இடுகைகள்

மருமகள்கள் என்னும் ‘வந்தேறிகள்’

படம்
பெண் மையக்கதைகளின் மையவிவாதம் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது என்பதற்கு இதை உதாரணமாகச் சொல்லலாம். ஆண்களால் எழுதப்பட்ட கதைகளானாலும் பெண்களால் எழுதப்பட்ட கதைகளானாலும் இப்போதெல்லாம் கூட்டுக்குடும்பச் சிக்கல் முக்கியமான  பிரச்சினையல்ல.  அந்த மையம் நகர்ந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. கதைகளின் மையமாக இல்லாமல் நகர்ந்து விட்டதால் அந்தப் பிரச்சினையைத் தமிழ்ச்சமூகம் தீர்த்துவிட்டது என்றும் பொருளில்லை. எல்லாவற்றையும் சரிப்படுத்தித் தீர்வுகண்டு ஏற்றுக் கொண்ட சமூகமாக ஆகிவிட்டது என்றும் நினைக்கவேண்டியதில்லை. அந்தப் பிரச்சினைகள் இன்னும் இந்திய/ தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகளாக இருந்துகொண்டுதான் இருக்கின்றன. செண்பகம் ராமசுவாமியும் அசோகமித்திரனும் எழுதிக்காட்டிய விதத்தைப் பார்க்கலாம்.

இமையம் - கலைஞர் மு. கருணாநிதி சந்திப்பு: ஒரு நினைவோட்டம்

படம்
அன்று காலை இந்தப் படத்தைத் தனது பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.அதன் பக்கத்தில்: வாழ்வில் நிகழ்ந்த அற்புத கணம் என்ற குறிப்பும் தந்திருந்தார். தொலைபேசியில் பேசியபோது உற்சாகமாக இருந்தார் இமையம்.. இமையத்தோடு எனக்குக் கால் நூற்றாண்டுப் பழக்கமுண்டு; அதனை நட்பென்று சொல்ல முடியாது. நண்பர்களிடம் மற்றவர்களைப் பற்றி விவாதிக்கலாம்; அவர்களின் நிறைகுறைகளைச் சொல்லமுடியாது. பழகியவர்களிடம் இரண்டையும் சொல்லலாம். இது எனது புரிதல். பக்தன் கடவுளைக் கண்டதாக நினைக்கும் தருணத்தை உச்சரிக்கும் சொல்லால் குறிப்பிடும் இமையத்திற்குக் கலைஞர் கருணாநிதியின் மீது இருப்பது அசைக்க முடியாத பக்தி. அந்தப் பக்தி திராவிட இயக்கத்தின் மீதும் உண்டு; ஆனால் கொஞ்சம் வேறுபாடுகளுடன். அந்த வேறுபாடுகள் தான் முற்றமுழுதான மூட நம்பிக்கையாக நினைக்காமல், நம்பிக்கையாக ஆக்கியிருக்கிறது. திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் மீது செலுத்தியிருக்கும் தாக்கம், மாற்றம், உண்டாக்கியிருக்கும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மீது இமையத்திற்கு அபரிமிதமான நம்பிக்கையும் ஈர்ப்பும் உண்டு.

கதையிலிருந்து நாடகம்: இமையத்தின் அணையும் நெருப்பை முன்வைத்து

படம்
இமையத்தின் அணையும் நெருப்பு கதையைப் பத்திரிகையில் வந்தபோதும், புத்தகத்தில் ஒன்றாக வந்தபிறகும் வாசித்திருக்கிறேன். அதைப் பற்றி எழுதவும் செய்துள்ளேன். அந்தக் குறிப்பு இதோ. அணையும் நெருப்பு எழுப்பும் வினாக்கள் உலகப் பொதுவான ஒன்று. பாலியல் வேட்கையின் மீதான விசாரணையாக அமைந்துள்ள இந்தக் கதை எழுதப்பட்டுள்ள முறையே கவனிக்கத்தக்க ஒன்று. அக்கதையில் இடம் பெற்றுள்ள இரண்டு பாத்திரங்களில் ஒன்று ஒற்றைச் சொல்லைக் கூடப் பேசாமல் (ஆண்) கல்லைப் போல அசைவற்று அமர்ந்திருக்க, சந்தோஷம் பேசுகிறாள். பேசுகிறாள்.. பேசிக் கொண்டே இருக்கிறாள். அவளது பேச்சு- அவளின் கேள்விகள் அந்த இளைஞனிடம்  மட்டும் கேட்கப்படும் கேள்விகள் அல்ல. பெண்களின் எந்தச் சூழலையும் கவனிக்காமல், தனது வேட்கையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் ஆண்களின் மீது வீசப்படும் தாக்குதல்கள் அவை.

கெட்டுப்போகும் பெண்கள்

படம்
மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்று வரையறுத்துச் சொல்ல முடிவதுபோல் அடிப்படை உணர்வுகள் இவைதான் என்று வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அடிப்படைத்தேவைகளைப் பெறவும் தனதாக்கிக்கொள்ளவும் உரிமைகொண்டாடவும் உருவாக்கப்படும் நடைமுறைகளே உழைப்பின் விதிகளாக மாறுகின்றன. உழைப்பு விதிகளின்படி கிடைக்கும் அடிப்படைத்தேவைக்கான பொருட்களைப் பிரித்துக்கொள்ளும் முறைகள் உருவாக்கப்படும்போது பொருளியல் அல்லது தொழில்முறை நடைமுறைகள் உருவாகின்றன.

குற்றப்பரம்பரை - சட்டம் உருவாக்கிய சொல்

குற்றப்பரம்பரை என்ற சொல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சொல். ஜமீந்தார்களால் வசூல்செய்யப்பட்டுத் தங்களுடைய பங்காக வந்துசேரவேண்டிய வரவுகளான வரி, திறை, கிஸ்தி ஆகியவற்றைக் கொண்டுவந்து கஜானாவில் சேர்ப்பதில் இடையூறுகளைச் சந்தித்தனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். இடையூறுகளை ஏற்படுத்தியவர்கள் அடக்கப்படவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பெற்ற சட்டமே குற்றப்பரம்பரைச் சட்டம். பிரித்தானிய ஆட்சியர்களால் 1871 இல் அறிமுகம் ச ெய்யப்பட்ட இந்தச் சட்டம் செயல்படுத்தப்படும்போது ஒருவிதமான வட்டாரத் தன்மையை உள்வாங்கிக் கொண்டது.

தமிழினி:ஈழப்போரின் சாட்சியாகவும் மனச்சாட்சியாகவும்

படம்
இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் எந்த எழுத்தையும் உடனடியாக வாசிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை நான் உருவாக்கிக் கொண்டதில்லை . ஆவலுடன் காத்திருந்து வந்தவுடன் வாசித்த இளம்பிராயத்து ஆவலைக் கடந்தாகிவிட்டது.  இப்போது அச்சில் வரும் எழுத்துகளை வரிசைகட்டி நிறுத்தி வாசிக்கும் நிதானம். ஆனால் தமிழினியின் ஒருகூர்வாளின் நிழலில் அந்த வரிசையைத் தள்ளிவிட்டு முன்வந்து வாசிக்கும் நெருக்கடியைக் கொடுத்த பிரதியென்பதைச் சொல்லியாகவேண்டும்.எனக்கும் தமிழினிக்குமான உறவுதான் இந்த வரிசையுடைப்பிற்குக் காரணம்.