தி.க.சண்முகத்தின் நாடகவாழ்க்கை
வரலாற்றை எழுதிவைக்கவும், வரலாற்றை எழுதுவதற்கான தரவுகளைத் தொகுத்து வைக்கவும் தவறிய சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்துவந்துள்ளது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நிலப்பரப்பான தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கான போதிய அடிப்படைச் சான்றுகளைத் தேடும் பணிகளே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டு வரலாற்றைத் தாண்டி கலை இலக்கிய வரலாறுகளை உருவாக்குவதற்கான தரவுகளைத் தேடுவதோடு ஓர்மையுடன் எழுதவேண்டும் என்ற அக்கறைகளும் குறைவாகவே உள்ளன. எழுத்துக்கலைகளான கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றின் வரலாற்றை உருவாக்குவதற்கு அந்தந்த வடிவங்களில் எழுதப்பெற்ற பனுவல்கள் நூலகங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்த வரலாற்றாய்வாளர்கள் முறையான இலக்கியவரலாறுகளை எழுதிவிடமுடியும்.