தப்பும் குறிகள்
மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் சென்ற ஆண்டே தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதத்தால் சிதைக்கப் பட்டது சென்ற ஆண்டுக் கதை. பள்ளிப்படிப்புக்காகவும் தனிப் பயிற்சிக்காகவும் செலவழித்த மொத்தப் பணமும் வீணானது பற்றிக் கவலைப் பட்டவர்கள் அந்த நுழைவுத்தேர்வு - தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று போராடினார்கள். தடுக்க முடியாத நிலையில் கடுமையான சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் தாண்டி தேர்வுகளை எழுதினார்கள். 12 ஆண்டுப் படிப்பும் வீணானது. பள்ளி இறுதித் தேர்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களும்கூட தகுதி பெறாமல் தோல்வியடைந்தார்கள். அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாத அனிதா தற்கொலை செய்துகொண்டார்.