள் வரைபடத்தோடு அனுப்பி வைத்தனர் பிரபாகரும் கார்த்திக்கும்.  பழைய அண்ணா பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் நகரப்பேருந்தில் ஏறினால் ஷெனாய் நகரில் இறங்கிக் கொள்ளலாம்.