விரித்தலின் அழகியல்: கருணாகரனின் கவிதை மையங்கள்
இலக்கியத்தின் இயக்கமும் வாசிப்பும் எழுத்தின் இயக்கம் எல்லாவகையான பனுவல்களிலும் ஒன்றுபோல் நிகழ்வதில்லை. நாடகம், புனைகதை, கவிதை என அதனதன் வடிவ வேறுபாடுகளுக்கேற்பவே நிகழ்கிறது. வடிவ வேறுபாட்டிற்குள்ளும் ஒவ்வொரு எழுத்தாளரும் கைக்கொள்ளும் முன்வைப்பு முறைகளுக்கேற்பவும் இயக்கம் நிகழும். பனுவல்களுக்குள் நிகழ்த்தப்படும் இயங்குமுறையை, அதன் வடிவப்புரிதலோடு வாசிக்கும் வாசிப்பே முழுமையான வாசிப்பாக அமையும்.